என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    கேளம்பாக்கம் அருகே துப்பாக்கியால் சுட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார். பணி சுமையால் இறந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 59). சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். அவரது மனைவி லலிதா (55), மகன்கள் சாய் முகிலன் (27), சாய் சித்தார்த் (16).

    தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    பாட்னா ஐகோர்ட்டு நீதிபதி அனில்குமார் உடல்நலக்குறைவால் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு போலீசாக பணியாற்றி வந்த கவுதம் இரவு பணி முடித்து நேற்று அதிகாலை கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ள வீட்டுக்கு சென்றார்.

    மனைவியிடம் மீண்டும் காலை 7 மணிக்கு பணிக்கு செல்ல இருப்பதாக கூறி விட்டு சிறிது நேரம் தூங்கிய கவுதம் மீண்டும் காலை பணிக்கு செல்ல தயாரானார். மனைவியிடம் காபி கேட்டார். அப்போது திடீரென்று வெடி சத்தம் கேட்கவே அவரது மனைவி சென்று பார்த்தார். அப்போது கவுதம் தான் பயன்படுத்தும் துப்பாக்கியால் காதுக்கு மேல் பகுதியில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் மகன் இது குறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதில் துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா, 5 தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

    கவுதமின் மனைவி தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், பணி சுமை காரணமாக கவுதம் மன உளைச்சலில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கவுதம் பணி நிறைவு பெற இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் விருப்ப ஓய்வு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாகவும், கடன் சுமை மற்றும் ரத்த உறை என்ற அரிய வகை நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    கவுதம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு சிறப்பு போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
    செங்கல்பட்டு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகரத்தில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் திடீரென மின் வினியோகம் துண்டிக்கபட்டது. இதே போல் திம்மாவரம், ஆத்தூர், வில்லியம்பாக்கம் பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.

    மின்தடை காரணமாக செங்கல்பட்டு நகரம் இருளில் மூழ்கியதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மின்சப்ளை சீராகவில்லை. முறையான பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    அதிகாலை 6 மணிக்கு பின்னரே மின் சப்ளை சீரானது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    செங்கல்பட்டு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மின்பகிர்மான வட்டத்தில் பழுதை சரி செய்கின்றோம் என அறிவித்து விட்டு அன்று காலையில் இருந்து மாலை வரை மின்வினியோகத்தை நிறுத்தி விடுகின்றனர். அப்படி இருந்தும் லேசான காற்று அடித்தாலும், மழை பெய்தாலும் உடனே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் வெட்டால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிப்புகுள்ளாகின்றனர்.

    செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதை சரி செய்து முறையான மின்வினியோகம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லாமல் சுவரோட்டி ஒட்டிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் பல்வேறு பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்காளர்களிடம் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது புகைப்படம், சின்னத்துடன் கூடிய சுவரொட்டிகளை வண்டலூர், ஓட்டேரி, மண்ணிவாக்கம் போன்ற பகுதிகளில் ஒட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக 7 பேர் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 62). இவர், சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இவர், வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன், தனது சகோதரர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் சென்றுவிட்டார். நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில் கருப்பையா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.50 ஆயிரம், குத்துவிளக்குகள் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த கார் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிந்தது. வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த 22 பவுன் நகை, திருடன் கண்ணில் படாததால் அவை தப்பியது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன், மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் உள்ள கோவில் அருகில் நிறுத்தி விட்டு கருப்பையா வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்துவிட்டு அவரது காரையும் திருடி அதில் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விழுப்புரம் சுங்கச்சாவடியில் சிறுவன் முகமது சித்திகை கடத்தி சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவரது 8 வயது மகன் முகமது சித்திக்.

    நேற்று மாலை 3 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த முகமது சித்திக்கை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் முகமது இஸ்மாயிலிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறுவனை கடத்திச்சென்றதாக புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக காரின் பதிவு எண் குறித்து அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் சுங்கச்சாவடியில் சிறுவன் முகமது சித்திகை கடத்தி சென்ற காரை மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுவனை மீட்டு காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    உயிரியல் பூங்கா பெரும்பாலும் பொருளாதார தன்னிறைவு கொண்டதாக இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு கூட சிக்கல் எதிர்கொள்ளப்பட்டது.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 182 இனங்களில் உள்ள 2382 விலங்குகள் இயற்கையில் உள்ளது போன்ற சூழலில் சிறந்த பராமரிபுடன் வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் ஒரு வலுவான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கையாள்கிறோம்.

    கொரோனா தொற்று நோயினால் உயிரியல் பூங்கா கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24 வரை சுமார் 8 மாதங்கள் மூடப்பட்டு இருந்தது.

    இந்த உயிரியல் பூங்கா பெரும்பாலும் பொருளாதார தன்னிறைவு கொண்டதாக இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு கூட சிக்கல் எதிர்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் மகிந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனம் உயிரியல் பூங்காவிற்கு விலங்கு தகவல் பலகைகளைப் புதுப்பிக்கவும், விலங்குகளின் இருப்பிடங்களில் விலங்குகள் ஓய்வெடுக்க கொட்டகைகள், சோலார் தெரு விளக்குகள், 14 பேர் அமரும் பேட்டரி வாகனங்கள் இரண்டும் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் வழங்கி உள்ளது.

    இந்த வசதிகள் உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ‘விஷ்ணு’ என்ற சிங்கத்தையும் பிரக்ருதி என்ற யானையையும் 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொதுமக்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து விலங்குகள் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    இதையும் படியுங்கள்... கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 12,161 பேருக்கு கொரோனா

    காரணைபுதுச்சேரியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காரணைபுதுச்சேரி விநாயகபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 21). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    மறைமலைநகர் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.1½ கோடி மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள காட்டூர் ரெயில் நகர் பகுதியில் தனியாக ஒரு வீட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசார் மற்றும் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து நேற்று காலை போலீசார் சந்தேகத்துக்குரிய அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தபோது, அங்கு மூட்டை மூட்டையாகவும், பெட்டி பெட்டியாக வீடு முழுவதும் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (வயது 30), அருங்குன்றம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (25), சாலவாக்கம் பகுதியை சேர்ந்த காசி (19), பெங்களூரூவை சேர்ந்த ஆனந்த் (35), நரேஷ் குமார் (20), தமுரா ராம் (22), மகேஷ் (25), ஆகிய 7 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதனையடுத்து குடோனில் பெட்டி பெட்டியாக மற்றும் மூட்டை மூட்டையாக இருந்த 5 டன் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு மினி லாரி, 2 மினி ஆட்டோ, கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 9 வாகனங்கள், 9 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 1½ கோடி என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே இதேபோல ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் லீமாரோஸ் (வயது 50). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். லீமாரோஸ் கடந்த 19-ந்தேதி தனது மகளுடன் இருசக்கர வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர்ந்து கல்பாக்கம் அணுசக்தித்துறை மருத்துவமனை அருகில் வேகத்தடையை கடந்த போது, எதிர்பாராதவிதமாக லீமாரோஸ் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த பெரிய செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின் (வயது 47). இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் கதவை திறந்தவாறு தூங்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறந்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரி ஜோஸ்பின் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 7½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.27 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி மாநில பஸ் ஒன்று நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் புகுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    மாமல்லபுரம்:

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சென்னைக்கு புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகத்தின் அதிவிரைவு பஸ் ஒன்று மாமல்லபுரம் கிழக்குகடற்கரை சாலை வழியாக நேற்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திருவிடந்தை என்ற இடத்தில் பஸ் சென்றபோது, அந்த வழியாக சைக்கிள் ஓட்டி சென்ற ஒருவர் மீது பஸ் எதிர்பாராத விதமாக உரசியது. இதில் நிலை தடுமாறிய அந்த வாலிபர் சாலையில் கீழே விழுந்தார். அப்போது சாலையில் விழுந்த வாலிபர் மீது பஸ் மோதல் இருக்க டிரைவர் பஸ்சின் பிரேக்கை வேகமாக அழுத்தி நிறுத்த முயன்றார். அதில் பஸ் நிலை தடுமாறி வலது புறத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி மணலில் சிக்கி கொண்டது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் இருக்கையில் இடிபட்டு காயமடைந்தனர். பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். குறிப்பாக பஸ் பள்ளத்தில் உள்ள மணலில் சிக்காமல் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது மோதியிருந்தால் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், பஸ் டிரைவரின் சாதுர்ய திறமையால் விபத்து தவிர்க்கப்பட்டது என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கல்பாக்கம் அருகே கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 21-ந்தேதி இரவு 7 மணியளவில் கூவத்தூர் பஜார் வீதியில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கிழக்கு கடற்கரைச்சாலையின் குறுக்கே சென்ற போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது பலமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×