தமிழ்நாடு செய்திகள்

தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

Published On 2026-02-04 10:34 IST   |   Update On 2026-02-04 10:34:00 IST
  • மாடுபிடி வீரர்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக களமிறக்கப்பட்டனர்.
  • இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரத்துடன் அடக்கினர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக் கட்டு போட்டி நடந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது.

இந்த போட்டியை கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தனர். இந்த உறுதிமொழியை மாடுபிடி வீரர்கள் வாசித்து ஏற்றுக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை பிடிக்க சுற்றுக்கு மொத்தம் 40 பேர் அனுமதிக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக களமிறக்கப்பட்டனர்.

அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி இளம் காளையர்கள் பார்வையாளர்களிடம் பாராட்டுக்களை பெற்றனர்.

மாடுபிடி வீரர்கள் தடுமாறி கீழே விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்கும் வகையில் வாடிவாசலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தரையில் தேங்காய் நார் போடப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரத்துடன் அடக்கினர்.

அதேபோல் காளைகளும் சிறப்பாக களமாடி வீரர்களை பந்தாடின. இதில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வர் அண்டா, பேன் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

முன்னதாக, மாடுபிடி வீரர்களை சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல்பரி சோதனை செய்து தகுதியான வீரர்களை மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.

இதேபோல, காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர்.

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News