என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தரை தற்காலிக பணி நீக்கம் செய்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
     
    இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வைரல் ஆகியது.

    இதனையடுத்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டதில் தெற்கு பொய்கைநல்லலூர் பகுதியை சேர்ந்த இளங்கோவிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய பட்டியல் எழுத்தர் பாஸ்கர் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் ரூ.1940 லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.

    இதையடுத்து பட்டியல் எழுத்தர் பாஸ்கரை தற்காலிக பணி நீக்கம் செய்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    கோடியக்கரை சரணாலயத்தில் நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது இந்த சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, குதிரை, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த பசுமை மாறா காட்டில் நாட்டுப் பறவைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இந்த கோடியக்கரை சரணாலயத்தில் எதிர்புறம் உள்ள பறவைகள் சரணாலயத்தில் உலகெங்கிலுமிருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்லும்.இதன் கணக்கெடுப்பு பணி ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதேபோல் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு கணக்கெடுப்பு பிப்ரவரி மாதம் முடிவுற்றது.

    மூன்றாவது கட்டமாக வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் நாட்டு பறவைகளான மைனா, செண்பகம், கௌதாரி, பச்சைக்கிளி, காட்டில் வாழும் காகம், மரங்கொத்தி, சிட்டுக்குருவி, குயில், மயில் போன்ற பல பறவை இனங்கள் இந்த சரணாலயத்தில் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது மேலும் வாய்மேடு பெரியகுத்தகை ஆகிய பகுதிகளில் உள்ள காப்பு காட்டிலும் கோடியக்கரையில் உள்ள 5 அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    இந்த கணக்கெடுக்கும் பணியில் நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், ஈரநில நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இரண்டு நாள் கணக்கெடுப்பு முடிந்தபிறகு பறவையின் எண்ணிக்கை குறித்து விவரம் வெளியிடப்படும் என்று வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.
    கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், விலை உயர்ந்த பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதால் மிகவும் பாதிக்கப்படுவதாக நாகை மாவட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் சிவபாலன், மயில்வாகனன். இருவரும் தங்களுக்கு சொந்தமான பைபர் படகுகளில் மேலும் 10 மீனவர்களுடன் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கோடியக்கரை தென் கிழக்கே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை பகுதியை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் ஒரு விசைப்படகில் வந்து ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்தனர்.

    பின்னர் 2 படகுகளிலும் இருந்த மீனவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி படகுகளில் இருந்த 2 ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள், டார்ச்லைட் ஆகியவற்றை பறித்து சென்றனர். செல்போன்களையும் பறித்து சென்றதால் இதுபற்றி அதிகாரிகளுக்கோ, மற்ற மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்தனர்.

    இந்நிலையில் மீனவர்கள் 12 பேரும் 2 படகுகளுடன் இன்று காலை நாகை கடற்கரைக்கு திரும்பினர். பின்னர் கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பொருட்களை பறித்து சென்றது குறித்து கடலோர காவல்குழுமம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

    கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், விலை உயர்ந்த பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதால் மிகவும் பாதிக்கப்படுவதாக நாகை மாவட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக கொண்டு வந்த 200 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக தொடர்ந்து வந்த ரகசிய புகார்கள் வந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் தலைமையில் திருப்பூண்டி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 200 நெல் மூட்டைகள் மற்றும் அதனை ஏற்றி வந்த வேன் கீழையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதில் தொடர்புடைய காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல பொது மேலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.
    திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏடிஎல் ஆய்வகத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஏடிஎல் ஆய்வகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி ஏடிஎம் ஆய்வகத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

    தலைமையாசிரியர் கலாராணி வரவேற்றார். இதில் ஏடிஎல் ஆய்வகத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரோபோ மிராக்கல் நிறுவனத்தின் நிர்வாகிகள் ருத்ரேஷ், சூரஜ், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், ஓவிய ஆசிரியர் குமரன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ&மாணவிகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    நாகை கடற்கரையில் நடைபெற்ற அமுத பெருவிழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    75-வது சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நாகை புதிய கடற்கரையில் அமுத பெருவிழா நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்திய திருநாட்டின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை மக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ&மாணவிகள் பரதநாட்டியம், தென்னக கலை பண்பாட்டுத்துறை சார்பில் தப்பாட்டம், கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தெம்மாங்கு பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

    இந்நிகழ்வில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
    நாகையில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை டாட்டா நகரை சேர்ந்த குமரவேல் தன்னுடைய மோட்டார் சைக்கிளை பப்ளிக் ஆபீஸ் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். இதனை நோட்டமிட்ட படியே அவ்வழியே சென்ற 2 வாலிபர்கள் லாவகமாக சைடு லாக் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

    எப்போதும் பரபரப்பாக கூட்டம் மிகுந்து காணப்படும் இடத்தில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பரபரப்பு காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் மூலம் மர்ம நபர்கள் திருடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு குமரவேல் கொடுத்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பிரதாபராமபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை கொள்முதல் செய்ய பட்டியல் எழுத்தர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் விவசாயிகளிடம் மூட்டைக்கு லஞ்ச பணம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
     
    இந்நிலையில் தெற்கு பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி இளங்கோ நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு அந்த கொள்முதல் நிலையம் சென்றார். அவரிடம் இருந்த 48 மூட்டைகளை கொள்முதல் செய்த பட்டியல் எழுத்தர் பாஸ்கர் உள்ளிட்ட ஊழியர்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என நிர்ணயம் செய்து மொத்தம் ரூ.1940 லஞ்சமாக  கேட்டுள்ளனர்.
     
    மேலும் ஊழியர்களுக்கு டீ வாங்க தனியாக ரூ.100 கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி இளங்கோ இந்த தகவல் மற்றவர்களுக்கும் சென்று சேர முடிவு செய்தார். அதன்படி தனது செல்போனை மறைத்து வீடியோ எடுத்தப்படி பாஸ்கரிடம் அவர் கேட்ட பணம் கொடுத்தார்.
     
    இதையடுத்து வெளியே வந்த இளங்கோ அந்த வீடியோ காட்சிகளை வாட்ஸ்&அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
     
    உடனடியாக லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் பாஸ்கர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்து புலிகள் கட்சி வலியுறுத்தல்
    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத்தலைவர் ஆறு சரவண தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு கிராமத்தில் போலீசார் மிரட்டியதால் 19 வயது கல்லூரி மாணவர் அக்னீஸ்வரன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

    கச்சநத்தம் என்னும் ஊரில் நடந்த கொலை சம்பவத்தில் இவரது தந்தை, சகோதரர் மற்றும் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் ஜாமீனில் வந்து இருந்த அக்னீஸ்வரனை தொடர்ச்சியாக போலீசார் தொந்தரவு செய்து வந்ததால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

    தமிழக அரசு இது குறித்து நீதி விசாரணை நடத்தி தற்கொலைக்கு தூண்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டம், கீழ்வேளூர் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தி.மு.க சார்பில் சந்திரசேகரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

    அதேபோல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு ம.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற காந்திமதி ஸ்ரீதரனும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற மறைமுக வாக்குப்பதிவில் மொத்தம் 15 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் தி.மு.க உறுப்பினர் சந்திசேகரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

    இதனையடுத்து சந்திரசேகரன் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன சுந்தரம் அறிவித்தார். கூட்டணி கட்சியினர் போட்டி வேட்பாளர் நிறுத்தியதால் பேரூராட்சி அலுவலகத்திற்கு வெளியே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகை மாவட்டத்தில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், தாசில்தார் ரவிச்சந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

    பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு பின்னர் உயர்கல்வி மற்றும் போட்டித்தேர்வு வாய்ப்புகள், கல்லூரிகளைத் தேர்வு செய்தல், சுயதொழில் வாய்ப்புகள் வேலைவாய்ப்பு பெறத்தக்க படிப்புகள் போன்றவை குறித்து ஒலி&ஒளி கருவிகளுடன் தலைமை ஆசிரியர் துரைக்கண்ணன், முதுகலை ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர். 

    முடிவில் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
    திருமருகல் அருகே அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். 

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 

    இந்த போட்டி 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும் நடைபெற்றது. இதில் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    பரிசு பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
    ×