என் மலர்
கிருஷ்ணகிரி
- வாகன சோதனை செய்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்.
- வழக்கில் கைப்பற்றப்பட்டு 325 வாகனங்கள் உள்ளன.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் டி.ஜி.பி. கே.வன்னிய பெருமாள் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் சென்னை சாலை பாரிஸ் நகரில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மாநில எல்லை சோதனை சாவடிகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் ரேஷன் அரிசி கடத்தலை முழு அளவில் தடுக்க போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது டி.ஜி.பி. வன்னியபெருமாள் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க வேண்டும். மேலும் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெயில் மூலம் பக்கத்து மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்ய வேண்டும். சோதனை சாவடிகள் இல்லாத சாலைகளிலும் வாகன சோதனை செய்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்.
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு கைப்பற்றப்பட்டு கிருஷ்ணகிரி அலகில் தற்போது 325 வாகனங்கள் உள்ளன. அவற்றை மாவட்ட வருவாய் அலுவலருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டிட வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, சேலம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர், மணிகண்டன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
- திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 55). இவர் ஓசூர் திருச்சிப்பள்ளியில உள்ள ஒரு கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி காலை வேலையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே போல திருச்சி மாவட்டம் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (46). லாரி டிரைவர். இவர் லாரியை ஓட்டிக் கொண்டு கந்திகுப்பம் அருகே உள்ள பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பக்கமாக வந்தார். அங்கு சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்படவே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சூளகிரி பகுதிகளில் மத்திய ஜல்சக்தி மிஷன் குழுவினர் ஆய்வு செய்தனர்.
- 8 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தரம், மத்திய மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் மத்திய ஜல்சக்தி மிஷன் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ,சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் அமைந்துள்ளது. இதில் 8 கிராம ஊராட்சிகளான ஆலூர், காமன்தொட்டி, பிர்ஜேபள்ளி, அத்திமுகம், பங்கனஅள்ளி, சென்னப்பள்ளி, ஓசால்லி, மாரண்டபள்ளி ஆகிய 8 கிராம ஊராட்சிகளில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு வாயிலாக தனிநபர் குடியிருப்பு இணைப்புகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்ட செயலாக்ககத்தினை ஆய்வு செய்யும் பொருட்டு மத்திய ஜல் சக்தி மிஷன் அமைச்சரகத்தில் இருந்து சிசியா பால் சேட்டி மற்றும் கன்சான் பாக் அகமத் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
8 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தரம், குளோரிநேசன், பாதுகாப்பான குடிநீர், தங்க தடை இன்றி குடிநீர் வழங்குதல், மற்றும் மத்திய மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், குடிநீர் தரம் பரிசோதனை சுய உதவி குழு உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட்டதை கண்காணித்தனர்.
இந்த நிகழ்வில் உதவி திட்ட அலுவலர்கள் அருள்மொழி, தேவ ராஜ்,உதவி செயற்பொறியாளர், மாது,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாப்பிரான்சி, விமல் ரவிக்குமார், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சுய உதவி குழு மேலாளர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- ஓசோன் படலத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பன்னாட்டு ஓசோன் தினம் கிருஷ்ணகிரியில் கடைபிடிக்கப்பட்டது.
- கிருஷ்ணகிரியில் ஓசோன் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பசுமைப்படை மன்றங்களின் சார்பில் ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ஒன்றிய அளவில் நடந்த மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.
உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், ஓசோன் படலத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பன்னாட்டு ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி நடந்த மாவட்ட அளவிலான போட்டியில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், காற்று மாசுப்படுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 560 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, பள்ளியின் தலைமை ஆசிரியரும், கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
- வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.59 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
- பள்ளிகளில் ஆய்வு செய்த கலெக்டர் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்டுபடுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, பில்லனகுப்பம், கோடிப்பள்ளி, ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குந்தாரப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி 2023-2024 நிதியாண்டின் கீழ் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் குந்தாரப்பள்ளி தெற்கு தெரு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பேவர்பிளாக் கற்கள் அமைக்கும் பணிகளையும், ஜெட்ஏரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரி தூர் வாரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து குந்தாரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை பார்வையிட்டு ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாட திட்டங்கள் மாண வர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பித்தல் வேண்டும். மேலும் மாணவ மாணவியர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என ஆசிரி யர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும், குழந்தை களின் எடை, உயரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து சாமந்தமலை ஊராட்சி, குட்டுர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டிடம் கட்டுமான பணிகளையும்,
பில்லனகுப்பம் ஊராட்சி பண்டப்பள்ளி கிராமத்தில், 15 வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் புதியதாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ், ரூ. 5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் பண்டப்பள்ளி ஏரி தூர் வாரும் பணிகளையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் விவசாயி கிருஷ்ணப்பா நிலத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பட்டு கூடு உற்பத்தி கொட்டகை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முடிவில் குந்தாரப்பள்ளி ஊராட்சியில் குந்தாரப்பள்ளி முதல் வேப்பனப்பள்ளி செல்லும் சாலை, நடுப்பட்டி கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் என மொத்தம் ரூ.59 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், உதவி பொறியாளர்கள் தீபமணி, மணிவண்ணன், பணி மேற்பார்வையாளர்கள் மூர்த்தி, தேன்மொழி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- கிருஷ்ணகிரியில் மோட்டார்சைக்கிளில் கடத்திய 10 கிலோ சந்தன கட்டை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், புதுக்கோட்டையை சேர்ந்தவரை கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் போலீசார் விசாரித்ததில் வண்டியில் சந்தனகட்டைகள் கடத்தியது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் போலீசார் நேற்று கிருஷ்ணகிரி - சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு சென்றனர். அப்போது விபத்தில் சிக்கிய ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் துரத்தி பிடித்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் ஜவுளி துணி போல ஒரு பெரிய அளவில் ஒரு பை இருந்தது. போலீசார் அதை திறந்து பார்த்தபோது 10 கிலோ சந்தன கட்டைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடியை சேர்ந்த அம்ஜத்அலி(வயது 47) என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் சந்தனக்கட்டையை கடத்தி வந்து, ஓசூரில் ஒருவரிடம் கொடுத்துவிட்டு, மீதமிருந்த 10 கிலோ சந்தன கட்டையை மீண்டும் அந்தியூருக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் இதை தடுக்க தவறிய மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மத்திய பா.ஜனதா ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. அரிசி, எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் என அனைத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.
1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தும், பண வசூலை குறியாக கொண்டு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யாலும் சிறு, குறுந்தொழில்கள் முடங்கி விட்டன. அதேபோல வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித் துள்ளது.
மணிப்பூரில் 3 மாதத்திற்கும் மேலாக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பா.ஜனதா ஆட்சியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநில குழு உறுப்பினர்கள் பழனி, மாதையன், சின்னசாமி, கண்ணு, சுந்தரவள்ளி, விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, சக்கரவர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- தேன்கனிக்கோட்டையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேன்கனிக்கோட்டை:
கிருஷணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் கோணப்பன், மேற்கு மாவட்ட தலைவர் சித்தலிங்கப்பா, கிழக்கு மாவட்ட தலைவர் ராஜி, துணை செயலாளர் ஜம்புலிங்கேஸ்வரன் மாநில செயற்குழு உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் பழனிவேல் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும்.
கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டங்களில் வறண்ட பகுதிகளுக்கு காவிரி உபரி நீரை பம்பிங் மூலம் நீரேற்றம் செய்து ஏரி குளங்களுக்கு நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்த வேன்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி நெடுக் கல் பகுதிகளில் புற காவல்நிலையம் அமைக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டம் காரிமங் கலம் காவல்நிலையத்தை பிரித்து பெரியாம்பட்டி அனுமந்தபுரம் பகுதிகளில் புற காவல்நிலையம் அமைக்க வேன்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடைகளுக்கான உரிமங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று தலைமை செயலாளரிடம், மாவட்ட வணிகர்கள் மனு அளித்தனர்.
- கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 9பேர் பலியானர். இதன்காரணமாக மாவட்டத்தில் உரிமம் பெறாத பட்டாசு கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.
கிருஷ்ணகிரி:
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பட்டாசு விற்பனை தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்றும், ரத்து செய்யப்பட்ட பட்டாசு கடை உரிமங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மெட்ரோ ஏ.டி.கண்ணன், செயலாளர் ஜெ.எம்.எஸ். சின்னப்பன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராஜா மற்றும் கிருஷ்ணகிரி பட்டாசு வணிகர் சங்கம், ஓசூர் பட்டாசு வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
- சிறிது நேரம் கழித்துதான் அவர்களுக்கு பஞ்சர் கடையில் மின்மோட்டார் வெடித்தது தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர், அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் லதீப் (வயது38) என்பவர் மாற்றுத்திறனாளி சொந்தமாக பஞ்சர் கடையை நடத்தி வருகிறார். அங்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகன் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த டிரைவர்கள் லிங்கப்பா, முத்து ஆகிய 2 பேர் லாரியை ஓசூருக்கு ஓட்டிவந்தனர். அப்போது அவர்கள் லதீப் கடையில் லாரியின் டயர்களுக்கு பஞ்சர் போடுவதற்காக நிறுத்தினர். உடனே லதிப் அந்த லாரியின் இருந்து சக்கரங்களை கழற்றி பஞ்சர் போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஏர் கம்பிரஷர் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு கடையின் மேற்கூரை பறந்தது. இதனால் திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால், அசம்பாவிதம் ஏதோ நடந்து விட்டதாக கருதி அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர்.
சிறிது நேரம் கழித்துதான் அவர்களுக்கு பஞ்சர் கடையில் மின்மோட்டார் வெடித்தது தெரியவந்தது.
இந்த வெடிவிபத்தில் பஞ்சர் கடையின் உரிமையாளர் லதீப், முருகன், முத்து, லிங்கப்பா ஆகிய 4 பேர் கை, கால்கள் முறிந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தனர்.
அதன்பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஓசூர் அரசு மருத்துவமனையில் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு கை,கால்கள் முறிந்து ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயங்களுடன் இருந்த 4 பேருக்கும் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த 4 பேரில் டிரைவர்கள் 2 பேரை பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லதீப், முருகன் ஆகிய 2 பேருக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாகலூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டபகலில் திடீரென்று கம்ப்ரசர் மின்மோட்டார் வெடித்து 4 பேர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கோவில் அமைக்க எதிர்ப்பு ஏற்ப்பட்டதால் வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சிலை அமைக்கும் பகுதியில் கற்களால் மூடி வைத்தனர்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுப்படனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி வட்டார வளர்சி அலுவலக வளாகத்தில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் 2016-2017 ஆண்டு நவீன முறையில் கட்டபட்டபோது கட்டிட கற்கள் மீதியானதை வைத்து விநாயகர் கோவில் கட்ட ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் அணைவரும் சேர்ந்து கூட்டு முயச்சியில் கட்ட முயச்சித்ததாக கூறப்படுகிறது.
பின்பு கோவில் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று விநாயகர் சிலை வைத்து திறக்க உள்ள நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் சிலர் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொது இடம் என்பதால், கோவில் வைக்க கூடாது, கடவுள் சிலை வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பி.டி.ஓ அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். விநாயகர் கோவில் கட்டியதில் தவறு இல்லை என பா.ஜ.க., பா.ம.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரவு மனு அளித்தனர்.
இதனால் அந்த பகுதியில் கோவில் அமைக்க எதிர்ப்பு ஏற்ப்பட்டதால் வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சிலை அமைக்கும் பகுதியில் கற்களால் மூடி வைத்தனர். இதை அறிந்த கோவிலுக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர் மாலை 4 மணி அளவில் அந்த பகுதியை முற்றுகையிட்டனர். இதை அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, தாசில்தார் சக்திவேல், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுப்படனர்.
இதுகுறித்து அனைத்து தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தாசில்தார், போலீசார் உறுதியளித்தனர். அந்த பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
- பிரியங்காவுக்கும், சுனந்தா வுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அகரம் அருகே உள்ள கெம்பேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சுனந்தா (வயது 44). இவர்களது மகள் பிரியங்கா (19). அதே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (37). இவரது மனைவி மஞ்சுளா (31). இவர்கள் பிரியங்காவின் உறவினர்கள் ஆவார்.
இருதரப்பினருக்கும் அதே பகுதியில் சொந்தமாக விவசாயம் நிலம் உள்ளது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று பிரியங்காவும், அவரது தாயார் சுனந்தாவும், நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மஞ்சுநாத் அவர்களிடம் கேள்வி கேட்டதில், அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, மஞ்சுநாத், பிரியங்காவையும், அவரது தாயாரையும், கைகள் மற்றும் மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கி மிரட்டினார். இதன் காரணமாக, பிரியங்கா வுக்கும், சுனந்தா வுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்கா உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தனர்.






