என் மலர்
காஞ்சிபுரம்
- விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமுமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.
விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமுமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 150-வது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி கைகளில் மெழுகுவர்த்தியினை ஏந்தியவாறு, விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
150-வது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலையில் துண்டு கட்டிக்கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் முதியவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
- சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
- குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.
காஞ்சிபுரம்:
கர்ப்பப்பை பிரச்சினைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தும் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.
பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடியாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கி இருக்கிறார்கள்.
வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள்.
அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர்.
அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆபரேசன் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட நாளில் தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.
இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. அதை தவிர்க்க விலை உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும்.
அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும். பின்னர் ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும்.
இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.
- தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரில் இருந்து விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிக்கான நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை பதிவிறக்கம் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 26-ந்தேதி காலை 8.30 மணியளவிலும், கட்டுநர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் வருகிற 29-ந்தேதி காலை 8.30 மணியளவிலும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் துணைப்பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முன்பாக, தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை கோரும் சான்று உள்பட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்திய ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கான இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கஞ்சா கும்பல் தாக்கியதால் பல கடைகள் சேதம் அடைந்தன.
- கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், குள்ளப்பன் தெருவில் விமல் என்பவர் வீட்டின் அருகே சிறிய பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடைக்கு கஞ்சா போதையில் வந்த வாலிபர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்றனர். கடையையும் நொறுக்கி சேதப்படுத்தினர்.
மேலும் அந்த போதை கும்பல் சுண்ணாம்புக்கார தெரு, அமுது படி சாலை, தேனம்பாக்கம் சாலை வழியாக சென்றபோது அங்கு வந்த பொதுமக்களை மிரட்டி பணம், செல்போனை பறித்தனர். பணம் கொடுக்க மறுத்தவர்களை பட்டாக்கத்தியால் காட்டி மிரட்டி வெட்டினர்.
இதில் ஆனைகட்டி தெருவை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ் மற்றும் ஆனந்தன், சேஷாத்திரி பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் டோல்கேட் பகுதியை சேர்ந்த சீனு மற்றும் வீரராகவன் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த தயாளன் சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 7 பேருக்கு வெட்டு விழுந்தது.
அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் கஞ்சா கும்பல் தாக்கியதால் பல கடைகள் சேதம் அடைந்தன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி விசாரித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, போதையில் வந்த வாலிபர்கள் பொதுமக்களிடம் செல்போன் மற்றும் பணம் கேட்டு மிரட்டினர். மேலும் பட்டா கத்தியால் வெட்டினர். பல கடைகளும் தாக்கப்பட்டது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இது போன்ற கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றனர்.
- பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
- குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
குன்றத்தூர்:
குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவரது மகன் வெங்கடேசன் (43), போரூரில் சொந்தமாக கம்பெனி நடத்தி வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் 70 வது பிறந்தநாள் என்பதால் திருவல்லிக்கேணியில் உள்ள மண்டபத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து விட்டு சினிமா படம் பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
- பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் வருகிற 11.1.2023 வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும் பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா , இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@yahoo.co.in என்ற என்ற இ-மெயில் முகவரி அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூடுவாஞ்சேரி நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- திருத்தணியில் நகர செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காஞ்சிபுரம்:
மின்கட்டணம், சொத்துவரி, பால்விலை உயர்வை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, நிர்வாகிகள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி, பகுதி செயலாளர் எம்.பி.ஸ்டாலின்,ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளருமான கனிதாசம்பத், ஒன்றிய செயலாளர் எம்.சி. சம்பத், நகர மன்ற உறுப்பினர்கள் எஸ்.டி. பிரசாத், தங்கராஜ், வெங்கடேசன், நாகேந்திரன், கிரிதரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள் நகர் பாலாஜி, நகர மகளிர் அணி செயலாளர் அம்சவல்லி, நகர அம்மா பேரவை செயலாளர் ஏகாம்பரம், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பாபு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தினேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு உமாபதி உட்படபலர் கலந்து கொண்டனர்.
திருத்தணியில் நகர செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி. வி.ரமணா, முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும்,அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ. அரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் ஏராளமான அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக நடந்து செல்ல 13 கிராம மக்கள் குவிந்தனர்.
- மூங்கில் மண்டபம் பஸ் நிலையம், மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை அதிகரிப்பு, பயணிகள் பெருக்கம் ஆகியவற்றால் எதிர் வரும் காலங்களில் கூடுதல் விமானங்களை கையாள முடியாத நிலை உருவாகும் என ஆய்வு செய்யப்பட்டது.
அதிக விமானங்களை இயக்கவும், பயணிகளை கையாளும் வகையில் சர்வதேச தரத்தில் புதியதாக மற்றொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன.
இன்னும் 10 ஆண்டுகளில் தற்போதுள்ள விமான நிலையம் பெரிய நெருக்கடியை சந்திக்கக் கூடும். அதிக விமானங்கள் ஒரே நேரத்தில் இறங்கவும், ஏறவும் ஓடு தளங்கள் கூடுதலாக அமைக்க வேண்டிய நிலை உள்ளது.
அந்த அடிப்படையில் சென்னையின் 2-வது மிகப்பெரிய விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டது.
தற்போது உள்ள சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ. தூரமாகும். காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைகிறது.
புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மற்றும் சுற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இத்திட்டம் அறிவித்தது முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிராம மக்களுடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் ஈடு செய்யக்கூடிய வகையில் உரிய நிவாரணம், வீட்டில் ஒருவருக்கு வேலை, மாற்று இடம் போன்றவை வழங்கப் படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று இத்திட்டத்தை கைவிடுமாறு மனு கொடுப்பதாக அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து போராட்டக் குழுவினருடன் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கிராம மக்களின் எதிர்ப்பு குறித்து அரசிடம் தெரிவிப்பதாகவும், அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் அவர்களிடம் எடுத்து கூறினர்.
இதனை போராட்டக் குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டப்படி இன்று (திங்கட்கிழமை) கிராம உரிமை மீட்பு பேரணி நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக நடந்து செல்ல 13 கிராம மக்கள் இன்று காலையில் குவிந்தனர். குடும்பம் குடும்பமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏகனாபுரத்தில் திரண்டனர்.
இதற்கிடையில் கிராம மக்கள் பேரணியை சமாளிக்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். 13 கிராமங்களை சேர்ந்த எல்லையில் சோதனை சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மூங்கில் மண்டபம் பஸ் நிலையம், மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் திட்டமிட்டப்படி காலை 8 மணிக்கு கிராம மக்கள் பேரணியாக புறப்பட்டனர். ஏகனாபுரத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்ற அவர்களை கிராம எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் போராட்டக் குழுவினருடன் 9 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய இழப்பீடு, நிவாரணம் பெற்று தருவதாக எடுத்துரைத்தார். அதனை போராட்டக்குழு பிரதிநிதிகள் ஏற்கவில்லை.
இத்திட்டத்தை கைவிட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்படி வலியுறுத்தினர். இறுதியில் இதுகுறித்து அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கிராம மக்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் பேரணி காரணமாக காஞ்சிபுரம் மற்றும் பரந்தூர், ஏகனாபுரம் பகுதியில் பதட்டமும், பரபரப்பும் காணப்பட்டது.
- எம்.பி.க்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 5 கோடி ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வகுப்பறை கட்டிடங்கள், மேசை வசதியுடன் கூடிய இருக்கைகள் என அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு 2019-ம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த க.செல்வம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்.பி.க்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 5 கோடி ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த 2019-க்கு பிறகு கொரோனா நோய் தொற்று காரணத்தால் எம்.பி. தொகுதி நிதியினை கொரோனா நிதிக்காக மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டதால் தொகுதி மக்களுக்கான பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது 2021-2022-ம் ஆண்டிற்கான அரையாண்டு நிதி ரூபாய் 2 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த நிதியினை காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் தொகுதி மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மழலையர்களுக்கான அங்கன்வாடி மைய கட்டிடங்கள், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகிய அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கான பொது அறிவு புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், அறிவியல் வளர்ச்சிக்கான புத்தகங்கள் என சமூக வளர்ச்சிக்கான புத்தகங்கள் மாணவர்கள் வளர்ச்சி பெறும் வகையில் அவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கி உள்ளார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வகுப்பறை கட்டிடங்கள், மேசை வசதியுடன் கூடிய இருக்கைகள் என அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
பள்ளிகளில் விழா மேடைகள் அமைப்பதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதேபோன்று பின்தங்கிய கிராமங்கள் வளர்ச்சி பெறும் வகையில் பொது நூலக கட்டிடம், பொது நியாய விலை கடை கட்டிடங்கள், பேருந்து நிழற்குடைகள், உயர் கோபுர மின் விளக்குகள் போன்ற தொகுதி மக்களுக்கான பணிகளை தேர்ந்தெடுத்து செய்வதால் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி முதலிடம் வகிப்பதாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது.
- சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தி சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மற்ற 375 பயணிகளுடன், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.
ஆலந்தூர்:
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து, மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், 378 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த ஜமீலா பிந்தி (வயது58) என்ற பெண், அவரின் குடும்ப உறுப்பினர்கள் 2 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஜமீலா பிந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்திற்குள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.
இதனால் விமானி, உடனடியாக ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். அந்த நேரத்தில் விமானம், சென்னை வான்வெளியை கடந்து சென்று கொண்டிருந்து. உடனே விமானி அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக, விமானத்தை அவசரமாக தரை இறங்க அனுமதி கேட்டார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, அந்த பயணிக்கு மருத்துவ சிகிச்சைக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிட்டனர்.
இதையடுத்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது.
சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், விமானத்திற்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், ஜமீலா பிந்தி மற்றும் அவருடன் வந்த 2 பயணிகள் ஆகியோருக்கு அவசரகால மருத்துவ விசாக்கள் வழங்கினர்.
அதன்பின்பு 3 பேரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தி சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து மற்ற 375 பயணிகளுடன், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- சர்வீஸ் நிலையத்தில் இருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான சுமார் 50 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு சுந்தர விநாயகர் தெருவில் வெங்கட்ராமன் என்பவர் மின்சார மோட்டார் சைக்கிள் சர்வீஸ் நிலையம் நடத்தி வருகிறார்.
இரவில் பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வழக்கம்போல் சர்வீஸ் நிலையத்தை மூடிவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென சர்வீஸ் நிலையத்திலிருந்து புகை வந்து தீப்பற்றி எரிந்தது.இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மளமளவென பரவிய தீயானது சர்வீஸ் நிலையம் முழுவதும் பரவி உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார மோட்டார் சைக்கிள்களும், உதிரி பாகங்களும், பேட்டரிகளும், தீயில் எரிந்து நாசமானது.
எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாகங்களால் ஆனது என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் சர்வீஸ் நிலையத்தில் இருந்த 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான சுமார் 50 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.
சர்வீஸ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதிதாக அமைக்கப்பட்ட கோவில் குளத்தின் கரையின் ஒரு பகுதி சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சரிந்து விழுந்தது.
- கட்டுமான பணி தரமாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஐயங்கார்குளம். இங்குள்ள கைலாசநாதர் கோவிலை ஒட்டி உள்ள குளம் சுமார் ரூ.32 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கியது.
இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட கோவில் குளத்தின் கரையின் ஒரு பகுதி சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சரிந்து விழுந்தது. மேலும் குளத்தை சுற்றிலும் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் கட்டுமான பணி தரமாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.






