என் மலர்
காஞ்சிபுரம்
- பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் கலைத் திருவிழாவில் இடம் பெற்றன.
- குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த கலைத் திருவிழாவில் 34 வகையான தனிநபர் போட்டிகளும், 4 வகையான குழு போட்டிகளும் நடைபெற்றன.
பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் இந்த கலைத் திருவிழாவில் இடம் பெற்றன. மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இடையேயான போட்டிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரம், குன்றத்தூர் ஆகிய 2 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. 34 தனிநபர் போட்டிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் வீதம் தலா 38 பேர் பங்கேற்றனர்.
குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜனவரி 12-ந்தேதி நடை பெறும் பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
- சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தங்களது நெல் அறுவடை மகசூலினை நல்ல விலைக்கு விற்பனை செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மூலமாக 11 தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட வருவாய் கிராமங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுகிறது. சிறுகாவேரிப்பாக்கம் குறுவட்டம், விஷார் கிராமத்திலும், பரந்தூர் குறுவட்டம், தொடூர் மற்றும் புரிசை கிராமங்கள், கோவிந்த வாடி குறுவட்டம், வேலியூர் மற்றும் கம்மவார்பாளையம் கிராமங்கள், சிட்டியம் பாக்கம் குறு வட்டம், சிட்டியம்பாக்கம் மற்றும் மருதம் கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் குறுவட்டம் (பிர்கா), நாவலூர் கிராமம் மற்றும் மதுரமங்கலம், மேல்மதுரமங்கலம் கிராமங்களிலும், படப்பை குறுவட்டம் (பிர்கா), அமரம்பேடு கிராமத்திலும், நெல் கொள்முதல் பணிகள் நடைபெறும்.
சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய விரும்பும் விவசாய பெருமக்கள் அனைவரும் உரிய ஆவணங்களான அடங்கல் சான்று, ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் கொண்டு சென்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- 50 வகையான போட்டிகள் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
- பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், காஞ்சிபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண்/பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பளு தூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் மண்டல அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பிற விளையாட்டுகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.
பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் சார்பாக மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
தனி நபர் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
மாவட்ட அளவிலான போட்டிகள்: தனிநபர், ஒற்றையர், இரட்டையர் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும், குழுப் போட்டிகள் ஒவ்வொருவருக்கும் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும் அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண். 7401703481, 044-27222628 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 152-வது நாளாக இன்று அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.
- 152-வது நாளாக கடும் குளிரிரையும் பொருட்படுத்தாமல் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் வரை அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.
விமான நிலையம் அமைப்பதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வா தாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 152-வது நாளாக இன்று அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
152-வது நாளாக கடும் குளிரிரையும் பொருட்படுத்தாமல் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் வரை அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- சிறுவயதில் இருந்தே பக்தியை வளர்த்தால் அவர்களுக்கு ஒழுக்கம் ஏற்படும். படிப்பிலும் ஆர்வம் வளரும்.
- சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்படுகின்றன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், திருப்பக்கூடல் தெருவில் இந்தி உள்ளிட்ட பல மொழிகளை இலவசமாக கற்றுத்தரும் பண்டிட் சாமுண்டீஸ்வரி சேகர் மாணவ-மாணவிகள் இடையே ஆன்மிக பக்தியை வளர்க்கும் எண்ணத்துடன் ஆண்டுதோறும், மார்கழி மாதம் பஜனை நடத்தி வருகிறார்.
மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து தினந்தோறும் பஜனை நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், பள்ளி சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று, திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட பாசுரங்களை பாடி, தெருக்களில் ஊர்வலமாக செல்கின்றனர்.
கிருஷ்ணர், ராதை கோலத்தில் தினந்தோறும் இந்த பஜனை திருப்பக்கூடல் தெருவில் தொடங்கி யாதவ தெரு வழியாக பாண்டவ தூதர் பெருமாள் கோவிலில் முடிவடைகின்றது. இது குறித்து, திருப்பாவை சபா நிர்வாகி சாமுண் டீஸ்வரி சேகர் கூறியதாவது:-
சிறுவயதில் இருந்தே பக்தியை வளர்த்தால் அவர்களுக்கு ஒழுக்கம் ஏற்படும். படிப்பிலும் ஆர்வம் வளரும். அதற்காக, பஜனையை ஆரம்பித்தோம். தொடக்கத்தில், சிலர் மட்டும் பங்கேற்றனர். தற்போது, 50 சிறுவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை இலவசமாக கற்றுத்தந்து மொழியாற்றலை வளர்க்கின்றோம். பள்ளி மாணவ-மாணவிகள், மார்கழி மாதத்தில், தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து, பஜனையில் பங்கேற்கின்றனர்.
இந்த சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்படுகின்றன. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுக்கு விளக்க உரையும் வழங்கப்பட்டு அதை ஒப்புவிப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
7-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஹரிகரன் கூறும்போது, "இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையை பாடும்போது மனதுக்கு உற்சாகமாக உள்ளது. சுறுசுறுப்பாக செயல்பட முடிகின்றது. அதனால் நான் 4 வருட மாக மார்கழி மாத பஜனையில் கலந்து கொள்கின்றேன். எங்களை மார்கழி மாத பஜனை பக்குவப்படுத்தி உள்ளது. பாடங்களில் அதிக கவனம் செலுத்த முடிகின்றது. தமிழ் உச்சரிப்பு நன்றாக வளர்கின்றது" என்று தெரிவித்தார்.
- புத்தக கண்காட்சி காஞ்சிபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களை போன்று களைக்கட்டியது.
- சேலையின் தரம் குறித்து அரசு சான்றிதழ் பெறுவதால் போலியான பட்டுச் சேலையை வாங்கி ஏமாறுவதை தவிர்க்க முடியும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 125 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் முதலாவது அரங்கமாக தமிழக அரசின் திருவள்ளுவர் பட்டு நெசவு கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பட்டு உற்பத்தி கைத்தறி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைத்தறி கூடத்தில் பட்டுச்சேலைகளை நெசவாளர் ஒருவர் நெய்து வருகிறார். புத்தக திருவிழாவுக்கு வரும் பார்வையாளர்கள் இந்த கைத்தறி கூடத்தை பார்வையிடுகிறார்கள். அப்போது பட்டுச்சேலை எவ்வாறு தயாராகிறது என்பது தொடர்பாக பார்வையாளர்களுக்கு தெளிவான வகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
மேலும் நெசவாளர் சேவை மையத்தால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற பட்டுச்சேலைகளும் இந்த கைத்தறி கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வழங்கிய 10-க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டு சான்றிதழ்களும் அந்த அரங்கில் உள்ளன.
அந்த கைத்தறி கூடத்தில் பட்டுச்சேலை நெய்து கொண்டிருந்த காஞ்சிபுரம் கருணாநிதி நகரை சேர்ந்த நெசவாளர் சம்பத் கூறியதாவது:-
இந்த கண்காட்சியில் தங்கம், வெள்ளி ஜரிகையுடன் ஒரிஜினலான பட்டுச் சேலைகளை நெய்து வருகிறோம். இங்கு தரமான காஞ்சிபுரம் பட்டுச்சேலை ரூ.12 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனைக்கு உள்ளது. பட்டுச்சேலை வாங்குபவர்கள் அந்த சேவை தரமானதா என்பதை உறுதி செய்ய அரசு பரிசோதனை மையத்தில் கொடுத்து பரிசோதித்து உறுதி செய்து கொள்ளலாம்.
இந்த சேலையின் தரம் குறித்து அரசு சான்றிதழ் பெறுவதால் போலியான பட்டுச் சேலையை வாங்கி ஏமாறுவதை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த புத்தக கண்காட்சியில் பலரும் விரும்பக்கூடிய புத்தகங்கள் முதல் அரிய வகை புத்தகங்கள், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் வரை 5000 தலைப்புகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரத்தில் முதன் முறையாக நடத்தப்பட்டு வரும் இந்த புத்தக திருவிழாவில் ஆரம்ப நாள் முதலே மக்கள் வர தொடங்கிய நிலையில் விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை யொட்டி ஏராளமான உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு கிராமப்புற பகுதிகளிலிருந்தும் குடும்பம் குடும்பமாய் சிலர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தும் புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்த புத்தக கண்காட்சி காஞ்சிபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களை போன்று களைக்கட்டியது.
- காலிப்பணியிடமாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.
- விண்ணப்பப்படிவத்தினை https://Kancheepuram.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் காலிப்பணியிடமாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.
தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பப்படிவத்தினை https://Kancheepuram.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் வருகிற 7-ந்தேதி மாலை 5.45க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் சென்று விட்டு பெருநகர் அருகே உள்ள தனலட்சுமி நகரில் உள்ள வீட்டுக்கு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
- தனலட்சுமி நகருக்கு மோட்டார் சைக்கிளை திருப்பியபோது பின்னால் வந்த வாகனம் அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் தனலட்சுமி நகர் அருகே ஓட்டல் நடத்தி வந்தவர் பாஸ்கரன் (வயது 52). இவரது மனைவி தனலட்சுமி (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் சென்று விட்டு பெருநகர் அருகே உள்ள தனலட்சுமி நகரில் உள்ள வீட்டுக்கு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரம் பெருநகர் சாலையில் இரவு 10½ மணி அளவில் அவர்கள் தங்கி இருக்கும் தனலட்சுமி நகருக்கு மோட்டார் சைக்கிளை திருப்பியபோது பின்னால் வந்த வாகனம் அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். பாஸ்கரனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.
- மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகளால் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சக்கர நாற்காலி, திறன்பேசி, ஊன்றுக்கட்டைகள், காதுக்கு பின் அணியும் காதொலிக்கருவி, மோட்டார் பொருந்திய தையல் எந்திரம் போன்ற உபகரணங்கள் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 93 ஆயிரத்து 300 மதிப்பில் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் செந்தில்குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், அனைத்து சிறப்பு பள்ளியின் தாளாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியில் மக்களுக்காக பல அறிய திட்டங்களை தீட்டினார்.
- மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
அ.தி. மு.க. நிறுவனர் முன்னாள் முதல் - அமைச்சர் எம்ஜிஆரின் 35 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் எங்கும் எம்ஜிஆரின் படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினார்கள்.
காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை ஊராட்சி அருகே வண்ண வண்ண மலர்களை கொண்டு எம்ஜிஆர் படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த படத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.ஓ.பி.எஸ். அணி செயலாளர் தொழிலதிபர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் மலர் தூவி வணங்கினார். அவர் பேசுகையில், என்றைக்கும் எம்ஜிஆரை மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்
எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியில் மக்களுக்காக பல அறிய திட்டங்களை தீட்டினார். மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
சத்துணவு திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்திய ஒரே முதல்வர் எம்ஜிஆர் தான். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதை நிரந்தரமாக ஆள்பவரின் பெரும் நினைவை போற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட கழக அவைத் தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் வஜ்ரவேலு, பெருநகர் கோபால், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் குணசேகரன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பூக்கடை ஜகா, உத்திரமேரூர் தொகுதி அமைப்பாளர் யோகானந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் பணிக்காக இந்திய விமான நிலைய இயக்குனரகம் சுமார் ரூ.2467 கோடி ஒதுக்கி உள்ளது.
- 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், ஒரு சில மாதத்தில் அது திறக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையம், வெளிநாட்டு விமான நிலையம் என 2 முனையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு இந்திய விமான இயக்குனரகம் முடிவு செய் தது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது சர்வதேச விமான நிலையம் என்பதால் நவீன வசதிகளுடன் சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்கும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-ல் செயல்பட்டு வருகிறது. டெர்மினல் 2-ல் தற்போது விமான நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. டெர்மினல் 3-ல் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதியாகவும், டெர்மினல-4 சர்வதேச புறப்பாடு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் பணிக்காக இந்திய விமான நிலைய இயக்குனரகம் சுமார் ரூ.2467 கோடி ஒதுக்கி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையத்திற்கு இடையே டெர்மினல்-2 விரிவாக்க பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், ஒரு சில மாதத்தில் அது திறக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இது பயன்பாட்டிற்கு வந்த பின், தற்போது சர்வ தேச வருகை பகுதியாக செயல்பட்டு வரும் டெர்மினல்-3 முழுவதுமாக இடிக்கப்பட்டு அதற்கான வேலை தொடங்கப்படும். இதனை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க இந்திய இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
அதன் பின்னால் டெர்மினல்-1 மற்றும் டெர்மினல்-4 ஆகிய இரண்டு டெர்மினலும் உள்நாட்டு விமான நிலையமாகவும், டெர்மினல் இரண்டு மற்றும் மூன்று சர்வதேச விமான நிலையமாகவும் செயல்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "சென்னை விமான நிலையத்தில் 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த விமான முனையம் திறக்கும்போது அதில் சுமார் 33 தானியங்கி நுழைவாயிலும், 20 ஏரோ-பிரிட்ஜ்களும் இருக்கும். இது பயணிகளை கையாளுவதற்கு எளிதாகவும், வேகமாகவும் அமையும். இந்த பணிகள் தாமதமாவதற்கு காரணம் விமான நிலையம் எல்லையை ஒட்டியுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமும் கொரோனா தொற்றும் ஆகும்.
கடந்த 2 ஆண்டுகளாக மழையின் காரணமாகவும் இந்த பணிகளை சரியாக செய்து முடிக்க முடியவில்லை. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு ஆண்டுக்கு 3½ கோடி பயணிகளை கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சென்னை விமான நிலையம் திறக்கப்படும்" என்றார்.
- உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது.
- 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளான பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது.
ஆலந்தூர்:
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. இதை அடுத்து இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை, நேற்று நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் தொடங்கப்பட்டு உள்ளது.
அதை போல் சென்னை விமான நிலையத்திலும், சர்வதேச முனையத்தில் வருகைப் பகுதியில் வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை சுகாதாரத் துறை தொடங்கியுள்ளனர்.
இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகள் வருகை பகுதியில், செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைத்து உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது.
இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப் படுகின்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடக்கிறது. அந்த இரண்டு சதவீதம் பயணிகள் யார்? என்பதை அந்தந்த விமான நிறுவனங்களே முடிவு செய்து அறிவிக்கின்றனர்.
விமானங்களில் வரும் போது சோர்வாக, இருமல் சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவைகளுடன் இருக்கும் பயணிகளை, இவ்வாறு இரண்டு சதவீத பரிசோதனைக்கு உட்பட்ட பயணிகளாக, தேர்வு செய்கின்றனர். குறிப்பாக வெளி நாட்டவர்களுக்கு, இந்த பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன.
இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளான பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்களில் யாராவது, இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரத்தில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். அதோடு அந்த பயணிகள் மருத்துவ மனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






