என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சித்திரகுப்தர் கோவிலில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • மதுக்கடையை அகற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் பிரசித்தி பெற்றது.

    இந்த கோவில் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அதனை அகற்றக்கோரி ஏற்கனவே அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சித்திரகுப்தர் கோவில் அருகே உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியின் ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சிவானந்தம் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் மனு அளித்தனர்.

    • விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
    • சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிற்குள் சாலை வழியாக வந்து, இங்கு ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இந்திய போலி பாஸ்போர்ட் வாங்கியது தெரிய வந்தது.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, வங்கதேச தலைநகரம் டாக்கா செல்லும் பயணிகள் விமானம், புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

    அப்போது அந்த விமானத்தில், சென்னையில் இருந்து டாக்கா செல்ல வந்த, ஹையூல் அலி முகமது ஷேக் (28) என்பவர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரது பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிற்குள் சாலை வழியாக வந்து, இங்கு ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இந்திய போலி பாஸ்போர்ட் வாங்கியது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை சிறுமாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் வழங்கப்படவில்லை.
    • போலி ஆணையை அச்சடித்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில உள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் வீடு கட்டுவதற்கு பணி ஆணை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளருமான சுபரஞ்சனியின் கணவர் கன்னியப்பன் தங்களது கிராமத்தில் 19 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை உள்ளதாக மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளரான அழகுபொன்னையாவிடம் வழங்கினார். இதேபோல் பயனாளிகளுக்கும் இந்த ஆணை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அழகு பொன்னையா ஆய்வு செய்தபோது அந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை சிறுமாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் வழங்கப்படவில்லை. ஆனால் என்னுடைய பெயரில் போலி ஆணை தயாரித்து பயனாளிகளிடம் கொடுத்து ஏமாற்றி உள்ளனர் என்று தெரவித்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி போலி ஆணை வழங்கியதாக ஊராட்சி தலைவியின் கணவர் கன்னியப்பன் மற்றும் 5-வது வார்டு உறுப்பினர் பிலோமினாவின் கணவரான தி.மு.க.வை சேர்ந்த வாசு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களுக்கு போலி ஆணையை அச்சடித்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில உள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீடுகட்ட போலி ஆணை கொடுத்த விவகாரத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் மற்றும் அவரது நண்பர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சமுதாயக்கூடம் கட்ட பலமுறை கிராம பொதுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நெய்த வாயல் ஊராட்சி. இங்கு 100 நாட்கள் வேலைதிட்டத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஊராட்சி தலைவர் பாலன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அதிகாரி சந்திரசேகரை பொதுமக்கள் பொதுக்கழிப்பிடம் கட்டி பயன்பாடற்றுக் கிடப்பதாக நேரில் அழைத்துச் சென்று காண்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது,

    100 நாட்கள் வேலை என கூறி குறைந்த நாட்களே வேலை வழங்குகிறார்கள். சமுதாயக்கூடம் கட்ட பலமுறை கிராம பொதுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை. 3-வது மற்றும் 4-வது வார்டில் மின்மாற்றியை மாற்றி அமைக்க பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை குடிநீருக்காக கட்டப்பட்ட குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பழுதடைந்த நிலைமையில் உள்ளது.அரசாங்கத்தால் வீடு கட்டும் திட்டத்திற்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நான்கு வருடம் கடந்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

    • தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும்.
    • தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும்.

    மணி எட்டு ஆச்சுடா... இன்னுமா தூங்குறே என்று அம்மாவோ, அப்பாவோ அலாரம் அடித்த பிறகுதான் பெரும்பாலும் படுக்கையில் இருந்து லேசாக புரள்வார்கள்.

    ஆனாலும் எழும்ப மாட்டார்கள். ஏம்மா தூக்கத்தை கெடுக்கிறே என்றுதான் கோபப்படுவார்கள். ஆனால் இப்போது தூக்கம் வராததே பலருக்கு பிரச்சினையாகி வருவது ஆச்சரியமாகி உள்ளது.

    பொதுவாக தூக்கமின்மை என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் இதுவும் ஒரு நோயாக உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

    சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் எல்லா நோய் சார்ந்த பிரிவுகளைபோல் தூக்க குறைபாடு சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த துறைக்கு பிரத்யேகமாக மருத்துவ குழுவினரும் இருக்கிறார்கள். இதுபற்றி மருத்துவர்கள் கூறியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் தூக்கம்தான் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம். அயர்ந்து தூங்கி எழுந்தாலே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.

    தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. இருப்பினும் வயதுக்கு ஏற்ப தூக்க முறையில் மாற்றமும் வரும். உதாரணமாக வயதானவர்களுக்கு இரவில் தூக்கம் குறையலாம். அதற்கு ஈடுகட்டும் வகையில் பகலில் தூங்குவார்கள்.

    தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும். அன்றாடம் செய்யும் வேலை திறனை குறைக்கிறது.

    அது மட்டுமல்ல. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதயநோய் போன்றவற்றை அதிகரிக்க செய்யும். உடலில் இருக்கும் பல்வேறு வலிகள், மோசமான உணவு பழக்கங்கள், பணி நேர மாறுதல்கள், மனஅழுத்தம், கவலை, ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.

    ஆஸ்துமா, கீல்வாதம், நெஞ்செரிச்சல், நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களாலும் தூக்கம் கெடும். ஒரு நோயாளியின் தூக்கமின்மைக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். சிறந்த தூக்க பழக்கத்தை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்.

    * சோர்வாக உணரும்போது மட்டும் தூங்க வேண்டும்.

    * தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் சூடான பால் குடிக்கலாம்.

    * படுக்கை அறை அமைதியாகவும், இருட்டாகவும் இருக்க வேண்டும்.

    * படுக்கைக்கு செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

    * படுக்கையில் டி.வி. பார்ப்பது, படிப்பது, செல்போன் பயன்படுத்துவது, லேப்டாப்பில் மூழ்கி இருப்பது, கவலைப்படுதலை தவிர்க்க வேண்டும். இவை தூக்கத்தை கலைத்துவிடும்.

    தூக்க கோளாறுகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல இரவு தூக்கம் மிகவும் முக்கியமானது.

    நேத்து ராத்திரி...யம்மா தூக்கம் யோச்சுடி...யம்மா என்பது இரவு சுகமான அனுபவமாக இருக்கலாம்.

    எந்நாளுமே தூக்கம் போச்சே என்று புலம்பினால் அது சோக வாழ்க்கையின் அறிகுறிதான்.

    • கார் டிரைவர் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வீட்டில் வளர்ந்து வருவது கஞ்சா செடி என்று கண்ணுசாமியின் மகனுக்கு தெரிந்தது.

    காஞ்சிபுரம்:

    கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்த டிரைவர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம், பல்லவர்மேடு கிழக்குபகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(43). கார் டிரைவர். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெட்டப்பட்ட தண்ணீர் கேனில் மணல் நிரப்பி அதில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவது தெரிந்தது. சுமார் 3 அடி உயரத்தில் வளர்ந்து இருந்த அந்த கஞ்சா செடியை போலீசார் பறிமுதல் செய்து அதனை வளர்த்த டிரைவர் கண்ணுசாமியை கைது செய்தனர். அவர்தான் பயன்படுத்த கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே அவர் கஞ்சா செடி வளர்த்து சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கண்ணுசாமி வீட்டில் கஞ்சா செடியை வளர்க்க தொடங்கியதும் அவர் மீது சந்தேகப்பட்ட மனைவி இதுபற்றி கேட்டு உள்ளார். ஆனால் அவர் புளிச்சகீரை செடி என்று கூறி சமாளித்தார். இதனை அப்பாவியாக நம்பிய அவரது மனைவியும் கீரைச்செடி என்று நினைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி வந்து உள்ளார்.

    ஆனால் வீட்டில் வளர்ந்து வருவது கஞ்சா செடி என்று கண்ணுசாமியின் மகனுக்கு தெரிந்தது. பள்ளியில் படித்து வரும் அவர் இந்த கஞ்சா செடியை செல்போனில் வீடியோவாக படம் பிடித்து எங்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்கிறது என்று தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். பின்னர் இந்த வீடியோ வைரலாக பலருக்கு பரவி உள்ளது. அப்படி இந்த வீடியோ போலீசாரின் செல்போனுக்கும் வந்தது. இதன்பின்னரே உஷாரான போலீசார் கண்ணுசாமியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கஞ்சா செடி குறித்து மகன் அனுப்பிய வீடியோவால் அவர் சிக்கிக்கொண்டார். இது தொடர்பாக கண்ணுசாமியிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக் கூடாது.
    • சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோடைக்காலம் தற்போது தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ் குளிர்பானங்கள் மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகும்.

    இந்த தேவைகளை பூர்த்தி செய்ய புதுப் புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாது காப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.

    பழரசம், சர்பத், கம்மங் கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும் நன்னீராகவும் இருக்கவேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.

    உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கரும்பு ஜுஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும்.

    திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுத்தர ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர் கவனிக்கவேண்டும்.

    பெரிய ஐஸ் கட்டிகளை எடுத்து செல்ல வைக்கோல், சணல் பை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.

    அதே போல் நுகர்வோர் கடையில் திரவ உணவுப் பொருள்களை வாங்கும் போது கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கெட்டுபோகும் நிலையில் பொருட்கள் இருந்தால், அதனை தவிர்க்க வேண்டும்.

    திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும். நுகர்வோர்கள் கோடைக் காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி, காலாவதிநாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்கவேண்டும்.

    நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் இதுவரை 70-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் குறித்து தொடர் புகார்கள் வந்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மருத்துவ துறையும், போலீஸ் துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் குறித்து தொடர் புகார்கள் வந்தது. அவ்வாறு செயல்பட்டு வரும் போலி டாக்டர்கள் மீது போலீஸ் துறை சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

    அதன்படி காஞ்சிபுரம் மாநகர பகுதியிலுள்ள போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்திட காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மருத்துவ நலப்பணிகள் இயக்குனர் கோபிநாத் தலைமையில் காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர், மற்றும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த திடீர் சோதனையில் காஞ்சிபுரம் நிமிந்தகரை தெருவை சேர்ந்த சுதர்சன்பாபு மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னதி தெருவை சேர்ந்த சேஷாத்திரி ராஜீ ஆகிய இருவரும் எந்தவித தகுந்த மருத்துவ படிப்பும் இல்லாமல், போலி டாக்டர்களாக செயல்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலி டாக்டர்கள் இருவரும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(வயது 70). நேற்று இவர், ஒரகடம் அடுத்த பண்ரூட்டி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    இதற்காக ஆஸ்பத்திரி எதிரே வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக 108 ஆம்புலன்ஸ் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி நாகம்மாள், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே இறுதி வாரத்திலும் நடைபெற உள்ளது.

    இந்த கணக்கெடுப்பு பணியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர் ஈடுபடுகிறார்கள். எனவே கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் பொது மக்கள் எவரேனும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
    • புதுக்கோட்டை மாவட்ட போலீசார் காஞ்சிபுரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

    காஞ்சிபுரம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த மாதம் சில நாட்கள் தங்கியிருந்த அவர் ஆலங்குடி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருவரங்குளம் பகுதியை சேர்ந்த படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் விபரங்களை சேகரித்துள்ளார்.

    பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு தனக்கு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, அமுதா ஐ.ஏ.எஸ்., உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளை நன்கு தெரியும். அவர்களிடம் பேசி உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார்.

    இதனை நம்பி அவரிடம் வந்த 11 பேரிடம் ரூ.55 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளார். ஆனால் கூறியபடி அரசு வேலை எதுவும் வாங்கித்தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆலங்குடி போலீசில் பணத்தை இழந்தவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

    இந்த மோசடியை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று சசிகுமாரை புதுக்கோட்டை மாவட்ட போலீசார் காஞ்சிபுரத்தில் வைத்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை புதுக்கோட்டை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    • புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
    • புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு 13 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கிராமசபை கூட்டத்தின் போது தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

    புதிய விமானநிலையம் அறிவிப்பு வந்த நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்கள் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று காலை ஏகனாபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மொட்டை அடித்தனர். மேலும் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது புதிய விமான நிலையத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட் டம் நடத்தினர். இதனால் ஏகனாபுரம் கிராமம் பரபரப்பாக காணப்படுகிறது.

    புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×