search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எங்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்கிறது- மகன் பரப்பிய வீடியோ காட்சியால் சிக்கிய தந்தை
    X

    எங்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்கிறது- மகன் பரப்பிய வீடியோ காட்சியால் சிக்கிய தந்தை

    • கார் டிரைவர் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வீட்டில் வளர்ந்து வருவது கஞ்சா செடி என்று கண்ணுசாமியின் மகனுக்கு தெரிந்தது.

    காஞ்சிபுரம்:

    கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்த டிரைவர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம், பல்லவர்மேடு கிழக்குபகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(43). கார் டிரைவர். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெட்டப்பட்ட தண்ணீர் கேனில் மணல் நிரப்பி அதில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவது தெரிந்தது. சுமார் 3 அடி உயரத்தில் வளர்ந்து இருந்த அந்த கஞ்சா செடியை போலீசார் பறிமுதல் செய்து அதனை வளர்த்த டிரைவர் கண்ணுசாமியை கைது செய்தனர். அவர்தான் பயன்படுத்த கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே அவர் கஞ்சா செடி வளர்த்து சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கண்ணுசாமி வீட்டில் கஞ்சா செடியை வளர்க்க தொடங்கியதும் அவர் மீது சந்தேகப்பட்ட மனைவி இதுபற்றி கேட்டு உள்ளார். ஆனால் அவர் புளிச்சகீரை செடி என்று கூறி சமாளித்தார். இதனை அப்பாவியாக நம்பிய அவரது மனைவியும் கீரைச்செடி என்று நினைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி வந்து உள்ளார்.

    ஆனால் வீட்டில் வளர்ந்து வருவது கஞ்சா செடி என்று கண்ணுசாமியின் மகனுக்கு தெரிந்தது. பள்ளியில் படித்து வரும் அவர் இந்த கஞ்சா செடியை செல்போனில் வீடியோவாக படம் பிடித்து எங்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்கிறது என்று தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். பின்னர் இந்த வீடியோ வைரலாக பலருக்கு பரவி உள்ளது. அப்படி இந்த வீடியோ போலீசாரின் செல்போனுக்கும் வந்தது. இதன்பின்னரே உஷாரான போலீசார் கண்ணுசாமியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கஞ்சா செடி குறித்து மகன் அனுப்பிய வீடியோவால் அவர் சிக்கிக்கொண்டார். இது தொடர்பாக கண்ணுசாமியிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×