கெஜ்ரிவால் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!
- வெறும் யூகங்களின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாக சிபிஐ-யை நீதிமன்றம் கடுமையாகச் சாடியது.
- விசாரணையின் பல முக்கிய அம்சங்கள் நீதிமன்றத்தால் கவனிக்கப்படவில்லை
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் உடனடியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்றும் கூறி கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தார்.
விசாரணையில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், வெறும் யூகங்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் சிபிஐ-யை நீதிமன்றம் கடுமையாகச் சாடியது. மேலும், இது தொடர்பாக விசாரணை அதிகாரிக்கு எதிராகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு "சட்டரீதியாக தவறானது" என்றும், விசாரணையின் பல முக்கிய அம்சங்கள் நீதிமன்றத்தால் கவனிக்கப்படவில்லை என்றும் கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.