ராணுவ வீரர்களை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி - காங்கிரஸ் கண்டனம்
- பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ராணுவ வீரர்களை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ராணுவ வீரர்களை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஷ்மீரின் பனி நிறைந்த பகுதியில் ராணுவ வீரர்களுடன் பாஜக நிர்வாகி ரவீந்தர் ரெய்னா ரீல்ஸ் வீடியோ எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
ராணுவ வீரர்களை வைத்து பாஜக நிர்வாகி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பதிவில், "காஷ்மீரில், பயங்கரவாதிகள் நமது 28 மக்களை கொன்றனர். இந்த துயர சம்பவத்தால் முழு தேசமும் வேதனையும் துக்கமும் அடைந்துள்ளது. ஆனால், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான ரவீந்தர் ரெய்னா வீடியோக்களை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கிறார்.
இந்த துயர சம்பவத்திற்காக ரவீந்தர் ரெய்னா வருத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு பதிலாக, அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். சமூக ஊடகங்களில் தனது பிம்பத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்" என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு அவரது எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்த ரவீந்தர் ரெய்னா, "மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக குப்வாராவில் வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்றியதாகவும், துணிச்சலான வீரர்களின் உதவியுடன் தான் பாதுகாப்பான இடத்தை அடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.