இந்தியா

ஆளுநரை சந்தித்து முதல் மந்திரி பதவி ஏற்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்

Published On 2024-01-28 08:17 GMT   |   Update On 2024-01-28 08:26 GMT
  • பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை.
  • பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்.

பாட்னா:

பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.


இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

இதனால் இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.


அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை ராஜேந்திர அர்லேகர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் இன்று ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இன்று மாலை நிதிஷ்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர்.

Tags:    

Similar News