என் மலர்
பெரம்பலூர்
- இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது
- கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் மற்றும் இயற்கை யோகா மருத்துவத்தின் சார்பாக கோடைகால உணவுகள், கோடைகால நோய்களை தீர்க்கக் கூடிய மருந்துகள் மற்றும் நமது அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்களின் நன்மைகள் குறித்தும், அதை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.மேலும் பொது மக்களுக்கு இலவச மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது முகாமில் பங்கு கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவத்திற்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அர்ஜுனன், இருக்கை மருத்துவ அலுவலர் மருத்துவர் சரவணன், உதவி சித்த மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் விஜயன் ,மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி மருத்துவர் கற்பகம் ,மருத்துவர் கலைச்செல்வி, ஹோமியோபதி உதவி மருத்துவ அலுவலர் மருத்துவர் ராகுல்ஜி இயற்கை யோகா மருத்துவ உதவி அலுவலர் மருத்துவ கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மைய உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது
- நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி சார்பில் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதாத மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்கும், அவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கும், அனைவரையும் நூறு சதவிகிதம் உயர் கல்வியில் சேர்ப்பதற்காக மாணவர் வழிகாட்டி மைய உறுப்பினர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார்.
நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி மைய உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் கற்பகம், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்கும், உயர்நிலை கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், பயிற்சியின் முக்கியத்துவம், மாணவர் உயர்கல்விக்கான தேவை மற்றும் அவசியம் குறித்தும் இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதோர் மற்றும் இடைநின்ற மாணவர்கள் என ஒருவர் கூட விடுபடாமல் அவர்கள் விரும்பிய உயர் கல்வியினை அவர்களாகவே தேர்வு செய்து உயர் கல்வி பயில்வதற்கும், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களை உடனடி தேர்வு எழுத வைத்து உயர் கல்வியில் சேரும் வாய்ப்பு கிடைத்திடும் வகையிலும், இடைநின்ற மாணவ மாணவிகளுக்கு அதிக ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வினை வழங்கி உயர்கல்வி மற்றும் விரும்பும் திறன்சார் பயிற்சி பெறும் வாய்ப்பினை உறுவாக்குவதற்காக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
வேப்பூர் ஒன்றியத்தில் 185 உறுப்பினர்களுக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 164 உறுப்பினர்களுக்கும், பெரம்பலூர் ஒன்றியத்தில் 144 உறுப்பினர்களுக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 150 உறுப்பினர்களுக்கும், பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி உதவித்திட்ட அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெண்பாவூர் வனப்பகுதியில் தண்ணீர் பந்தல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாலையூரை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படையல் செய்தும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- மாவட்ட போலீசார் சார்பில் நடத்தப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூரை அடுத்த மங்களமேடு போலீஸ் சரகம் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி பகுதியில் மாவட்ட போலீஸ் அலுவலகம் சார்பில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமை தாங்கி பேசும்போது பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் குறைத்திட, இளைஞர்கள் அனைவரும் போதை பழக்கங்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பிறர் தவறான கண்ணோட்டத்தில் தொடாமல் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மங்களமேடு உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீராளன், இன்ஸ்பெக்டர் நடராஜன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி தொடங்கியது.
- 114 தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான எண்ணும்-எழுத்தும் திட்டத்தினை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்து 2-ம் ஆண்டிற்கான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சியை தொடங்கியது. பெரம்பலூர் ஒன்றியத்தில் நடந்த பயிற்சியில் 114 தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோட்ட தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலம் அருகே புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், சாலை பணியாளர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். மது அருந்தி வாகனங்கள் ஓட்டாதீர்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
- மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மேளதாளத்துடன் நடைபெற்றது. இதற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரேகா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றார். ஊர்வலத்தை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழரசன் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்போம். நமது பள்ளி அரசுப்பள்ளி போன்ற விழிப்புணர்வு முழக்கம் எழுப்பப்பட்டது. எண்ணும் எழுத்தும் செயல்பாட்டினையும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஊர்வலமானது முக்கிய தெருக்களின் வழியாக சென்று இறுதியில் பள்ளியை அடைந்தது. இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்
- சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து எறையூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முஸ்தபா மகன் அக்பர்அலி (வயது 20). இவர் எறையூர் சர்க்கரை ஆலையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் வரை சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மங்களமேடு அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அக்பர்அலி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
- வருகின்ற 29-ந் தேதி நடைபெறுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம், பெரம்பலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29-ந் தேதி அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்ஆர்எப் நிறுவனம் உட்பட சென்னை, காஞ்சிபுரம், ஓசூர்,கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை பகுதிகளில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தங்களது நிறுவனங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் சுயதொழில் மற்றும் அரசு கடன் உதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் தங்களது ஆதார் எண், பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் வரும் 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.00 முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login –ல் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம் என மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார் .
- மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யபட்டனர்
- கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவியை பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதி முடித்துள்ள 16 வயதுடைய மாணவிக்கு, 31 வயதுடைய அவரது மாமன் மகனுடன் திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மாணவியின் தந்தை கடந்த 12-ந்தேதி மாவட்ட குழந்தை உதவி மையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அதற்கு மறுநாள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியை மீட்டு குழந்தைகள் தொண்டு அறக்கட்டளையில் தங்க வைத்தனர்.
அங்கு மாணவியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் பெந்தகொஸ்தே திருச்சபையின் அருள்தந்தை (பாதிரியார்) வேலாயுதம் ஸ்டீபன் (53) என்பவர் வீட்டில் தங்கியிருந்து, வயல் வேலை செய்து வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவியை பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தந்தை மாணவியை கட்டையால் தாக்கியுள்ளார்.
பின்னர் மாணவி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். மாணவியை, அவருடைய மாமா மகன் காதலித்து வந்துள்ளார். மாணவியின் குடும்பத்தினருக்கும், அவருடைய மாமா மகன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளதால், இதனை மாணவியின் தந்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி மாமா வீட்டிற்கு வந்த மாணவியை 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்று மாமா மகன் குடும்பத்தினர் கூறி, மாணவியை அங்கேயே தங்க வைத்துள்ளனர்.
கடந்த 8-ந்தேதி மாணவியை, மாமா மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் 2 பேருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் ஒருவர் நேற்று முன்தினம் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன், மாணவியின் தந்தை, மாமா மகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். பின்னர் வேலாயுதம் ஸ்டீபன், மாமா மகனை நேற்று கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- போலீஸ் தம்பதி வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை போனது
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் அழகுவேல் (வயது 38). இவரது மனைவி சுகுணாவும் முதல் நிலை போலீஸ்காரராக பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகின்றனர். அழகுவேலும், சுகுணாவும் வீட்டில் கடந்த 15-ந்தேதி கடைசியாக பீரோவில் வைத்திருந்த 12¾ பவுன் நகைகளை பார்த்துள்ளனர்.
நேற்று மதியம் அழகுவேல் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, ஒதியத்தூருக்கு செல்வதற்காக மனைவியுடன் புறப்பட்டார். அப்போது நகைகள் அணிந்து செல்லலாம் என்று எண்ணிய சுகுணா நகைகளை எடுக்க பீரோவை திறந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 2 பேரும் தாங்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி சென்றிருக்கலாம், என்று சந்தேகிக்கின்றனர்.
பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு போனது
- இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் முத்துலட்சுமி நகர், 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகரன் (வயது 35). இவரது மனைவி ரங்கீலாவுக்கு குழந்தை பிறந்ததால், அவர் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மணிமேகரனுடன் தாய் சந்தானலட்சுமி வசித்து வருகிறார். மணிமேகரனின் தந்தை ராமராஜ் வாலிகண்டபுரத்தில் மரப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அவர் அங்குள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி மாலை மணிமேகரனும், சந்தானலட்சுமியும் வாலிகண்டபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் உள்ள வீட்டிற்கு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம், 1 பவுன் மோதிரம், 50 கிராம் வெள்ளி காசு ஆகியவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு மணிமேகரன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






