search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி"

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதால், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் முதலில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    நெல்லை:

    தமிழகத்தை சுட்டெரித்து வந்த அக்னி நட்சத்திர வெயில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நெல்லை மாவட்டத் தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் அதிகபட்சமாக 106.4 டிகிரி வரை சென்றது. இதனால் வெப்ப சுழற்சி காரணமாக பலத்த இடி மின்னலுடன் சூறாவளி காற்றுடனும் அவ்வப்போது நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று மாலை நெல்லை மாவட் டத்தில் மேக மூட்டம் சூழ்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 36 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆய்க்குடியில் 33.2 மில்லி மீட்டரும், குண்டாறு பகுதியில்-28, ராமநதி-20, சிவகிரி -15 மில்லி மீட்டரும் மழை பெய்தது. சங்கரன்கோவில், கருப்பாநதி பகுதியில் தலா 12 மில்லி மீட்டரும், அடவி நயினார்-9, தென்காசி-6.4, மணிமுத்தாறு-4.8 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையாபுரத்தில் 22 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 6 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதுபோக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் குளிர்ந்த காற்று வீசி ஆங்காங்கே சாரல் மழை பெய்யத்தொடங்கி உள்ளது.

    இந்த மழை காரணமாக வறண்டு கிடந்த பாபநாசம் அணைக்கு நீர்வரத் தொடங்கி உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் அதலபாதாளமான 9 அடிக்கு சென்றது. அணையின் உள்பகுதி வெடிப்பு விழுந்து, தேங்கிய சகதி தண்ணீரில் உள்ள ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இந்த நிலையில் தற்போது மலைகளின் நீர் கசிவினால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 22.69 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை திறந்து வைக்கப்பட்டுள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 9.45 அடியாக உள்ளது. மணி முத்தாறு அணைக்கு வினாடிக்கு 57 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை மணி முத்தாறு அணை நீர்மட்டம் 62.24 அடியாக உள்ளது.

    இது போல ராமநதி, கடனாநதிக்கும் வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே நதியில் திறந்து விடப்படுகிறது.

    வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 2-வது வாரம் தொடங்கும். சில ஆண்டில் முன் கூட்டியே ஜூன் முதலிலேயே தென் மேற்கு பருவ மழை தொடங்கி விடும். அது போல தற்போது மழை பெய்து அணைகளுக்கு லேசாக தண்ணீர் வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதாலும், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் முதலில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #PapanasamDam #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவமழையால் அணைகள், குளங்கள் நிரம்பின. இதைத் தொடர்ந்து சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி பகுதிகளில் மிதமான மழையும், செங்கோட்டை, சிவகிரி, ஆய்க்குடி பகுதியில் லேசான மழையும் பெய்தது.

    மலை பகுதிகளில் பெய்த மழையினால் நேற்று குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாலையில் மழை நின்றதால் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 119.95 அடியாக இருந்தது. இன்று 120.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1423 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 120.67 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 103.90 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 567 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 480 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் கடனா அணையின் நீர்மட்டம் 79.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 65.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.33 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 32.5 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 29.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.74 அடியாகவும், அடவிநயினார் அணை 74 அடியாகவும் உள்ளன.

    பாபநாசம் கீழ் அணை மூலமாக மொத்தம் 1216 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-58, சேர்வலாறு-39, மணிமுத்தாறு-24.8, கடனா-18, அம்பை-5.4, சேரன்மகாதேவி-5.8, தென்காசி-5, பாளை-4, நெல்லை-3.3., ஆய்க்குடி-3, செங்கோட்டை-2, சிவகிரி-2, குண்டாறு-1. #PapanasamDam #ManimutharDam


    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் பழையகுற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #OldCoutralam
    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனினும் நெல்லை மாவட்டத்தில் இன்னும் பருவமழை முழுமையாக பெய்யவில்லை. ஏற்கனவே தென்மேற்கு பருவமழையின் போது அணைகள், குளங்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் நெல்சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் பட்சத்தில் மேலும் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த 2 மாதமாகவே வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனிடையே இன்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 8 மணி வரை நீடித்தது.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. பழைய குற்றால அருவியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயினருவி, ஐந்தருவியில் அதிகளவு தண்ணீர் விழுந்தது.



    இதே போல் பாபநாசம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அகஸ்தியர் அருவியிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #OldCoutralam

    மேற்கு தொடர்ச்சி மலையில் வெகுவாக மழை குறைந்தது. ஆனாலும் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்ததால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. வறண்டு கிடந்த சேர்வலாறு அணை 3 நாட்களில் 100 அடியை தாண்டியது.

    இந்த நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையில் வெகுவாக மழை குறைந்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக அடவி நயினார் அணைப்பகுதியில் மட்டும் 12 மில்லி மீட்டரும், குண்டாறு பகுதியில் 9 மில்லி மீட்டரும், செங்கோட்டை நகரப்பகுதியில் 1 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ஆனாலும் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1061 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து205 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 63.90 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 2 ½ அடி உயர்ந்து இன்று காலை 66.20 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 813 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 109.78 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை 1 அடி உயர்ந்து 83.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 912 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கடனாநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 61 அடியாகவும், ராமநதி அணை 1 அடி உயர்ந்து 69.25 அடியாகவும், கருப்பாநதி அணை ஒரே நாளில் 7 அடி உயர்ந்து இன்று 70.21 அடியாகவும், குண்டாறு அணை 2 அடி உயர்ந்து 33.13 அடியாகவும், அடவிநயினார்அணை ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 106.50 அடியாகவும் உள்ளது.

    கொடுமுடியாறு அணை முழு கொள்ளளவும் நிரம்பி 52.50 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணையில் நீர்மட்டம் எதுவும் உயரவில்லை.

    குற்றால மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்வதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    தென்காசி:

    குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலமாகும். குற்றா லத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியது. சீசன் தொடங்கிய 4 நாட்கள் கழித்து, சாரல் மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.

    இதற்கிடையே குற்றாலத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இடையிடையே இதமான வெயிலும் அடிக்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கினாலும் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். மெயின் அருவியை போன்று பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.

    ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று ஐந்தருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    அருவியில் விழும் தண்ணீரின் அழகை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் ஐந்தருவிக்கு வந்து சென்றனர். மாலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் இரவில் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று மாலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலை முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்வதால் தொடர்ந்து இன்று காலை வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்ந்தது. இன்று காலையும் குற்றால மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதாலும், சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசுவதால் இன்னும் ஒருசில நாட்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டும் என்று அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இன்று (சனிக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.


    ×