என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பெண்ணிடம் ரூ.8 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாய்மேடு:

    தலைஞாயிறு ஒன்றியம் மாராச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது61). இவரது மனைவியின் தங்கை லதா(45) என்பவர் திருப்பூரிலிருந்து உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மாராச்சேரிக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு லதா தான் கொண்டு வந்த பெட்டியை முருகேசன் வீட்டில் வைத்துவிட்டு அருகில் உள்ள அண்ணன் வீட்டில் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது பெட்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேடி பார்த்த போது வீட்டின் பின்புறம் பெட்டி திறந்த நிலையில் கிடந்துள்ளது. அதில் இருந்த ரூ.8 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூவேந்தன் (வயது 48). இவர் நெய்விளக்கு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பணி முடித்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது குரவப்புலத்தில் ஒரு பள்ளி அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மூவேந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூவேந்தன் இறந்து விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். செப்டம்பர் 7-ந் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பெருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடு்த்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் ஆண்டு பெருவிழா நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே பக்தர்கள் இன்றி நாளை கொடியேற்றம் நடைபெறும் என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகளை இணையதளம், தொலைக்காட்சி மூலமாக தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவுபடியும், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின்படியும், வேளாங்கண்ணி செயல் அலுவலர் பொன்னுசாமி அறிவுறுத்தலின்படியும் வேளாங்கண்ணி ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை, சர்ச் சாலை, உத்திரியமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், பலசரக்கு கடைகள், பேன்சி ஸ்டோர்கள், மெழுகுவர்த்தி கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன.

    மேலும் பக்தர்கள் வருவதை தடுக்க பேராலயம் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் உள்பட 19 இடங்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேளாங்கண்ணி பஸ் நிலையத்திற்கு செல்லவும் அனுமதி இல்லை. அதேபோல் கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆண்டு பெருவிழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும் மின்விளக்குகளால் கொடிமரமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


    நாகூரில் தூக்குப்போட்டு சமையல்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகூர் மாப்பிள்ளை தெருவை சேர்ந்த அப்துல்லா மகன் முகமது இர்சாத் (வயது 27).இவர் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மனமுடைந்து நேற்று வீட்டின் அருகே உள்ள பாழடைந்து கிடக்கும் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் முகமது இர்சாத்தை மீட்டு சிகிச்சைக்காக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு விழா 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க வேளாங்கண்ணி பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் பிரபாகர் நேற்று பேராலய விழாவிற்கான பத்திரிகையை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    தற்போது கொரோனா பரவலை தடுக்க பேராலய விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு மற்றும் திருச்சபை வழங்கும் ஒழுங்கு நடைமுறைகளை பேராலய நிர்வாகம் கடைபிடித்து 29-ந் தேதி வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு விழா கொடியேற்றும் நிகழ்ச்சிபக்தர்கள் இன்றி நடைபெறும். திருப்பலிகள் பேராலயத்துக்குள் நடைபெறும்.

    தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோசின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் கொடியேற்றம், நவநாள் மற்றும் திருப்பலிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் யாரும் நேரில் வர வேண்டாம். விழா நிகழ்ச்சிகள் பேராலய இணையதளம் மற்றும் தொலைக்காட்சி, யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    வருகிற 29-ந்தேதி தொடங்கும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவை தொலைக்காட்சி-சமூக வலைதளங்களில் கண்டுகளிக்க வேண்டும் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் காரணமாக அனைத்து மத வழிபாட்டுத்தளங்களிலும் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் பாதையாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வந்து செல்வார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பக்தர்கள் பாதையாத்திரையாகவும், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக வருவதை தவிர்க்க வேண்டும்.

    இதற்கு பதில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஆராதனை நிகழ்ச்சிகளை, பக்தர்கள் தொலைக்காட்சி, செய்திதாள்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கண்டுகளிக்கலாம். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாதையாத்திரையாகவோ, வாகனங்கள் மூலமாகவே பக்தர்கள் வருவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நாகை, நாகூர், வேதாரண்யம், திருக்குவளை, கருப்பம்புலம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முட்டம் மேல்நிலைப்பள்ளி, அந்தணப்பேட்டை தொடக்கப்பள்ளி, கொடியாளத்தூர் பள்ளி, ஆந்தகுடி பள்ளி, தேவூர் ஆரம்ப சுகாதார நிலையம், வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையம், தாதன் திருவாசல், திருக்குவளை மேல்நிலைப்பள்ளி, திருக்குவளை கே.கே.நகர் காலனி அங்கன்வாடி, தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. நாலுவேதபதி, நீர்மூலை ஆரம்ப சுகாதார நிலையம், ஆதலையூர் எஸ்.எம்.டி.காலனி, கத்தரிப்புலம் பஞ்சாயத்து அலுவலகம், ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுதவிர நாகை, நாகூர், வேதாரண்யம், திருக்குவளை, கருப்பம்புலம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
    நாகை நகராட்சி சார்பில் நாகூர் பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
    நாகூர்:

    கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று நாகை நகராட்சி சார்பில் நாகூரில் பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் இருக்கிறதா? ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    நாகூரில் நகராட்சி உட்பட்ட 11 வார்டுகளிலும் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். 2 நாட்களுக்கு பிறகு பரிசோதனை செய்தவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்களது மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படு்ம். இதேபோல் தைக்கால் தெரு, செய்யது பள்ளி தெரு, பீரோடும் தெரு ஆகிய பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
    மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டை ரோடு சர்ச் பகுதி வழியாக இன்று காலை லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது சாலையின் ஓரம் இருந்த மின்பம்பத்தில் லாரி உரசியதில் மேலேசென்ற மின்சார வயர் அறுந்து தொங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த சாலையின் வழியே சென்ற தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் (வயது65) என்பவர் மீது அறுந்து கிடடந்த மின் ஒயர் உரசியதில் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனைப்பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த குளங்கரை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் அரவிந்தன் (25) என்பவர் முதியவர் மயங்கி கீழே விழுவதாக நினைத்து உடனடியாக ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியதில் அரவிந்தனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இதுபற்றி சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    புதுபடங்களின் வரவை பொறுத்தே தியேட்டர்கள் திறக்கப்படும் என நாகை தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதில் 50 சதவீத ரசிகர்களுடன் நேற்று முதல் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சினிமா தியேட்டர் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பது அதன் உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள 5 சினிமா தியேட்டர்களை திறக்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் புதுப்படங்கள் வராததால் நாகை மாவட்டத்தில் உள்ள 5 சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்படவில்லை.

    வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அல்லது அடுத்த மாதம் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதுபடங்களின் வரவை பொறுத்தே தியேட்டர்கள் திறக்கப்படும் என நாகை தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    நாகை அக்கரைப்பேட்டை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து கடலுக்கு சென்றன.
    நாகப்பட்டினம்:

    அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த 14-ந்தேதி முதல் 7 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் உறுதியளித்தார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அக்கரைப்பேட்டை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து கடலுக்கு சென்றன.
    வேதாரண்யம் அருகே விவசாயியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48). விவசாயி. இவருக்கு திருமணமாகி செந்தாமரை என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ரவி, கருப்பம்புலம் கடைவீதிக்கு வந்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் ரவி கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரவியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ரவியை கொலை செய்ததாக கருப்பம்புலம் தெற்குக்காடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சிவராஜ் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரவியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதை தொடர்ந்து சிவராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உறவினர்களான ரவிக்கும், சிவராஜிக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததும், இந்த முன்விரோதம் காரணமாக ரவியை, சிவராஜ் கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
    ×