என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    வண்டலூர் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 72), ஆர்.எம்.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் துளசி (வயது 62), இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வண்டலூர் மேம்பாலம் கீழ் பகுதியில் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவர் மீதும் பயங்கரமாக மோதியது.‌ இதில் தூக்கி வீசப்பட்ட ராணி, துளசி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக இறந்தார். துளசி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசியல் கட்சி தலைவர்கள் முயற்சிக்க வேண்டும், வருகி்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. வியாபாரிகள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களுக்கு எதிராக எந்த கட்சி செயல்பட்டாலும் அதை தமிழ்நாடு வணிகர் சங்கம் எதிர்க்கும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 780 பேர் உயிரிழந்துள்ளனர். 336 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 603 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 780 பேர் உயிரிழந்துள்ளனர். 336 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 447 பேர் உயிரிழந்துள்ளனர். 71 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மதுராந்தகம் அருகே அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் 2 பேர் பலியாகினர்.
    மதுராந்தகம்:

    சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 59). இவர் தனது தொழில் நண்பர்களான சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வின்சென்ட் பாபு (55), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் (64), பெரம்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (51) ஆகிய 3 பேருடன் கோயம்புத்தூருக்கு தொழில் சம்பந்தமாக காரில் சென்றார்.

    இந்த நிலையில் அனைவரும் கோவை சென்று வேலையை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்தனர். வின்சென்ட் பாபு காரை ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் அருகே கார் வந்தபோது பனி மூட்டம் காரணமாக காரை ஓட்டி வந்த வின்சென்ட் நிலைத்தடுமாறினார்.

    இதையடுத்து, கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி அங்குள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

    அப்போது அதிகாலை என்பதால் பனிமூட்டத்தில் பள்ளத்தில் கிடந்த காரினை வாகன ஓட்டிகள் யாரும் கவனிக்கவில்லை. இதனால், காயமடைந்தவர்களை காப்பாற்ற யாருமில்லாமல் அய்யோ, அம்மா... என்று வலியில் கதறினர். இதனால் பலத்த காயமடைந்த சண்முகசுந்தரம், வின்சென்ட் பாபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஆகியோர் படுகாயத்தால் மயங்கி கிடந்தனர். இதையடுத்து வெகுநேரமான பின்னர் அப்பகுதியில் வந்தவர்கள் படுகாயமடைந்த கிடந்த 2 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கல்பாக்கம் அருகே சொத்து தகராறில் தம்பி மனைவியை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த கடுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன், விவசாயி. இவரது அண்ணன் கோதண்டம் (வயது 60). இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோதண்டம் குடிபோதையில் வீரராகவன் வீட்டின் முன்நின்று அவரது மனைவி மஞ்சுளாவை (45) தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதில் மஞ்சுளாவுக்கும் கோதண்டத்துக்கும் தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கோதண்டம் திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் மஞ்சுளாவை வெட்டியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த மஞ்சுளாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து கோதண்டத்தை கைது செய்தனர்.
    கூடுவாஞ்சேரி அருகே சித்த மருத்துவர் வீட்டில் 110 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை (வயது 70). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர் கடந்த 11-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள தனது மகளின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். இவரது வீட்டின் மாடியில் மகன் நந்தகுமார் (வயது 40) வசித்து வருகறார்.

    சித்த மருத்துவரான இவர் நேற்று முன்தினம் மாலை தனது மேல் மாடி வீட்டை பூட்டிக் கொண்டு வளசரவாக்கத்தில் உள்ள தனது மனைவியை அழைத்து வருவதற்காக சென்றார். நேற்று காலை செந்தாமரை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து மாடியில் உள்ள தனது மகனின் வீட்டை பார்த்த போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். 

    உள்ளே சென்று பார்த்தபோது மகனின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சித்த மருத்துவர் நந்தகுமார், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் செந்தாமரை இருவரும் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர். போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

    காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி பின்னர் நின்று விட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    கனடாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் கஞ்சா பாக்கெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு கனடா நாட்டிலிருந்து இருந்து 3 பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில், விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையில் உள்ள முகவரிகளுக்கு அனுப்புவதற்காக 3 பார்சல்களில் மூலிகை பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

    அதில், 3 பார்சல்களிலும் தலா 100 கிராம் என 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் காய்ந்த இலைகள் இருந்தன. இதையடுத்து, இவற்றை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில், பார்சலில் இருந்த இலைகள் உயர்ரக கஞ்சா என தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 300 கிராம் கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பார்சல்களில் இருந்த முகவரிகளுக்கு சென்று விசாரித்த போது, அந்த முகவரியில் யாரும் இல்லாததால் அவை போலியானது என தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் கஞ்சாவை சென்னைக்கு அனுப்பி வைத்தது யார்? இந்த கடத்தல் சம்பவத்தில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த காவலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    படப்பை:

    செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமம் பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார், (வயது 50) இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அவருடைய சைக்கிளில் ஒரகடம் வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இறந்து கிடந்த ஜெயகுமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ரெட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 42). இவர் கிரைண்டர் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள லட்சுமிக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்று கூறப்படும் சொத்தை அதே பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் தன்னுடையது என கூறி லட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து லட்சுமி மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் மருத்துவமனையில் இருந்து மருத்துவ சான்றிதழை பெற்று வருமாறு கூறி அனுப்பி உள்ளனர்.

    அப்போது லட்சுமி மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர் லட்சுமியிடம் ரூ.300-ஐ லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி லட்சுமியை தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினர். அவரை மீட்ட செங்கல்பட்டு டவுன் போலீசார் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
    நடத்தையில் சந்தேகத்தில் மனைவியை உயிரோடு கணவர் எரித்து கொன்ற சம்பவம் அச்சுறுப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம், இரும்புலி காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். பழைய இரும்பு கடை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா (வயது 35). மகள் பவித்ரா (18). இவர் உத்தரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஜீவாவின் நடத்தையில் கணவர் பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் ஜீவா அடிக்கடி செல்போனில் பேசுவதையும் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக நேற்று இரவும் அவர்களுக்கு இடையே மோதல் உருவானது. பின்னர் அவர்கள் வீட்டில் தூங்க சென்று விட்டனர். ஆனால் மனைவி மீது பார்த்திபன் கோபத்தில் இருந்தார். அவரை உயிரோடு எரித்து கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்தநிலையில் அதிகாலை 2.30 மணி அளவில் எழுந்த பார்த்திபன் வீட்டில் இருந்த மண்எண்ணையை தூங்கி கொண்டிருந்த மனைவி ஜீவா மீது ஊற்றி தீ வைத்தார். இதில் ஜீவா அலறி துடித்தார். சத்தம் கேட்டு எழுந்த அவரது மகள் பவித்ரா இதனை தடுக்க முயன்றார்.

    ஆத்திரத்தில் இருந்த பார்த்திபன் மகள் பவித்ரா மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். மேலும் தனது உடல் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் இருவரும் உடல் கருகி அலறி துடித்தனர்.

    சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பார்த்திபன் குடும்பத்துடன் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜீவா சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்து கிடந்தார்.

    பார்த்திபனும், அவரது மகள் பவித்ராவும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடிகிடந்தனர். அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    நடத்தையில் சந்தேகத்தில் மனைவியை உயிரோடு கணவர் எரித்து கொன்ற சம்பவம் அச்சுறுப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகத் தீ ஒரு குடும்பத்தையே எரித்துள்ளது.

    இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    பணியின்போது ஏற்பட்ட தவறால் அதிகாரிகள் ‘மெமோ’ வழங்கியதையடுத்து, மனமுடைந்த மாநகர பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் வ.உசி.நகர், 4-வது தெருவில் வசித்து வந்தவர் இளவரசன் (வயது 42). இவர் தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்குட்பட்ட 56-டி மணலி பஸ்சில் கடந்த 14 ஆண்டுகளாக கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கீதா பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் இவர் பணியில் இருந்த போது பயணிக்கு பயணச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தவறு காரணமாக அதிகாரியிடமிருந்து மெமோ வழங்கப்பட்டதாக தெரிகிறது. அன்று முதல் அதிகாரிகள் தன்னை தொந்தரவு செய்வதாக அடிக்கடி மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.

    இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மனைவியும் அவருக்கு அடிக்கடி ஆறுதல் கூறி வேலைக்கு அனுப்பி உள்ளார். இதற்கிடையே வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர், நேற்று அதிகாலை வீட்டில் இருந்த பழைய பொருட்கள் அடைத்து வைக்கப்பட்ட அறையில் தனது மனைவியின் புடவையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 206 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 776 பேர் உயிரிழந்துள்ளனர். 374 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 421- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 910 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 445 உயர்ந்தது. 66 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 43 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 136 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 160 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 696 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
    ×