என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    4 நாட்கள் தொடர் விடுமுறை விஜயதசமி தினம் என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    தடை உத்தரவு முடிவுக்கு வந்ததால் இன்று அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கம்போல் திறக்கப்பட்டது.

    4 நாட்கள் தொடர் விடுமுறை விஜயதசமி தினம் என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், வள்ளிமலை, ரத்தினகிரி முருகன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் இன்று தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வாகனம் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கரியமங்கலம் பகுதியில் தனியார் பால்பண்ணை அருகே நேற்று இரவு கட்டமடுவு-குட்டை பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது32). இளங்குன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36) உள்ளிட்ட இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.

    பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த கல்பனாவின் உடலை மீட்டு செங்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தனூர் அணைக்கு 1227 கன அடி தண்ணீர் வருவதால் நீர்வரத்தை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 119அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட தொடங்கி உள்ளது. அதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,227 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 90.45 அடியாக உயர்ந்து உள்ளது. அதாவது அணையில் தற்போது 2,503 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் தற்போது மதகுகளை சீரமைத்து புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணி ரூ.45 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஓராண்டு காலம் நடைபெறும் என தெரிகிறது.

    எனவே அணையின் முழு கொள்ளளவு நீரை இந்தாண்டு தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அணையில் அதிகபட்சமாக 99 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்க முடியும். அணையின் மதகுகள் 20 அடி உயரம் கொண்டதாகும்.

    அணையின் பாதுகாப்பு கருதி 95 அடி வரை நீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வரும் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே அணைக்கு வரும் நீர்வரத்தை 24 மணிநேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    வந்தவாசி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு காமராஜர் நகர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 58), விவசாயி. அவர் பல நாட்களாக உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

    வயலுக்கு சென்ற ரவி விஷத்தை குடித்து விட்டு மயக்க நிலையில் இருந்தார். தாயார் குமாரி, ரவிக்காக வயலுக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார். அப்போது ரவி தனது தாயாரிடம் உடல் நலப் பாதிப்பால் விஷத்தை குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த தாயார் குமாரி, ரவியை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள், ரவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையிலான போலீசார் கிரிவலப்பாதையில் சோதனை நடத்தினர். அப்போது பழனியாண்டவர் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அமர்ந்து இருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டம், சிவளார்பட்டி தாலுகா முத்துசாமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சோலைமுத்துகுமார் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 33). இவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    செங்கம் அருகே ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதுப்பாளையம்:

    செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் தாமோதரன். இவரது மகன் சற்குணன்(4). இவர் அதே பகுதியில் உள்ள ஓடையை நேற்று முன் தினம் கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, ஓடையில் நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீரில் மூழ்கி சற்குணன் உயிரிழந்துள்ளான்.

    இந்நிலையில், ஓடையை கடக்க பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி இருந்தால், 4 வயது சிறுவனின் உயிர் பறிபோயிருக்காது எனக் கூறி, சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி சின்னராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி மாவட்ட இயக்குனர் லட்சுமி நரசிம்மன் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

    இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. சிறுவனின் உடலும், வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ரேஷன் அரிசி கடத்திய அண்ணன்-தம்பியை கலெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 53). இவரது சகோதரர் ஆறுமுகம் (36). இவர்கள், ரேஷன் அரிசியை கடத்திய போது திருவண்ணாமலை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஏழுமலை, ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலையில் மின்வாரிய அதிகாரி வீட்டில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாமரை நகர் 21-வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 58). இவர், திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் என்ஜினீயரிங் முடித்துள்ளார். மகள் கீர்த்தனா (26) குடியாத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    ராஜசேகரன் மகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) திருமணம் நடக்க உள்ளது. அதற்காக ஜவுளி எடுக்க குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு 7-ந்தேதி சென்றனர். வீடு பூட்டிக்கிடந்ததை பார்த்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர்.

    ராஜசேகரனின் வீடு திறந்து கிடந்தை பார்த்த அங்கிருந்தவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், அலுவலகத்தில் தன்னுடன் வேலைப் பார்ப்போரை வீட்டுக்கு அனுப்பி வைத்து பார்த்து வருமாறு கூறினார். அவர்களும் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர். வீட்டில் பீரோக்கள் திறந்து கிடந்தன.

    இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுபற்றி ராஜசேகரனிடம் கேட்டபோது, அவர் தனது மகள் திருமணத்துக்காக வங்கியில் இருந்து எடுத்து வந்த நகைகளும், மனைவியின் நகைகளும் சேர்த்து மொத்தம் 75 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை பீரோவில் வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதில் பீரோவின் லாக்கரில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். மற்ற 55 பவுன் நகையை துணிப்ைபயில் வைத்து, துணிகளுக்கிடையே பதுக்கி வைத்திருந்ததால் தப்பியது.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ைளயடிக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 524 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 53 ஆயிரத்து 582 பேர் குணமடைந்து உள்ளனர். 665 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    செய்யாறில் நிதி நிறுவனத்தில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    செய்யாறு அருகே விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 34) என்பவர் செய்யாறு பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் வழக்கம் போல் மதிய உணவு சாப்பிட சென்றபோது கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.34 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மண்டி தெருவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா தொண்டிபட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (27), அவரது நண்பர் ஈரோடு மாவட்டம் நாப்பியாலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (30) என்பதும் இவர்கள் செய்யாறில் நிதிநிறுவனம், கடைகள், ஸ்டுடியோ என பல இடங்களில் பணத்தை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர் அருகே வீட்டின் மீது லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் அருகே ராந்தம் கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகவேல், விவசாயி. கடந்த 6-ந்தேதி இவரது வீட்டுக்கு எதிரில் உள்ள ரேஷன் கடைக்கு தச்சாம்பாடி கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முருகவேல் வீட்டின் மீது மோதியது.

    இதில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் வீட்டினுள் இருந்த முருகவேல் மனைவி பிரியா மற்றும் உறவினர்கள் பச்சையம்மாள், காசியம்மாள், ஜெயவந்தனா ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் காசியம்மாளை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போளூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×