என் மலர்
காஞ்சிபுரம்
- தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு அந்த பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கியது.
- ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள வேதாச்சலம் நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு சாலை அமைத்து தரக்கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் வந்தனர்.
இந்த நிலையில் அங்கு தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு அந்த பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கியது. முதற்கட்டமாக அங்கு குறிப்பிட்ட அளவு ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்றது. அப்போது 2 மின்கம்பத்தை அகற்றி சாலை அமைத்திடாமல் மின்கம்பம் நடுவில் இருந்தபடியே சாலை பணியானது நடைபெற்று கடந்த வாரம் முடிந்துள்ளது.
இந்த பணிகளே முடிவுற்று இரண்டு வாரங்கள் ஆகியும் தற்போது வரை மின்கம்பம் அகற்றப்படாமல் சாலையின் நடுவே இருந்து வருகிறது. முறையாக சாலை பணியின்போது மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்கம்பங்களை இடமாற்றம் செய்த பின்னரே சாலை அமைத்திட வேண்டுமெனும் விதிமுறைகள் இருக்கும் நிலையில் இத்தகைய ஒப்பந்ததாரரின் செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே மின்கம்பத்தினை இடம் மாற்றி, மின்கம்பத்தினை இடம் மாற்றிடாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
- ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் மேலாண்மை சார்பில், மீட்புக்குழு தன்னார்வலர்களுக்கு ஆபத்துகால மீட்புக்குழு உபகரணங்களையும் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 290 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். தொடர்ந்து இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், 2021-22 ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது தொகையினை வழங்கினார்.
மேலும், ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் மேலாண்மை சார்பில், மீட்புக்குழு தன்னார்வலர்களுக்கு ஆபத்துகால மீட்புக்குழு உபகரணங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மகளிர் திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- முதியவர் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.
- தாம்பரம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வண்டலூர்:
வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது66). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் குமார் மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வண்டலூர் ரெயில் நிலையம் அருகே குமார் வந்தார். திடீரென அவர் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். தாம்பரம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- 13 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
- போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் 250 நாட்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து கிராம மக்களின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகிறார்கள்.
- கரசங்கால் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் குறித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் அப்பாவி மக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தாம்பரம், சென்னை, காஞ்சிபும், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்கிறது. இந்த நிலையில் இந்த 6 வழிச்சாலை கரசங்கால் அருகே சாலையின் கீழே செல்லும் பாலாற்று குடிநீர் குழாய்கள் சேதமடைந்து அதில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் வெளியேறி சாலையில் வீணாக ஒடுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-
கோடை காலத்தில் குடிநீருக்காக மக்கள் திண்டாடும் நிலையில் இதனை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்ந 2019-ம் ஆண்டு முதல் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் அப்பாவி மக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.
அடிக்கடி குடிநீர் குழாய் உடைவதும் சரி செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. நெடுஞ்சாலையின் கீழே செல்லும் குழாய் உடைவதற்கு என்ன காரணம்? இதற்கு நிரந்தர தீர்வு காண நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி லதா கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
- லதா ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் ஊராட்சியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 35). இவருடைய மனைவி லதா (27). மளிகை கடை நடத்தி வருகிறார். ஜெகநாதன் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி லதா கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்த ஒருவர் கடையில் பொருட்கள் வாங்குவது போல் லதா அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்தவனுடன் தப்பிச்சென்றார்.
அப்போது லதா கத்தி கூச்சலிட்டுள்ளார் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து லதா ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
நகை பறிப்பில் தொடர்புடைய நபரின் மோட்டார் சைக்கிள் வாகன எண் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
பின்னர் அங்கு சென்ற போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட கவுதம் (28) என்பவரை கைது செய்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் கவுதமின் நண்பரான சென்னை வாஷர்மேன்பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதம் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 6 பவுன் தங்கச்சங்கிலியை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
- தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
- தமிழகத்தில் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் ஒரே ஒரு தடுப்பூசி மையம் மட்டுமே செயல்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் பெரும்பாலானோ 2 தடுப்பூசிகளை போட்டுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒமைக்ரான் தொற்று 3-வது அலையை ஏற்படுத்தியது. அப்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பிணகள் தொடங்கியது. ஆனால் ஒமைக்ரான் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்பதால் பொரும்பாலான பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடவில்லை.
இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை தடுக்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பலர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வந்துள்ளனர்.
அவர்கள் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் ஒரே ஒரு தடுப்பூசி மையம் மட்டுமே செயல்படுகிறது.
இங்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி கிடைக்கிறது. கிண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே உள்ளது. மற்ற மருத்துவ மனைகளில் தடுப்பூசிகள் கிடைப்பதில்லை. கோவின் செயலியில் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய முடிகிறது. அனால் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி கிடைப்பது காரணமாக உள்ளது.சென்னையில் ஒரு தடுப்பூசி மையமும், மதுரையில் ஒரு தடுப்பூசி மையமும் செயல்பட்டு வருகிறது. ஆனால் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் ஒரு தடுப்பூசி மையம் கூட இல்லை.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அது குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்களில் 60 ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் பொது மக்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்:-
'தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த ஆண்டு தடுப்பூசிகள் கிடைத்த போது கொரோனா தொற்று குறைந்ததால் பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசி உற்பத்தி கடந்த 8 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தடுப்பூசி நிறுவனங்கள் தங்களுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்' என்றார்.
இது குிறத்து தனியார் மருத்துவமனை மேலாளர்கள் கூறுகையில்,
'கடந்த ஆண்டு போல தடுப்பூசி வீணாகாமல் இருக்க, தடுப்பூசிகளுக்காக பொதுமக்கள் முன்பதிவு செய்த பிறகே தடுப்பூசி கொள்முதல் செய்ய முடிவு எடுத்துள்ளோம்' என்றார்.
- வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.
காஞ்சிபுரம்:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிறுவஞ்சி பட்டு பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ்(வயது25).
இவர் திருவேற்காடு அருகே போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து உள்ளார். இவருக்கும் திருவேற்காடு பகுதியைசேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.
பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் மோகன் ராஜ்-இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவர்களது திருமணத்தை வருகிற 26-ந்தேதி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது அங்கு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி இறந்து கிடந்தார். இதனால் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அந்த வழியாக வந்த போது முன்னால் சென்ற லாரியை திடீரென டிரைவர் நிறுத்தினார். இதில் பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோகன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் முதியவர் மற்றும் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
- நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கோளிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ராவத்தநல்லூர், வாலாஜாபாத் வட்டத்தில் பூசிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
கிராமங்களில் வசித்துவரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கோவிந்தன் வீட்டி நகை-பணம் இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
- கோவிந்தன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த நீர் வல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.
இவரது மகன், மகள் திருமணமாகி வேறு இடத்தில் வசித்து வருகிறார்கள். இதனால் கோவிந்தன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோவிந்தன் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோவிந்தன் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது உடலில் எந்த காயமும் இல்லை. வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.
இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிந்தனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கோவிந்தன் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. நள்ளிரவு வந்த மர்ம கும்மபல் அவருக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
கோவிந்தன் வீட்டில் நகை-பணம் இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அவருக்கு நன்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து கோவிந்தன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் உள்ளது.
- இன்று அதிகாலை காப்பகத்தில் இருந்த 6 பெண்கள் திடீரென மாயமானார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற பெண்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் போலீசாரால் மீட்கப்படும் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை காப்பகத்தில் இருந்த 6 பெண்கள் திடீரென மாயமானார்கள். காப்பக பாதுகாவலர் ஆய்வு செய்தபோது 6 பேர் காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. அவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காதல் விவகாரத்தில் மீட்கப்பட்டவர்கள் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படட்டது. போலீசார் மாயமான பெண்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 112 மாணவர்கள், 19 ஆயிரத்து 238 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
- புழல் ஜெயிலில் 46 கைதிகள் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,445 மாணவர்கள், 7989 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 434 பேர் தேர்வு எழுதினர்.
பொதுத்தேர்விற்கு 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு, 5 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 5 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 63 தேர்வு மையங்களுக்கு 63 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 63 துறை அலுவலர்களும், 11 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 177 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
25 ஆயிரத்து 531 மாணவர்களும் 24 ஆயிரத்து 682 மாணவிகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 213 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்வு மையங்களில் செல்போன் மற்றும் டிஜிட்டல் வாட்ச் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 112 மாணவர்கள், 19 ஆயிரத்து 238 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதற்காக 119 தேர்வு மையம், 7 தனித்தேர்வு மையம் என மொத்தம் 126 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் தேர்வை கண்காணிக்க 225 பறக்கும்படையினர் 1950 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புழல் ஜெயிலில் 46 கைதிகள் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். சிறை ஒன்றில் 32 பேரும், சிறை எண்-2ல் 10 பேர், பெண்கள் சிறையில் 4 பேர் தேர்வு எழுதினார்கள்.






