என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆர் கோபால் இயக்கத்தில் சரோன், பிரியா, யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் நடிப்பில் உருவாகி உள்ள ‘அடங்காமை’ படத்தின் முன்னோட்டம்.
    வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கும் படம் ‘அடங்காமை’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர் ஏற்கனவே மங்களாபுரம் என்ற படத்தை இயக்கியவர்.

    இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்து இருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த பிரபல மாடல் அழகி, பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் இசை அமைக்கிறார்.

    அடங்காமை படக்குழு

    படம் பற்றி இயக்குனர் ஆர்.கோபால் கூறியதாவது: “சிறுவயதில் இருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு லட்சியத்தோடு வளர்கிறார்கள். அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும், இன்னொருவன் நடிகனாகவும், மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.

    டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார். அதுமட்டுமல்ல, காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய், நண்பர்களின் உதவியை நாடுகிறான் டாக்டர். கொலைகாரன் யார், கொலைக்கான காரணம் என்ன? இதற்கும் மற்ற நண்பர்கள் இருவருக்கும், தொடர்பு உள்ளதா? என்பதற்கு பதில் சொல்லும் படமாக இருக்கும்” என்றார்.
    இந்தியன் 2 பட விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாம்.
    நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

    ஷங்கர்

    அப்போது, இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமையன்று, ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை எனவும், ஜூன் மாதத்திலேயே படத்தை முடித்துக் கொடுக்க லைகா நிறுவனம் வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து, இந்த வழக்கில் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். 
    தங்கமீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக இயக்கும் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
    மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நிவின் பாலி. இவர், தமிழில் அறிமுகமான படம் ‘நேரம்’. இருமொழி படமான இதில் அவரது நடிப்பு பாராட்டு பெற்றது. இதையடுத்து ரிச்சி என்ற படத்தில் நடித்தார். 

    இப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நிவின் பாலி, தற்போது பிரபல இயக்குனரின் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

    ராம், நிவின் பாலி

    அதன்படி தங்கமீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக இயக்கும் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தனுஷ் நடிப்பில் கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான கர்ணன் படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, நட்டி நட்ராஜ், யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    தனுஷ்

    தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கர்ணன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற மே 9-ந் தேதி கர்ணன் படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. இதேபோல் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படமும் வருகிற ஜூன் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பவித்ராவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
    விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த நடிகை பவித்ரா லட்சுமி, குக் வித் கோமாளி எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

    நடிகை பவித்ரா தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் தமிழ் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கதிர், பவித்ரா

    இந்நிலையில், நடிகை பவித்ரா மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவர், நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரொமாண்டிக் படமாக இது உருவாக உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அல்லு அர்ஜுன், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அல்லு அர்ஜுனின் சமூக வலைதள பதிவு

    வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது புஷ்பா திரைப்படம் உருவாகி வருகிறது.
    தனுஷ் நடிப்பில் வெற்றி பெற்ற அசுரன் படம் ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் ஆகி வரும் நிலையில், தற்போது கர்ணன் படமும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த 9-ந் தேதி வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில், கர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், கர்ணன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார். மேலும் இவரது மகனான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், தான் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது முடிவாகவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார். அதில் ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ போன்ற தமிழ் படங்களின் ரீமேக்கும் அடங்கும். 

    பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ்

    ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றி பெற்ற அசுரன் படமும் தற்போது தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார். இப்படத்தை மே 14-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த இசை விருது விழா நடைபெற உள்ளதாம்.
    லண்டன்:

    இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெற உள்ளதாம். மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர். 

    பிரிட் விருது விழா

    நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுமாம். ஏதெனும் தொற்றுக்கான அறிகுறி உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நிகழ்ச்சிக்கு பின் சோதனை செய்யப்பட உள்ளதாம்.
    தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால், திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் ஓடிடி தளங்களின் பக்கம் திரும்பி உள்ளன.
    தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, தமிழக அரசு அனைத்து தியேட்டர்களையும் மூடி உள்ளது. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் ஓடிடி தளங்களின் பக்கம் திரும்பி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடக்கின்றன.

    விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் ஆகிய 5 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார் படத்தை ஓடிடியில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது ஓடிடியில் வெளியிடுவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டாக்டர், துக்ளக் தர்பார் பட போஸ்டர்

    அதேபோல் பீட்சா படத்தின் 3-ம் பாகத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மோகன் கோவிந்த் இயக்கி உள்ளார். அஸ்வின் முக்கிய கதாபாத்திரத்திலும், பவித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

    மேலும் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி ஆகிய படங்களை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
    ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கும் பாலிவுட் படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பும் நடிக்க ஒப்பந்தமாகினார்.

    இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 15-ந் தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் நடிகை கத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்ட போதிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர்.

    கத்ரீனா கைப், விஜய் சேதுபதி

    இதுதவிர நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ், மும்பைகார் போன்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இதில் மும்பைகார் படம், தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
    விக்ரம் படத்தின் திரைக்கதை முழுவதையும் படித்த கமல்ஹாசன், அதில் சில மாற்றங்கள் செய்யும்படி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    இந்தியன் 2 படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் கமல்ஹாசன் அடுத்து விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி பிரபலமானவர். விக்ரம் படப்பிடிப்பை மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில், விக்ரம் படத்தின் திரைக்கதை முழுவதையும் படித்த கமல்ஹாசன், அதில் சில மாற்றங்கள் செய்யும்படி தெரிவித்து இருப்பதாகவும், லோகேஷ் கனகராஜும் சில காட்சிகளை மாற்றி எழுதி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விக்ரம் அதிரடி சண்டை படமாக தயாராகிறது. 

    கமல்ஹாசன்

    இதற்கிடையில் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர், தெலுங்கு படமொன்றையும், இந்தியில் அந்நியன் ரீமேக் படத்தையும் இயக்க தயாராகி வருகிறார். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்கக்கூடாது என்று தயாரிப்பு தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும்.
    "அபூர்வ ராகங்கள்'' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.

    அதில் ஒரு விடுகதை:-

    "தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

    அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!

    ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?'' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.

    அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.

    வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.

    இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.

    மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.

    ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.

    மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!

    கத்திமேல் நடப்பது போன்ற கதை.

    கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!

    கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!

    தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.

    "யார் இந்தப் புதுமுகம்?'' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.

    கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.

    "ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்'' என்று கூறுகிறார், பாலசந்தர்.

    ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

    "மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது "கவுரவ வேடம்'' போன்றதுதான்.

    ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.

    இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

    மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

    பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-

    "திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

    தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக "அபூர்வ ராகங்கள்'' படத்தில் அறிமுகமானேன்.

    அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

    அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.''

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
    ×