என் மலர்
புதுக்கோட்டை
- அறந்தாங்கி பகுதிகளில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரொக்கப்பணம், ஸ்டெதஸ்கோப் , டிஜிட்டல் தெர்மாமீட்டர், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது55), 12ம் வகுப்பு வரை படித்த இவர் நாகுடி கடைவீதியில் ஸ்ரீமதி என்ற ஆங்கில மருந்தகத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் மருந்தகத்திற்கு வருபவர்களுக்கு மருத்துவம் பார்த்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள்,ஊசி செலுத்தி, மருத்துவர் போல் செயல்பட்டு வந்துள்ளார்.தகவலறிந்த நாகுடி பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், நாகுடி காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலி மருத்துவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து ரூ.31 ஆயிரம் ரொக்கப்பணம், ஸ்டெதஸ்கோப், பல்ஸ் மீட்டர், தையல் நரம்பு (நூல்) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.அதே போன்று ஆவுடையா ர்கோவில் தாலுகா கரூர் பகுதியில் போலி மருத்து வர்களாக செயல்பட்டு வந்த தர்மலிங்கம் (54), கருப்பையா (47) ஆகியோரை கரூர் காவல்த்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரொக்கப்பணம், ஸ்டெதஸ்கோப் , டிஜிட்டல் தெர்மாமீட்டர், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி பகுதிகளில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது
- கூட்டம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தவ பாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது
கறம்பக்குடி:
புதுக்கோட்டை தி.மு.க. வடக்கு மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் புதுப்பட்டி, பல்லவராயன்பத்தை, மலையூர், கணக்கன் காடு ஆகிய பகுதிகளில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளரும் திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் தலைமை கழக பேச்சாளர் தேவ பாலா கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ்.கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் கருக்கா குறிச்சி பரிமளம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஐயப்பன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது
- நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று, பள்ளியின் பெருமைகளை எடுத்துக் கூறினார். ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்தும், அதானி குழுமம் மீது விசாரணை நடத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்கள் சரவணன், செல்வகுமார், சப்பானி முத்து தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்தும், அதானி குழுமம் மீது விசாரணை நடத்த கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாராளுமன்ற முடக்கத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விராலிப்பட்டி முத்து கருப்பு, மாவட்ட துணைத் தலைவர் பழக்கடை மாரிமுத்து, ஒன்றிய குழு துணைத் தலைவர் வடிவேல் குமார், நகரத் தலைவர் செந்தில் குமார், வட்டார தலைவர்கள் ராமையன், மாயக்கண்ணு, வடுகப்பட்டி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது
- போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார்.
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாவட்ட அயலக அணி சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் பாலகுமார், சுரேஷ் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
- குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா நம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரமோகன், கொத்தனார். இவரது மனைவி சித்ராதேவி (வயது 25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சித்ராதேவியை அவரது கணவர் சந்திரமோகன் மற்றும் அவரது தாயார் ஆகியோர் குடும்பத் தகராறு காரணமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் இருந்த சித்ராதேவி கடந்த 4-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக்கண்ட அவரது கணவர் குடும்பத்தினர் சித்ராதேவியை மீட்டு திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்ராதேவி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சித்ராதேவியின் தந்தை துரைச்சாமி அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் தீப்பந்தம் பிடித்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்
- குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், நோய் நொடியின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பொன்னமராவதி:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. மறுநாள் அக்கினிப்பால்குட விழா நடைபெற்றது. இதன் பின்னர் கடந்த 26ம் தேதி சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டது. அன்று முதல் தினசரி மண்டகப்படி தாரர்கள் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், நள்ளிரவு சுவாமி வீதி விழா நடைபெறுகிறது. உற்சவ அம்மன் ரதத்தில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறும்.
அப்போது தீப்பந்தம் பிடிப்பதால் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், நோய் நொடியின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக ரதத்தின் இருபுறமும் தீப்பந்தம் பிடித்து கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபாடு செய்தனர்.
- பொன்னமராவதியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- ராகுல்காந்தியின் எம்பி பதவி நீக்கம் கண்டித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி பேருந்து நிலையம் எதிரே ராகுல்காந்தியின் எம்பி பதவி நீக்கம் கண்டித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசுகையில், ராகுல்காந்தி பேசியதில் எந்த வகையான அவதூறும் இல்லை. பேசுவதற்கெல்லாம் அவதூறு வழக்கு தொடர்ந்தால் இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி வழக்குகள் தொடர வேண்டும். வாய்மொழி அவதூறுக்கெல்லாம் தண்டனை கிடையாது. இந்திய குற்றவியல் சட்டம் 1860 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 163 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த வழக்கிலும் வாய்மொழி அவதூறுக்காக இரண்டு வருடம் தண்டனை விதித்த சரித்திரமே கிடையாது. முதல் முறையாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 நாள் தண்டனை அல்லது ரூ 5000 அபராதம் மட்டுமே விதிக்கப்படும். இது விசித்திரமான வழக்கு. கர்நாடக மாநிலம் கோலாரில் பேசியதிற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. ஒருவருடம் தடை. 30 நாள்கள் விசாரித்து தீர்ப்பு. யார் கையெழுத்து போட்டது, உத்தரவு போட்டது என்று தெரியவில்லை.
ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.விசித்திரமான ஜனநாயக நாடாக இந்தியா மாறி வருகிறது.பேச்சுரிமை என்ற குரல்வளையை நெறித்துவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைக்காது. நாம் கொஞ்சம் கண்ணை அசந்து விட்டால் பெற்ற சுதந்திரத்தை மீண்டும் இழக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் விபரீதம் ஏற்படும்,அப்படி நாம் பெற்ற சுதந்திரத்தை இழந்து விட்டால் மீண்டும் ஒரு மகாத்மா காந்தி வந்து, மீண்டும் சுதந்திரத்தை பெற நூறு ஆண்டுகள் போராட வேண்டி இருக்கும், நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் வாரிசுகள் என்பதை உணர்ந்து பெற்ற சுதந்திரத்தை காக்க விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென பேசினார்.
- பொன்னமராவதியில் நீதிமன்ற கட்டிடம் திறக்கபட்டுள்ளது
- நீதிமன்றத்தை பேரூராட்சித்தலைவர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்
பொன்னமராவதி
பொன்னமராவதியில் நீதிமன்றம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்தது. இதன் காரணமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அதற்கான பணிகளை விரைவுபடுத்தி வந்தார். இதனை தொடர்ந்து பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாயக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தை பேரூராட்சித்தலைவர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், வட்டாட்சியர் பிரகாஷ், வார்டு உறுப்பினர் ராமநாதன், வழக்கறிஞர்கள் குமார், ராதா கிருஷ்ணன், சிரிதர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.
- கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டது
- நீதிமன்றத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ( பொறுப்பு) நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா 39 ஊராட்சிகளை உள்ளடக்கிய தாலுகாவாகும். இங்கு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதற்கான பணிகளை செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் புதுக்கோட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ( பொறுப்பு) நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, சட்டமன்ற உறுப்பினர்கள், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தவ பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் நீதிமன்றத்தை திறக்கும் பொழுது கறம்பக்குடியில் உள்ள நீதிமன்றத்தில் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் ஆத்மா கமிட்டி சேர்மன் முத்துகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- நீதித்துறையில் புரட்சி, சீர்த்திருத்தங்கள் வர உள்ளன
- காகிதம் இல்லாத முறையையும் கொண்டு வரப்பட உள்ளது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி, கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என 3 புதிய கோர்ட்டுகள் திறப்பு விழா புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கோர்ட்டுகளை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 3½ கோடி முதல் 4 கோடி வழக்குகள் தேங்கி இருக்கின்றன. ஒரு வழக்கு தீர்ப்புக்கு பின் மேல் முறையீடு செய்யப்படுகிறது. ஒரு வழக்கிற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலத்தை ஏன் குறைக்க கூடாது? என்று கேட்க வேண்டிய கேள்வி எழுந்துள்ளது.
கோர்ட்டுகளில் வக்கீல்கள் வாதாடும்போது அதிகமாக 3 முதல் 5 நிமிடங்களுக்குள் வாதாடி முடிக்க வேண்டும். இதில் ரத்தின சுருக்கமாகவும், தெளிவாகவும் நீதிமன்றத்தில் எடுத்து கூறினால் விரைவாக நீதியை பெற முடியும்.
நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆன்லைன் முறை, இ-பைலிங், காணொலியில் வழக்கு விசாரணை என்ற வசதி உள்ளது. இந்த வசதிகளை வக்கீல்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இன்னும் 2 ஆண்டுகளில் நீதித்துறையில் புரட்சி நடக்க உள்ளது. சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
காகிதம் இல்லாத முறையையும் கொண்டு வரப்பட உள்ளது. 4 கோடி வழக்குகளை எப்படி தீர்த்து வைப்பது என நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டங்கள் மாறி வருகின்றன. அதனை வக்கீல்கள் தெரிந்திருக்க வேண்டும். நீதிபதிகளின் கடினமான கேள்விகளுக்கு வக்கீல்கள் கோபத்துடன் பதில் அளிக்க கூடாது. கோபம் இல்லாமல் பதில் அளித்தால் வெற்றிக்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''தமிழகம் நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறையில், உயர்நீதிமன்றத்தின் முழு ஒத்துழைப்பின் மூலம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நீதிமன்றங்கள் கட்டமைப்புகள் மிக சிறப்பாக இருக்கும் மாநிலமாக தமிழகம் திகழும். வக்கீல்களின் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது நிதி நிலைமை சரியில்லாததால் அதனை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. நிதி நிலைமை சரியானதும் வக்கீல்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
- விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து ரெகுநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே உள்ள முதலிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கையன் (வயது 86), விவசாயி. இவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. வயது முதிர்வின் காரணமாக நோயின் தாக்கம் அதிகரிக்கவே அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கையன் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கையன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெகுநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்






