search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைவாழ் கிராமம்"

    • இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
    • அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அது தவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதள பரப்பிற்கு சென்றுவர வேண்டி உள்ளது.

    அந்த வகையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி வனப்பகுதியில் 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுமட்டுமின்றி சம்பகாட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மலைவாழ் மக்களின் குடியிருப்புகளைப் பாா்வையிட்டதுடன், அவா்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தாா்.
    • உதவித் தொகை வழங்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா்.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்தூா் ஆகிய செட்டில்மென்ட் கிராமங்களில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டாா்.அப்போது அங்கு வசித்து வரும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளைப் பாா்வையிட்டதுடன், அவா்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தாா்.

    இதில் ஜாதிச் சான்று, குடும்ப அட்டை, தகுதியுள்ள நபா்களுக்கு முதியோா் உதவித் தொகை வழங்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, கோடந்தூரில் நடைபெற்ற மருத்துவ முகாமையும் கலெக்டர் பாா்வையிட்டாா்.ஆய்வின்போது, உடுமலை கோட்டாட்சியா் ஜஸ்வந்த்கண்ணன், மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் மற்றும் வனத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

    • மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.
    • மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் வனத்தில் சீமாறு புல் உட்பட பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் குறைந்த அளவு வருவாயை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.எனவே மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன. அதில் மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.இப்பயிற்சியை கரட்டுப்பதி, தளிஞ்சி, கோடந்தூர், நல்லாறு காலனி உட்பட குடியிருப்புகளை சேர்ந்த 400க்கும் அதிகமான பெண்கள் பெற்றுள்ளனர்.

    ஆனால் இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள அவர்களுக்கு கால் மிதியடி தயாரிப்பதற்கான எந்திரம் இல்லை. இதனால் பயிற்சி பெற்றும் சிறுதொழிலை துவக்க முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு கிராம கூட்டமைப்பு வாயிலாக எந்திரம் மற்றும் தொழில் துவங்க கடனுதவி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும் தமிழக அரசு சார்பில் தற்போது வன உரிமைச்சட்டத்தின் கீழ் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. சிறு தானியங்கள் மற்றும் இதர சாகுபடிகளை மலைவாழ் மக்கள் துவக்கியுள்ளனர்.எனவே வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தேவையான பயிற்சி வழங்கவும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ×