என் மலர்
ஈரோடு
ஈரோடு:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும்.
மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது.
இந்த போராட்டத்திற்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி, எல்.பி. எப்.எம்.எல்.எப், எல்.டி.யு.சி, உள்ளிட்ட 10 தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இதனால் முதல் நாளான நேற்று பஸ் போக்குவரத்து, வங்கி சேவைகள், தபால் சேவைகள் முடங்கியது. குறிப்பாக பஸ் போக்குவரத்து ஊழியர்கள் பெரும்பாலானோர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஸ் சேவை முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 11 பணிமனைகளில் இருந்து தினமும் 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய வேலை நிறுத்த போராட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
அதேநேரம் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால் அதில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அனைத்து தொழிற்சங்கத்தினர் கூடிப் பேசி முடிவெடுத்து நாளை 2-வது நாளாக நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று 2-வது நாளாக பொது வேலை நிறுத்தம் தொடங்கியது. இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் அனைத்து அரசு பஸ்களும் இயங்கியது. மாநகர பஸ்கள், புறநகர் பஸ்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 93 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதியத்திற்குள் அனைத்து பஸ்களும் அதாவது 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில் 2-வது நாளாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபோல் கோபி,சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி போன்ற இடங்களிலும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சூரம்பட்டி:
ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள புதுப்பிக்க பட்ட ம.தி.மு.க.அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாநகர மாவட்ட ம.தி.மு.க செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர்.கலைஞர் மற்றும் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் கட்டிக்காத்து வரும் திராவிட இயக்க பாசறையில் இந்துத்துவா சனாதன அமைப்புகள் ஊடுருவ முயற்சிக்கின்றன.
இந்த ஊடுருவலை தடுக்க இளைஞர்கள் அதிகம் வர வேண்டும். பெரியாரின் சிந்தனைகளை, அண்ணாவின் கொள்கைகளை, கலைஞரின் எழுத்துக்களை இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும். திராவிட பாசறைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் சனாதன சக்திகளை முறியடிக்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் பாசறையாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கையுடன் இந்த இயக்கம் தொடர்ந்து செயல் படுகிறது. இதை தொடர்ந்து இளைஞர்கள் கட்டி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அலுவலக வளாகத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 85 திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார். இதில் ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஈரோடு சோலாரில் ரூ.60 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இப்போது அங்கு தற்காலிகமாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதேப்போல கனிராவுத்தர் குளத்தில் புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. ஈரோடு சி.என்.சி. கல்லூரியை 20 ஆண்டு காலமாக அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இப்போது தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கல்லூரியை புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மற்றும் தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேல் நன்றி கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியைச்சேர்ந்த 13 வயது சிறுமி தினமும் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு பால் பண்ணைக்கு சைக்கிளில் பால் ஊற்ற சென்று வந்தார்.
இந்த நிலையில் ஒட்டக்கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன் என்பவரது மகன் நந்தகுமார் (23) என்பவர் தினமும் சிறுமியை பின் தொடர்ந்து செல்போன் மூலம் போட்டோ எடுத்து வந்து உள்ளார்.
சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் சைக்கிளில் கூட்டுறவு பால் பண்ணையில் பால் ஊற்றி விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நந்தகுமார் தனது மோட்டார் சைக்கிளில் சிறுமி மீது மோதுவது போல் பயமுறுத்தி உள்ளார். மேலும் நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்க வேண்டும் நான் கூப்பிடும்போது என்னுடன் வரவேண்டும். இல்லை என்றால் உன்னை வாழ விடமாட்டேன். என் பேச்சை கேட்காவிட்டால் உன் போட்டோக்களை எடிட் செய்து என் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன். இது பற்றி உனது பெற்றோர்களிடம் தெரிவித்தால் உன்னையும், அவர்களையும் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்த விவரங்களை தனது தந்தையிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி நந்தகுமார் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.






