search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்தது - அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
    X

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்தது - அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

    மேற்கு தொடர்ச்சி மலையில் வெகுவாக மழை குறைந்தது. ஆனாலும் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்ததால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. வறண்டு கிடந்த சேர்வலாறு அணை 3 நாட்களில் 100 அடியை தாண்டியது.

    இந்த நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையில் வெகுவாக மழை குறைந்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக அடவி நயினார் அணைப்பகுதியில் மட்டும் 12 மில்லி மீட்டரும், குண்டாறு பகுதியில் 9 மில்லி மீட்டரும், செங்கோட்டை நகரப்பகுதியில் 1 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ஆனாலும் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1061 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து205 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 63.90 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 2 ½ அடி உயர்ந்து இன்று காலை 66.20 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 813 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 109.78 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை 1 அடி உயர்ந்து 83.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 912 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கடனாநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 61 அடியாகவும், ராமநதி அணை 1 அடி உயர்ந்து 69.25 அடியாகவும், கருப்பாநதி அணை ஒரே நாளில் 7 அடி உயர்ந்து இன்று 70.21 அடியாகவும், குண்டாறு அணை 2 அடி உயர்ந்து 33.13 அடியாகவும், அடவிநயினார்அணை ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 106.50 அடியாகவும் உள்ளது.

    கொடுமுடியாறு அணை முழு கொள்ளளவும் நிரம்பி 52.50 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணையில் நீர்மட்டம் எதுவும் உயரவில்லை.

    Next Story
    ×