என் மலர்
புதுச்சேரி
- உலகிற்கே ஜனாதிபதி முன்மாதிரியாக விளங்குகிறார்.
- ஆதி சமூகத்தில் பிறந்து ஆதிக்க சமுதாயத்தில் இந்த பதவியை பெற அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
பிரதமர் மோடியின் பெஸ்ட் புதுவையை பாஸ்ட் புதுவையாக மாற்றி வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுகள். ஜிப்மர் நிர்வாக ரூ.17 கோடியில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவியை நிறுவியது பாராட்டுக்குரியது.
துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலகிற்கே ஜனாதிபதி முன்மாதிரியாக விளங்குகிறார். புதுவை ஆன்மிக மண். நாட்டின் முன்னேற்றம், சுதந்திரத்தில் புதுவைக்கும் பங்கு உண்டு.
இந்த மண்ணுக்கு சிலர் வரும்போது சரித்திரமாகிறது. அரவிந்தர், பாரதியார் வந்தது சரித்திரமானது.
அதேபோல ஜனாதிபதியின் வருகை புதுவை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வது என்ற பாரதியாரின் எழுத்துக்களை உண்மையாக்கும் வகையில் திரவுபதி முர்மு ஜனாதிபதியாகியுள்ளார்.
ஆதி சமூகத்தில் பிறந்து ஆதிக்க சமுதாயத்தில் இந்த பதவியை பெற அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். அவரை கண்டு இந்த உலகம் வியக்கிறது. பெண்மையின் பெருமையை உணர்த்தும் உருவமாக உள்ளார். பிரதமர் மோடி கண்டெடுத்த மாணிக்கம் நம் ஜனாதிபதி.
இவ்வாறு அவர் பேசினார்.
- சர்வதேச யோகா விழா நடத்தி யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது.
- சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-
புதுவைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறும்போது இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.
புதுவையில் மணக்குள விநாயகர், திருக்காஞ்சி கோவில்களில் தரிசனம் செய்து கடவுள்களின் ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளேன். புதுவையின் ஆன்மிக அம்சங்களில் யோகாவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
சர்வதேச யோகா விழா நடத்தி யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது. புதுவையில் வசித்தவர்கள் சுதந்திர போராட்டத்தின்போது இந்திய மக்களோடு சமமாக செயல்பட்டனர். புதுவை சிறந்த எழுத்தாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் தாயகமாக திகழ்ந்துள்து. பாரதிதாசன் இங்கு பிறந்தவர்.
மகாகவி பாரதியார் இங்கே வசித்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். வி.வி.எஸ்.ஐயர் சிறந்த தமிழ் அறிஞர், சுதந்திர போராட்டத்தில் புதுவையில் தங்கி பங்கேற்றார். புதுவையின் அரசியல், சமூகவியல் அசாதாரணமானது.
புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களையும், மொழி வேற்றுமையில் ஒற்றுமை என கலாச்சாரம், பாரம்பரியத்தை முன்னெடுத்துச்செல்கிறது.
புதுவையின் கட்டிடக்கலை, திருவிழாக்கள், வாழ்க்கை முறை பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கிறது. பிரான்ஸ், இந்தியா இடையிலான நட்புறவின் வாழும் பாலமாக புதுவை விளங்குகிறது.
சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியறிவில் புதுவை முதலிடத்தில் உள்ளது பாராட்டுக்குரியது. புதுவைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க மேல்படிப்புக்காக வந்து செல்கின்றனர்.
ஜிப்மர் அப்துல்கலாம் அரங்கில் நாம் உள்ளோம். அவரின் பங்களிப்புகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ நோக்கங்களுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சியை பயன்படுத்தும் முயற்சிகளை மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார்.
- வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று புதுவை வந்தார்.
காலை 9.55 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 10.35 மணிக்கு புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார். அங்கு ரூ.17 கோடியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள புற்றுநோய்க்கான நவீன கதிர் வீச்சு சிகிச்சை எந்திரத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவிலேயே வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார். மாலை 4.40 மணிக்கு முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று கலைநிகழ்வுகளை பார்க்கிறார்.
மாலை 5.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருக்காஞ்சி கஞ்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் விடுதிக்கு வந்து ஓய்வெடுக்கிறார். இரவு 8 மணிக்கு கவர்னர் மாளிகையில் ஜனாதிபதிக்கு பாரம்பரிய இரவு விருந்து அளிக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் விடுதிக்கு திரும்பி ஓய்வெடுக்கும் அவர் நாளை (செவ்வாய்கிழமை) காலை 6 முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். அவர் அமரும் வகையில் கல் மேடைகள் சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கடற்கரைப் பகுதிக்கு வருவதால் காலை 4 முதல் 7 வரை தினமும் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 9.15 முதல் 9.45 மணி வரை புதுவையின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கிறார்.
10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரவிந்தர் ஆசிரமம் சென்று தியானம் செய்கிறார். அங்கிருந்து 11.15 மணிக்கு காரில் ஆரோவில் மாத்ரி மந்திருக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கேயே மதிய உணவை முடித்துவிட்டு 2.45 முதல் 4 மணி வரை நடைபெறும் ஆரோவில் கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்கிறார்.
பின்னர் 4 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி புதுவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 250 போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை ஆவடி, நெய்வேலியில் இருந்து 200 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுவை விமான நிலையம், ஜிப்மர், ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் இயங்கும் படகு துறையில் கட்டணம் செலுத்தி சவாரி செய்வது வழக்கம்.
- படகுகளில் 5 பேர் அளவில் ஏற்ற வேண்டிய இடத்தில் 15-க்கு மேற்பட்டவர்களை ஏற்றி செல்கின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் வருகிறது. அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை முகத்துவாரத்தில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் இயங்கும் படகு துறையில் கட்டணம் செலுத்தி சவாரி செய்வது வழக்கம். இவர்கள் முறையான படகு சவாரியை செய்வதில்லை என்ற குற்றச் சாட்டு கடந்த சில வருடங்களாக உள்ளது.
இந்நிலையில் காரைக்கால் கடற்கரை பகுதிக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை, அங்குள்ள மீனவர்கள் தங்கள் பைபர் படகில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்கள் படகுகளில் 5 பேர் அளவில் ஏற்ற வேண்டிய இடத்தில் 15-க்கு மேற்பட்டவர்களை ஏற்றி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- போலீஸ் அதிகாரிகள் காரில் சென்று ஜனாபதி செல்லும் வழிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
- நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டி காலை 7 மணி முதல் தொடங்கப்படுகிறது.
புதுச்சேரி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். நாளை ஜிப்மரில் ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லைனியர் ஆக்சி லேட்டர் என்று உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணியளவில் மணக்குள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து கைவினை கிராமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கிறார். இரவில் நீதிபதிகள் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அதன்பின் ஆரோவில்லில் நடக்கும் அரவிந்தர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாகி இறங்கியுள்ளனர். 1500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் போலீஸ் அதிகாரிகள் காரில் சென்று ஜனாபதி செல்லும் வழிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மேலும் புதுவை வான்பகுதியில் 2 நாட்கள் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.
மேலும் சாலைகளில் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் படி ஜனாதிபதி செல்லும் வழியெங்கும் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை பொதுப்பணி, உள்ளாட்சித்துறையினர் அகற்றி வருகின்றனர்.
புதுவை ஜிப்மருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டி காலை 7 மணி முதல் தொடங்கப்படுகிறது.
- இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.
- டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நிரவியில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவ செயல் இயக்குனராக உதய்பாஸ்வான் கடந்த 1-ந் தேதி பதவியேற்றுகொண்டார். தொடர்ந்து, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், எக்கோ கார்டியோகிராம் எந்திரம் போதுமானதாக இல்லை யென்பதை அறிந்து, ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எக்கோ கார்டியோகிராம் எந்திரம் ஒன்று புதியதாக நிறுவப்பட்டது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.
மேலும், ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் வகையில் தனிஅறை அமைக்கப்பட்டு அதையும் கலெக்டர் குலோத்துங்கன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர். மதன்பாபு, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
- புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.
புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வப்போது மாநில அந்தஸ்து விவகாரம் அரசியல் கட்சிகளால் விஸ்வரூபம் எடுக்கும். இதற்காக பந்த், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களும் களை கட்டும். ஆனால் மீண்டும் அடங்கிப் போய்விடும்.
சமீப காலமாக முதலமைச்சர் ரங்கசாமி, அரசுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அதிகாரம் இல்லை என்பதை அரசு விழாக்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
அதோடு, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தும் வகையில் எம்.எல்.ஏக்களை டெல்லி அழைத்துச் செல்வதாகவும் ரங்கசாமி கூறியிருந்தார்.
இதனிடையே பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. சுப்புராயன், மாநில அந்தஸ்து தீர்மானம் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி, 2018-க்கு பிறகு மாநில அந்தஸ்து கோரி எந்த தீர்மானமும் மத்திய அரசுக்கு வரவில்லை என்றும், புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்றும் பதிலளித்திருந்தார்.
இதையடுத்து மீண்டும் புதுவையில் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது. சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பாதது ஏன்? முடக்கி வைத்துள்ளது யார்? கவர்னர் தமிழிசை தடையாக உள்ளாரா? என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் கவர்னர் தமிழிசை மாநில அந்தஸ்து தீர்மானம் தொடர்பாக ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், மாநில அந்தஸ்து கோரும் சட்டமன்ற தீர்மானம் தனக்கு ஜூலை 22-ந் தேதி விடுமுறை நாளில் கிடைத்தது என்றும், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இனி மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாநில அந்தஸ்து தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசை நேரடியாக சந்தித்து எம்.எல்.ஏ.க்கள், அனைத்து அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினால் மட்டுமே மாநில அந்தஸ்து வழங்குவதை மத்திய அரசு பரிசீலிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
இதனிடையே புதுவைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் அரசு முறை பயணமாக வருகிற திங்கட்கிழமை வருகிறார். அவரிடம் அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
- மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது.
- வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு, மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீர பிரதாப் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரைச்சேர்ந்த சின்னையன் மகன் ஞானபிராகாசம் (வயது 33), வீரமணி (50) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்படிக்க சென்றனர். காரைக்கால் மேடு கடற்கரையிலிருந்து கிழக்கே 4 நாட்டிகள் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போ து, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது. இதன் காரணமாக படகை கரைக்கு திருப்பினர். அப்போது, பலத்த காற்று வீசியதால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் இருவரும், கடலில் விழுந்து மாயமாகினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.
பிறகு படகை நிமிர்த்தி சரி செய்து, ஞானபிராகாசத்தை தேடினார். தேடியும் கிடைக்காததால், கரை திரும்பிய மீனவர் வீரமணி, நடந்த சம்பவத்தை சக மீனவர்களிடம் கூறினார். மாயமான மீனவர் ஞானபிராகாசத்தை தேடும் பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்று இரவு காரைக்கால் மேடு கடற்கரைக்கு 200 மீட்டர் தொலைவில் கடலில் மீனவர் ஞானபிராகாசம் மிதந்து கொண்டிருந்தார். சக மீனவர்கள் ஞானபிராகாசத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்வம காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, காரைக்கால் பறவை பேட் பகுதியில் இயங்கி வருகிறது.
- கலெக்டர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சத்யாவிடம் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, காரைக்கால் பறவை பேட் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குப்பை கிடங்கை கலெக்டர் குலோத்துங்கன் நேற்று மாலை ஆய்வு செய்தார். குப்பையை பிரித்து எடுக்கும் (பயோ மைனிங்) பணியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், எச் .ஆர் .ஸ்கொயர் தனியார் நிறுவனம் மூலம் வீடு தோறும் எடுக்கப்பட்டு வரும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் இயந்தி ரத்தை நிறுவு வதற்கான பணிகளையும் பார்வையிட்டார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்கும்படி கலெக்டர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சத்யாவிடம் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் லோகநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த கிடங்கு மற்றும் பணியில் வேலை செய்யும் மகளிர் மற்றும் பிறருக்கு கை உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் வழங்கப்பட வேண்டும். அவை இல்லாமல் பணி செய்ய க்கூடாது என கலெக்டர் குலோத்துங்கன் அதிகா ரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பே முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி புதுவை நகர பகுதி முழுவதும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
- புதுவையில் முக்கிய சாலை சந்திப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் சாதனைகளை பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமி பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
அதுபோல் இந்தாண்டும் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பே முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி புதுவை நகர பகுதி முழுவதும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும்வகையில் பல்வேறு நடிகர்களின் தோற்றத்திலும் காமராஜர் மற்றும் மன்னர்கள் வேடத்திலும் பேனர் வைத்துள்ளனர்.
அதோடு அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வருவது போலும் ரங்கசாமி செய்த சாதனைகளை பட்டியலிட்டும் ஆங்காங்கே பேனர் வைத்துக்கப்பட்டுள்ளன. அதிலும் முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி அவரது தொண்டர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். இதனை புதுவை கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
மேலும் புதுவையில் முக்கிய சாலை சந்திப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் சாதனைகளை பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்தனர்.
- புதுவை பல்கலைக்கழக மாணவர்கள், துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- பல்கலைக்கழக மதர்தெரசா உணவு விடுதி அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் போலி பில் தயாரித்து நிதி மோசடி குறித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள், துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் துணைவேந்தர் குர்மீத்சிங் பதவி விலக வலியுறுத்தி நேற்று நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக மதர்தெரசா உணவு விடுதி அருகே இரவில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை.
- நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.
புதுச்சேரி:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து பலரும் அறிவார்கள். அவர் தனது 4 வயது முதல் குடும்ப சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வந்தவர்.
அவர் தனது படிக்கும் காலத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி பாடத்தை கற்றார். முயற்சி திருவினையாக்கும் என்பது போல பல கஷ்டங்களை அனுபவித்த அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களில் தலைசிறந்த அதிபர் என புகழப்பட்டார்.
அதேபோலவே நமது இந்தியாவிலும் சட்டமேதை என்று அழைக்கப்படும் அம்பேத்கர் மின்சாரம் இல்லாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை படித்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்கு சென்ற முதல் இந்தியர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு மிகவும் வல்லமை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார்.
இதே போல நமது புதுவையிலும் தற்போது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. புதுவை கடற்கரை சாலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் தெருவில் உள்ள மின்விளக்கின் வெளிச்சத்தில் சிறுவன் தனது பள்ளி பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கு உறுதுணையாக அவனது தாயும் அருகிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார். இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கிறார்கள். இதுகுறித்து அந்த சிறுவனிடம் கேட்டபோது, தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை. தெரு ஓரத்தில் தங்கியிருக்கிறோம். நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.
அதே வேளையில் படிப்பிலும் எனக்கு அதிகம் விருப்பம் உண்டு. மாலை வேளையில் தெரு விளக்கு வெளிச்சத்திலேயே பள்ளி பாடத்தை படித்து வருகிறேன்.
ஆனால் இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இதற்காக நான் யாரிடமும் உதவியும் கேட்கவில்லை.






