என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த சாமந்த மலையை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பத்து (வயது 45).
இந்த நிலையில் நேற்று பத்து, தனது மாடுகளை மேய்ச்சலுக்காக வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்து இருந்த 2 நபர்கள் திடீரென பத்து மீது மிளகாய் பொடியை தூவி தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
பின்னர் அவர் காதில் அணிந்திருந்த தங்கத்தோடு மற்றும் காலில் அணிந்திருந்த கொலுசுகள் மர்ம கும்பல் எடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும்.
இந்த சம்பவம் பற்றி குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது உறவினர்கள் மணி, பெருமாள் ஆகியோர் முன்விரோதம் காரணமாக நகை பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தேவநத்தம் ஊராட்சி நார்ப்பனட்டி கிராமத்தை சேர்ந்தவர் பஜப்பா (வயது 70). விவசாயி, இவருக்கு 2 மனைவிகளும், 6 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் பஜப்பா, ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இதனால் நேற்று மதியம் தனது மாடுகளை ராயக்கோட்டை வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
பின்னர் அவர் மாடுகளை ஓட்டி வர வனப்பகுதிக்கு சென்றார். அதன்பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் , இரவு முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.
இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் பஜப்பா, உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒற்றை யானை தாக்கி பஜப்பா பலியானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் ராயக்கோட்டை வனச்சரகர் நாகராஜன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.
பின்னர் ஒற்றை யானை தாக்கி பலியான பஜப்பா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வனப்பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஒற்றை யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெரமகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். விவசாயி. இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு நீத்திஷ் (வயது 5) என்ற மகனும், தன்சிகா (3) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சிறுமி தன்சிகா நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மல்லிகை பூந்தோட்டத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை தன்சிகாவை விஷ பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து குழந்தை அழுகை சத்ததால் புனிதா விரைந்து வந்து பார்த்தார். அப்போது குழந்தைக்கு பாம்பு கடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தன்சிகாவை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள், குழந்தை தன்சிகாவை பரிசோதித்து பார்த்து ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றார்.
விஷ பாம்பு கடித்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு சுகாதார பணிகள், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த அவர் இரவு கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்தில் தங்கினார்.
தொடர்ந்து நேற்று கொடகரை, காமகிரி, மூக்கன்கரை மலைக்கிராமங்களில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மூக்கன்கரை மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்டம் மூக்கன்கரை மலைக்கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணமாக சென்றார். அப்போது வழியில் உள்ள மலைக்கிராம மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், இங்குள்ள மலைக்கிராம மக்கள் சுகாதார நிலையம், 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை என பல கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
தற்போது கொடகரை, காமகிரி கிராமங்களுக்கு அவசர சிகிச்சைக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அரசு துணை சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள மலைக்கிராமத்தில் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே பேடரஅள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி.
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதேபகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது21).
இந்த நிலையில் கேசவன் உறவினர் என்பதால் அடிக்கடி அந்த சிறுமி வீட்டிற்கு சென்று வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சிறுமியும், கேசவனும் நெருங்கி பழகினர்.
கேசவன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட அந்தசிறுமி அவருடன் பல இடங்களில் ஊர் சுற்றியுள்ளார். அப்போது கேசவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கடந்த மே மாதம் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் சிறுமியை பெற்றோரை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் விசாரித்து கேசவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
கேசவன் அந்த சிறுமிக்கு சித்தப்பா உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய கேசவனின் உறவினர்கள் சூர்யா என்கிற அழகேசன், பச்சமுத்து (25), ஆனந்தன் (28), பச்சியப்பன் (32), கிருஷ்ணன் (30) ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான 6 பேரையும் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தில் கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் பயன்பாடு கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் குழு அமைத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரப்படுத்தினர்.
கெலமங்கலம் வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தேடுதல் வேட்டையை முடக்கி விட்டனர். அப்போது லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 47), பேவநத்தம கிராமம் திம்மராயன் (42), காடு லக்க சந்திரம் கிராமம் மாரப்பா (45), இருள பட்டி கிராமம் நாகராஜ் (37), உப்பு பள்ளம் முரளி (25) ,திம்மராயப்பா (50), சங்கரப்பா (60) ஆகியோர் வனவிலங்குகளை வேட்டைக்காக உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அவரை களை கைது செய்த போலீசார் மறைத்து வைத்திருந்த 7 துப்பாக்கிகளை கைப்பற்றினர். விசாரணையில் கெலமங்கலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரும் சீனிவாசன் (45) என்பவர் 7 பேருக்கும் வெடிமருந்து பொருட்கள் மற்றும் கரி மருந்து, பால்ரஸ் குண்டு ரவைகளை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சீனிவாசனை போலீசார் கைது செய்தனர் .
இந்த பகுதியில் 7 கள்ளத் துப்பாக்கிகள் போலீசார் கைப்பற்றி உள்ள சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






