என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • முதலமைச்சர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
    • மாலை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு நெல்லை சென்ற அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி. நகரில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சென்றார். நெல்லையில் சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து இரவில் ரெட்டியார்பட்டி யில் ரூ.56 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை மின்னும் விளக்கொளியில் திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    அங்கிருந்தபடி ரூ.72.10 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.5.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், பாளையங்கோட்டையில் ரூ.3½ கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம், பாளையங்கோட்டையில் ரூ.1.69 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு பகுப்பாய்வு ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    மேலும் மேலப்பாளையம் மீரா பள்ளிவாசலில் ரூ.1.70 கோடியில் சமுதாய கூடம் உள்பட ரூ.182.74 கோடியில் முடிவுற்ற 32 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.98 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள அறிவுசார் நூலக கட்டிடம் உள்பட ரூ.357 கோடியில் 11 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    50 புதிய பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 45 ஆயிரத்து 112 பயனாளிகளுக்கு ரூ.101.48 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறாக நெல்லை மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.696 கோடியில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவுக்காக சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    25 மற்றும் 26-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 22-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் தணிகாச்சலம் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (28). இவர்களுக்கு தமிழ் செல்வி, நிஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை தமிழ் செல்வியை பள்ளிக்கு அனுப்புவதற்கு தாய் ஐஸ்வர்யா, தனது 4 இரண்டாவது மகள் நிஷாவையும் கூடவே அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது பள்ளி பஸ் வந்த உடன் தமிழ் செல்வியை ஏற்றி விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் 2 வயது நிஷா சிக்கி உயிரிழந்தார்.

    மகள் பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்ததை கண்டு தாய் பதறி போய் கதறினார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும்.
    • வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

    அப்போது மாவட்டக்கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • அணையில் தண்ணீர் இருப்பு 81.35 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    அதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1847 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் அணையில் தண்ணீர் இருப்பு 81.35 டி.எம்.சி.யாக உள்ளது.

    • ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.
    • தவழும் குழந்தை தான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னாட்சி நடத்துவார்கள்.

    கோவை:

    தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    எஸ்ஐஆர் குறித்து ஏற்கனவே த.வெ.க தலைவர் விஜய் விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவே பொருத்தமாக இருக்கும்.

    ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர். அது அவர்களின் கருத்து.

    தவழும் குழந்தை தான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னாட்சி நடத்துவார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த பொதுக்கூட்டம் குறித்து, இன்று மாலை தலைவரிடம் பேசிவிட்டு அது எந்த இடம் என்பதை முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அவரிடம், களத்தில் இல்லாத கட்சி தமிழக வெற்றிக்கழகம் தான் என தமிழிசை தெரிவித்துள்ளது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன் பதில் அளித்து கூறும்போது, அது அவருடைய கருத்து. களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் தான் தீர்ப்பளிக்கும் என்றார்.

    அதேபோன்று த.வெ.க.வின் அடுத்த வியூகம் என்ன என்பது தொடர்பான கேள்விக்கு, எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என்பதை பார்த்து நாடே வியக்கும் என அவர் தெரிவித்தார்.

    • புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் விஜய் சில நிமிடங்களே பேசியது பேசுபொருளான நிலையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக விஜய் பேசி அசத்தினார்.
    • மற்ற இடங்களில் நடந்த த.வெ.க. கூட்டங்களை ஒப்பிடுகையில் ஈரோடு பொதுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்துள்ளது.

    அ.தி.மு.க. மூத்த நிர்வாகியாக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா போன்றவர்களை ராமநாதபுரம் பசும்பொன்னில் சந்தித்து பேசினார். இதன் காரணமாக செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்தார். திடீரென தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்து அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    விஜயும் அவரை அரவணைத்து செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார். த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் என 2 பதவிகளை விஜய் வழங்கி கவுரவித்தார்.

    கட்சியில் சேர்ந்த உடன் செங்கோட்டையன் தனது சொந்த ஊரான ஈரோட்டில் தனது செல்வாக்கை காட்ட திட்டமிட்டார். இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்தை விஜய் தலைமையில் நடத்த முடிவு செய்தார். இதற்காக ஒவ்வொரு நிகழ்வையும் அவர் திட்டமிட்டு நடத்தினார்.

    போலீசார் பொதுக்கூட்டத்துக்கு 80-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்தனர். அதனை பார்த்து சோர்வடையாமல் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பணியாற்றி ஈரோடு விஜயமங்கலத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

    இதில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். விஜய் பேசுகையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பணிகளையும் குறிப்பிட்டு பேசினார். அண்ணன் செங்கோட்டையன் கட்சியில் இணைந்துள்ளது நம் கட்சிக்கு மிகப்பெரிய பலம் என்று புகழ்ந்து பேசினார். அதற்கு முன்னதாக பேசிய செங்கோட்டையன், விஜய்க்கு புரட்சித்தளபதி என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து விஜய்க்கு செங்கோட்டையன் செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

     

    மற்ற இடங்களில் நடந்த த.வெ.க. கூட்டங்களை ஒப்பிடுகையில் ஈரோடு பொதுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்துள்ளது. இதற்கு செங்கோட்டையனின் சரியான திட்டமிடுதலே காரணமாகும். மேலும் விஜய்யின் பேச்சிலும் அனல் தெறித்தது. புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் விஜய் சில நிமிடங்களே பேசியது பேசுபொருளான நிலையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக விஜய் பேசி அசத்தினார். இதற்கும் செங்கோட்டையன் பல ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.

    விஜய் கூறுகையில், அண்ணன் செங்கோட்டையன் நம்ம கூட வந்து சேர்ந்தது நமக்கு மிகப்பெரிய பலம். அவரை மாதிரி இன்னும் நிறையபேர் வந்து சேர இருக்கிறார்கள். அவங்க எல்லோருக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுப்போம் என்றார்.

    விஜய்யின் இந்த பேச்சால் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு த.வெ.க.வில் சேர தயங்கியபடி இருந்த பலரின் மனநிலை செங்கோட்டையனுக்கு அந்த கட்சியில் அளிக்கப்படும் முக்கியத்துவத்தாலும், ஈரோடு பொதுக்கூட்ட எழுச்சியாலும் தற்போது மாறியுள்ளது.

    இதனால் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்கு பிறகு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் த.வெ.க.வில் சேர வாய்ப்புள்ளது. அவர்கள் எந்த கட்சியில் இருந்து வர உள்ளனர், அவர்கள் யார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது. அதனை அறிய த.வெ.க.வினர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

     

    மேலும் ஈரோடு பொதுக்கூட்ட வரவேற்பு விஜய்யை அதிகம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன்காரணமாக பொதுக் கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களுடன் அவர் செல்பி எடுத்து மகிழ்ந்தார். அடுத்த பொதுக்கூட்டத்தை கொங்கு மண்டலமான சேலத்தில் ஏற்பாடு செய்வதற்கு விஜய் விரும்பி உள்ளார். இதற்காக வருகிற 30-ந் தேதி அங்கு பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    • கவிதை - கவிஞர் சுகுமாரன், நாவலாசிரியர் - முருகன், உரைநடை ஆசிரியர் - பாரதிபுத்திரனுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மொழி பெயர்ப்பாளர் - கீதா, நாடகப் பிரிவில் கருணா பிரசாத் 2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார்.

    கவிதை - கவிஞர் நா.சுகுமாரன், சிறுகதை - ஆதவன் தீட்சண்யா, நாவல் - இரா. முருகன், உரைநடை - பேராசிரியர் பாரதிபுத்திரன் (சா.பாலுசாமி), நாடகம் - கருணா பிரசாத், மொழி பெயர்ப்பு - வ. கீதா , நாடகப் 2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் புத்தக கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதாளர்கள் விவரக்குறிப்பு

    நா. சுகுமாரன்

    கவிதை, நாவல், மொழிபெயர்ப்புகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பாடுபொருளிலும், வடிவத்திலும் தனித்துவமிக்கக் கவிஞர். கவிஞர் பாப்லோ நெரூதாவின் பாதிப்புடன் உலகத் தரமான கவிதைகளைப் படைத்த படைப்பாளர்.

    கோடைகாலக் குறிப்புகள், பூமியை வாசிக்கும் சிறுமி, சுகுமாரன் கவிதை (1954-2019) இன்னொரு முறை சந்திக்க வரும்போது ஆகியவை சிறந்த தொகுப்புகள். குங்குமம் இதழில் பணி புரிந்துள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தீவிர இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆதவன் தீட்சண்யா

    நான் ஒரு மது விரோதி, லிபரல் பாளையத்துக் கதைகள், ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் முதலியவை இவரது சிறந்த சிறுகதைகள். சமூகநீதி சார்ந்து சிறந்த கதைகளை மாறுபட்ட மொழிநடையில் எழுதிய படைப்பாளர். 21ஆம் நூற்றாண்டில் இதுவரை எவரும் கையாளாத மொழிநடையில் கதைகளை எழுதியது இவருடைய சிறப்பு. மேலும் இவர் தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

    இரா.முருகன்

    அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே. இரா. முருகன் குறுநாவல்கள் போன்ற நாவல்களைப் படைத்தவர். இதுவரை 29 நூல்களை எழுதியுள்ளார். மாய யதார்த்தக் கதைகளையும் (Magical Realism) எழுதிய வித்தியாசமான எழுத்தாளர். ஆங்கிலத்திலும் இவர் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    • தகுதியுடைய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பா.ம.க. நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பொதுமக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்கள் தகுதியுடைய வாக்காளர்களாகவே இருக்கக்கூடும். இட மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடியாததால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கக் கூடும். அத்தகைய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களையும், இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாதவர்களையும் படிவம் எண் 6-ஐ நிரப்பிக் கொடுத்து சேர்க்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்கு படிவம் 8-ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்து கொள்வதற்காக படிவம் 8ஏ-வையும் நிரப்பிக் கொடுக்க வேண்டும். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடங்கிய புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிகள் அடுத்த மாதம் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இன்றும், நாளையும் உள்பட பல சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த காலக்கட்டத்தில் தகுதியுடைய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பா.ம.க. நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான். அதை எவரும், எந்த காரணத்திற்காகவும் இழந்து விடக்கூடாது. எனவே, இன்று தொடங்கி ஜனவரி மாதம் 18-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதியவர்களைச் சேர்க்கும் தேனீக்களாக உழைக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
    • மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அவர் கூறியதாவது:-

    * வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது.

    * உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

    * மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.

    * களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.

    * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார்? என்று கேள்வி எழுப்பினார். 

    • கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கியது. அதன்படி கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை கோவை மாவட்டத்திலும் வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்று முடிந்தது.

    பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பவன்குமார் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு, இறந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 489 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 360 பேர், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 பேர், இரட்டைப்பதிவுகள் 23 ஆயிரத்து 202 பேர், இதர காரணங்கள் 380 பேர் என கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் சேர்த்து 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.

    அதாவது 20.17 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் குடிபெயர்ந்தவர்கள் தான் அதிகளவில் உள்ளனர். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இப்படி மாறியவர்கள் மட்டுமே 20 சதவீத வாக்காளர்கள் இருப்பர். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் போது பலரும் இறந்து விட்டனர். இவையே வாக்காளர் பட்டியலில் அதிகம் பேர் நீக்கப்பட்டதற்கான காரணம் ஆகும்.

    கோவை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் சரிபாதி நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் நீக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்களில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 159 வாக்காளர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் தான்.

    இதற்கிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விவரங்கள், நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களுடன் அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

    நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் படிவம் 7, திருத்தம், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8, ஆதார் எண் இணைக்க படிவம் 6 பியை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவரிடம் ஜனவரி 18-ந் தேதி வரை அளிக்கலாம். ஆன்லைன் வாயிலாக www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் Voter Helpliner என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் 2 முதல் 4-ம் தளம் வரை தீ பரவிய நிலையில் தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×