ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் எல்சிஎச் பிரசாந்த்.
- ராணுவ ஹெலிகாப்டரான பிரசாந்தில் ஜனாதிபதி முர்மு பயணம் செய்தார்.
ஜெய்ப்பூர்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப் படைத்தளத்தில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்தில் பயணம் மேற்கொண்டார். குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவா உடன் முர்மு ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.
ஜனாதிபதி முர்மு போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றார்.
இதையடுத்து, இந்தப் பயணம் குறித்து பார்வையாளர் புத்தகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுதிய குறிப்பில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்தில் பறந்து சென்றது சிறந்த அனுபவத்தை அளித்தது. இந்தப் பயணம் நாட்டின் பாதுகாப்புத் திறன் மீது ஒரு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்திய விமானப்படை மற்றும் ஜெய்சால்மர் விமானப் படைத்தளத்தின் குழுவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.