தமிழ்நாடு செய்திகள்

சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சிறுவர்கள் விரட்டியடிப்பு: இதுதான் தி.மு.க.வின் சமூகநீதியா? - அன்புமணி

Published On 2026-02-04 11:29 IST   |   Update On 2026-02-04 11:29:00 IST
  • தி.மு.க. ஆட்சியில் தீண்டாமை தலைவிரித்தாடுவது இது முதல்முறையல்ல.
  • நரிக்குறவ மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளையொட்டி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நேற்று நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் அதிகாரிகளால் விரட்டியடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சமூகநீதி பேசும் தி.மு.க. அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்நநாள் விருந்தில் கூட தீண்டாமையை கடைபிடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

நெல்லையப்பர் கோவிலில் நடந்த விருந்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை மாநகர மேயர் இராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்த நிலையில், பசியுடன் அங்கு உணவருந்த வந்த சிறுவர்களை அதிகாரி ஒருவர் மிரட்டி, விரட்டியடிப்பதும், அதன்பின் அந்த சிறுவர்களை இன்னொருவர் அருகில் உள்ள உணவகத்துக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தருவதும் சமூக வலைத்தளங்களில் காணொலியாக பரவி வருகின்றன.

சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முக்கிய நாள்களில் ஆலயங்களில் சமபந்தி விருந்துகள் நடத்தப்படுகின்றன. ஆனால், சமபந்தி விருந்துகளிலேயே சமத்துவம் மறுக்கப்பட்டு தீண்டாமை தலைவிரித்தாடுகிறது என்றால் தி.மு.க. ஆட்சியில் சமூகநீதி எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தி.மு.க. ஆட்சியில் தீண்டாமை தலைவிரித்தாடுவது இது முதல்முறையல்ல. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் உள்ளிட்டவர்கள் உணவு சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அநீதிக்கு எதிராக அஸ்வினி வினா எழுப்பியது வைரலான நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அந்த கோவிலுக்கு சென்று அஸ்வினியுடன் உணவருந்தினார்; பின்னர் அஸ்வினியின் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மன்னிப்பு கேட்டு சமாளித்தார்.

ஆனால், அதன் பின் நான்கரை ஆண்டுகள் ஆகும் நிலையில் தி.மு.க. ஆட்சியில் நரிக்குறவ மக்களுக்கு இன்னும் சமூகநீதியும், சமத்துவமும் கிடைக்கவில்லை என்பதையே நெல்லையப்பர் கோவில் நிகழ்வு காட்டுகிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இதற்காக நரிக்குறவ மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News