என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே ஔவையார் கோவிலில் நடந்த ஆண்டு விழாவில் மும்மதத்தினர் பங்கேற்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசியபட்டினம் கிராமத்தில் விஸ்வநாதர் ஔவையார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஔவைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த ஔவையார் கோவிலின் 48-வது ஆண்டு திருவிழா தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக நடைபெற்றது.

    விழாவிற்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்து பேசியதாவது:-

    அரசு சார்பில் நடத்தப் படும் இந்த விழாவை வருங்காலத்தில் மிகச் சிறப்பாக நடத்தவும், விஸ்வநாதர் ஔவை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தவும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் ஒத்துழைப்போடு வருங்காலத்தில் அவ்வாறு விழா சிறப்பாக நடத்தப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பின்பு ஔவையார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு ஔவையார் வேடமிட்டு ஔவையார் பாடல் பாடப்பட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.

    விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியது

    விழாவில் நாகை மாலி எம்.எல்.ஏ, அறநிலையத்துறை உதவி ஆணையர் இணை ஆணையர் தென்னரசு, செயல் அலுவலர் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், வழக்கறிஞர்கள் சீனிவாசன், அன்பரசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வைத்தியநாதன் கோமதி தனபாலன், ஊராட்சிமன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே மீன் பிடித்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
    நாகப்பட்டினம்:

    நாகூர் பட்டிணச்சேரியை சேர்ந்த மவின்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகூர் பட்டிணச்சேரியை சேர்ந்த ரகு உள்பட 12 மீனவர்கள் கடந்த 20-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தொடர்ந்து  தங்கி மீன் பிடித்தனர். 26-ந் தேதி நாகைக்கு வடகிழக்கே 118 கிலோமீட்டர் தொலைவிலும் கடலூருக்கு கிழக்கே 58 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது மீனவர் ரகு எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் சிலர் உடனே கடலில் குதித்து ரகுவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.  இதையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கடலோர போலீசார் கடலில் ரகுவை தேடி வருகின்றனர். 2 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை ரகுவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன ஆனார்? என்ற விவரம் தெரியாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழந்துள்ளனர்.

    இது குறித்து கரை திரும்பிய சக மீனவர்கள் கூறும்போது:

    கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் காரணமாக ரகு படகிலிருந்து தவறி விழுந்தார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கோஸ்ட்காட் மூலமாகவும் தேடும் பணி தொடர்கிறது என்றனர். மாயமான மீனவர் ரகுவிற்கு மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
    நாகை அருகே நண்பரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி ஆலங்குடிச்சேரி பகுதியை சேர்ந்த சௌரிராஜன் மகன் சரவணன் (வயது 48). கொத்தனார். இவரும் திட்டச்சேரி ப.கொந்தகை டி.ஆர்.பட்டினம் ரோட்டை சேர்ந்த காசிநாதன் மகன் ராஜா (வயது 49). கொத்தனார்.இருவரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சிக்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று முதல் நாள் சொந்த ஊரான ஆலங்குடிச்சேரிக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் தனது நண்பர் ராஜாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு சரவணன் சென்றுள்ளார். அங்கு ராஜாவின் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வெளியூர் சென்றிருந்தனர்.

    சரவணன், ராஜா இருவரும் வீட்டில் மது அருந்தி உள்ளனர்.அப்போது ராஜா, சரவணனிடம் நாம் இருவரும் வேலைக்கு எங்கு சென்றாலும் ஒன்றாக தானே செல்வோம். பின்னர் எதற்காக என்னை விட்டுவிட்டு திருச்சி வேலைக்கு தனியாக சென்றாய் என கேட்டுள்ளார்.

    இதனால் மதுபோதையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜா அரிவாளை எடுத்து சரவணனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
     
    இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
    நாகை அருகே 39 பவுன் நகைகள், ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்த முருகன் (எ) வேல்ராஜ் என்பவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய வீட்டில் கடந்த 18-ந்தேதி நகை, பணம் உள்ளிட்டவைகள் திருட்டு போனது.

    முருகனின் மனைவி நாகலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம கும்பல் 39 பவுன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 3 லட்சம் பணம் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    அதனை தொடர்ந்து கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நாகையில் உள்ள பிரபல வெளிநாட்டு கரன்சி மாற்றுபவரிடம் நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவன், திருடப்பட்ட வெளிநாட்டு கரன்சியை இந்திய பணமாக மாற்றுவது குறித்து விவரம் கேட்டு சென்றுள்ளான்.

    இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் கீழ்வேளூர் போலீசார் ஊட்டியில் இருந்த கார்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நாகை செக்கடி தெரு கொறசேகர், சிவன் தெற்கு வீதி தளபதி காளிதாஸ், வடக்கு நல்லியான் தோட்டம் ஓச்சு பிரகாஷ் உள்ளிட்டோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து போலீசாருக்கு பயந்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கொறசேகர், தளபதி காளிதாஸ், ஒச்சு பிரகாஷ் உள்ளிட்ட திருட்டு கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களை மீட்டனர்.

    தொடர்ந்து மீட்கப்பட்ட பொருட்களை நாகை எஸ்.பி. ஜவஹர் உரிமையாளரிடம் ஒப்படைத்ததுடன், குற்றவாளிகளை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசாரை பாராட்டினார்.
    அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வேதாரண்யம் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் தலைவரும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவருமான தென்னரசு தலைமையில் நடந்தது. செயலாளர் சுபஹானி வரவேற்றார். பொருளாளர் சீனிவாசன் அறிக்கை வாசித்தார்.

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் வேதநாயகம், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், சுப்பிரமணியன், சாமிசெட்டி, உதயகுமார், கனகசுந்தரம், விஜயதிவாகர், சிவஞானம், ரஹ்மத்துல்லா, புயல்குமார், குமரசாமி, காதா¢முகைதீன், சுப்பராமன், நவாஸ்தீன், வசந்தி செல்வகுமார், மங்களதாஸ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

    2022-24 ஆகிய 3 ஆண்டுகளுக்குரிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டனர். புதிய தலைவராக தென்னரசு, செயலாளராக சுபாஹானி, பொருளாளராக சீனிவாசன், துணைத் தலைவர்களாக சுப்பிரமணியன், ஆறுமுகம், துணைச் செயலாளர்களாக தங்கத்துரை, தமிழழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை உறுப்பினர்கள் பாராட்டினர்.

    கூட்டத்தில் அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரெயில் பாதை பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வது.

    திருத்துறைப்பூண்டி சாலை வெட்டு குளம் காரியாபட்டினம் சாலை அரியாண்டிகுளம் ஆகியவற்றை தூர்வாரி சுத்தம் செய்து குளக்கரை சுவர், விளக்குகள் அமைக்க வேண்டும். நகருக்குள் வரும் லாரிகள் பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையூறாக முக்கிய வீதிகளில் நிறுத்தி வைக்காமல் நகருக்கு வெளியே லாரிகள் நிறுத்தும் இடம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    நாகை அருகே விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தரை தற்காலிக பணி நீக்கம் செய்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    நாகப்பட்டினம்:

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
     
    இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வைரல் ஆகியது.

    இதனையடுத்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டதில் தெற்கு பொய்கைநல்லலூர் பகுதியை சேர்ந்த இளங்கோவிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய பட்டியல் எழுத்தர் பாஸ்கர் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் ரூ.1940 லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.

    இதையடுத்து பட்டியல் எழுத்தர் பாஸ்கரை தற்காலிக பணி நீக்கம் செய்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    கோடியக்கரை சரணாலயத்தில் நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது இந்த சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, குதிரை, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த பசுமை மாறா காட்டில் நாட்டுப் பறவைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இந்த கோடியக்கரை சரணாலயத்தில் எதிர்புறம் உள்ள பறவைகள் சரணாலயத்தில் உலகெங்கிலுமிருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்லும்.இதன் கணக்கெடுப்பு பணி ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதேபோல் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு கணக்கெடுப்பு பிப்ரவரி மாதம் முடிவுற்றது.

    மூன்றாவது கட்டமாக வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் நாட்டு பறவைகளான மைனா, செண்பகம், கௌதாரி, பச்சைக்கிளி, காட்டில் வாழும் காகம், மரங்கொத்தி, சிட்டுக்குருவி, குயில், மயில் போன்ற பல பறவை இனங்கள் இந்த சரணாலயத்தில் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது மேலும் வாய்மேடு பெரியகுத்தகை ஆகிய பகுதிகளில் உள்ள காப்பு காட்டிலும் கோடியக்கரையில் உள்ள 5 அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    இந்த கணக்கெடுக்கும் பணியில் நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், ஈரநில நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இரண்டு நாள் கணக்கெடுப்பு முடிந்தபிறகு பறவையின் எண்ணிக்கை குறித்து விவரம் வெளியிடப்படும் என்று வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.
    கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், விலை உயர்ந்த பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதால் மிகவும் பாதிக்கப்படுவதாக நாகை மாவட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் சிவபாலன், மயில்வாகனன். இருவரும் தங்களுக்கு சொந்தமான பைபர் படகுகளில் மேலும் 10 மீனவர்களுடன் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கோடியக்கரை தென் கிழக்கே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை பகுதியை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் ஒரு விசைப்படகில் வந்து ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்தனர்.

    பின்னர் 2 படகுகளிலும் இருந்த மீனவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி படகுகளில் இருந்த 2 ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள், டார்ச்லைட் ஆகியவற்றை பறித்து சென்றனர். செல்போன்களையும் பறித்து சென்றதால் இதுபற்றி அதிகாரிகளுக்கோ, மற்ற மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்தனர்.

    இந்நிலையில் மீனவர்கள் 12 பேரும் 2 படகுகளுடன் இன்று காலை நாகை கடற்கரைக்கு திரும்பினர். பின்னர் கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பொருட்களை பறித்து சென்றது குறித்து கடலோர காவல்குழுமம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

    கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், விலை உயர்ந்த பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதால் மிகவும் பாதிக்கப்படுவதாக நாகை மாவட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக கொண்டு வந்த 200 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக தொடர்ந்து வந்த ரகசிய புகார்கள் வந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் தலைமையில் திருப்பூண்டி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 200 நெல் மூட்டைகள் மற்றும் அதனை ஏற்றி வந்த வேன் கீழையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதில் தொடர்புடைய காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல பொது மேலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.
    திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏடிஎல் ஆய்வகத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஏடிஎல் ஆய்வகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி ஏடிஎம் ஆய்வகத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

    தலைமையாசிரியர் கலாராணி வரவேற்றார். இதில் ஏடிஎல் ஆய்வகத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரோபோ மிராக்கல் நிறுவனத்தின் நிர்வாகிகள் ருத்ரேஷ், சூரஜ், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், ஓவிய ஆசிரியர் குமரன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ&மாணவிகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    நாகை கடற்கரையில் நடைபெற்ற அமுத பெருவிழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    75-வது சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நாகை புதிய கடற்கரையில் அமுத பெருவிழா நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்திய திருநாட்டின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை மக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ&மாணவிகள் பரதநாட்டியம், தென்னக கலை பண்பாட்டுத்துறை சார்பில் தப்பாட்டம், கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தெம்மாங்கு பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

    இந்நிகழ்வில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
    நாகையில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை டாட்டா நகரை சேர்ந்த குமரவேல் தன்னுடைய மோட்டார் சைக்கிளை பப்ளிக் ஆபீஸ் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். இதனை நோட்டமிட்ட படியே அவ்வழியே சென்ற 2 வாலிபர்கள் லாவகமாக சைடு லாக் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

    எப்போதும் பரபரப்பாக கூட்டம் மிகுந்து காணப்படும் இடத்தில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பரபரப்பு காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் மூலம் மர்ம நபர்கள் திருடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு குமரவேல் கொடுத்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×