search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் கல்லூரி"

    • கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.
    • கருத்தரங்கில் 267 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன

    மணவாளக்குறிச்சி :

    வெள்ளிச்சந்தைஅருகில் உள்ள அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் கிருஷ்ணசுவாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் விஜிமலர் தலைமை தாங்கினார்.

    கேரள பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரசாரா மற்றும் பெங்களூர் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் நூர்நிகார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.

    கல்லூரி துணை தலைவர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்குநர் தருண் சுரத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் 267 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக சுங்கான்கடை அய்யப்பா கல்லூரி பேராசிரியை காயத்ரி, பெண்கள் கிறித்தவ கல்லூரி பேராசிரியை கிறிஸ்டி கிரேஸ், பெங்களூர் டி சேல்ஸ் கல்லூரி பேராசிரியை அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது
    • இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற புதிய கல்லூரி அவினாசி- மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை தொடங்கி உள்ளது.

    இதில் பி.காம், பி.காம்(சி.ஏ.), பி.பி.ஏ., பி.எஸ்சி. (சி.டி.எப்) பி.எஸ்சி. சி.எஸ். (ஏ.ஐ.) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கல்லூரியில் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் கல்லூரியில் சிறப்பு கணபதி ஹோமம் பூஜை திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓ.கே.எம்.கந்தசாமி, துணைத்தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பி.வி.எஸ். பி.முருகசாமி, இணைச் செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி, கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்பட அறக்கட்டளை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாக நன்கொடை இல்லாமல் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் இக்கல்லூரி முதல்வர் 20 ஆண்டுகள் கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்தவர். அனுபவமிக்க பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கல்லூரி முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றில் ஊக்குவிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  

    • ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
    • சட்டசபையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் பேசியதாவது:-

    முருகனின் அறுபடை வீடுகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலா துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆன்மீக சுற்றுலா வெளிநாட்டவர்களுக்கும், வெளிமாநிலத்தவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் புதுமையாக இருக்கும்.

    இதுபோல் ராமேசுவரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோவில் போன்ற மிகச்சிறப்பு மிக்க கோவில்களுக்கு ஒவ்வொரு ஊரிலிருந்தும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.

    சுற்றுலா துறையின் மூலம் தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்து மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலும் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 53 தமிழ்நாடு ஓட்டல்களை முறையாக பராமரித்து தரம் உயர்த்தி நவீனப்படுத்த வேண்டும்.

    அனைத்து சுற்றுலா தலங்களிலும் தகவல் மையம் அமைக்க வேண்டும். அதிக பயணிகள் வரும் இடங்களை கண்டறிந்து, அரசு அவற்றிற்கு சுற்றுலா மையம் என்ற அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    ஒரு சுற்றுலா தலத்திலிருந்து மற்றொரு சுற்றுலா தலத்திற்கு நேரடி பஸ் வசதி இருக்க வேண்டும். மலை, கடல் போன்ற ஆபத்தான பகுதிகளில் உயிர் காக்கும் மருத்துவ வசதி உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும். இதன் மூலம் வருவாயை அதிகரிக்கலாம். சுற்றுலா துறையும் மேம்படும். நமது கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழியும் வளர்ச்சி அடையும்.

    ராஜபாளையம் தொகுதியில் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் அணைப்பகுதியையும், சஞ்சீவி மலையையும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். மேலும் அய்யனார் கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும்.

    ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக தென்காசி ரோடு வரையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் 35-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
    • முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 35-வது விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி தலைமை வகித்து கல்லூரி கொடியை ஏற்றினார்.

    ராமநாதபுரம் மாவட்ட கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி தேசியக்கொடியையும், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ரோஷி பெர்னான்டோ, தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவி ஜெய்னம்பு பாத்திமா ஆகியோர் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றினர்.

    கல்லூரி முதல்வர் சுமையா முன்னிலை வகித்தார். இதில் மாணவிகளின் அணிவகுப்பு நடந்து. ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், சாகசங்கள், உடற்பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி, ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    முடிவில் மாணவி நூரூர் ருஸ்லா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுமையா, சீதக்காதி அறக்கட்டளையின் துணை பொது மேலாளர் சேக் தாவூத் கான் ஆலோசனையின் பேரில் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை.
    • கைப்பந்து, கூடைப்பந்து, செஸ், பேட்மின்டன், பால் பேட்மின்டன் (பூப்பந்து), டேபிள் டென்னிஸ் ஆகிய 6 விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி சார்பில் மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ விளையாட்டு போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டுக்கான மகளிர் கல்லூரிகள் இடையேயான வாஸ்போ வினளயாட்டு போட்டிகள் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது.

    கைப்பந்து, கூடைப்பந்து, செஸ், பேட்மின்டன், பால் பேட்மின்டன் (பூப்பந்து), டேபிள் டென்னிஸ் ஆகிய 6 விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.

    கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.15 ஆயிரம் , ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பால் பேட்மின்டன் போட்டிக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, 5000 கிடைக்கும். செஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் ஆகிய விளையாட்டுகளில் முதல் 3 இடங்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள கல்லூரிகள் வருகிற 10-ந்தேதிக்குள் 9840737407 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி உயர்கல்வி இயக்குனர் அமுதா சுமன் தெரிவித்துள்ளார்.

    • ஆலங்குளத்தில் அரசு பெண்கள் கல்லூரி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
    • தொடர்ந்து மாணவிகள் அங்கேயே தங்கள் கல்வியைத் தொடரலாம் என ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் அரசு பெண்கள் கல்லூரி தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    இந்த கட்டிடத்தில் போதிய வகுப்பறைகள் இல்லை என்பதால், கல்லூரியில் உள்ள 1000 மாணவிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளை 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணி அண்ணா மகளிர் கல்லூரிக்கு சென்று பயில கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.

    ஆனால் வெகுதூரம் சென்று படிப்பதால் வீடு திரும்ப தாமதமாகும், கூடுதல் செலவினங்கள் ஏற்படும் என கூறி கடந்த 3 நாட்களாக மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி, தற்காலிகமாக கல்லூரி செயல்படும் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது அங்கேயே போதிய இடம் இருப்பதும் தொடர்ந்து மாணவிகள் இங்கேயே தங்கள் கல்வியைத் தொடரலாம் என்பதும் தெரிய வந்தது.

    தொடர்ந்து கட்டிட உரிமையாளர் டாக்டர் செந்திலிடம் இது தொடர்பாக பேசி முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி காலை, மாலை என இரு பிரிவுகளாக இங்கேயே நடைபெறும் என ஆர்.டி.ஓ. கூறினார்.

    இந்த ஆய்வின் போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், மாவட்ட பிரதிநிதி சாமுவேல் ராஜா, அவைத்தலைவர் ஜோசப், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், பேரூராட்சி துணைத்தலைவர் ஜான்ரவி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாலமன் ராஜா, கணேசன், ஒன்றிய பிரதிநிதி ஆதி, கோட்டப் பொறியாளர் காளீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ரத்தினம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ராஜேஸ்வரி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்லூரி தோழிகளை மீண்டும் ஒன்று சேர்க்க வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கினார்.
    • 32 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை மகிழ்ச்சியுடன் பரிமாறி கொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புனித சிலுவை மகளிர் கல்லூரியில் 1990-ம் ஆண்டு வணிகவியல் துறையில் படித்து முடித்த மாணவிகள் தற்போது திருமணமாகி வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும், வெளிமாவட்டங்களிலும் வசித்து வருகிறார்கள்.

    இவர்களில் சென்னையில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்லூரி தோழிகளை மீண்டும் ஒன்று சேர்க்க வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கினார்.

    இதன்மூலம் தன்னுடன் படித்த தோழிகள் அனைவரையும் ஒன்றிணைத்தார். இதில் சிலர் இறந்து போனதும், பலர் வெளிநாடுகளில் இருப்பதையும் கண்டுபிடித்தார்.

    பின்னர் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து சந்திக்க ஏற்பாடு செய்தார். படித்த கல்லூரியிலேயே இந்த சந்திப்பு நடந்தது. இதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பெண்கள் வந்தனர்.

    அவர்கள் கல்லூரியில் தாங்கள் படித்த வகுப்பறையிலேயே ஒன்று கூடி கேக் வெட்டியும், 32 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் மகிழ்ச்சியுடன் பரிமாறி கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் மற்றும் கல்லூரி முதல்வர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×