என் மலர்tooltip icon

    அரியானா

    • மாடு திருட்டு வழக்கை விசாரிக்க சப்-இன்ஸ்பெக்டர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • அதிகாரிகளில் ஒருவர் பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை வைத்து அழுத்தியும் முடியவில்லை.

    பரிதாபாத்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில், மாடு திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். ஆனால், அடுத்து நடந்த சம்பவம் விசாரணை அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தது.

    பரிதாபாத்தைச் சேர்ந்த ஷுப்நாத் என்பவரின் எருமை மாட்டை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். மாட்டை கண்டுபிடிக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என அவரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கூறியிருக்கிறார். முதலில் 6000 ரூபாய் கொடுத்த ஷுப்நாத், மீதமுள்ள தொகையை கொடுப்பதற்கு முன்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார்.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக ஷுப்நாத்தை அனுப்பி பணத்தை கொடுக்க செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை வாங்கும்போது சுற்றி வளைத்து பிடித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சப்-இன்ஸ்பெக்டர், லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். வாயில் இருந்த அந்த பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இறுதியில் அவரை காரில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து பணத்தை கைப்பற்ற முயற்சிப்பதும், சப்-இன்ஸ்பெக்டர் அவசரம் அவசரமாக பணத்தை விழுங்குவதும் பதிவாகி உள்ளது. பணத்தை மீட்க அதிகாரிகள் போராடுகின்றனர். அதிகாரிகளில் ஒருவர் பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை வைக்கிறார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டரோ வாயை திறக்காமல் பணத்தை அப்படியே விழுங்குகிறார். இந்த போராட்டத்தில் தலையிட்ட மற்றொரு நபரை அதிகாரிகள் தடுத்து வெளியே தள்ளிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாட்டின் உணவு பாதுகாப்பை பஞ்சாப், அரியானா மாநிலங்கள் உறுதி செய்துள்ளன.
    • சமூக நலனுக்காக தொழில்நுட்பத்திற்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    அரியானா மாநித்தில் உள்ள குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    இன்று உலகம் முழுவதும் அதிவேக மாற்றத்தில் உள்ளது. தொழில்நுட்ப புரட்சி காரணமாக வேலைவாய்ப்புகள், மக்களின் அடிப்படை தேவைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு குருஷேத்ரா என்ஐடி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும். 


    இந்திய வேளாண்மை மேம்பாட்டில் பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் உணவு பாதுகாப்பை இந்த மாநிலங்கள் உறுதி செய்துள்ளன. அதேசமயம் காற்று மாசு, நிலத்தடி நீர் பாதிப்பு இந்த பிராந்தியத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

    பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் சாதாரண மக்கள் தொழில்நுட்பத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சமூகத்தின் நலனுக்காக தொழில்நுட்பம் பயன்பட்டால் அதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். சமத்துவமான சமுதாயத்தை கட்டமைப்பதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருமண பத்திரிகைகள் அச்சடித்து அக்கம்பக்கத்தில் வசிக்கும் 100 பேருக்கு அழைப்பிதழை வழங்கினோம்.
    • சம்பிரதாய முறைப்படி அனைத்து சடங்குகளையும் செய்து 2 நாய்களுக்கும் இன்று திருமணம் நடத்தினோம்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தம்பதியினர் தாங்கள் வளர்த்த செல்ல பிராணியான பெண் நாய்க்கும் மற்றொரு ஆண் நாய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்திய முறைப்படி நடந்த இந்த விழாவில் இந்து மத சடங்குகள் செய்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    இந்த திருமண விழா தொடர்பாக பெண் நாயின் உரிமையாளர் சவிதா கூறியதாவது:-

    எங்களுக்கு குழந்தை இல்லை. எனது கணவர் கோவிலுக்கு சென்று அங்குள்ள கால்நடைகளுக்கு உணவளித்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தெருநாய் ஒன்று அவரை பின் தொடர்ந்து எங்கள் வீட்டுக்கு வந்தது. அந்த பெண் நாய்க்கு ஸ்வீட்டி என்று பெயரிட்டு வளர்த்து வந்தோம். எங்களுக்கு குழந்தை இல்லாததால் அதை குழந்தை போல வளர்த்தோம்.

    மேலும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து அந்த நாய்க்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தோம். அப்போது மனிட்டா என்பவர் வளர்த்து வந்த ஆண் நாயான ஷேருவுக்கும், ஸ்வீட்டிக்கும் திருமணம் செய்து முடித்தோம்.

    மேலும் திருமண பத்திரிகைகள் அச்சடித்து அக்கம்பக்கத்தில் வசிக்கும் 100 பேருக்கு அழைப்பிதழை வழங்கினோம். அதைப் பார்த்ததும் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் அவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

    இந்து சம்பிரதாய முறைப்படி அனைத்து சடங்குகளையும் செய்து 2 நாய்களுக்கும் இன்று திருமணம் நடத்தினோம். குழந்தை இல்லாத எங்களுக்கு இந்த திருமணம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

    நாய்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் போலீசார் எங்களை பிடித்து சிறையில் அடைப்பார்கள் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆண் நாய் ஷேருவின் உரிமையாளர் மனிட்டா கூறுகையில், "நாய்களுக்கு திருமணம் செய்து அழகு பார்க்கும் இந்த யோசனை மிகவும் வேடிக்கையாக நடந்த ஒரு நிகழ்ச்சியாகும்" என்றார்.

    இந்த நாய்களின் திருமண விழா தற்போது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.

    • ஜி-20 அமைப்பின் லோகோவில் தாமரை மலர் இருப்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம்.
    • தேச நலன்களைப் பாதுகாப்பதே மோடி அரசின் முக்கிய நோக்கம்.

    அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத் தீங்கு விளைவிக்க முயன்றால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். நமது வீரர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

    2016-ல் சர்ஜிகல் தாக்குதல், 2019 பாலகோட் வான் வழித் தாக்குதல் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது வீரர்கள் காட்டிய வீரம் ஆகியவை நமது வலிமை மற்றும் தயார் நிலைக்கு சான்றாகும். தேச நலன்களைப் பாதுகாப்பதே மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.எதிர்கால சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ராணுவம் அதிநவீன ஆயுதங்களுடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடனும் தயாராக இருக்கிறது.

    அடுத்த ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக அண்மையில் பிரதமரால் வெளியிடப்பட்ட லோகோவில் தாமரை மலர் இருப்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் ஆகும். இந்தியாவின் தேசிய மலர் தாமரை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
    • சாமானியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று நடந்தது.

    இந்த முகாமில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:-

    நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ஒரே நாடு ஒரே சீருடை என்பது காவல்துறைக்கு வழங்கக்கூடிய ஒரு யோசனைதான். இதை நான் உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருவங்கள். 5, 50 அல்லது 100 ஆண்டுகளில் இந்த யோசனை நடைமுறைக்கு வரலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள்.

    நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    காவல்துறையைப் பற்றி நல்ல கருத்தைப் பேணுவது மிக முக்கியமானது. இங்கே உள்ள தவறுகள் கவனிக்கப்பட வேண்டும். காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து செயல்திறன், அதன் சிறந்த விளைவு மற்றும் சாமானியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    சிறந்த முடிவுகளை அடைவதற்கு காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மனித நுண்ணறிவை உருவாக்கும் நல்ல பழைய அமைப்புமுறையை பலப்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீஸ் துறையை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்.
    • வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குற்றங்களை தடுக்க மட்டுமல்ல குற்ற விசாரணைக்கும் உதவுகிறது.

    அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:-

    உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதின் முயற்சியாக இந்த சிந்தனை மாநாடு நடைபெறுகிறது. போலீஸ் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், சட்டம்- ஒழுங்கை வலுப்படுத்தவும் பல்வேறு மாநில போலீசாருக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும்.

    உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா காலத்தில் போலீசார் தங்கள் உயிர்களை பணயம் வைத்து பொதுமக்களுக்கு உதவினார்கள். அவர்கள் கடமையில் குறைவு எதுவும் இல்லை. போலீஸ் துறையை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்.

    பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகையின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை ஆகும். மாநிலங்கள் ஒன்றிணைந்து கற்றுக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும்.

    சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு ஆகும். இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமைதி நிலவ ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு.

    நாடு முன்னேறும்போது வளர்ச்சிப்பணிகள் கடைசி நபருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குற்றங்களை தடுக்க மட்டுமல்ல குற்ற விசாரணைக்கும் உதவுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • தேசத்தின் வளர்ச்சிக்கு உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது.
    • அனைத்து நிலைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பால் நாடு முன்னேறும்.

    சூரஜ்கண்ட்:

    அரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நேற்று தொடங்கிய மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் சிந்தனை அமர்வு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளதாவது:

    இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை ஒரு காலத்தில் வன்முறை மற்றும் அமைதியற்ற இடங்களாக இருந்தன. தற்போது அவை வளர்ச்சியின் இடங்களாக மாறியுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது.

    பெரும்பாலான இடங்கள், தேசவிரோத செயல்களிலிருந்து விடுபட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும்தான் இதற்குக் காரணம். தேசத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் நல்ல நிர்வாகத்திற்கும், உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது. அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. 


    தேசத்தை கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம பொறுப்பு இருக்கிறது. அனைத்து நிலைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்கும் போதுதான் நாடு முன்னேற்றம் அடையும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி உணர்வு நம்மை இயக்கும் சக்தியாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாநில முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் இந்த மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்.

    • அரியானாவில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
    • அப்போது பேசிய அவர் 2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு ரூ.57,000 கோடி முதலீடு வந்துள்ளது என்றார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எல்லை தாண்டிய குற்றங்களைத் திறம்பட கையாளுவது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு ஆகும்.

    2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு ரூ.57,000 கோடி முதலீடு வந்துள்ளது.

    இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அரசுசாரா நிறுவனங்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்

    என தெரிவித்தார்.

    • குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார்.
    • முலாயம் சிங் யாதவுக்கு விரிவான நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

    சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இன்று குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    82 வயதான முலாயம் சிங் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். நேற்று வரை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில், ஐசியுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து மருத்துவமனை மற்றும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "முலாயம் சிங் யாதவ் இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறார். அவர் மேதாந்தா மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு விரிவான நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

    அவர் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுளுடன் வாழ நாம் அனைவரும் பிரார்த்திப்போம்" என்று குறிப்பிட்டிருந்தது.

    • கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • விநாயகர் சிலையை நேற்று இரவு சிலர் கால்வாயில் கரைக்க சென்றனர்.

    சண்டிகர்:

    நாடு முழுவதும் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல், வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்ட கடவுள் விநாயகர் சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று இரவு விநாயகர் சிலையை அப்பகுதியில் உள்ள கால்வாயில் கரைக்கச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

    தகவலறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் 4 இளைஞர்களை மீட்டனர். ஆனால், நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • கொலைக்கான காரணம் குறித்து குற்றவாளிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
    • விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கோவா முதல்வர் தகவல்

    ஹிசார்:

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா,ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனா. சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி சோனாலி போகத்தின் மகள் யசோதரா போகத் கூறியதாவது:-

    தற்போது கோவா போலீசார் நடத்தி வரும் விசாரணையில் எங்கள் குடும்பத்தினருக்கு திருப்தி இல்லாததால் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று அரியானா முதல் மந்திரி கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    குற்றவாளிகள் கோவாவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். ஆனால் கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்வரை பின்வாங்கமாட்டோம்.

    கோவாவில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கும் என்று அம்மா சொன்னார். ஆனால் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ரிசார்ட் முன்பதிவு செய்யப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே இது திட்டமிட்ட கொலை என்று தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சோனாலியின் மரணம் பற்றிய ரகசிய அறிக்கை அரியானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. கோவா டிஜிபி ஜஸ்பால் சிங், இந்த வழக்குதொடர்பாக கோவா முதல் மந்திரி சாவந்திடம் ஐந்து பக்க அறிக்கையை அளித்திருந்தார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    இந்த வழக்கில் கோவா காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாகவும், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

    • பிரமாண்டமாக இரட்டை கோபுர கட்டிடங்களை இடிக்க 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.
    • டெல்லி அருகே நொய்டாவில் இரட்டைக் கட்டங்கள் தகர்க்கப்பட்டதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

    டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் பிரமாண்டமான இரட்டை கோபுர அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படது. இதில் அபெக்ஸ் என்ற கட்டிடம் 328 அடி உயரத்தில் 32 மாடிகளுடனும், மற்றொரு கட்டிடமான சியான் 318 அடி உயரத்துடன் 29 மாடிகளுடனும் கட்டப்பட்டது.

    ரூ.1200 கோடி மதிப்பிலான இந்த கட்டிடங்கள் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரட்டை கோபுர கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டனர். மேலும் இங்கு குடியிருப்புகளை வாங்கிய பொதுமக்களுக்கு 14 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கோர்ட்டு அறிவுறுத்தியது.

    சூப்பர் டெக் நிறுவனம் கட்டிய இந்த இரட்டை கோபுர கட்டிடத்தை ஆகஸ்டு 28-ந்தேதி இடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கட்டிடங்களை வெடிவைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

    கட்டிட இடிப்பு பணி மும்பையை சேர்ந்த எடிபைஸ் என்ஜினீயரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இரு கட்டிடங்களிலும் ஆங்காங்கே துளையிட்டு வெடிபொருட்களை நிரப்பும் பணி கடந்த 22-ந் தேதி முடிவடைந்தது.

    மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தூண்களில் 7 ஆயிரம் துளைகள் போடப்பட்டுள்ளது. பிரமாண்டமாக இரட்டை கோபுர கட்டிடங்களை இடிக்க 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், நீர்வீழ்ச்சி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த இரட்டை மாடி கட்டடம் தகர்க்கப்பட்டது. டெல்லி அருகே நொய்டாவில் இரட்டைக் கட்டங்கள் தகர்க்கப்பட்டதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

    ×