என் மலர்
அழகுக் குறிப்புகள்
- மென்மையான தாடிதான் எப்போதும் அழகு.
- தாடியை சீவுவதற்கென தனி சீப்பு வைத்துக்கொள்ளுங்கள்
இப்போதெல்லாம் 'கிளீன் ஷேவ்' செய்த ஆண்களை விட, தாடி வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறது. இதனால் ஆண்கள் பலர் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கஷ்டப்பட்டு வளர்க்கும் தாடியை, பராமரிக்க முடியாமல் பலர் திண்டாடுகின்றனர். அவர்களுக்காக தாடியை பராமரிக்கும் சில வழிமுறைகளை இங்கு தருகிறோம்..!
தாடி வளர்க்கப் போவதாக முடிவெடுத்து விட்டால், ஒரு வாரத்திற்கு தினமும் கிளீன் ஷேவ் செய்யுங்கள். பின்னர் தாடி வளர்த்தால், அழகாகவும், மென்மையாகவும் தாடி வளரும்.
தாடியை வளர்க்க எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அதே அளவுக்கு அதனை டிரிம் செய்யும்போதும் கவனம் செலுத்த வேண்டும். சற்று கவனம் சிதறினாலும் உங்களின் தாடி அஷ்ட கோணல் ஆகி விடும்.
மென்மையான தாடிதான் எப்போதும் அழகு. எனவே வாரத்திற்கு இரு முறை தாடிக்கு ஷாம்பு போடுங்கள். தாடிக்கென சில பிரத்யேக ஷாம்புகள் கடைகளில் விற்பனையாகிறது. அவற்றை தாடிக்கு பயன்படுத்தலாம்.
ஷாம்பு போட்டு தாடியை கழுவியதும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இது தாடியை மேலும் மென்மையாக்கும்.
தாடியை ஷாம்பு போட்டு கழுவும்போது, கவனமாக இருங்கள். நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவினால் மட்டுமே, ஷாம்பில் இருக்கும் வேதிப்பொருட்கள் தாடியில் தங்காமல் இருக்கும்.
தாடியை சீவுவதற்கென தனி சீப்பு வைத்துக்கொள்ளுங்கள். தலையில் பொடுகு இருக்கும் நபர்கள், தலைக்கு பயன்படுத்தும் சீப்பை தாடிக்கு பயன்படுத்த வேண்டாம்.
தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யை தாடிக்கும் தடவலாம். இதனால் தாடியில் இருக்கும் முடியின் வேர்கள் வலுவடையும். மேலும் தாடி பழுப்பு நிறத்தில் மாறுவதும் தவிர்க்கப்படும்.
- பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை.
- எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன.
அலுவலக மீட்டிங்கிற்கு தயாராகும் போது கவனிக்கவேண்டிய சில விஷயங்கள்:-
* மென்மையான சட்டை
அலுவலகத்தில் நடக்க இருக்கும் மீட்டிங்கிற்கு, மென்மையான நிற சட்டைகளை அணிந்து செல்வதுதான் நல்லது. கடுமையான நிறங்களை தவிர்க்கலாம்.
* பொருத்தமற்ற பேன்ட்கள்
பெரும்பாலான ஆண்கள் சரியான அளவில் பொருந்தும் பேன்ட்களை அணிவதில்லை. பேன்ட் மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருந்தால், அது முழுமையான தோற்றத்தை கெடுத்துவிடும். ஆண்களுக்கான பார்மல் பேன்ட்கள் இடுப்பு மற்றும் நீளத்திற்கு சரியாக பொருந்த வேண்டும்.
* காலணி
எந்தவொரு உடை அலங்காரத்தையும், காலணிகள்தான் முழுமையாக நிறைவு செய்கின்றன. அதனால் அலுவலக உடையை நிறைவு செய்ய, முறையான காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும். அலுவலக சந்திப்பு, கலந்துரையாடல் போன்றவற்றுக்கு பார்மல் காலணிகளை மட்டும் பயன்படுத்தலாம்.
* தேர்வு
அலுவலக சந்திப்பிற்கு சின்னசின்ன விஷயங்களும் ரொம்ப முக்கியம். குறிப்பாக பெல்ட், நேர்த்தியான கைக்கடிகாரம் மற்றும் பிரீமியம் கப்லிங்க்ஸ் போன்றவற்றை சரியாக தேர்ந்தெடுத்து அணியுங்கள்.
- ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது.
- காட்டன் துணியை ரோஸ்வாட்டரில் நனைத்து அதனை கண் கருவளையம் உள்ள பகுதியில் வைக்க வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் சரும அல்லது அழகு சார்ந்த பிரச்சனைகளில் கருவளையமும் ஒன்று. முன்பெல்லாம் பெரும்பாலான முதியவர்களுக்கு மட்டும் தான் கருவளையம் இருக்கும். ஆனால் தற்போது வயது வரம்பு இல்லாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் வந்து விடுகிறது.
கருவளையம் ஏற்பட காரணம்?
உடலில் மெலனின் அதிகமாக உற்பத்தி ஆகும் போது தான் கருவளையம் ஏற்படுகிறது. சில நேரங்களில் தோல் அழற்சி, நீரிழப்பு காரணமாகவும் கருவளையம் ஏற்படும்.
கருவளையம் வந்துவிட்டதே என்ன செய்யலாம் என்று அதற்கான தீர்வை தேடுவோம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கருவளையத்தை போக்குவதற்கான சிறந்த வழிகள் இதோ...

கற்றாழை ஜெல்
சரும பராமரிப்பில் கற்றாழைக்கு எப்போதும் முதல் இடம் தான். ஏனென்றால் சருமத்திற்கு மாய்ஸ்சரைசராக செயல்படும் கற்றாழையின் ஜெல் சருமத்திற்கு நீண்ட கால ஆரோக்கியத்தைத் தருகிறது. கற்றாழை ஜெல்லை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு அதை எடுத்து கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையம் இருக்கும் பகுதியில் தடவ வேண்டும். பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இவற்றை இரவு முழுவதும் வைத்திருப்பது சிறந்தது. கண்கள் குளிர்ச்சியாக இருப்பதுடன், நல்ல ஓய்வு கிடைக்கும். இவ்வாறு செய்து வர, கண்களின் கீழ் உள்ள கருவளையத்தை எளிதாக நீக்கி விடலாம்.
உருளை மற்றும் வெள்ளரி சாறு
உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளன. இவை சருமத்தில் உண்டாகும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது. உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை தனித்தனியே சிறிதளவு துருவி, அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையத்தில் தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவர கருவளையம் படிப்படியாக குறையும்.

ரோஸ்வாட்டர்
ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இது இறந்த செல்களை நீக்கி, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. காட்டன் துணியை ரோஸ்வாட்டரில் நனைத்து அதனை கண் கருவளையம் உள்ள பகுதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 15 – 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம். இதனைத் தினமும் தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் எளிதாக நீங்கி விடும்.
பால்
பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தின் கருமை நிறத்தை நீக்கி, கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையங்களையும் நீக்க உதவி செய்கிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் சத்துகள் சருமத்தை மாய்ஸ்சரைசராக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு காட்டன் பஞ்சு ஒன்றை பாலில் நனைத்து, அதனை கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவ வேண்டும். அதன்பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடலாம்.
- மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது.
- உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. வெயிலினால் ஏற்படும் பாதிப்பு ஒருபுறம் என்றால்
மறுபக்கம் தூசி, அழுக்கு, மண் துகள்கள் போன்றவை உங்கள் தோலின் துளைகளில் குவிந்து நாளாக நாளாக உங்கள் சருமத்தை உயிரற்றதாக மாற்றிவிடுகிறது.
பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுப்பது எப்படி என்று தெரியாமல் பலர் சருமத்தை பளபளக்க வைக்க பல வகையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேஸ் மாஸ்க், கிரீம், ஸ்க்ரப், ஃபேஸ் வாஷ் போன்றவை. பளபளப்பான சருமத்தைப் பெற பெண்கள் நிறைய பணம் செலவழிக்கிறார்கள், அவர்களில் சிலர் மட்டுமே தெளிவாக சரியான தயாரிப்புகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் சருமத்தை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று அறியாதவர்களாக உள்ளனர். அவர்ளுக்கான பயனுள்ள பதிவுதான் இது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்...
Facewash மூலம் முகத்தை கழுவவும்
முதலில் உங்களது சருமத்திற்கு பொருத்தமான ஃபேஸ் வாஷைத் தேர்ந்தெடுத்து நம்பகமான பிராண்டைப் பயன்படுத்த தொடங்குங்கள். காலையில் சருமத்தைப் பொலிவாக்கவும், மாலையில் மாசு தொடர்பான அழுக்குகளை அகற்றவும் உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவுவது நல்லது. அதிக ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் தோல் வறண்டு போகலாம்.

Cleanser மூலம் சுத்தப்படுத்துதல்
தோல் பராமரிப்பு வழக்கத்தில் சுத்தப்படுத்துதல் ஒரு முக்கியமான படியாகும். ஒருவருடைய சருமத்தின் வகையைப் பொறுத்து நல்ல க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வந்த பிறகு அல்லது இரவில் தூங்கும் முன், நீங்கள் தேர்ந்தெடுத்த க்ளென்சரைக் கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதோடு, மேக்கப்பை அகற்றவும் உதவும்.
TONER முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தம் செய்த பிறகு Toner-ஐ பயன்படுத்துவது அவசியம். Toner சருமத்தில் ஆழமாக ஊடுருவி, க்ளென்சரால் தவறவிட்ட மேக்கப் மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. கூடுதலாக, Toner சருமத்தின் pH அளவை சமப்படுத்த உதவுகிறது மற்றும் குளிர்ச்சியை அளிக்கிறது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற Toner என்னவென்று தெரியவில்லை என்றால் தோல் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின் உங்களுக்கான பிராண்டை உபயோகிக்கலாம்.
முகத்தை ஈரப்பதமாக வைத்திருத்தல்...
மாறிவரும் காலநிலை மற்றும் பல காரணங்களால், சருமத்தின் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், சருமத்திற்கு ஈரப்பதம் தேவை. எனவே, நீங்கள் ஃபேஸ் வாஷ், ஸ்க்ரப்பிங் அல்லது முகத்தை சுத்தம் செய்யும் போதெல்லாம், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் உள்ள தேன், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலானவற்றையும் மாய்ஸ்சரைசர்களாகப் பயன்படுத்தலாம்.
சன்ஸ்கிரீன் அவசியம்
கோடை வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க, பகலில் வெளியே செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். சன்ஸ்கிரீன் கோடையில் மட்டுமே அவசியம் என்று சிலர் நம்பினாலும், மழை மற்றும் குளிர்காலத்தில் கூட உங்கள் சருமத்திற்கு தேவையானது தான். ஒரு சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் தோல் வகைக்கு பொருத்தமான SPF-ஐத் தீர்மானிக்க தோல் மருத்துவரை அணுகுவது முக்கியமானது.
நைட் கிரீம் பயன்படுத்துதல்
நைட் க்ரீம் தோல் பராமரிப்பு வழக்கத்தின் இன்றியமையாத பகுதியாகும், ஏனெனில் இது சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. மேக்கப்பை நீக்கிவிட்டு, இரவில் உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்திய பிறகு சருமம் வறண்டு போகும், எனவே நைட் க்ரீமைப் பயன்படுத்துவது சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது.
நைட் க்ரீமை சிறிதளவு எடுத்து மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ற நைட் க்ரீமைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் அதைத் தடவுவது முக்கியம்.

தண்ணீர் குடிக்கவும்
உங்கள் உடல் எடைக்கு ஏற்றாற்போல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி, செல் மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நமது சருமத்தின் தோற்றம் மேம்படும். தண்ணீர் குடிப்பது உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும், இதனால் உங்கள் சருமம் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- வெள்ளரி சருமத்துக்கு மட்டுமல்ல கண்களுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள்.
- ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் முகத்தில் உஷ்ணத்தால் வரும் கட்டிகள் தடுக்கப்படும்.
வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. முகத்துக்கான பராமரிப்புக்கு என்று சொல்வதை விட சருமத்துக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், சருமம் வறட்சி ஆக ஆக முகத்தில் எரிச்சல் உண்டாகும். மேலும் பல பிரச்சனைகளையும் சந்திப்போம். வெயிலினால் உண்டாகும் பாதிப்பு ஒரு புறம் என்றால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்காமல் இன்னும் சருமம் பொலிவிழக்கக் கூடும். அதிகப்படியான உஷ்ணத்தை தாங்கக் கூடிய அளவுக்கு சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருந்தால் வெயிலில் சென்றாலும் கூட இந்த பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்பிக்க முடியும். அப்படி சருமத்திற்கு குளுமை தரக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று பார்க்கலாம்.
கற்றாழை
அழகிலும், ஆரோக்கியத்திலும் முக்கியத்துவமிக்க இது, இயற்கையின் அற்புத குணங்கள் நிரம்ப பெற்றது. கற்றாழையை சமீப வருடங்களாக கோடைக்கேற்ற பானமாக பயன்படுத்தி வருகிறார்கள். கற்றாழை எளிதில் கிடைக்க கூடியது மட்டுமின்றி விலை மலிவானதும் கூட. கற்றாழையின் சதை பகுதியை முகம், கழுத்து, கை, கால் பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி எடுங்கள். அதிகப்படியான வெயிலையும் தாங்கும் வல்லமை கற்றாழைக்கு உண்டு என்பதோடு எரிச்சலையும் தராது. சருமத்தை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.
வெள்ளரி
வெள்ளரி சருமத்துக்கு மட்டுமல்ல கண்களுக்கும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள். வெள்ளரியை அரைத்து முகம், கழுத்து பகுதியில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை ரோஸ் வாட்டர் கொண்டு கழுவி எடுங்கள். அப்படியே வெள்ளரி துண்டு இரண்டை வட்டமாக நறுக்கி கண்கள் மீது வைத்து ரிலாக்ஸாக இருங்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் முகத்தில் உஷ்ணத்தால் வரும் கட்டிகள் தடுக்கப்படும். பருக்கள் வராது. வியர்க்குரு பிரச்சினையும் இருக்காது. குளிப்பதற்கு முன் இதை உபயோகித்தால் முகத்துக்கு சோப் போடுவதை தவிர்த்துவிடுங்கள். வெயிலில் சென்றாலும் சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.
இளநீர்
உடல் உஷ்ணத்தை தவிர்க்கக்கூடிய இளநீர் கோடையில் முகத்துக்கும் குளிர்ச்சியை தரும். வெயிலில் சென்று திரும்பியதும் சுத்தமான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். பிறகு சுத்தமான பஞ்சில் இளநீரை நனைத்து முகத்தில் ஒற்றி எடுங்கள். குறைந்தது கால் மணி நேரம் இப்படி செய்து வந்தால் சரும துவாரங்களில் இருக்கும் அழுக்கு வெளியேறும். இளநீரில் இருக்கும் லாரிக் ஆசிட் சருமத்துக்கு தளர்வு தராது என்பதால் வயது முதிர்வும் கூட தள்ளி போகும்.
தயிர்
தினமும் குளிப்பதற்கு முன்பு முகத்தில் தயிர் தடவி பத்து நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் சருமம் வெயிலால் நிறம் மாறாது, பொலிவாக இருக்கும். தயிர் முகத்தில் இருக்கும் அழுக்கை வெளியேற்றக்கூடியது. கெட்டித்தயிருடன் சந்தனத்தூளை கலந்து பேக் போன்றும் கலந்து முகத்துக்கு பயன்படுத்தலாம். அல்லது ஆரஞ்சு தோலை பொடித்து வைத்தும் கலந்து பயன்படுத்தலாம். கோடையிலும் முகத்தில் ஒரு தனி மினுமினுப்பு கிடைக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினால் கூட சருமத்தை பத்திரமாக பாதுகாக்கலாம்.
உள்புறமும் கவனிப்பு தேவை
உடலில் நீர் வறட்சி குறைந்தால் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல அந்த பாதிப்பு சருமத்துக்கும் இருக்கும். அதனால் கோடை காலத்தில் தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இந்த காலத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக எண்ணெய் கொண்ட பொருள்கள், நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சிகள் போன்றவையும் உள்ளுறுப்புகளை பாதிப்பதோடு சருமத்திற்கும் பங்கம் விளைவித்துவிடும். உஷ்ணக்கட்டிகளை மேலும் பெரிதாக்கவும் செய்யும். இவைகளை தவிர்த்துவிட்டு, பழச்சாறுகள், பழங்கள், மோர், இளநீர், பழ சாலட், நீர்ச்சத்துமிக்க காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- செம்பருத்தி பாரம்பரியமாகவே உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடிக்கு ஏற்றது.
- ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கும் குல்கந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது.
தினசரி சருமமானது, வெளியுலக மாசுவை எதிர்கொள்கிறது. இது பல தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. முகப்பூச்சு பராமரிப்புகள் சருமத்தை குறிப்பிட்ட அளவு குணப்படுத்தும் என்றாலும் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையானது வீக்கத்தை உண்டு செய்யும். அது சருமத்தில் பிரதிபலிக்கலாம். உடலுக்கு உள்ளிருந்து ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் அது ஆரோக்கியமான சருமத்துக்கும் கூந்தலுக்கும் உதவும். அந்த வகையில் பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த நான்கு விதமான தேநீர் உதவும்.
செம்பருத்தி தேநீர்
செம்பருத்தி பாரம்பரியமாகவே உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடிக்கு ஏற்றது. குறிப்பாக கூந்தல் அழகுக்கு இது மூலப்பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பராமரிப்பு போன்று இது சருமத்துக்கும் நச்சு நீக்கும் மூலிகையாகவும் செயல்படுகிறது. நீரேற்ற பண்புகளை கொண்டுள்ளதால் இது தோல் வறட்சி, அரிப்பு பிரச்சினைகளை குறைக்கிறது. இதில் உள்ள கொலாஜன் தோலும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
டேண்டேலியன் தேநீர்
டேண்டேலியன் தேநீரை அற்புதமான மூலிகை என்று சொல்லலாம். இந்த மூலிகை தேநீரில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. இது வயதான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் நச்சுத் பொருட்களை வெளியேற்றுகிறது. இது சில வகையான செல் சேதத்தை தடுக்க உதவும். மேலும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல் சேதத்தை தவிர்க்கவும் துணை புரியும்.

ரோஜா தேநீர்
ரோஜா வாசனை மிக்க பூ. ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் நறுமணமிக்க பன்னீர் அழகுப்பராமரிப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கும் குல்கந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. சரும பராமரிப்பில் ரோஜாவுக்கு தனி இடம் உண்டு. இது சரும சுருக்கங்களை குறைத்து பொலிவாக வைத்திருக்க செய்யும். இந்த ரோஜா இதழ்களை தேநீராக்கி குடித்தால் சருமம் பளபளப்பதை நன்றாகவே பார்க்கலாம்.
மல்லிகை பூ தேநீர்
மல்லிகை தேநீரில் இருக்கும் இயற்கை எண்ணெய்கள் சருமத்தை புத்துயிர் பெறவும் நிறமிகளை சமன் செய்யவும் உதவுகிறது. சருமத்தில் மெல்லிய கோடுகளை குறைக்கவும் செய்கிறது. இந்த மல்லிகை தேநீரை தினமும் பருகிவருவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் செய்யும்.
- சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.
- இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.
கோடை காலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். சன்ஸ்கிரீன், பேஷியல், மாய்ச்சுரைசரிங் கிரீம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். இதில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் விஷயத்தில் நிறைய கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அவை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

கட்டுக்கதை:
மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை.
உண்மை:
சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மேகங்கள் வழியாகவும் ஊருடுவும் அபாரசக்தி படைத்தவை. அதனால் சூரியனே தெரியாத அளவுக்கு வெயிலே இல்லாமல் இருள் சூழ்ந்த காலநிலை நிலவினாலும் கூட சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாவிட்டால் பாதிப்புதான் ஏற்படும்.
முன்கூட்டியே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கும் வழிவகுத்துவிடும். அதனால் மேகமூட்டமான நாட்களிலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள மறக்காதீர்கள்.
கட்டுக்கதை:
கருமையான சரும நிறம் கொண்டவர்கள் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தேவையில்லை.
உண்மை:
மெலனின் என்னும் நிறமி கருமையான சருமத்திற்கு இயற்கையாகவே பாதுகாப்பு அளிக்கும் என்றாலும் சூரியனிடம் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது. எந்த நிற சருமம் கொண்டவர்களாக இருந்தாலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதிலும் கருமை நிற சருமம் கொண்டவர்கள் போதிய சரும பராமரிப்பை மேற்கொள்ளாவிட்டால் சரும எரிச்சல், கரும்புள்ளிகள் தோன்றுதல், சரும புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். எனவே ஒவ்வொருவரும் சரும நிறத்தை பொருட்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.

கட்டுக்கதை:
அதிக எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் நீண்ட நேரம் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.
உண்மை:
எஸ்.பி.எப் 50 கொண்ட சன்ஸ்கிரீன் 'சூப்பர் பவர்' போல் செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்தான். ஆனால் நாள் முழுவதும் வெயிலில் இருந்து பாதுகாப்பை வழங்காது. அதிக வியர்வை வெளிப்பட்டாலோ, நீச்சல் பயிற்சி மேற்கொண்டாலோ மீண்டும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது அவசியமானது.
குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.
கட்டுக்கதை:
முகத்தில் மட்டும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதும். மற்ற சரும பகுதிகளுக்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை.
உண்மை:
சன்ஸ்கிரீன் என்பது முகத்திற்கு மட்டுமே உபயோகிக்கக்கூடிய கிரீம் அல்ல. கழுத்து, காது, கை, கால்கள் என எல்லா பகுதிகளிலும் சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தின் எந்த பகுதிக்கும் பாகுபாடு காண்பிக்காது. ஆடை அணிந்த பிறகு மறைக்காத உடல் பாகங்கள் அனைத்திற்கும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை:
எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீன் உடன் ஒப்பனை அணிவது போதுமானது.
உண்மை:
மேக்கப்புடன் எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீனை பூசினால் மட்டும் போதாது. பெரும்பாலானோர் போதுமான அளவுக்கு ஒப்பனை மேற்கொள்வதில்லை. மேக்கப் செய்வதற்கு முன்பாக முதலில் பிராட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு மேக்கப் செய்து கொள்வது நல்லது.

கட்டுக்கதை:
சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் மட்டுமே போதுமானது.
உண்மை:
சன்ஸ்கிரீன் சிறந்ததுதான். ஆனால் அதுமட்டுமே சூரியனிடம் இருந்து பாதுகாப்பு தருவதற்கு ஏற்றதல்ல. சிறந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்திய பிறகு சன்கிளாஸ் அணிந்து கொள்ள வேண்டும்.
அதுபோல் அகலமான தொப்பி அணிந்து கொள்வதும், பருத்தி ஆடை உடுத்துவதும் அவசியமானது. சூரியனின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் நேரமான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
கோடை கால மாதங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- வறண்ட சருமம், ஜெரோசிஸ் அல்லது ஜெரோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது.
- உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
வறண்ட சருமம் என்பது தோல் வறட்சியாக கரடுமுரடாக, செதில்களாக உலர்ந்து காணப்படும் நிலையாகும். இந்த உலர்ந்த திட்டுகள் உருவாகும் இடம் நபருக்கு நபர் மாறுபடும். இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். வறண்ட சருமம், ஜெரோசிஸ் அல்லது ஜெரோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு வாழ்வியல் மருத்துவ காரணங்கள் உள்ளது.

தோல் பராமரிப்பு:
மனித உடல் செல்களின் அழிவை ஏற்படுத்தும் பொருட்களை செல்களில் இருந்து அகற்றி செல்களின் அழிவை தடுப்பவை ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும். வைட்டமின்களில் ஏ, சி, ஈ மற்றும் தாதுக்களில் செலினியம், துத்தநாகம், அமினோ அமிலங்களில் குளுட்டத்தயோன், எல் அர்ஜினின் போன்றவை மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஆகும். இவை உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் இளமையுடனும் நோய் அணுகாமல், தோல் வசீகரத்துடனும் திகழலாம்.
பாதாம், பிஸ்தா, வால்நட், அனைத்து வகை கைக்குத்தல் அரிசி, காளான்கள், கடல் சிப்பி, பூண்டு, பருப்பு, வாழைப் பழங்கள் போன்றவற்றில் செலினியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.

பூசணி விதை, காளான், கடல் சிப்பி, இறால், கோழி இறைச்சி, சாக்லெட், பருப்பு வகைகள், கொண்டைக் கடலை, பீன்ஸ், முந்திரிப் பருப்பு போன்ற உணவு வகைகளில் துத்தநாகம் சத்து நிறைந்துள்ளது.
கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பசலைக் கீரை, பால் ஏடு, முலாம் பழம், முட்டை, மத்திச்சாளை மீன்கள், பப்பாளி, பிரக்கோலி, மாம்பழம், பச்சைப் பட்டாணி, முருங்கைக் கீரை, ஆரஞ்சு போன்ற உணவு வகைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
தோலை பராமரிப்பதற்கு சத்தான உணவுகள் மட்டும் அல்லாது, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மன உளைச்சல், மன அழுத்தம் கூடாது. தினமும் ஆறு முதல் ஏழு மணிநேரம் தூக்கம் அவசியம். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

1) தோல் வறட்சி நீங்கி பளபளப்புடன், வாசனையுடன் திகழ நலுங்குமா பயன்படுத்த வேண்டும். நலுங்குமா தயாரிக்கும் முறை: பாசிப்பயறு, வெட்டி வேர், சந்தனத் தூள், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சு வேர், கிச்சிலிக் கிழங்கு ஆகிய இந்த ஏழு பொருட்களையும் சம அளவில் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை சோப்பிற்கு பதிலாக தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி, சொறி, சிரங்கு நீங்கி, தோல் பளபளப்புடன் வாசனையுடன் இருக்கும்.
2) தோல் சொரசொரப்புடன் காணப்பட்டால், அருகம்புல் சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, அதை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தோலில் தேய்த்து பின்பு குளித்து வந்தால் தோல் வறட்சிகள் நீங்கிவிடும்.
3) ஆவாரம் பூ தோல் வறட்சி, வியர்வை நாற்றத்தை நீக்குகிறது. ஆவாரம் பூ பொடி காலை, இரவு 500 மி.கி. வீதம் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளக்கும். இதை நலுங்குமா பொடியிலும் சேர்த்து குளியல் பொடியாக பயன்படுத்தலாம்.
4) பி.எச் 5.5 அளவுள்ள குளியல் சோப்புகளை பயன்படுத்தினால் தோல் வறட்சி, சொர சொரப்பு இருக்காது.
5) தேங்காய்ப் பால் சிறிதளவு எடுத்து அதனுடன் குங்குமப் பூ சேர்த்துக் காய்ச்சி, உடலில் தேய்த்து மாலை வெயிலில் சிறிது நேரம் காய்ந்து, பிறகு குளித்து வந்தால் உடல் மேன்மை அடையும். தோல் பளபளப்பாகும். தோல் நல்ல வனப்புடன் இருக்க தேங்காய்ப் பாலில் காய்ச்சிய விர்ஜின் தேங்காய் எண்ணெய்யை உடலில் தடவி ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும்.
- புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும்.
- காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
அழகிய மற்றும் ஆரோக்கியமான நகங்கள், விரல்களுக்கு கிரீடங்களாக விளங்குகின்றன. நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசி அலங்கரிப்பது இளம் பெண்கள் பலருக்கு பிடிக்கும். அதேசமயம், நீண்ட நகங்கள் வளர்ப்பது அனைவராலும் இயலாத காரியம். ஆசையாக வளர்க்கும் நகங்கள் சீக்கிரமாகவே உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும். அது குறித்து தெரிந்துகொள்வோம்.
* நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வையுங்கள். பின்பு, பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும்.
* அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.

* ஆலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும்.
* நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் 'நகச்சுற்று' போன்ற பிரச்சனைகளையும் இது குணப்படுத்தும். எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.
* 'கியூட்டிக்கிள்' எனப்படும் நகங்களின் வேர்ப்பகுதியை காக்க, அதனை வறட்சி அடையாமல் பராமரிப்பது அவசியம். இதற்காக நகங்களைச் சுற்றிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வரலாம்.
* புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும். இதற்காக காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
* ரசாயனம் நிறைந்த நெயில் பாலீஷ் ரிமூவர்கள் நகங்களின் வளர்ச்சியை குறைப்பதோடு, அவற்றை வலிமை இழக்கச் செய்து எளிதில் உடைவதற்கு காரணமாகிவிடும். இயற்கையான முறையில் நகப்பூச்சை நீக்குவது நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
- பச்சை இலை மற்றும் காய்கறிகளில் சருமத்திற்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.
- கீரையை நீங்கள் கூட்டாகவோ அல்லது உங்களுக்கு பிடித்த வடிவிலோ தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
சரும அழகை பாதுகாப்பதில், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை முறையில் முக பொலிவை கூட்டவும், ஸ்கின் டோனை அதிகரிக்கவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளே வழிவகுக்கின்றன. 'பேஸ் கிரீம்'களில் அதிகம் நிரம்பி இருப்பதும், இவையே.
இந்நிலையில், பேஸ் கிரீம்கள் இல்லாமல் ஒரு சில உணவு வகைகளிலும், இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்திருக்கின்றன. அத்தகைய உணவுகளை உட்கொள்வதன் மூலமும் முகப்பொலிவை கூட்டலாம். அத்தகைய உணவு வகைகளை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
* புரோக்கோலி
புரோக்கோலியில் லுடீன், ஜிக்ஸாந்தின் போன்ற கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. இந்த புரோக்கோலி ஆண்டு முழுவதும் கிடைக்கும். இதனை பல்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்த புரோக்கோலி உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அதை டிக்கா வடிவில் கூட சாப்பிடலாம்.
* கிட்னி பீன்ஸ் (ராஜ்மா)
ராஜ்மா என்று அழைக்கப்படும் இந்த கிட்னி வடிவ பீன்ஸில், புரதங்களும், அதிக ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன. இவை முகப் பொலிவிற்கு வழிவகுப்பதோடு, முகப்பருக்களை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்திய உணவில் ராஜ்மா மசாலா முக்கியமானது. இதனை சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்கு 'சைட் டிஷ்'ஷாக எடுத்துக் கொள்ளலாம்.
* கீரை
கீரை ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்தது மட்டுமின்றி ஊட்டச்சத்து மிக்கது என்பது பலரும் அறிந்த உண்மை. பச்சை இலை மற்றும் காய்கறிகளில் சருமத்திற்கு தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரசாயன கிரீம்கள் இல்லாமல் இயற்கையாகவே சருமத்தை பராமரிக்க முடியும். கீரையை நீங்கள் கூட்டாகவோ அல்லது உங்களுக்கு பிடித்த வடிவிலோ தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
* தக்காளி
பழ வகையைச் சேர்ந்த தக்காளி சமையலில் நிச்சயம் இடம் பெறும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும். தக்காளி ஆன்டி ஆக்ஸிடென்டுகளின் சிறந்த ஆதாரமாகும். தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுடன் சரும அழகை மேம்படுத்த நினைத்தால் அதற்கு 'பெஸ்ட்' உணவு தக்காளி குழம்பு தான்.
* ஊதா முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். குறிப்பாக ஊதா நிற முட்டைக்கோஸ் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரமாகும். இதில், வைட்டமின் சி நிரம்பியுள்ளது. முட்டைக்கோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தசை வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, சரும பொலிவை மேம்படுத்தவும் துணைபுரிகிறது.
* உருளைக்கிழங்கு
இந்தியர்களின் மிக விருப்பமான காய்கறிகளில் உருளைக்கிழங்குக்கு முதலிடம் உண்டு. உருளைக்கிழங்குகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற கலவைகள் உள்ளன. மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிக அளவில் நிறைந்து உள்ளதால் சரும அழகை பாதுகாக்கும்.
- தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும்.
- உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
புழுவெட்டு (அலோபேசியா) என்பது 'தன்னுடல் எதிர்ப்பு வகை நோய்' ஆகும். இது தலை அல்லது உடலின் எந்த பாகத்தையும் பாதிக்கலாம். குறிப்பாக ஆண்களுக்கு மீசை, தாடி பகுதிகளிலும் ஏற்படும்.

புழுவெட்டு என்பது முடிகள் முழுவதும் உதிர்ந்து வட்ட வடிவமான வழுக்கைத் திட்டுகள் தலை, தாடி, மீசை, புருவங்களில் ஏற்படுவது ஆகும். அந்த இடம் வழவழப்பாக இருக்கும். முடிகள் உதிர்வதற்கு முன் தோலில் அரிப்பு அல்லது வலி ஏற்பட்டு திடீரென முடி உதிர்தலை ஏற்படுத்தி வழுக்கையை உருவாக்குகிறது.
ஆனால் இது தற்காலிகமானது ஆகும். பூஞ்சைகளால் ஏற்படும் வழுக்கை திட்டுகளில், கடுமையான அரிப்பு, முடி உதிர்தல், உடைந்த முடி, வெண்நிற சிறு துகள்கள் உதிரல், அந்த இடம் சிவத்தல், வீக்கம் மற்றும் சில நேரங்களில் கசிவுடன் காணப்படும்.

தலைமுடி பாதுகாப்பு வழிமுறைகள்:
பரந்த பல் கொண்ட சீப்பு வைத்து தலைமுடியை மென்மையாக சீவ வேண்டும். தலைமுடி ஈரமாக இருக்கும் போது, துவட்டுவதற்கு மெல்லிய துண்டுகளை பயன்படுத்த வேண்டும். தலைமுடியைப் பாதுகாக்க உச்சி வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்க கூடாது.

வயதாகும் போது தலை முடியின் வேர்கள் பலவீனம் அடைவது, நீரிழிவு மற்றும் லூபஸ் போன்ற சில உடல் பாதிப்புகள், மன அழுத்தம், குடும்ப பாரம்பரியத்தில் தாய்-தந்தை வகையில் வழுக்கை இருத்தல் போன்றவை முடி உதிர்வதற்கு காரணமாகிறது.
- தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம்.
- கொலாஜன் என்பது சருமத்திற்கு மிகவும் முக்கியமான புரதம்.
என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை ஆகும். சிலர் தோல் சுருங்கி முதுமை தெரியக்கூடாது எனவும் உடல் வலிமை குறைந்துவிடக்கூடாது எனவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
நாம் வயதாகும் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நம்மை வழிநடத்திக் கொள்வது மிக மிக முக்கியமாகும். வாழ்க்கையில் முதுமை என்பதே இல்லாமல் இளமை மட்டுமே இருக்க வேண்டும் என்றால் அது நடக்காது. ஆனால் முதுமையிலும் இளமையாக காட்சியளிக்க முடியும்.
வயது அதிகரித்ததே தெரியாமல் முதுமை தோற்றத்தை மெதுவாக்கி இளமையோடு காட்சியளிக்க சில வழிகள் உள்ளன.
சிறந்த உடல் செயல்பாடு, சுறுசுறுப்பான ஈடுபாடு, இளமையான தோற்றம் என்பதே அனைவரின் ஆசை.

உடற்பயிற்சி
தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்பவர்கள் இதய நோயில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவலி குறைவது மட்டுமல்லாது மன ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
வயதான அறிகுறிகளை குறைக்க உதவும் முக்கிய செயல்முறைகள்:
* தினசரி காலையில் 5-6 பாதாம், 2 வால்நட்ஸ்களை தொடர்ந்து சாப்பிடுங்கள். இது உடலுக்கு வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு வழங்க வழிவகைச் செய்யும்.

* காலை உணவில் கோகோ ஸ்மூத்தியைக் குடிக்கவும், இது உடலுக்கு ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும்.
* கோகோவில் ஏராளமான ஃபிளாவனாய்டுகள் இருப்பதால், அதில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
* இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், 5 சொட்டு ஆளிவிதை எண்ணெயை எடுத்து, அதைக்கொண்டு முகத்தை மசாஜ் செய்யவும். இது சருமத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

* உங்கள் உணவில் கொலாஜன் சப்ளிமெண்ட்களை சேர்க்கவும். கொலாஜன் என்பது சருமத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு புரதமாகும்.
* சருமத்திற்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க பாஸ்த்ரிகா பிராணயாமா பயிற்சி செய்யுங்கள்.
* ஒரு டம்ளர் எலுமிச்சை நீரில் 1 டீஸ்பூன் சியா விதைகளை சேர்த்து உட்கொள்ளுங்கள். இது உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும்.
* ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். மேலும், தசைகளை பராமரிக்க, 2-3 மணி நேரம் வலிமை பயிற்சி செய்யுங்கள்.
* நீர்ச்சத்துடன் இருங்கள் மற்றும் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். அதனால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற முடியும்.






