என் மலர்tooltip icon

    ஈரோடு

    சிகிச்சை முடிந்தும் பஸ் வசதி இல்லாததால் 10 நாட்களுக்கும் மேலாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள மேம்பாலத்தின் அடியில் காலில் மாவு கட்டுடன் சம்பத் படுத்து கிடக்கிறார்.
    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த மாதம் கால்முறிவு எற்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் வீட்டுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் சம்பத் வீடு திரும்ப முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள மேம்பாலத்தின் அடியில் காலில் மாவு கட்டுடன் சம்பத் படுத்து கிடக்கிறார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சிகிச்சை முடிந்து விட்டதாக கூறி என்னை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். ஆனால் பஸ் வசதி இல்லாததால் பாலத்திற்கு அடியில் படுத்து கிடக்கிறேன். பணம் இல்லாததால் உணவுக்கு வழியின்றி தவித்து வருகிறேன். காலில் மாவு கட்டு போடப்பட்டு உள்ளதால் என்னால் நடக்கவும் முடியவில்லை. என்னை குடும்பத்தினருடன் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
    தமிழகம் முழுவதும் வருகிற 15-ந்தேதி அரசு பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை வருகிற 15-ந்தேதி தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு மாணவ -மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை அரசு வழங்கும். புத்தக பையுடன் வழங்குவதில் உள்ள நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வழங்கப்படும்.

    இது தொடர்பாக வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த முடிவினை திங்கட்கிழமை (நாளை) குழு ஒப்படைக்கிறது. அதன் அடிப்படையில் புத்தகங்கள் வழங்கப்படும். பிளஸ்-2 மாணவ -மாணவிகளுக்கு இ பீஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் இணைய வகுப்பு தொடங்கப்படுகிறது. இந்தியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் இந்த கல்வி முறையை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 14-ந்தேதி தொடங்கி வைக்கிறார். உடனடியாக மாணவ -மாணவிகள் வைத்திருக்கும் மடிகணினிகளில் அதற்கான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படும். பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்க வில்லை.

    பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியில் மனித நேயத்துடன் தன்னார்வலர்கள் ஈடுபட முன்வந்தால் அரசு உதவிகள் செய்யும். ஆன்லைன் மூலம் கிராமத்து மாணவர்களுக்கும் கல்வி சென்று சேருவதில், இன்டர்நெட் இணைப்பு பிரச்சினை இருப்பதால், தொலைக்காட்சி வழி கல்வி கற்பிக்கப்படும். வகுப்பு வாரியாக நேரம் அறிவிக்கப்பட்டு அந்தந்த நேரத்தில் வகுப்புகள் நடைபெறும். எனவே அனைத்து வகுப்பு மாணவ -மாணவிகளும் தடை இன்றி வகுப்புகளை கவனிக்க முடியும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    முகநூலில் ஆர் எஸ் எஸ் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவு செய்த திமுக பிரமுகர் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

    தி.மு.க. இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரமணி என்பவர் தனது முகநூலில் (பேஸ்புக்) சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளை சாத்தான்குளம் வழக்குகளுடன் தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகளை பதிவு செய்து உள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
    ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரோடுகள் தோண்டப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ரோடுகள் சீரமைக்கப்படாமல் குண்டும் -குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் குழாய்களும் ஆங்காங்கே உடைக்கப்பட்டுள்ளதால் குடியிருப்புகளுக்கு குடிநீர் செல்லாத நிலையும் இருந்து வருகின்றது. இதை சரி செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் பழைய ரெயில்வே கேட் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள், தடையின்றி குடிநீர் வினியோகிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பழுதடைந்துள்ள சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதியானது. கருங்கல்பாளையத்தை சேர்ந்த முதியவர் இறந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-க்கும் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி 313 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 2 பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 312 ஆக மாறியது.

    இந்தநிலையில் நேற்று புதிதாக 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 100 பேர் குணமடைந்து உள்ளனர்.

    நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ரெயில்வேகாலனி, பி.பி.அக்ரஹாரம், வாய்க்கால்மேடு, வீரப்பம்பாளையம், வீரப்பன்சத்திரம், பெரியார்நகர், சூரம்பட்டி, பழையபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் மொடக்குறிச்சி, சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர், திங்களூர், பெருந்துறை சிப்காட் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த 85 வயது முதியவர் காய்ச்சல் காரணமாக கடந்த 7-ந் தேதி இரவு 9 மணிஅளவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 8-ந் தேதி அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
    நம்பியூர் அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய பிணம் சாக்குமூட்டையில் கிடந்தது.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோட்டுபுள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் என்கிற குழந்தைவேல் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி (26).

    குழந்தைவேல் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூரில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வெளியே செல்வதாக இந்துமதியிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்துமதி, கணவர் ஆட்டோவில் எங்காவது வாடகைக்கு சென்று இருப்பார் என்று நினைத்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை கோட்டுப்புள்ளாம்பாளையம் ஏரிக்கரையில் ஒரு சாக்குமூட்டை கிடந்தது. பார்ப்பதற்கு வித்தியாசமாக காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் உடனே நம்பியூர் போலீசாருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, மூட்டையை பிரித்து பார்த்தார்கள். உள்ளே வெட்டுக்காயங்களுடன் குழந்தைவேலின் பிணம் இருந்தது. இதைப்பார்த்து அப்பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    சாக்குமூட்டை கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் அங்கும், இங்கும் ஓடிய மோப்பநாய் பின்னர் நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கள்ளக்காதல் தகராறில் யாராவது குழந்தைவேலை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் பிணத்தை கட்டி கொண்டுவந்து ஏரிக்கரையில் போட்டார்களா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் குட்டியுடன் உலா வருகின்றன.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் திண்டுகல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆசனூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். தற்போது வனப்பகுதியில் நல்ல மழை பெய்து பசுமையாக இருக்கிறது.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரபள்ளம் அருகே தேசியநெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 2 குட்டிகளுடன் 5 யானைகள் சாலையில் உலா வந்ததன. சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக உலா வந்த யானைகள் தானாக வனப்பகுதியில் சென்றன.

    இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்றும், யானைகளின் அருகே சென்று செல்போனில் புகைப்படம் எடுக்கவோ, வாகனத்தை நிறுத்தவோ கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
    ஈரோடு:

    கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த 2-ந்தேதி முதல் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ரூ.1 கோடி செலவில் 808 காய்கறி மற்றும் பழக்கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் வ.உ.சி. பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி மார்க்கெட்டிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது.

    இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் சகதியில் சிக்கிக்கொண்டது. பின்னர் கூலி தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் இருந்த காய்கறிகளை இறக்கிவிட்டு பின்னர் வாகனத்தை சகதியில் இருந்து மீட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் வாங்க வந்த வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். வ.உ.சி. பூங்கா மைதானம் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினத்தைவிட நேற்று மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.
    ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
    ஈரோடு:

    தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் சிந்தனைச்செல்வன் (மத்தி), வேங்கை பொன்னுச்சாமி (வடக்கு), அழகர்சாமி (கிழக்கு), திருவளவன் (மேற்கு) ஆகியோர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

    ஊடகம் என்பது ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படுகிறது. நமது நாடு தற்போது இருக்கும் நெருக்கடியான சூழலில் டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார்களின் பங்களிப்பு எவ்வாறு மகத்தானதோ அதே போன்று ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் மகத்தானது. அவ்வாறு ஜனநாயகத்தின் குரலாக விளங்குகின்ற ஊடகவியலாளர்கள் மீது சிலர் வேண்டுமென்றே தொடர் அவதூறுகளை பரப்பி, அச்சுறுத்தி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு விடுக்கின்ற மிரட்டலாகும். எனவே ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பி, அச்சுறுத்தி வருகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
    குமாரபாளையம் அருகே, அரசு போக்குவரத்து கழக என்ஜினீயர் சாலை விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபி பக்கமுள்ள கொலப்பலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 30). என்ஜினீயரான இவர் கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி பொறியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நிவேதா. இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்.

    இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி தற்போது 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தது முதலே நிவேதா தாரமங்கலத்தில் பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார். விஜயராகவன் அடிக்கடி வந்து மனைவி, குழந்தையை பார்த்துவிட்டு செல்வார். வழக்கம்போல் மனைவி, குழந்தையை பார்க்க வந்த விஜயராகவன் நேற்று முன்தினம் இரவு மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டு, நேற்று காலை 6 மணியளவில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் கோவை புறப்பட்டார்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இவர் சென்று கொண்டிருந்தபோது, சிவசக்தி நகர் பிரிவு அருகே ஒரு லாரி முன்னால் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அதன் மீது மோதாமல் இருக்க இவர் மோட்டார் சைக்கிளை வலதுபுறம் திருப்பி உள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விஜயராகவன் நின்று கொண்டிருந்த லாரியின் அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜயராகவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விஜயராகவன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் குமாரபாளையம் ஆஸ்பத்திரிக்கு குவிந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
    அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாகவே வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும். அதற்கு 3 சேனல்கள் இதுவரை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

    தற்போது அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் தொடங்கி வைத்த பின் வகுப்புகள் குறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்.

    பிளஸ்-2 தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை 718 பேர் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விடுபட்ட 34,842 மாணவர்களும் தேர்வெழுத வந்தாலும், அதற்கான ஏற்பாடுகள் செய்து தர அரசு தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 
    ஈரோடு அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜவுளிக்கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் மோத்தா (வயது 50). இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் பகுதியில் தனது மனைவி நிஷா, மகன் உதாப் (22) ஆகியோருடன் வசித்து வந்தார். சஞ்சய் மோத்தா அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

    கொரோனா காரணமாக தற்போது ஜவுளி வியாபாரம் சரிவர நடைபெறவில்லை. மேலும் ஜவுளி ரகங்களை அனுப்பிய இடங்களில் இருந்தும் அவருக்கு பணம் வரவில்லை. இதனால் ஜவுளி உற்பத்தி செய்து கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் சஞ்சய் மோத்தா மிகவும் சிரமப்பட்டு வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை சஞ்சய் மோத்தா தனது கடைக்கு சென்றார். அங்கு குறைந்த அளவிலான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர். அவர்களும் மதியம் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அப்போது தனியாக அவர் தனது அறைக்கு சென்று அங்கு கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    பின்னர் சிறிது நேரத்தில் குடோனில் இருந்து கரும்புகை வந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜவுளிக்கடை தீப்பிடித்து எரிகிறது என்று நினைத்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    அப்போது தான் சஞ்சய் மோத்தா உடல் கருகிய நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ஜவுளி ரகங்கள் மற்றும் எந்திரங்கள் மீது பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். அதைத்தொடர்ந்து கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று சஞ்சய் மோத்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×