search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்ட மசோதா"

    • படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
    • ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரியை உயர்த்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டது.

    அதன்படி சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள். பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    வாகனங்களுக்கான வரியை உயர்த்தி சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வாகனங்களுக்கான புதிய வரி நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கும் மேல் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 20 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு வருடத்துக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்கு உள்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8.25 சதவீதமும், ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 10.25 சதவீதமும், ஓராண்டு முதல் 2 ஆண்டுக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8 சதவீதமும், ரூ.1லட்சத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 10 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ் நாள் வரி அதன் விலைக்கு ஏற்ப 6 சதவீதம் முதல் 9.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    2 ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்கு மேல் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட புதிய கார்களுக்கு வாழ்நாள் வரி 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களுக்கு 20 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி ரூ.5 லட்சத்துக்கு கார் வாங்கினால் ரூ.60 ஆயிரம் வாழ்நாள் வரியும், ரூ.1 லட்ச த்துக்கு மோட்டார்சைக்கிள் வாங்கினால் ரூ.10 ஆயிரம் வாழ்நாள் வரியும் செலுத்த வேண்டும்.

    சரக்கு வாகனங்களில் சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் கிலோ முதல் 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 முதல் ரூ.3100 வரை எடைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு உள்ளது.

    வாடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகங்களில், 35 பேர் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான காலாண்டு வரி ரூ,4,900 ஆகும். 35 பேருக்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    டிரெய்லர் வாகனங்களுக்கு ஏற்றப்படும் எடையின் அளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் 4 பேர் பயணிக்கும் வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்படுகிறது.

    கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.15 ஆயிரம், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்கக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ஓட்டுனர் சேர்த்து 7 முதல் 13 பேர் வரை ஏற்றக் கூடிய ரூ.5 லட்சத்துக்கு உள்பட்ட புதிய சுற்றுலா சீருந்துகளுக்கான வாழ்நாள் வரி அதன் விலையில் 12 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 18 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 20 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    • ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன.
    • விளக்கங்கள் பெற நேரம் எடுக்கும் என்பதால், ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய மந்திரி அஜய் குமார் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது:-

    2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரப்பெற்ற 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த 24 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் இருந்து வரப்பெற்ற 23 மசோதாக்கள், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

    2014- 2022 காலகட்டத்தில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக 95 மசோதாக்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளன. இந்த சட்ட மசோதாக்கள் அனைத்தும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளன.

    மசோதாக்கள் தொடர்பாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஆராயும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கங்கள் மற்றும் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இதுபோன்று ஆலோசனை செயல்முறை, கருத்துகள் மற்றும் விளக்கங்களைப் பெறுவதற்கு நேரம் எடுக்கும். எனவே, ஒப்புதலுக்கான கால நிர்ணயம் எதுவும் பரிந்துரைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம்.
    • சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது.

    டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    ×