தொழிலதிபர் மீதான போக்சோ வழக்கு ரத்து.. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு Laptop வாங்கித் தர உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
- தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என குற்றம்சாட்டப்பட்டவர் வாதிட்டார்.
- உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும்
மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மடிக்கணினி வாங்கித் தர மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதம், 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி, தொழிலதிபரான தனது தாய்மாமன் மீது பாலியல் புகார் அளித்தார்.
பள்ளிக்குச் செல்லும்போது அவர் தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், ஒருமுறை தன்னை தவறாகத் தொட்டு முத்தம் கேட்டதாகவும் அந்தச் சிறுமி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, இது ஒரு தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என்றும், தற்போது குடும்ப உறுப்பினர்களிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வழக்கை மேலே தொடர விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ஆர். போன்ஸ்லே தலைமையிலான மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து அவர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தனர்.
மேலும் தங்கள் உத்தரவில், பாதிக்கப்பட்ட சிறுமி மேற்படிப்புக்கு செல்ல உள்ளதால், அவருக்கு ஆப்பிள் மேக்புக் அல்லது அதற்கு இணையான ஒரு உயர்தர லேப்டாப்பை ரூ.1.5 லட்சம் அபராதத் தொகையில் இருந்து வாங்கித் தர வேண்டும்.
லேப்டாப் வாங்கியது போக மீதமுள்ள தொகையை உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.