என் மலர்tooltip icon

    ஈரோடு

    தாளவாடி பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் குண்டம் விழா நாளை நடக்கிறது.

    தாளவாடி:

    தாளவாடி பிரசித்தி பெற்ற  மாரியம்மன் கோவில் குண்டம் விழா நாளை நடக்கிறது.

    ஈரோடு மாவட்டம் தாள வாடியில்   பிரசித்தி பெற்ற  மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் விழா நடந்து வருகிறது.

    இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா பூச்சாட்டு தலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம்  விழா நாளை (வியாழக் கிழமை) காலை நடக்கிறது. இதை யொட்டி இன்று இரவு குண்டம் வார்க்கப்படுகிறது.
    விழாவை யொட்டி குண்டம் வளர்ப்பதற்கு தேவையான விறகுகள் கொண்டு வரப்பட்டது. இதற்காக 25-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில்  சென்று விறகு எடுத்து வரபட்டது.

    கோவில் பூசாரி ஒருவர் மட்டுமே  குண்டம் இறங்குவார். இந்த குண்டம் திருவிழாவை காண தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதற்காக பலர் தாளவாடி பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தாளவாடி முழு வதும் விழா கோலமாக காட்சி அளிக்கிறது.

    மேலும்  சத்திய மங்கலம், கோபி செட்டிபாளையம், சாம்ராஜ்நகர், மைசூர் ஆகிய   பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதி செய்யபட்டு உள்ளது.
    பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 36). இவர் சென்னி மலை அருகே ஈங்கூரில் உள்ள சிப்காட் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    சென்னிமலை:

    பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 36). இவர் சென்னி மலை அருகே ஈங்கூரில் உள்ள சிப்காட் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    கடந்த டிசம்பர் 13-ந் தேதி இரவு வழக்கம் போல் சத்தியமூர்த்தி கடையை பூட்டி விட்டு சென்றார்.  மறு நாள் காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 25 செல் போன்கள் காணாமல் போனது தெரிய வந்தது. 

    இதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் வாலிபர் ஒருவர் செல்போன்களை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அந்த வாலிபரை தேடி வந்தனர்.
    இந்த நிலையில் பெருந்  துறை அருகே பணிக்கம் பாளையம் பகுதியில் செல் போன்களை திருடி கொண்டு சென்ற வாலிபர் தங்கி இருப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த விஸ்வநாத மண்டேல் (வயது 32) என்பதும், இவர் பெருந்துறை அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

    மேலும் ஈங்கூர் பகுதியில் உள்ள கடையில் செல்போன்களை திருடி கொண்டு கொல்கத்தா தப்பி சென்றதும், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பெருந்துறை பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது. 
    இதைத்தொடர்ந்து போலீசார் விஸ்வநாத மண்டேலை போலீசார்  கைது செய்து அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை பெருந் துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர்.
    கீழ்பவானி பாசன நீர்சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    கீழ்பவானி பாசன நீர்சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்ட கீழ்பவானி வடிநில கோட்டம், பவானிசாகர் அணை கோட்டங்களுக்கு உட்பட்ட நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்தல் நடக்கும் பகுதியில் நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர், மண்டல தொகுதிகளுக்கு வேட்பு மனு படிவங்கள் சம் மந்தப்பட்ட தாசில்தாரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
    இதன்படி, அணைக்கட்டு நீரை பயன்படுத்துவோர் சங்கங்களில் ஒரு தலைவர், 4 ஆட்சி மண்டல தொகுதி என சத்தியமங்கலம் தாலுகாவில் 190ஏ செண்பகப்புதூர், 49ஏ பழையகளையனூர், 115 உக்கரம், 208 உக்கரம், வரதம்பாளையம், கணுவாய் கோம்பைபள்ளம் ஏரி, கோவில் புதூர்.
    நம்பியூர் தாலுகாவில் 267 எலத்தூர், 311 எலத்தூர், 175 கரட்டுப்பாளையம், 415 கரட்டுப்பாளையம், 16 குருமந்தூர், மொட்டணம், வேமாண்டபாளையம் ஏரி, கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் 454 அளுக்குளி, 314 கலிங்கியம், 94 கடுக்காம்பாளையம், 337 பாண்டியம்பாளையம், குண்டேரிப்பள்ளம், கொளப்பலூர், சஞ்சீவராயன் ஏரி ஆகிய சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
    பவானி தாலுகாவில், 267 நல்லாம்பட்டி, 341 சலங்கபாளையம், 894 சலங்கபாளையம், 22 ஏ சந்திராபுரம், ஆலத்தூர், பெரியபுலியூர், ஆப்பக் கூடல் ஏரி, அனந்தசாகரம் ஏரி, அந்தியூர் தாலுகாவில் கெட்டிசமுத்திரம், அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி, வரட்டுப்பள்ளம் அணை. 
    ஈரோடு தாலுகாவில் காஞ்சிகோவில் முள்ளம் பட்டி, ரங்கன்பள்ளம், மொடக்குறிச்சி தாலுகாவில் பெரும்பள்ளம், குரங்கன் பள்ளம், அவல்பூந்துறை, குலவிளக்கு, கொடுமுடி தாலுகாவில் அஞ்சூர் ஆகிய சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனுக்கள் வரும் 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம். மனுக்களை கூர்ந்தாய்வு செய்தல், செல் திறனுள்ள வேட்பு மனுக்களின் பட்டியல் வரும் 21-ந் தேதி காலை 9 மணி முதல் 2  மணிக்குள் வெளியிடப்படும்.
    வேட்பு மனுக்களை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிக்குள் திரும்ப பெறலாம். 
    அன்று மாலை 4 மணி மேல் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். இந்த வேட்பாளர்களுக்கான தேர்தல் வரும் 26-ந் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தி, மாலை 4  மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவு அறிவிக்கப்படும்.
    தாளவாடி அருகே கடந்த சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி உள்பட 10 வனசரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை மற்றும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராமங்கள் மற்றும் கல் குவாரிகளில் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகிறார்கள்.

    இதே போல் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்ட காஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, நாய்கள் போன்ற கால்நடைகளை தாக்கி கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என மக்கள் நிம்மதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் தாளவாடி அருகே இரியபுரம் பகுதியில் உள்ள கல் குவாரியில் சிறுத்தை ஒன்று கல்குவாரி மீது படுத்து கொண்டு இருந்தது. இதை அங்கு மாடு மேய்த்து கொண்டு இருந்த விவசாயி ஒருவர் தனது செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தார்.

    இது பற்றி அருகே உள்ள விவசாயிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, தாளவாடி அருகே கடந்த சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தொடர்ந்து போக்கு காட்டி வரும் சிறுத்தையை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.

    கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    ஈரோடு:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கொரோனா ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி தாய்லாந்தில் இருந்து வந்திருந்த இருவருக்கு முதல் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தினசரி பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக பதிவாகி கொண்டே இருந்தது.

    இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு உயர்ந்து கொண்டே வந்தது. 2-ம் அலையின்போது தினசரி பாதிப்பாக ஒரே நாளில் 1,800 பேர் வரை பதிவாகியிருந்தது.

    அதன் பின்னர் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டதால் பாதிப்பு குறைய தொடங்கியது. எனினும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உடையவர்கள் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவி மாவட்டத்தில் 3-ம் அலை ஏற்பட்டது.

    தினசரி பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்தது. 3-ம் அலையில் தினசரி பாதிப்பு 1,400 வரை பதிவாகியிருந்தது. பின்னர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2 வாரமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது.

    இந்நிலையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு பூஜ்ஜியம் என்றானது. தற்போது மாவட்டம் முழுவதும் தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி தினசரி பாதிப்பு 0 ஆக பதிவாகியிருந்தது. இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 660 ஆக பதிவாகியுள்ளது.

    5 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 906 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 734 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
    கோபி

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 

    கடைக்காரர்கள் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் ஜானகிராமன் அடங்கிய குழுவினர்  பஸ் நிலையத்திற்கு திடீரென வந்து சோதனை நடத்தினர். 

    அப்போது கடையின் முன் வைத்திருந்த பழக்கூடைகள், மேடை போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றினர். வணிக வளாக கடைகள் இரும்பு ஷட்டர் பகுதியிலிருந்து 5 அடி இடைவெளிக்குள் பயன்படுத்திக்கொள்ள வசதியாக எல்லை கோடும் போட்டனர். 

    இதைத்தாண்டி பொருட்கள் வந்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
    படுகாயம் அடைந்த பசு மாடு இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தது. பிறந்து 19 நாட்களே ஆன கன்று குட்டி பால் குடிக்க முடியாமல் அந்த பசுமாட்டை ஏக்கத்துடன் பார்த்து வருகிறது.
    டி.என்.பாளையம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (27). இவர் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக கடந்த 7-வருடங்களாக பணியாற்றி வந்தார்.

    ஆனால் அவர் தனது விரிவுரையாளர் பணியை விட்டு விட்டு இயற்கை விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.

    இதில் ஒரு நாட்டு பசு மாடு, மூன்று கலப்பின பசு மாடுகள் உட்பட 4 மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் 3 பசு மாடுகள் சினையாக இருந்தது. இதில் ஒரு கலப்பின பசு மாடு கடந்த 19 நாட்களுக்கு முன்பு தான் கன்று ஒன்றை ஈன்றது. இந்த நிலையில் மதன் குமார் தனது குத்தகை தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடுகள் தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடி சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து மாடு அலறும் சத்தம் கேட்டது.

    இதையடுத்து மதன்குமார் அங்கு சென்று பார்த்தார். அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து கன்று ஈன்ற கலப்பின பசு மாட்டின் வாய், தாடை மற்றும் நாக்கு கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.

    இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மாட்டின் வாய் சிதைந்தது தெரிய வந்தது.

    நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட அந்த பசுமாடு தண்ணீர் மற்றும் உணவு அருந்த முடியாமல் அவதி அடைந்தது. கால்நடை மருத்துவர்கள் மாட்டுக்கு சிகிச்சை அளித்தனர்.

    பசு மாடு தனது இளங்கன்றுக்கு தாய்பால் கொடுக்க முடியாமல் தவித்தது. கன்று குட்டியும் அதை சுற்றி வந்து பார்த்து ஏக்கத்துடன் சென்றது. படுகாயம் அடைந்த பசு மாட்டை மதன்குமார் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அந்த மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாட்டை வீட்டுக்கு அழைத்து வந்து கண்காணித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை படுகாயம் அடைந்த பசு மாடு பரிதாபமாக இறந்தது. இதை கண்டு மதன்குமார் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு அழுதார்.

    இதையடுத்து பிறந்து 19 நாட்களே ஆன கன்று குட்டி பால் குடிக்க முடியாமல் அந்த பசுமாட்டை ஏக்கத்துடன் பார்த்து வருகிறது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இறந்த பசு மாட்டை சோகத்துடன் பார்த்து சென்றனர்.

    இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து பசு மாட்டை பிரேத பரிசோதனை செய்து அந்த பகுதிலேயே அடக்கம் செய்யப்பட்டது.  


    தாளவாடி அடுத்துள்ள கொங்கஹள்ளி என்ற வனத்தில் 3 மலைகளுக்கு நடுவே பாறை குகையில் ஸ்ரீ மல்லிகார்ஜூன சாமி கோவில் அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு சொந்தமான இக்கோவிலில் 18 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் குண்டம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
    தாளவாடி:

    தாளவாடி அடுத்துள்ள கொங்கஹள்ளி என்ற வனத்தில் 3 மலைகளுக்கு நடுவே பாறை குகையில் ஸ்ரீ  மல்லிகார்ஜூன சாமி கோவில்  அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு சொந்தமான இக்கோவிலில் 18 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள்  சார்பில் குண்டம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. 

    நேற்று மாலை ருத்திரா ப்பிஷேக பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிரிஜம்மன் நந்தவனத்தோப்பில் இருந்து மேள தாளத்துடன் சுவாமி  ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 

    இக்கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம் என்பதால் பெண்கள் 2 கிமீ தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாறை குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளதால் லிங்கதுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து   மல்லிகார்ஜூன சாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது.

    தொடர்ந்து கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வார்க் கப்பட்டு மலர்கள் தூவப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆராவாரத்துடன் பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது ஐதீகம் என்பதல் ஆண் பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபட்டனர். 

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் மல்லிகார் ஜூன சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். முனிவர் அவதாரத்தில் வந்த சாமியை பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள  கிரிஜம்மா நந்தனத்தோப்பில் நின்று வந்து வழிபட்டனர்.   அதனைத்தொடர்ந்து அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சிகோயிலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
    பெருந்துறை:

    காஞ்சிகோயிலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோயிலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 180 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த மாணவர்களுக்கு சத்துணவு செய்வதற்காக சத்துணவு ஆசிரியராக வனிதா மற்றும் சத்துணவு உதவியாளராக சீதா, பணியாளராக கலா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். 

    இந்த சத்துணவு கூடத்தில் ஒரு விறகு அடுப்பும், ஒரு கியாஸ் அடுப்பும் உள்ளது. இதில் விறகு அடுப்பில் பணியாளர் கலா  சமையல் செய்து கொண்டு இருந்தார்.  கியாஸ் அடுப்பில் கியாஸ் சரியாக வராததால் சத்துணவு ஆசிரியர் வனிதா கியாஸ் சிலிண்டர் மூடியை திறக்க முற்பட்ட போது எதிர் பாராதவிதமாக சிலிண்டர் கியாஸ் வெளியேறியது.

    அருகில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்ததால் கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். விரைந்து தீயை அணைத்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் விசாரித்து வருகிறார்.

    டி.என்.பாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய் சிதைந்த பசுமாடு உணவு, தண்ணீர் குடிக்க முடியாத பரிதாப நிலையை அடைந்துள்ளது.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய் சிதைந்த  பசுமாடு உணவு, தண்ணீர் குடிக்க முடியாத பரிதாப நிலையை அடைந்துள்ளது.

    டி.என்.பாளையம் அருகே யுள்ள பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வைத்து கொண்டு அங்கேயே வசித்து வருபவர் மதன்குமார்(27).

    இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா. மதன்குமார் முதுகலை பட்டம் பெற்று டி.என்.பாளையம் தனியார் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக கடந்த 7-வருடங்களாக பணியாற்றி வந்தவர், சமீபகாலமாக தனது விரிவுரையாளர் பணியை விட்டு விட்டு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு குத்தகை நிலத்தில் கால்நடைகளை வளர்த்து வந்தார்.

    இதில், ஒரு நாட்டு பசு மாடு, 3 கலப்பின பசு மாடு உட்பட 4 மாடுகள் உள்ள நிலையில், 3 பசு மாடுகள் சினையாக இருந்து உள்ளது, இதில் ஒரு கலப்பின பசு மாடு கடந்த 18&நாட்களுக்கு முன்பு தான் அழகிய கன்று ஒன்றை ஈன்றது.

    இந்நிலையில், மதன்குமார் தனது குத்தகை தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடுகள் தோட்டத்தின் அருகேயுள்ள வனப்பகுதியில்   மேய்ச்சலுக்கு சென்று உள்ளது. சிறிது நேரத்தில் ஏதோ வெடி  சத்தமும் அதைத்தொடர்ந்து மாடு பயங்கரமாக அலறும் சத்தமும் கேட்டு உள்ளது.

    உடனே மதன்குமார் மாடு மேய்ந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, புதிதாக கன்று ஒன்றை ஈன்ற கலப்பின பசு மாட்டின் தாடை மற்றும் நாக்கு கிழிந்து ரத்தம் கொட்டி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி  அடைந்தார்.

    இது குறித்து மதன்குமார் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரின் விசாரணையில்   சத்திய மங்கலம் அருகேயுள்ள கொண்டப்பநாய்க்கன் பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரன்(37), பங்களாப் புதூர் அருகேயுள்ள எருமைக்குட்டையை சேர்ந்த நடராஜ்(59) ஆகிய இருவரும் தான் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டை தயாரித்து வனப்பகுதிக்குள் வைத்தது தெரியவந்தது. 

     இதைத்தொடர்ந்து 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பங்களாப்புதூர் போலீசார் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வாய்ப்பகுதி பாதிக்கப்பட்ட  பசுமாடு தண்ணீர் மற்றும் உணவு அருந்த முடியாமல் அவதி பட்டு வருகிறது. கால்நடை மருத்துவர்களால் குளுக்கோஸ் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது, தாய் பசுவானது பிறந்த 18- நாட்களே ஆன தனது இளங்கன்றுக்கு தாய்பால் கொடுக்க முடியாமல் வேதனையில் உள்ளது.

    இளங்கன்றோ தனது தாய்க்கு நேர்ந்த சோகத்தை உணர்ந்து கொண்டு வாய் சிதைந்த தனது தாயின் முகத்தை கண்ணீருடன் அருகில் வந்து பார்த்து தாய்க்கு முத்தம் கொடுத்து ஆறுதலையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தாயை சுற்றி சுற்றி வருவதை கண்டு அப்பகுதி மக்கள் கண்கலங்கி செல்கின்றனர்.

    தோட்டத்தில் வந்து பார்த்து செல்லும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தாய் பசு குணமாக வேண்டி கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது, இந்நிலையில் பாதிக்கப்பட்ட பசுமாட்டை மதன்குமார் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மேல்சிகிச்சைக்காக இன்று கொண்டு சென்றுள்ளார். 

    இளங்கன்றோ தனது தாய்பசு, குணமாகி வந்து தனக்கு பால் கொடுக்கும் என ஏக்கத்துடனும் நம்பிக்கையுடனும் காத்து கொண்டு இருக்கிறது. இந்த பசு மாட்டுக்கு நேர்ந்த இந்த விபரீதம் இனி நடக்காமல் இருக்க வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இதுபோன்ற இரக்கமில்லாத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சித்தோடு அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு

    சித்தோடு அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

    சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

    அப்போது சித்தோடு அடுத்த பாலா காட்டூர் அப்பகுதியில் ஒரு இடத்தில் ஒரு கும்பல் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததனர். 

    இதனை கவனித்த போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தது. விசாரணையில் அவர்கள் காதர், கார்த்தி, இனியாசா, சங்கர், சுல்தான் முஸ்தபா, மணிகண்டன், பெரியசாமி, பிரபு, தீனதயாளன், பிரபு, வீரபத்திரன் ஆகிய 11 பேர் என தெரிய வந்தது. 

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர்-தன்னார்வலர்கள் -அலுவலர்கள் அகற்றினர்.
    தாளவாடி:

    ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர்-தன்னார்வலர்கள் -அலுவலர்கள் அகற்றினர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்-பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. 

    திம்பம் முதல் தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் வரை  இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்  பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலையோரத்தில் வீசி  செல்வது தொடர்கதையாகி வருகிறது.

    இதனால் வனவிலங்குகள் அதை உண்ணும் போது  உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. 

    இந்நிலையில் ஆசனூர்  மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் காலை திம்பம் முதல் காரப்பள்ளம் வரை  சாலை ஓரத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றினர்.

    பின்னர் வாகன ஓட்டிகளிடம் வனச் சாலையில்  செல்லும்போது குப்பைகளை வீச வேண்டாம் எனவும் வாகனத்தில் மெதுவாக செல்லுமாறும் வனத்துறை சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
    ×