என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதம்
    X
    கவுதம்

    துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

    கேளம்பாக்கம் அருகே துப்பாக்கியால் சுட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார். பணி சுமையால் இறந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 59). சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். அவரது மனைவி லலிதா (55), மகன்கள் சாய் முகிலன் (27), சாய் சித்தார்த் (16).

    தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    பாட்னா ஐகோர்ட்டு நீதிபதி அனில்குமார் உடல்நலக்குறைவால் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு போலீசாக பணியாற்றி வந்த கவுதம் இரவு பணி முடித்து நேற்று அதிகாலை கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ள வீட்டுக்கு சென்றார்.

    மனைவியிடம் மீண்டும் காலை 7 மணிக்கு பணிக்கு செல்ல இருப்பதாக கூறி விட்டு சிறிது நேரம் தூங்கிய கவுதம் மீண்டும் காலை பணிக்கு செல்ல தயாரானார். மனைவியிடம் காபி கேட்டார். அப்போது திடீரென்று வெடி சத்தம் கேட்கவே அவரது மனைவி சென்று பார்த்தார். அப்போது கவுதம் தான் பயன்படுத்தும் துப்பாக்கியால் காதுக்கு மேல் பகுதியில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் மகன் இது குறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதில் துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா, 5 தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

    கவுதமின் மனைவி தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், பணி சுமை காரணமாக கவுதம் மன உளைச்சலில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கவுதம் பணி நிறைவு பெற இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் விருப்ப ஓய்வு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாகவும், கடன் சுமை மற்றும் ரத்த உறை என்ற அரிய வகை நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    கவுதம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு சிறப்பு போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×