என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சிட்ரோயன் நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் மாடல் வினியோகம் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 29.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதும், இந்த மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 174 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் போக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
சீன ஸ்டார்ட்-அப் நிறுவனமான டிஏஒ 100 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்ட புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
டிஏஒ 703 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் டிஏஒ தனது புதிய 703 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவித்து இருக்கிறது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

எலெக்ட்ரிக் வாகன சந்தை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது. எதிர்காலமே எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் என்ற நிலை தற்போது உருவாக துவங்கி இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் மற்ற நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
சீனாவை சேர்ந்த டிஏஒ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது. டிஏஒ 703 வித்தியாச வடிவமைப்பு கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன்புறம் இரு எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள் உள்ளன. இத்துடன் பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகின்றனர்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு ஆலை மற்றும் சர்வதேச பாகங்கள் மையம் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும். உள்ளூரில் கொரோனா பாதிப்பு நிலையை பொருத்து ஏப்ரல் 22 முதல் மே 1 வரை சீரற்ற முறையில் இந்த நடவடிக்கை தொடரும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து உள்ளது.
உற்பத்தி ஆலை மூடப்பட்டு இருந்தாலும், கார்ப்பரேட் அலுவலக பணிகள் தொடர்ந்து நடைபெறும். கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் ஏற்கனவே வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகின்றனர். சுழற்சி முறையில் குறைந்த ஊழியர்களை மட்டும் அலுவலகம் வர ஹீரோ உத்தரவிட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் எஸ்யுவி இ ப்ரோடோடைப் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வாக வெளியிட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கிராஸ்-ஒவர் கான்செப்ட் மாடலை 2021 ஆட்டோ ஷாங்காய் நிகழ்வில் காட்சிப்படுத்தி இருக்கிறது. புதிய மாடல் எஸ்யுவி இ ப்ரோடோடைப் என்றே அழைக்கப்படுகிறது. முன்னதாக ஹோண்டா நிறுவனம் இ கான்செப்ட் மாடலை இதேபோன்றே காட்சிப்படுத்தி இருந்தது.
சமீபத்தில் ஹோண்டா ஹெச்ஆர்-வி ஹைப்ரிட் மாடலை ஹோண்டா அறிமுகம் செய்தது. புதிய எஸ்யுவி இ ப்ரோடோடைப் தோற்றத்தில் ஹெச்ஆர்வி மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. எனினும், புது மாடலில் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இலுமினேட் செய்யப்பட்ட ஹோண்டா லோகோ, சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது.

இதன் பம்ப்பரில் எல்இடி ஸ்ட்ரிப்கள் உள்ளன. இத்துடன் பெரிய வீல்கள், பின்புறம் அதிக எல்இடி ஸ்ட்ரிப்கள், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சீன சந்தையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டு வருகிறது.
இதே நிகழ்வில் பிரீஸ் PHEV ப்ரோடோடைப், ஹோண்டாவின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஹோண்டாவின் மூன்றாம் தலைமுறை கனெக்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜிஎல்ஏ மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 ஜிஎல்ஏ மாடலை மே மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இதே ஆண்டில் இதுவரை ஜிஎல்சி, ஏ கிளாஸ் லிமோசின் மற்றும் இ கிளாஸ் பேஸ்லிப்ட் போன்ற மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

அந்த வரிசையில் 2021 ஆண்டு இந்தியா வரும் நான்காவது பென்ஸ் மாடலாக புதிய ஜிஎல்ஏ வெளியாக இருக்கிறது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஜிஎல்ஏ மாடல் முந்தைய வேரியண்டை விட அசத்தலாக இருக்கிறது. இதன் உயரம் 10 செ.மீ. வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புது மாடலில் ஒற்றை ஸ்லாட் கிரில், புது எல்இடி ஹெட்லேம்ப்கள், மெல்லிய ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப், மேம்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. இவை காருக்கு அசத்தலான எஸ்யுவி தோற்றத்தை வழங்குகிறது. காரின் உள்புறம் டூயல் ஸ்கிரீன் செட்டப் மற்றும் MBUX சிஸ்டம் வழங்கப்படலாம். 2021 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் புது லோகோவுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது வாகனங்களில் புது லோகோ பொருத்தி வருகிறது. புதிய லோகோ கொண்ட கியா கார்கள் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. முன்னதாக கியா மோட்டார்ஸ் தனது புது லோகோவை ஜனவரி 6 ஆம் தேதி வெளியிட்டது.

தற்போது புதிய லோகோ கொண்ட கியா சொனெட் மாடல் விற்பனையகம் வந்தடைந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த காரில் புது லோகோ பொனெட் மற்றும் பூட்லிட் பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கிறது. கியா சொனெட் போன்றே செல்டோஸ் மாடலிலும் புது லோகோ வழங்கப்படும் என தெரிகிறது.
கியா நிறுவனம் விரைவில் தனது செல்டோஸ் மாடலின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது செல்டோஸ் கிராவிட்டி என அழைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த வேரியண்ட் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் என்எஸ்125 மாடல் நான்கு வித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் என்எஸ்125 பல்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 93,690, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடல் என்எஸ் சீரிசில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும்.
பஜாஜ் என்எஸ்125 மாடல் தோற்றத்தில் என்எஸ்160 மற்றும் என்எஸ்200 மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. இதில் 12 லிட்டர் பியூவல் டேன்க், ட்வின் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்போர்ட் அம்சங்களுக்கு ஏற்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

புதிய என்எஸ்125 மாடலில் 124சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 12 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 144 கிலோ எடை கொண்டுள்ளது.
பஜாஜ் என்எஸ்125 மாடல் - பீச் புளூ, பியெரி ஆரஞ்சு, பர்ன்ட் ரெட் மற்றும் பியூட்டர் கிரே என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. பேட்ஜிங் மற்றும் புதிய புளூ நிறம், அலாய் வீல்களில் மெட்டாலிக் கிரே நிறம் தவிர புது மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியின்றி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா என் மாடலை ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் நான்காவது என் சீரிஸ் மாடல் ஆகும்.

புதிய கோனா என் மாடலில் 2.0 லிட்டர் T-GSi என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 275 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் வெலோஸ்டர் என் மற்றும் ஐ30என் போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலில் FWD மட்டும் வழங்கப்படும் என்றும் இதனுடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஷாங்காய் ஆட்டோ விழாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQ சீரிசில் புது மாடலை அறிமுகம் செய்தது. கடந்த வாரம் EQS மாடல் அறிமுகமான நிலையில், தற்போது EQB அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோ ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய EQB முதற்கட்டமாக சீன சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தையில் 2022 வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய கார் GLB மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உள்புறம் அகலமான புளோட்டிங் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் MBUX சிஸ்டம் வழங்கப்படுகிறது.

புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் முன்புறம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 66.5kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் உள்ள மோட்டார்கள் 270 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இதன் ஏஎம்ஜி வேரியண்ட் 290 பிஹெச்பி வழங்குகிறது.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 470 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 11kW AC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இதுவரை 10 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்துள்ளது.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலுக்கான முன்பதிவு 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் நிசான் மேக்னைட் எஸ்யுவி மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.

முன்பதிவு மட்டுமின்றி இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இதுவரை 10 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2, 2020 அன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. வெளியீட்டில் இருந்து இதுவரை மேக்னைட் மாடலை வாங்க 2,78,000 பேர் மேக்னைட் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.
நிசான் மேக்னைட் மாடல் XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது இரு ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையை விரிவுப்படுத்தும் பணிகளை துவங்கியுள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வினியோகம் செய்யப்படுகிறது. இரு ஸ்கூட்டர் மாடல்களின் விலை முறையே ரூ. 1.60 லட்சம் மற்றும் ரூ. 1.41 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போது ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தமிழகத்தின் மூன்று நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இரு புதிய நகரங்களில் வாடிக்கையாளர்கள் ஏத்தர் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைட் செய்யவும், வாகனத்தின் அம்சங்கள் குறித்து சம்மந்தப்பட்ட விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம்.

இதுதவிர ஏத்தர் ஸ்பேஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை இரு நகரங்களில் திறக்க இருக்கிறது. வரும் வாரங்களில் இவை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை மட்டுமின்றி இரு நகரங்களில் ஏத்தர் க்ரிட் பாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைக்கிறது.
தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கோயம்புத்தூரில் 5 பாஸ்ட் சார்ஜிங் மையங்களையும், திருச்சியில் இரண்டு பாஸ்ட் சார்ஜிங் மையங்களை திறந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் மாடல் கார் புது மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டிங் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி சியாஸ் மாடலை டொயோட்டா ரி-பேட்ஜ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரிஸ் செடான் மாடலுக்கு மாற்றாக சியாஸ் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது மாடலாக இது இருக்கும்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், சியாஸ் மாடல் கிரிலில் டொயோட்டா பேட்ஜ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை கொண்டு டொயோட்டா நிறுவனம் சியாஸ் மாடலை ரி-பேட்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது.
தற்போது செடான் பிரிவில் டொயோட்டா நிறுவனம் யாரிஸ் மாடலை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் சியாஸ் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் யாரிஸ் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.






