search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலையிழப்பு"

    • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

    இங்கு சரவெடிகளை தவிர வேறு வகை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது. மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும், அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக மாற்று வழியை இதுவரை சுப்ரீம் கோர்ட்டோ, மத்திய அரசோ பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்காததால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், அதன் மூலம் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றுக்கும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தொடங்காமல் உள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய, மாநில, அரசுகள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து உள்ளனர். எனவே தாமதிக்காமல் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • கணினி சம்பந்தப்ப்டட வேலையை யாரும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றால் அது மிகப் பெரிய தாக்கம்.
    • அனைத்து ஊழியர்களும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட மாட்டார்கள்.

    மென்பொருள் துறையில் 'புரோகிராமிங்' அல்லது 'கோடிங்' எனும் வேலையிலுள்ள பெரும்பாலானவர்கள், அடுத்த ஓரிரு வருடங்களில் தங்கள் வேலைகளை இழந்து விடும் அபாயம் இருப்பதாக ஸ்டெபிலிட்டி ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எமட் மோஸ்டாக் கூறியிருக்கிறார்.

    அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் நிறுவனங்கள் செய்ய வேண்டிய மென்பொருள் வேலைகளை அந்நாடுகள் இந்தியாவிற்கு தந்து விடுகிறது. அவுட்சோர்ஸிங் எனப்படும் இந்த முறையில் இங்குள்ள பணியாளர்களின் ஊதிய விகிதம் அங்குள்ளவர்களை விட பெருமளவு குறைவாக இருப்பதால் அங்குள்ள நிறுவனங்களுக்கு இதனால் பெரும் லாபம் கிடைத்து வந்தது.

    தற்போது இந்த துறையில் உள்ள பல பணிகளை செயற்கை நுண்ணறிவை கொண்டு சிறப்பாக செய்ய முடியும் எனும் நிலை உருவாகியிருக்கிறது.

    இதனால் இந்தியாவின் பெரும்பாலான வேலைகள் அழிந்து விடும் என்றும் குறிப்பாக "கோடர்கள்" அல்லது "புரோகிராமர்கள்" தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் எமட் கூறியிருக்கிறார்.

    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

    பல்வேறு வகையான வேலைகளை வெவ்வேறு வழிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாதிக்கிறது. ஒரு கணினியின் முன் அமர்ந்து ஒருவர் செய்யும் வேலையை யாரும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்றால், அது மிகப் பெரிய தாக்கம் என்று கூற வேண்டும். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் திறமையான பட்டதாரிகளைப் போல செயலாற்றும். ஆனால் அனைத்து ஊழியர்களும் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட மாட்டார்கள். வலுவான தொழிலாளர் சட்டங்களைக் கொண்ட பிரான்ஸ் போன்ற நாடுகளில் தாக்கம் குறைவாக இருக்கும். உதாரணமாக, இந்தியாவில் "லெவல் 3" வரையிலான கோடர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இல்லாமல் போய்விடுவார்கள். அதே சமயம் பிரான்சில், ஒரு டெவலப்பரை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல."

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமாக மென்பொருள் புரோகிராமர்கள் உள்ளனர். அவர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறுவு கருவிகளான சாட்ஜிபிடி போன்றவற்றின் தாக்கத்தால் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

    ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, அலுவலக வேலைகள் மற்றும் பிற வேலைகளை வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக இது திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், விமான நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

    • இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.
    • ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் படகுகளையும், மீனவர்களையும் சிறைப்பிடித்து செல்லும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

    அவ்வாறு சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், மீனவர்களின் படகுகளை இலங்கை நாட்டுடமையாக்கி வருகிறது.

    இதனால் விடுதலையானபோதும், வெறும் கையுடன் தாயகம் திரும்பும் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து மாற்று தொழிலை தேடி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாக நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 420 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி பாலா, கிரீம்ஸ் ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் சென்ற 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

    அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டதோடு, மீனவர்களை காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடை காலம் முடிந்து ஒரு மாதம் ஆவதற்குள் இரண்டு முறை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலம் காலமாய் நடக்கும் இதுபோன்ற இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 820 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து உள்ளனர்.

    அதேபோல் மீன்பிடி தொழிலை சார்ந்த ஐஸ் பேக்டரிகள், மீன்கூடை தூக்கும் தொழிலாளர்கள், டீசல் விநியோக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியின்றி வீடுகளுக்குள் முடங்கினர்.

    இன்று ஒருநாள் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ×