என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. 

    இசையமைப்பாளர் அனிருத்துடன், கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் இருவரும் நண்பர்கள்தான், அவர்களிடையே காதல் இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தார்கள். பின்னர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபருடன், கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாக தகவல் பரவியது. 

    கீர்த்தி சுரேஷ்

    இதனையும் மறுத்த கீர்த்தி சுரேஷ், தனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார். இருப்பினும் அவர் குறித்து தொடர்ந்து திருமண வதந்திகள் பரவி வருகின்றன. 

    இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: “எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது” என்றார்.
    சந்தோஷ் சரவணன், அஸ்வினி, நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் பா.பாண்டியன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கால் டாக்ஸி படத்தின் விமர்சனம்.
    நகரத்தில் பல இடங்களில் கால் டாக்ஸி டிரைவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களது கார்கள் திருடு போகிறது. கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் சந்தோஷ் சரவணனின் சக தோழர்களே ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். இதனால் கால் டாக்ஸி ஓட்டுவதற்கே அச்சம் ஏற்படுகிறது.

    இதில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பலை கண்டுபிடித்து பழிவாங்க சந்தோஷ் சரவணன் முயல்கிறார். அவரது முயற்சி வெற்றி அடைந்ததா? மர்ம கும்பல் பிடிபட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கால் டாக்ஸி விமர்சனம்

    நாயகன் சந்தோஷ் சரவணன், தமிழ் சினிமாவிற்கு நல்ல அறிமுகம். ஆக்‌ஷன், உணர்வுபூர்வமான காட்சிகளில் நன்றாக நடிப்பவருக்கு, காதல் காட்சிகளில் நடிக்க மட்டும் பயிற்சி தேவை. நண்பர்கள் கொலையானதும் வெகுண்டெழுவதும் கொலைகார கும்பல் பற்றி விசாரிக்கும் காட்சிகளிலும் தேறுகிறார். கால் டாக்ஸி டிரைவர்களின் நிலையை எடுத்து சொல்லும்போது பரிதாபம் கொள்கிறார்.

    அஸ்வினிக்கு வழக்கமான கதாநாயகி வேடம் தான். வழக்கறிஞராக வரும் அவரையும் விசாரணைக்கு பயன்படுத்தி இருக்கலாம். நான் கடவுள் ராஜேந்திரன், கணேஷ்கர் இருவரும் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். ஈ.ராமதாஸ், பசங்க சிவகுமார், சந்திரமவுலி, திலீபன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

    கால் டாக்ஸி விமர்சனம்

    உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதையை உருவாக்கி இருக்கிறார் பா.பாண்டியன். திரைக்கதையில் இன்னும் கூட வேகம் கூட்டி இருக்கலாம். இருந்தாலும் விழிப்புணர்வு தரும் படமாகவே கால் டாக்ஸி அமைந்துள்ளது.

    பாணரின் இசையில் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், பின்னணி இசை மூலம் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். எம்.ஏ.ராஜதுரையின் ஒளிப்பதிவு திகில் கூட்டுகிறது. டேவிட் அஜய்யின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் ‘கால் டாக்ஸி’ வேகம் குறைவு.
    இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் அரசியல்வாதிகள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.
    புதுடெல்லி:

    இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

    ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.  வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன்.

    என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
    அறிமுக இயக்குனர் தம்பா குட்டி பம்பராஸ்கி இயக்கத்தில் ஆதித்ய வர்மன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மஞ்ச சட்ட பச்ச சட்ட’ படத்தின் முன்னோட்டம்.
    சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் “மஞ்ச சட்ட பச்ச சட்ட” திரைப்படத்தை எழுதி இயக்கி உள்ளார், அறிமுக இயக்குனர் தம்பா குட்டி பம்பராஸ்கி. இந்த படத்தின் ஒளிப்பதிவை எம் ஆர் எம் ஜெய்சுரேஷ் கவனிக்க, இசையை கணேஷ் ராகவேந்த்ரா அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் ஏற்று நடிக்க, புதுமுகம் ஆதித்ய வர்மன் மற்றும் ரேணு சௌந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

    ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கும் சுயநல கார்போரேட் ப்ரோக்கருக்கும் இடையே ஒரு விரோதம் ஏற்படுகிறது, அதன் விளைவாக அரசியல்வாதியின் வீட்டில் வருமானவரி சோதனை நடைப்பெறுகிறது. அதே நாளில் தங்களை கண்டுக்கொள்ளாத சமூகத்திற்கு ஒரு ஏடிஎம் கொள்ளையை நடத்திக் காட்ட இரு இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த இரண்டு முயற்சியும் தோல்வியை தழுவுகிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்பட இதில் சிக்கிக்கொள்கிறான் கதாநாயகனும் அவன் நண்பனும்.

    மஞ்ச சட்ட பச்ச சட்ட படக்குழு

    பணம் சம்பாதிக்க தெரியாத கதநாயகன், பணம் சம்பாதிக்க தெரியாத போலீஸ் அதிகாரி, சுயமாக சிந்திக்க தெரியாத இரண்டு போலீஸ்காரர்கள், சுயநினைவே இல்லாத இரண்டு மனநோயாளிகள், பேராசை கொண்ட அரசியல்வாதியின் உதவியாளர் என அனைவருமே ஒரு ஜாக்பாட்டை நோக்கி ஓடுகிறார்கள். அந்த ஜாக்பாட் என்ன ஆனது என்னும் இக்கதையை ஒரு தோல்பாவைக் கூத்து வழியாக சொல்லி இருக்கிறார்கள். 
    ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார்.
    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

    ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன்.

    பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    மாதவன்

    இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இதன் தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சூர்யா, மாதவனை வியந்து பாராட்டியதோடு, இப்பாடத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    டிரெய்லரில் வரும் ஒவ்வொரு வசனங்களும், காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக ‘ஒரு நாயை அழிக்க... அதற்கு வெறிநாய்னு பட்டம் கட்டினாலே போதும், அது போல ஒரு மனுஷனை தலை தூக்க முடியாத அளவுக்கு அடிச்சி கொல்லணும்னா... அவனுக்கு தேச துரோகின்னு பட்டம் கொடுத்தா போதும்’ என சூர்யா பேசும் வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன. இப்படம் கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ள பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார்.
    கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள அவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது.

    விஜய்

    இந்நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகவும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கோலிவுட் வட்டாரத்தினர் இது உண்மையில்லை என மறுக்கின்றனர். 
    ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது, இயக்குனர் ஆர்.கண்ணன் இதனை இயக்குகிறார்.
    மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கியும் வருகிறார். 

    பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். 

    படப்பிடிப்பு தளத்தில் யோகிபாபு

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.
    மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு, திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மம்முட்டியின் டுவிட்டர் பதிவு

    அந்த வகையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, தளபதி பட பாணியில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” என பதிவிட்டுள்ளார். தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார்.
    அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். 

    சித்தார்த்

    இந்நிலையில், நடிகை ஹூமா குரேஷியிடம் பிரபல நடிகர் சித்தார்த், சமூக வலைதளம் வாயிலாக வலிமை அப்டேட் கேட்டுள்ளார். நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்தார். இந்த பதிவுக்கு ‘வலிமை’ பட நாயகி ஹூமா குரேஷி ஒரு கமெண்ட்டை பதிவு செய்த நிலையில், சித்தார்த் அவரிடம் ‘மேடம் வலிமை அப்டேட்’ என்று கேட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த கமெண்டுக்கு லைக் குவிந்து வருகிறது.
    இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை.

    இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். அடுத்து பாலிவுட்டிலும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், தங்களது ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்தியன் 2 பட போஸ்டர்

    லைகா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. இயக்குனர் ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது. 

    மீதமுள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் கட்டிவிடுகிறோம். இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை அவர் இயக்கத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார். மேலும் இதுகுறித்து, இயக்குனர் ஷங்கர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
    தனக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த், தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    இந்திய சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு, திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

    என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஒட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு, சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

    ரஜினிகாந்த்

    என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு, ஓ. பன்னீர் செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய எதிர்கட்சித் தலைவர் நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரிலேயே இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முதல் மத்திய அரசு இந்த விருதை வழங்கி வருகிறது.

    1913-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முழு நீள திரைப்படமான ‘ராஜா அரிச்சந்திரா’வை தாதா சாகேப் இயக்கினார். அதற்கு முன்பு வரையில் திரைப்படங்கள் ஊமைப்படங்களாகவே வண்ணம் இல்லாமலேயே இருந்து வந்தது. 

    அதை மாற்றிக் காட்டி தனது ராஜா அரிச்சந்திரா திரைப்படம் மூலம் மாற்றத்தை தொடங்கியவர் தாதா சாகேப் என்பதால் அவரது பெயரிலேயே சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

    ரஜினி, தாதா சாகேப் பால்கே விருது

    கடந்தாண்டு இவ்விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×