தமிழ்நாடு

எம்.ஜி.ஆர். வளர்ச்சிக்கு கருணாநிதி காரணமாக இருந்தாரா? செல்லூர் ராஜூ

Published On 2024-01-20 09:58 GMT   |   Update On 2024-01-20 09:58 GMT
  • அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.
  • 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை:

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி கழத்தின் சார்பில், பரவையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். பாட்டாளி மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக கட்சியை தொடங்கினார். எடப்பாடி யார் இன்றைக்கு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் உலக அளவில் 7-வது இடத்திலும், இந்திய அளவில் 3-வது இடத்திலும், தமிழகத்தில் முதன்மையாக கழகத்தை உருவாக்கியுள்ளார்.

தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல என கருணாநிதி கூறினார். ஆனால் ஸ்டாலினை துணை முதலமைச்சர் மற்றும் செயல் தலைவராக நியமித்தார். அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.

ஸ்டாலின் வளர்ச்சி அடைய 50 ஆண்டுகள் ஆனது. ஆனால் அவரது மகன் உதயநிதி 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார். 2019 ஆண்டில் மாநில இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது, 2021-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார். 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 3 சதவீதம் தான் வித்தியாசம். தற்போது தி.மு.க.விற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு, சிறு பான்மை மக்களிடத்தில் அ.தி.மு.க. வரவேற்பு ஆகியவற்றால் பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். பா.ஜ.க. கனவு பகல் கனவாக தான் போகும்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஸ்டாலின் திரைத் துறை மூலம் கொண்டாடினர். அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்றபோதும் வெறும் ஆயிரம் பேர் தான் அதில் பங்கேற்றனர். இதில் பேசிய உச்சநடிகர் எம்.ஜி.ஆர். வளர்ச்சிக்கு கருணாநிதியின் எழுத்து ஆற்றல் உதவியதாக என்று கூறுகிறார்.

1971-ம் ஆண்டு ஒரு விழாவில் முரசொலி மாறன் பேசும்போது நாங்கள் கடன் வாங்கி இருந்தோம், வட்டி கட்ட முடியவில்லை அப்போது எங்களை காப்பாற்ற எங்கள் தங்கம் படத்தில் புரட்சித் தலைவரும், அம்மாவும் இலவசமாக நடித்துக் கொடுத்தனர். மீண்டும் எங்களுக்கு வாழ்வு கொடுத்தவர் 8-வது வள்ளல் எம்.ஜி.ஆர். என்று கூறினார்.

அதனை தொடர்ந்து கருணாநிதி பேசும்பொழுது அவர் 8-வது வள்ளல் மட்டுமல்ல, திராவிட கர்ணன் என்று பாராட்டி எனக்கு வாழ்வு தந்தவர் புரட்சி தலைவர் என பேசினார். அப்போது முரசொலி கூட வந்தது என்பதை அங்கு பேசிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News