என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • புத்தகங்களை நண்பர்களாக்கினால் உயர்ந்த நிலையை அடையலாம் என தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி விழாவில் பல்கலைக்கழக வேந்தர் செல்வம் பேசினார்
    • பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் நிதியியல் ஆய்வுகளுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மற்றும் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் நிதியியல்துறை மற்றும் ஸ்மார்ட் ஜெர்னல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் ஆகியவை இணைந்து பன்னாட்டு கருத்தரங்கை நடத்தியது.தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்து, கருத்தரங்கம் தொடர்பான குறுந்தகட்டினை வெளியிட அதனை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் பெற்று கொண்டார்.

    செயலாளர் நீல்ராஜ் முன்னிலை வகித்தார்.இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் பேசும் போது, மாணவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும். மொழி புலமை இருந்ததால்தான் முழுமையான கல்வியறிவு பெற்றவர்களாகவும், பல புதுமையான படைப்புகளை படைக்க முடியும். புதுமையான படைப்புகளை உருவக்குவர்களுக்கு மட்டுமே வரலாற்றில் இடம் கிடைக்கும். மாணவர்கள் புத்தகங்களை நண்பர்களாக்கி கொண்டால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும் .

    அது மட்டும் இல்லாமல் அன்றாட உலக நிகழ்வுகளை தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளை படிக்க வேண்டும் என தெரிவித்தார்.கேரளா, திருச்சூர் வேளாண்மை பல்கலைக்கழக கூட்டுறவு வங்கி மற்றும் மேலாண்மை துறை தலைவர் வீரக்குமரன், மலேசியா பல்கலைக்கழக தொழில் நுட்பம் மாராவின் வணிக மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் வீரபாண்டியன், டாக்டர் அஹ்மத் ரைஸ் முகமது மொக்தார் ஆகியோர் பேசினர். இதில் டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றம் 700க்கு மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் முதல்வர் உமாதேவி பொங்கியா வரவேற்றார். முடிவில் கல்வி சார் டீன் தீபலெட்சுமி நன்றி கூறினார்.







    • பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
    • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dtcponline.tn.gov.in/eduins/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பெரம்பலூர் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமையும்திட்ட மில்லாப்பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்விநிறுவன கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடந்த 2022 ஜூன் மாதம் 24ம்தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.இந்நிலையில் மேலும் ஒரு வாய்ப்பாக அனுமதியற்ற கட்டடங்களுக்கு அனுமதி பெற வரும் ஜூன் மாதம் 30ம்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://dtcponline.tn.gov.in/eduins/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இவை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை தவறாது பயன்படுத்தி க்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.


    • பத்ரகாளியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி திருவிழாவில் பங்கேற்றதோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தீ மீதி திருவிழா கோவில் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், விரதமிருந்த பக்தர்கள் கவுல்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தி பரவசத்துடன் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சில பக்தர்கள் தங்களது குழந்தையை சுமந்து கொண்டு தீ மிதித்தனர்.

    இதில் கவுல்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி திருவிழாவில் பங்கேற்றதோடு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மதியம் கோவிலில் கிடா வெட்டும், இரவில் விநாயகர் கோவிலில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தியும், மா விளக்கு எடுத்தும் வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • கருணை தொகை வழங்காததை கண்டித்து பெரம்பலூர் கோவில் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
    • இதில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு கருணை தொகை தராததை கண்டித்து கோயில் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 3 ஆயிரம் கருணைத்தொகை வழங்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டு அனைத்து கோயில் இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

    இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசு கருணை தொகை ரூ. 3 ஆயிரம் பொங்கல் திருநாளைக்கு முன்பே வழங்கப்பட்டது.ஆனால் பெரம்பலூரில் உள்ள அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் பணிபுரியும் எழுத்தர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், பட்டாச்சாரியார், உதவி பட்டாச்சாரியார், குருக்கள், பரிஜாகர், அன்னதான பணியாளர், காவலர், மண்டப காவலர், இரவு நேர காவலர் ஆகிய பணியில் உள்ள 14 பேருக்கு பொங்கல் பரிசு கருணை தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து பல முறை கருண தொகை வழங்க கேட்டும் கோயில் செயல் அலுவலர் வழங்கவில்லையாம்.

    இதனால் ஆத்திரமடைந்த கோயில் பணியாளர்கள் நேற்று பெரம்பலூர் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவில் அலுவலகம் முன்பு எழுத்தர் ரவி தலைமையில் 3 பெண் அலுவலர்கள் உட்பட 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பொங்கல் பரிசு கருணை தொகையை உடனே வழங்கவேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.




    • எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது
    • இதில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு விசாரணை மனு முகாம் நடந்தது.எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து சிறப்பு விசாரணை மனு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் ஏடிஎஸ்பிக்கள் மதியழகன், பாண்டியன், டிஎஸ்பிக்கள் தங்கவேல், வளவன், ஜனனிபிரியா, பழனிசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடம் மனுவினை பெற்று விசாரணை நடத்தினர். முகாமில் 24 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன்கனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முகாமின்போது மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை பார்த்த எஸ்பி ஷ்யாம்ளாதேவி எழுந்து சென்ற அவரிடம் மனு பெற்று உடனடியாக விசாரணை செய்து தீர்வு காண போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • தேர்ந்தெடுப்போருக்கு அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் பணி வழங்கப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நேருயுகேந்திரா மூலம் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய இளையோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மூலம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேசிய இளையோர் தொண்டர் பணியிடம் நேர்காணல் மூலம் நிரப்படவுள்ளது.

    குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 29 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் மாத தொகுப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் மட்டும் வழங்கப்படும். தேர்ந்தெடுப்போருக்கு அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டும் பணி வழங்கப்படும்.தகுதியும், விருப்பமும் உள்ள இருபாலரும் www.nyks.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அல்லது பெரம்பலூர் நான்குரோடு, மாவட்ட இளையோர் அலுவலகம், நேருயுவகேந்திரா அலுவலகத்தில் விண்ணப்பித்தினை பெற்று பூர்த்தி செய்து வரும் 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் தகவலுக்கு 04328- 296213, செல்நம்பர் 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.





    • பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளியில் மூளைத்திறன் போட்டி நடைபெற்றது
    • இந்த போட்டியில் 100க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் மேம்படவும், சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும் ப்ரைன் கேம் போட்டி நடந்தது.கிறிஸ்டியன் கல்வி நிறுவன தலைவர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், கலந்துகொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் குலுக்கல் முறையில் ஒரு குழந்தையை தேர்ந்து எடுத்து ஸ்மாட் வாட்ச் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 100க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


    • 2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • மீதமுள்ள பால் ஆவின் பால் குளிர்வு மையத்திற்கு அனுப்பப்படுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர்(பால்வளம்) சிவக்குமார்:- பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் இயங்கிவரும் 197 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளுர் தேவைக்காக சுமார் 19 ஆயிரத்து 300 லிட்டர் போக மீதமுள்ள பால், 11 பால் குளிர்வு மையங்களில் தலா 5 ஆயிரம் லிட்டர் வீதம் 55 ஆயிரம் லிட்டர் பால் குளிர்விக்கப்பட்டு, சென்னை பெருநகர தேவைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் பால் குளிர்வு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. பாட்டிலில் பால் விற்பனை செய்வது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

    • லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி உத்திரவின்படி, மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தெப்பக்குளத்திற்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரளமாநில லாட்டரி சீட்டுகளை விற்கப்படுவதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டு பழைய பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்ற பெரம்பலூர் அண்ணா நகரை சேர்ந்த தங்கவேலை(வயது 65) கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற அரணாரை அம்பேத்கர் தெருவை சேர்ந்த குணசேகரனை(64) போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.




    • தனியார் பள்ளி வாகனங்கள் மோதிக்கொண்டதில் 2 மாணவர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
    • இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் 2 தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று முன்தினம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள், டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரும்பாவூரில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.
    • நடப்பாண்டில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். கடந்த 2021-22-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 28 ஆயிரத்து 865 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

    நடப்பாண்டில் இதுவரை 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்காக ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா அடங்கல், பட்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றின் 2 பிரதிகளோடு நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.


    • லாரி டியூப்களில் அடைத்து சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் வெங்கனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெங்கனூர் ஆற்றங்கரை அருகே பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த வேலுசாமி(வயது 33) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து வேலுசாமியை பிடித்த போலீசார், அவர் விற்பனைக்காக லாரி டியூப்களில் வைத்திருந்த 300 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சாராயத்தை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் அந்தப் பகுதியிலேயே கீழே ஊற்றி அழித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலுசாமியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×