search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை கூட்டாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மலைவாழ் கிராமங்கள் துண்டிப்பு
    X

    கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையில் தவிக்கும் மலைவாழ் மக்கள்

    உடுமலை கூட்டாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மலைவாழ் கிராமங்கள் துண்டிப்பு

    • இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
    • அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அது தவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதள பரப்பிற்கு சென்றுவர வேண்டி உள்ளது.

    அந்த வகையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி வனப்பகுதியில் 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுமட்டுமின்றி சம்பகாட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×