search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தூய சிந்தாத்திரை மாதா ஆலய திருவிழாவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சிந்தாத்திரை மாதா பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார்.
    தொண்டியில் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10-நாட்கள் நடைபெற்றது. இதனையொட்டி ஆலயத்தில் தினமும் நவநாள் திருப்பலி மறையுரை மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற ஆடம்பர கூட்டுத் திருப்பலியை அருட்தந்தை மதுரை ஆனந்தம் தலைமையில் தொண்டி சிந்தாத்திரை மாதா ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து முன்னிலையில் அருட்தந்தையர்கள் செக்காலை எட்வின் ராயன், ஆவுடைப்பொய்கை ராஜ மாணிக்கம், காரங்காடு அருள் ஜீவா, ஏ.ஆர்.மங்கலம் அன்பரசு, திருவெற்றியூர் லாரன்ஸ், சூராணம் உதவிப் பங்கு தந்தை மெக்கன்ரோ ஆகியோர் நிறைவேற்றினர்.

    அதனை தொடர்ந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சிந்தாத்திரை மாதா பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். நேற்று காலை திருவிழா நிறைவாக திருவிழா திருப்பலி அருட்தந்தை இருதயராஜ் தலைமையில் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து கொடியிறக்கமும் இதனையொட்டி புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    ஆலய திருவிழாவில் ஐக்கிய ஜமாத், இந்து தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள், அமலவை அருட் சகோதரிகள் சபையின் மாநில தலைவி லீமாரோஸ், சிவகங்கை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்தந்தை சூசை மாணிக்கம் மற்றும் அருட்தந்தையர்கள், அமலவை அருட் சகோதரிகள், பங்கு நிர்வாகக் குழுவினர், இறைமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இதனையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை தொண்டி பங்குத்தந்தை சவரிமுத்து மற்றும் பங்கு நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.
    சென்னை எண்ணூர் கத்தி வாக்கத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) ஆண்டு பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது.
    சென்னை எண்ணூர் கத்தி வாக்கத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் ஏப்ரல், மே மாதங்களில் ஆண்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பெருவிழா கொண்டாட்டங்கள் கடந்த மாதம் 28ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக கொண்டாடப்பட்டு சிறப்பு ஜெபம் மற்றும் திருப்பலிகள் நடத்தப்பட்டன.

    கடந்த மாதம் 29ந்தேதி ஆசிரியர் தினம், 30ந்தேதி தம்பதியர் தினம் கொண்டாடப்பட்டது. மே 1ந்தேதி உழைப்பாளர் தினமாக விழா நடத்தப் பட்டது. 2ந்தேதி உபகாரிகள் தினமாக கொண்டாடப்பட்டது. 3ந்தேதி நலம் நாடுவோர் தினம், 4ந்தேதி இளையோர் தினமாக விழாக்கள் நடத்தப்பட்டன.

    நேற்று மாலை தேவ அழைத்தல் தினம் கொண்டாடப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நற்கருணை தினம் கொண்டாடப்படுகிறது. பங்கு தந்தை ஜேக்கப் மாசிலாமணி விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

    இன்று (சனிக்கிழமை) ஆண்டு பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு திருவொற்றியூர் பங்கு தந்தை ராக் சின்னப்பா தலைமை தாங்குகிறார்.

    8ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் திருவள்ளூர் பங்கு தந்தை கிளமெண்ட் பாலா பங்கேற்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஜேக்கப் ஆல்பர்ட் செய்துள்ளார்.
    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரத்தில் பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்படும்.
    தஞ்சை மாவட்டத்தில் பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன் மற்றும்உதவி பங்குத்தந்தையர்கள், அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரத்தில் பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்படும். பூண்டி மாதா பேராலய திருவிழா நாளான வருகிற 14-ந்தேதி நடைபெறும் பெரிய தேர்பவனியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தொடங்கி வைக்கிறார்.

    15-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அன்று மாலை கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறும். விழாவையொட்டி பேராலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கொடியேற்றத்தில் கலந்துகொண்டனர்.

    விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
    விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48-வது ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசு கிறிஸ்துவின் பாடல்களை பாடியபடி கொடியை பவனியாக எடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் கோணாங்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை திருத்தல அதிபர் தேவசகாயராஜ் கொடியை ஏற்றினார். அப்போது கூடியிருந்த கிறிஸ்தவர்கள் மலர் தூவி வழிபட்டனர். தொடர்ந்து பாத்திமா அன்னை ஆலய பங்குதந்தை பால்ராஜ் குமார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

    பெருவிழாவையொட்டி வருகிற 12-ந்தேதி வரை சிறிய தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து 14-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    புனித செபஸ்தியார் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்துகொண்ட திருவிழா கூட்டு ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    மணிகண்டம் அருகே மேக்குடி ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    முன்னதாக புனித செபஸ்தியார் உள்ளிட்ட 3 சொரூபங்கள் பொருத்தப்பட்ட வண்ண மலர் தோரணங்கள், மின் விளக்குகளின் அலங்காரத்துடன் கூடிய 3 தேர்களை நாகமங்கலம் பங்குத்தந்தை ஜெயராஜ் அர்ச்சித்து வைத்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். தேர்கள் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, நேற்று அதிகாலை நிலையை அடைந்தது.

    விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்துகொண்ட திருவிழா கூட்டு ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இதில் மேக்குடி, ஆலம்பட்டி, மணிகண்டம், நாகமங்கலம், பாத்திமாநகர், ஆவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மணிகண்டம் போலீசார் செய்திருந்தனர்.
    கிறிஸ்தவத்தை தழுவிய பின்னர் தேவசகாயமும், அவரது மனைவியும் ஏழைகளின் வாழ்வு முன்னேறவும், சாதிய கொடுமைகளை கண்டித்தும், மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.
    உலகம் முழுவதும் கிறிஸ்தவ மறைபரப்பு பணியில் ஈடுபடுவோர், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி உலக மக்களின் நன்மைக்காகவும் பாடுபட்டனர்.

    இறப்பிற்கு பிறகும் அவர்கள் மக்களின் மனதில் இடம்பிடித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வந்தனர். அந்த வகையில் மக்களால் பெரிதும் போற்றப்படும் நபர்களுக்கு உலக கத்தோலிக்கர்களின் தலைமையகமான வாடிகன், புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கும்.

    இந்த பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படும். அந்த நடைமுறைகளுக்கு பிறகு போப்பாண்டவர் இந்த பட்டத்தை வழங்குவார்.

    அந்த வகையில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மக்கள் பணியாற்றிய அன்னை தெரசா, கேரளாவில் கன்னியாஸ்திரியாக இருந்து மறைந்த அல்போன்சம்மாள் ஆகியோருக்கு ஏற்கனவே புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயத்திற்கு வருகிற 15ந்தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

    தேவசகாயம், கன்னியா குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 23.4.1712-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் நீலகண்டன். தமிழ், மலையாளம், வடமொழிகளை கற்ற நீலகண்டன், சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், அம்பு எய்தல், அடி முறைகள் ஆகியவற்றையும் கற்று தேர்ந்தார்.

    ஆயுத பயிற்சியும், போர் பயிற்சியும் பெற்ற நீலகண்டன், திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மா படையில் வீரராகவும் இருந்தார். அப்போது அவருக்கு திருமணமும் நடந்தது.

    அதன்பின்பு நீலகண்டனை தனது அரசவை அலுவலராக மன்னர் நியமித்தார். அப்போது நடந்த குளச்சல் போரில் டச்சு படைதளபதியாக இருந்த டிலனாய் என்பவரை மன்னர் மார்த்தாண்ட வர்மா சிறைபிடித்தார்.

    கத்தோலிக்கரான டிலனாய், சிறைக் கைதியாக இருந்தாலும் மன்னரின் அன்பை பெற்றதால் அவரது படைதளபதியாக நியமிக்கபட்டார்.

    அப்போது டிலனாயுடன் நீல கண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நீலகண்டன் தொடர் பணிகளால் துயருறும் போது டிலனாய் அவருக்கு ஆறுதல் கூறினார். அதோடு ஏசுவின் போதனைகளையும் அவருக்கு எடுத்து கூறினார். இதனை கேட்க, கேட்க நீலகண்டன் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அவர் கிறிஸ்தவத்தை தழுவ முடிவு செய்தார்.

    அதன்படி 1745ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் இப்போதைய நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தில் நீலகண்டன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மதம் மாறினார். அதன்பிறகு அவரது பெயர் தேவசகாயம் என அழைக்கப்பட்டது அவரது மனைவியும் பெயரை ஞானப்பூ என மாற்றி கொண்டார்.

    கிறிஸ்தவத்தை தழுவிய பின்னர் தேவசகாயமும், அவரது மனைவியும் ஏழைகளின் வாழ்வு முன்னேறவும், சாதிய கொடுமைகளை கண்டித்தும், மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.

    தேவசகாயத்தின் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த மன்னர் தரப்பினர் அவரை அழிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவரது பதவிகள் பறிக்கப்பட்டன. 1749ம் ஆண்டு தேவசகாயம் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் அவரை கொன்று விட முடிவு செய்து ஊர், ஊராக அழைத்து செல்லப்பட்டார். 1752ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந்தேதி ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலைக்கு அவரை அழைத்து சென்ற வீரர்கள் அங்கு வைத்து அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். தேவசகாயத்தின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்தது. பின்னர் அவரது உடலை வீரர்கள் பாறையில் இருந்து உருட்டி விட்டனர்.

    தேவசகாயத்தின் உடலில் எஞ்சிய பாகங்களை கண்டுபிடித்து சேகரித்த கிறிஸ்தவர்கள், அதனை கோட்டார் சவேரியார் பேராலயத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஆலய பீடத்தின் முன்பு அவை அடக்கம் செய்யப்பட்டது.

    மறைந்தாலும் அவர் தன்னை தேடி வரும் மக்களின் இன்னல் போக்க இறைவனிடம் வேண்டி அவர்கள் கேட்ட வரங்களை பெற்று கொடுத்தார். இதனால் தேவசகாயம் புகழும், அவரது புதுமைகளும் பலராலும் பரவசத்துடன் பேசப்பட்டது.

    அன்று முதல் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று போப்பாண்டவருக்கு கோரிக்கை விடப்பட்டது. அதன்படி முதலில் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட தேவசகாயம், வருகிற 15ந் தேதி வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நடக்கும் விழாவில் புனிதராக அறிவிக்கப்பட உள்ளார்.

    இந்தியாவில் இருந்து இதுவரை புனிதராக அறிவிக்கப்பட்ட யாரும் இல்லற வாழ்வில் ஈடுபட்டு புனிதர் பட்டம் பெறவில்லை.

    ஆனால் தேவசகயாம் மட்டும் குடும்ப வாழ்வில் இருந்து இறைப்பணிக்கு திரும்பி இப்போது புனிதராகவும் உயர்த்தப்பட்டு உள்ளார். இதனால் அவர் இந்தியாவின் முதல் இல்லற புனிதர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    தேவசகாயம் புனிதர்பட்டம் பெற்றமைக்கான நன்றி பெருவிழா வருகிற ஜுன் மாதம் 5-ந்தேதி அவர் கொல்லப்பட்ட காற்றாடி மலையில் வைத்து நடக்க உள்ளது.

    இந்த விழாவில் கர்டினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    இதையும் படிக்கலாம்...குபேரனுக்கு விரதம் இருந்து யந்திர வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள்
    சங்கராபுரம் அருகே புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர் பவனி நடைபெறவில்லை.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக பங்குதந்தை சகாயசெல்வராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் காவல் சம்மனசு, சூசையப்பர், அந்தோணியார், புனித அடைக்கல அன்னை, புனித ஜெபஸ்தியார் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் விரியூர், பழையனூர், சோழம்பட்டு, அருளம்பாடி, மைக்கே ல்புரம், சவேரியார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    பணகுடி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு திருநாளிலும் காலை பாடல் திருப்பலி, மாலை மறையுரை, நற்கருணை ஆசீர், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    8-ம் திருவிழா அன்று மாலை நற்கருணை பவனியும், 9-ம் திருவிழா அன்று இரவு 10 மணிக்கு தேர்பவனியும், சிறப்பு மாலை ஆராதனையும் நடந்தது. 10-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு ஆடம்பர பாடல் திருப்பலி, மதியம் தேர்ப்பவனி நடந்தது.

    மாலை 6.30 மணிக்கு தேர் ஆலய வளாகம் வந்தது. அதன் பின்னர் தேரில் வைத்து சிறப்பு நற்கருணை ஆசீர் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புனித சூசையப்பர் ஆலய பங்குகுரு இருதயராஜ், ஊர் தலைவர் ஸ்ரீதர் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.
    ரோமில் வருகிற 15-ந்தேதி மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்குகிறார் என கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தெரிவித்தார்.
    கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை  நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மண் பேறுபெற்றதாகும். இந்த மண்ணில் பிறந்த ஆன்றோர்கள் பலர் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றுள்ளார்கள். நலவாழ்வுக்குத் தமிழ் மருத்துவம் தந்த அகத்தியமுனி, செவ்விய தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், நான்மறையால் நானில மக்களுக்குப் பொய்மொழி பகர்ந்த அய்யன் திருவள்ளுவர், நெறிகள் கூறும் வெண்பாக்களால் வாழும் கலை சொன்ன முதலாம் அவ்வையார், அன்னியனை எதிர்த்து நின்று போராடிய மாவீரன் வேலுத்தம்பி தளவாய், சாதிக் கொடுமையை எதிர்த்து மனிதமே தெய்வம் எனச் சொல்லி அய்யா வழி தந்த வைகுண்டர், அல்லாவின் நெறி தன்னை எல்லார்க்கும் சொன்ன செய்குத் தம்பி பாவலர், தம் சிரிப்பு நடிப்பால் சிந்தனைக்கு வளம் தந்த என்.எஸ். கிருஷ்ணன், தொழிலாளர் உரிமையே நாட்டுக்கு உண்மைச் சுதந்திரம் என்று முழங்கிய ஜீவா என்ற ஜீவானந்தம், முக்கடல் சூழ்ந்த குமரியைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடி வெற்றியும் கண்ட மார்ஷல் நேசமணி.

    இப்படி எண்ணற்ற பெரியோரில் இன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார் மறைசாட்சி தேவசகாயம்.கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். கொரோனா பெருந்தொற்று காரணமாக புனிதர் பட்ட விழாவுக்கான நாள் குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் மறைசாட்சி தேவசகாயத்துக்கு ரோமில் வருகிற 15-ந் தேதி போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட விழா நடக்கிறது.

    இதையொட்டி அதற்கு முந்தைய நாளான 14-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை ரோமில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் நன்றி ஆராதனையும், மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டமும் நடக்கிறது. மறுநாள் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செயின்ட் பீட்டர் பேராலய சதுக்கத்தில் காலை 7 மணிக்கு புனிதர் பட்ட விழா நிகழ்வுகள் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில்) போப் ஆண்டவர் பிரான்சிஸ், மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்கள் மூலமாக 495 பேர் ரோமுக்கு செல்கிறார்கள். இதுதவிர தனியாகவும் பலர் செல்கிறார்கள். இந்தியாவில் இருந்து போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி, கர்தினால்கள் அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பை பேராயருமான ஆஸ்வால்டு கிராசியஸ், சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர் கிளீமிஸ் ஆகியோரும், கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களின் சார்பில் நாங்களும் கலந்து கொள்கிறோம். இந்தியாவைச் சேர்ந்த 50 அல்லது 60 பேராயர்கள், ஆயர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மத்திய அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பார்லா கலந்து கொள்கிறார். இந்த புனிதர் பட்ட நிகழ்வையொட்டி கோட்டார் மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் 12, 13, 14-ந் தேதிகளில் சிறப்பு வழிபாடு, சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.

    புனிதர் பட்டம் பெறும் மறைசாட்சி தேவசகாயம், தமிழகத்தின் முதல் புனிதர் ஆவார். இந்தியாவின் முதல் இல்லறப் புனிதர் என்னும் நிலையை நம்முள் ஒருவர் அடைந்துள்ள நிகழ்வைக் கொண்டாடும் வண்ணமும், மாபெரும் புனிதர் தேவசகாயத்தின் “நம்பிக்கையில் உறுதி, வாழ்வுமறையில் சமத்துவம்” என்னும் செய்தி எல்லா மக்களுக்கும் சென்றடையவும் அகில இந்திய அளவில் மாபெரும் விழா கோட்டார் மற்றும் குழித்துறை மறைமாவட்டங்கள் சார்பில் நடைபெற இருக்கிறது.

    இந்த விழா அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி மறைசாட்சி தேவசகாயம் கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு ஆன்றோர்கள் வரவேற்கப்படுவார்கள். 5 மணிக்கு ஆடம்பரத் திருப்பலி நடைபெறும். இரவு 7.30 மணிக்கு இந்த விழா மற்றும் திருப்பலி நிறைவு பெறும்.

    இதற்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமை தாங்குகிறார். கர்தினால்கள் ஆஸ்வால்டு கிராசியஸ், ஜார்ஜ் ஆலஞ்சேரி, கோவா- டாமன் பேராயரும், கிழக்கிந்திய திருச்சபையின் பெருந்தந்தையுமான பிலிப்நேரி பெர்றாவோ, தமிழக ஆயர் பேரவை தலைவரும், சென்னை- மயிலை பேராயருமான ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி, கோட்டார் மறைமாவட்ட ஆயரான நான் (நசரேன்சூசை), தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் மற்றும் இந்திய திருச்சபையின் பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர், இறைமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக பலசமய தலைவர்கள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விழாவுக்காக காற்றாடிமலை அருகில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. 1 லட்சம் மக்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காற்றாடி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு

    இவ்வாறு ஆயர் நசரேன் சூசை கூறினார்.

    பேட்டியின்போது குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசுரத்தினம், விழா ஒருங்கிணைப்பாளர் ஜான் குழந்தை, குழித்துறை மறைமாவட்ட வரவேற்புக்குழு தலைவர் மரிய வின்சென்ட், கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிளாரியஸ், மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல்ராஜ், பொருளாளர் அலோசியஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதையும் படிக்கலாம்...அட்சய திருதியை: இன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம்
    கள்ளப்பெரம்பூர் புனித உபகார அன்னை ஆலய தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூரில்  புனித உபகார அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடப்பது வழக்கம். விழாவில் 3 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டு கிராம தெருக்களில் வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடையும்.  இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கடந்த 28-ந் தேதி மாலை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    நேற்று இரவு தேரோட்டம் நடந்தது. விழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நேற்று காலை அதிகாரிகள் கள்ளப்பெரம்பூருக்கு சென்று தேர்களை பார்வையிட்டனர். பின்னர் தேரில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். தேரில் தீயணைப்பு கருவி அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    கடந்த 27-ந் தேதி தஞ்சை அருகே களிமேட்டில் நடந்த தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் அதிகாரிகள் கள்ளப்பெரம்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. தேரோட்டத்தின் போது கள்ளப்பெரம்பூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    காரைக்கால் செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழாவில் 5 தேர்கள் பவனி சென்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு வீதி தருமபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுத்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று  இரவு 5 தேர் பவனி நடைபெற்றது. காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மின்விளக்கு அலங்காரத்தில் 5 தேர்கள் ஒரே நேரத்தில் பவனி சென்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலய திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நேற்று நடந்தது. முன்னதாக காலை சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தொடர்ந்து மாலை கடலூர்-புதுச்சேரி மறைமாவட்ட ஆயர் பிரான்சிஸ் காலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடந்தது. ஆலயத்தில் இருந்து தொடங்கிய இந்த தேர்பவனி, கணுவாப்பேட்டை சாலை, மார்க்கெட் வீதி வழியாக மீண்டும் ஆலயத்துக்கு வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் புனித லூர்து அன்னை மாதா ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையில் பலர் செய்திருந்தனர்.
    ×