search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்சல் சேவை"

    • விரைவு தபால், பதிவு தபால், பார்சல் சேவை இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.

    ராஜபாளையம்

    தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் மதியம் 3 மணி வரை சேவைகள் இருந்தன. பின்னர் தனியார் கூரியர் சேவை தொடங்கப்பட்டு அபரிதமான வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக மத்திய அரசின் அஞ்சலக சேவைகளில் சுணக்கம் ஏற்பட்டது.

    மதியம் 3 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் இருந்து வந்த நிலையில் தனியார் கூரியர் சேவைகளில் இரவு 8 மணி வரை பார்சல் பெறப்பட்டு, மறுநாள் காலை போய் சேரும் நிலை இருந்தது.

    இதன் காரணமாக தபால் நிலையங்களில் கூட்டம் குறைந்து பொதுமக்கள் தனியார் கூரியர் சேவையை பயன்படுத்த தொடங்கினர். இதனால் அஞ்சலக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் இரவு 8 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ராஜபாளையம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் துணை கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் இந்த சேவையை தொடங்கி வைத்தார். தலைமை அஞ்சலக அதிகாரி சண்முகராஜ் வரவேற்றார். இதில் அஞ்சலக அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

    விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.

    • அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கப்பட்டது.
    • பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு போக்குவரத்து கழக செயலி மூலம் பார்சல் முன்பதிவு செய்யலாம்.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.

    தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது. முதலில் பஸ் டெப்போவில் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்கள் எளிதாக புக்கிங் செய்யும் வகையில் பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பார்சல் புக்கிங் செய்யப்படுகிறது.

    விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த செலவில் அரசு விரைவு பஸ்களில் பார்சல் அனுப்பி வருகின்றனர். காய்கறிகள், பழங்கள், தின்பண்டங்கள், பால் பொருட்கள் அதிகளவு பார்சலில் செல்கின்றன. ஆரம்பத்தில் தினமும் ரூ.10 ஆயிரம் வருவாய் கிடைத்த நிலையில் தற்போது ரூ.15 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது:-

    அரசு விரைவு பஸ்களில் குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்புதல் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் படிப்படியாக பார்சல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் பார்சல் அனுப்புகிறார்கள்.

    குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து மீன், தின்பண்டங்கள் அதிகளவில் பார்சலாக வருகிறது. சேலத்தில் இருந்து பன்னீர் பார்சல் அதிகமாக செல்கின்றன. பொதுமக்கள் தாங்கள் வீட்டில் இருந்தபடியே அரசு போக்குவரத்து கழக செயலி மூலம் பார்சல் முன்பதிவு செய்யலாம்.

    பிற நகரங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கும் விரைவாக பொருட்களை அனுப்பும் வசதி இருப்பதால் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு விரைவு பஸ்களில் குறைவான வாடகையில் 150 கிலோ வரை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது.
    • லாரியில் பொருட்களை அனுப்பினால் ஒன்று அல்லது 2 நாட்கள் கழித்து தான் கிடைக்கும்.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில் ஆகஸ்டு 3-ந்தேதி முதல் பார்சல் சர்வீஸ் தொடங்கப்பட உள்ளது. நீண்ட தூர பஸ் சேவையை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அளித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 1100 விரைவு பஸ்கள் இயக்கப் படுகின்றன.

    போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பார்சல் சேவையை தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களில் ஏற்கனவே இந்த சேவை கிடைக்கிறது.

    அதுபோல அரசு விரைவு பஸ்களில் குறைவான வாடகையில் 150 கிலோ வரை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளையக்கூடிய விவசாய பொருட்கள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை விவசாயிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல அரசு விரைவு பஸ்களை பயன்படுத்தலாம்.

    இதற்கான கட்டணம் கிலோ மீட்டர் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக கிளை மேலாளர்களிடம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் பார்சல் சேவைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் கூரியர் சேவையும் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்கு பிறகு இச்சேவை தொடங்கும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    லாரி, தனியார் பஸ்களை விட அரசு விரைவு பஸ்களில் பொருட்களை கொண்டு செல்ல வாடகை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாரியில் பொருட்களை அனுப்பினால் ஒன்று அல்லது 2 நாட்கள் கழித்து தான் கிடைக்கும். அரசு விரைவு பஸ்களில் ஒரே நாளில் கூட பெறும் வசதி உள்ளது. இரவில் ஏற்றி மறுநாள் காலையில் பஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    இதேபோல கூரியர் சேவையும் தொடங்கப்பட உள்ளது. முதலில் சென்னை, மதுரை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் கூரியர் சேவை அளிக்கப்படும். அதன் பின்னர் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். இன்று பெறப்படும் தபால் கவர்கள் மறுநாள் பஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தால் சுவிக்கி, சுமோட்டா மூலம் வீடுகளுக்கே கடிதங்கள், உறைகளை (கவர்) வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பல்வேறு பிரபலமான பொருட்கள் அனைத்தையும் இதன் மூலம் எளிதாக அனுப்பலாம்.

    சென்னை :

    தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில், குறுகிய நேரத்தில் அரசு விரைவு பஸ்களை விரைவு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகளின் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

    குறைந்த அளவிலான பொருள்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவில் அனுப்புவதற்கு ஏதுவாக பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாள்தோறும் அனுப்ப வேண்டிய பொருள்களை 2 ஊர்களுக்கு இடையே அனுப்பும் வகையில் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

    இந்த சேவை வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாதம் முழுவதும் பஸ்களில் உள்ள சரக்கு வைக்கப்படும் பெட்டிகளை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்து கொள்ளலாம்.

    சரக்கு பெட்டிகளில் புகழ்பெற்ற நெல்லை அல்வா, ஊத்துக்குளி வெண்ணெய், தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரபலமான பொருட்கள் அனைத்தையும் இதன் மூலம் எளிதாக அனுப்பலாம். சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயனடையலாம்.

    பிற ஊர்களிலில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை கொண்ட பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்தவகையில் திருச்சி (331 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, மதுரை (459 கிலோ மீட்டர்) தினசரி ரூ.300, மாதம் ரூ.9 ஆயிரம், கோவை (510 கிலோ மீட்டர்) தினசரி ரூ.330, மாதம் ரூ.9 ஆயிரத்து 900, சேலம் (341 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நெல்லை (622 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, தூத்துக்குடி (601 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, செங்கோட்டை (645 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, நாகர்கோவில் (698 கிலோ மீட்டர்) தினசரி ரூ.420, மாதம் ரூ.12 ஆயிரத்து 600.

    கன்னியாகுமரி (740 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, மார்த்தாண்டம் (728 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி (428 கிலோ மீட்டர்) தினசரி ரூ.270, மாதம் ரூ.8 ஆயிரத்து 100, ஓசூர் (317 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நாகப்பட்டினம் (353 கிலோ மீட்டர்) தினசரி ரூ.240, மாதம் ரூ.7 ஆயிரத்து 200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல்களை அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினார்கள்.

    ×