search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் புகார்"

    • வளர்ப்பு தந்தையின் உறவினர்களுக்கு ஆதரவாக பெற்ற தந்தை மீது பெண் புகார் கொடுத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    குழித்துறை:

    மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி வில்லு மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58). இவர் ஞாறான் விளையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜ். இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் அவர் தம்பி விஜயகுமாரின் மகளை 18 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்தார்.

    இந்நிலையில் பால்ராஜ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பின்பு அவரது மனைவி வசுமதி, வளர்ப்பு மகள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 4-ந்தேதி வசுமதியும் இறந்து விட்டார். இதனால் அவர்கள் தத்தெடுத்த மகள் தனியாக வசிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து அண்ணன் பால்ராஜ் வீட்டில் தனியாக வசித்து வரும் மகளை அழைத்து செல்ல அவரது பெற்ற தந்தை விஜயகுமார் நேற்று இரவு 10 மணிக்கு, அண்ணன் பால்ராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த மகளை தன்னோடு அழைத்த போது அவரை அங்கிருந்த உறவினர்கள் அனுப்ப மறுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது. இதில் விஜயகுமார் தாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அழைக்க சென்ற போது, கல்லுபாலத்தை சேர்ந்த பத்ரோஸ் ( 52 ), பயணம் பிரவீன் (22), சிதறால் ஜூலியட் (50), பயணம் விஜயகுமார் (52), நாகர்கோவில் ஐடா (42), கலா (43) உள்பட 10 பேர் சேர்ந்து தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஸ்கூட்டியை பறித்து கொண்டதாகவும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே விஜய குமார் மீது அவரது மகளும் தனியாக ஒரு புகார் கொடுத்தார். அதில் தான், தனது வளர்ப்பு தாயார் வசுமதி வீட்டில் வசித்து வருவதாகவும், தற்போது பிளஸ்-2 முடித்து மேற்படிப்பு படிக்க இருப்பதாகவும், இந்த நேரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து கதவை உடைக்க முயற்சித்ததோடு, தனது உறவினர் சுரேஷ் என்பவரை கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும், புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பெண்ணின் பெற்ற தந்தை விஜயகுமார், அபிஷேக், சசிகுமார், அனுஜ் உள்பட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வளர்ப்பு தந்தையின் உறவினர்களுக்கு ஆதரவாக பெற்ற தந்தை மீது பெண் புகார் கொடுத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது.
    • எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.

    நாகர்கோவில்:

    மயக்கும் பேச்சு, ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றால் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறும் பெண்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். அந்த வகையில் டாக்டர் என ஆசைவார்த்தை கூறியவரை நம்பி, 2 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார் நர்சு ஒருவர். கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவர தற்போது தனது வாழ்க்கைக்கு வழி கேட்டு போலீசில் புகார் கொடுத்து கண்ணீருடன் நிற்கிறார் அவர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், திட்டுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு மதம் மாறி விட்டதால், சுன்னத் செய்ய வேண்டும் என ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் தான், நர்சை தன் வலையில் வீழ்த்தி தற்போது 2 குழந்தைகளுக்கு தாயாக்கி விட்டு, கைவிட்டுள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட நர்சு போலீசில் கூறியதாவது:-

    சுன்னத் செய்வதற்காக வந்த வாலிபர், தான் ஒரு டாக்டர் என என்னிடம் அறிமுகமானார். சேலம் மாவட்டத்தில் கிளினீக் மற்றும் லேப் வைத்துள்ளதாக கூறிய அவர், இணையதளத்தில் அதன் விவரங்களை என்னிடம் காண்பித்தார். அதில் கிளினீக் படம் மற்றும் டாக்டர் என அவரது பெயர் போன்றவை இருந்தன.

    தொடர்ந்து ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், எனது கிளினீக் மற்றும் லேப்பில் பணியாற்ற ஒரு நர்சு தேவை என்றும் நல்ல சம்பளம் தருகிறேன் என்றும் கூறினார். மேலும் தான் ஒரு அனாதை எனவும் மருத்துவராகி பணமும் மரியாதையும் கிடைத்தாலும் அன்பு காட்டுவதற்கு யாரும் இல்லை எனவும் நைசாக பேசினார்.

    அவரது மோசடி வார்த்தைகளை நம்பிய என்னை காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் ஒரு மாதத்தில் சேலம் அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்தோம்.

    ஆனால் சில நாட்களில் கணவர், மருத்துவர் இல்லை என்பதும் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் என்பதும் தெரிய வர நான் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவர் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

    இதுபற்றி கேட்டபோது, குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தாக்கினார். இந்த நிலையில் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் வேறு வழியின்றி அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தினேன்.

    இதற்கிடையில் அவருக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் தகராறு அதிகமானது. 2 குழந்தைகளையும் என்னையும் அருமநல்லூர் அழைத்து வந்த கணவர், வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக தெரிவித்தார். அவர் திருந்தினால் சரி என்றேன்.

    வெளிநாட்டு வேலைக்குச் செல்ல பணம் வேண்டும் என்று கேட்டார். இதனால் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தேன். தொடர்ந்து வெளிநாடு சென்ற அவர் அங்கும் சரியாக வேலை பார்க்காமல் ஊர் திரும்பி விட்டார்.

    இந்த நிலையில் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.

    எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு என பலருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பூதப்பாண்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கம்பெனிக்கு விரைந்து சென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளரை கண்டித்தனர்.
    • வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அ.குமாரபாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் குமாரபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று நான் டெய்லரிங் எந்திரத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது துணி எந்திரத்தில் சிக்கி கொண்டது. இதனை சரி செய்ய நான் பனியன் கம்பெனி உரிமையாளரை அழைத்தேன். உடனடியாக அங்கு வந்த உரிமையாளர் சரி செய்வது போல நடித்து எனது உடலில் கை வைத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    உடனடியாக நான் இது குறித்து எனது ஆண் நண்பர்களுக்கு தெரிவித்தேன். அவர்கள் கம்பெனிக்கு விரைந்து சென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளரை கண்டித்தனர். எனவே வேலை செய்யும் இடத்தில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் கம்பெனி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுந்தரமூர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இதனை அவர் மறைத்து இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்தார்.
    • இளம்பெண் சுந்தரமூர்த்தியின் பெற்றோரை சந்தித்து கூறியபோது அவர்கள் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    போரூர்:

    நாகப்பட்டினத்தை சேர்ந்த 24 வயது பட்டதாரி இளம்பெண் தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் வடபழனியில் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் சுந்தரமூர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண்ணின் பக்கத்து ஊரை சேர்ந்தவர் என்பதால் இளம்பெண் அவரிடம் நெருங்கி பழகி வந்தார்.

    சுந்தரமூர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. ஆனால் இதனை அவர் மறைத்து இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்தார். இதில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து இளம்பெண் சுந்தரமூர்த்தியிடம் திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்தினார். ஆனால் சுந்தரமூர்த்தி 'கர்ப்பத்தை கலைத்தால் மட்டுமே இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடியும்' என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய இளம்பெண் தனது கர்ப்பத்தை கலைத்தார்.

    ஆனால் சுந்தரமூர்த்தி திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இது பற்றி இளம்பெண் சுந்தரமூர்த்தியின் பெற்றோரை சந்தித்து கூறியபோது அவர்கள் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், காதலன் சுந்தரமூர்த்தி மற்றும் அவரது பெற்றோர் மீது வடபழனி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இது பற்றி போலீசார் விசாரித்த போது தான் சுந்தரமூர்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது தெரிந்தது.

    இதனை கேட்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக சுந்தர மூர்த்தி மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எனது பெற்றோர் மற்றும் எனது சகோதரர்கள் என்னை தொந் தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
    • என்னை பற்றி தவறான தகவல்களை அவதூறாக சமூகவலை தளங்களில் பரப்பி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெங்கு செட்டிபட்டியை சேர்ந்த கமலேசன் மகள் கவிதா (வயது 25). எம்.காம் பட்டதாரி.

    இவர் தருமபுரி எஸ்.பி. கலைசெல்வனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் காரிமங்கலம் அருகே கெங்கு செட்டிபட்டியில் எனது பெற்றோர் கமலேசன், மஞ்சுளாவுடன் வசித்து வந்தேன்.

    எனது அக்கா சத்யாவிற்கும், எனது அத்தை மகனுக்கும் இடையே நடந்த விருப்ப மில்லாத திருமணத்தால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு நான்தான் காரணம் என எனது பெற்றோர் மற்றும் எனது சகோதரர்கள் என்னை தொந் தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதனால் கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி நான் எனது வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறேன்.

    இந்த நிலையில், எனது உறவினர்களே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக என்னை பற்றி தவறான தகவல்களை அவதூறாக சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

    எனவே மனஉளைச்சலில் இருக்கும் எனக்கு உயிர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு செல்வதாக கூறி விட்டு ராஜேஷ்குமார் பிலாத்து கிராமத்துக்கு வந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஊராளிப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 28). இவர் டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

    வடமதுரை அருகே உள்ள பிலாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (33). இவர் சென்னை பெருங்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் யாருக்கும் தெரியாமல் சென்னையிலேயே திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்தனர்.

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு செல்வதாக கூறி விட்டு ராஜேஷ்குமார் பிலாத்து கிராமத்துக்கு வந்தார். அதன் பிறகு தனது மனைவியிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த மகாலெட்சுமி வேறொரு செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதால் இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது. எனவே தன்னை மறந்து விடவும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாற்று சமூகம் என தெரிந்தும் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கர்ப்பிணியானபோது சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறி கருவை கலைத்து விட்டதாகவும் கூறினார்.

    தற்போது பெற்றோரின் பேச்சை கேட்டுக்கொண்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பெண்ணை மதம் மாற வற்புறுத்தியதாக தெரிகிறது.
    • பெண்ணின் பெயரை மாற்றியதாகவும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் எனக்கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் பிகர்னகட்டே பகுதியை சேர்ந்தவர் கலீல். இவர் அப்பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு பாண்டேஸ்வா் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய சென்று வந்தார். இதனால் கலீலுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த பெண் அவரது கடையில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி கலீல் கல்லாப்பு பகுதியில் உள்ள வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

    பின்னர் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அந்த பெண்ணை மதம் மாற வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும், அந்த பெண்ணின் பெயரை ஆயிஷா என மாற்றியதாகவும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் எனக்கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த இளம்பெண் பாண்டேஸ்வர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஒரு டாக்டரும் தன்னை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகவும், அய்மான் என்பவர் நட்பாக பழகி உல்லாசத்துக்கு வற்புறுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி புதிய மதமாற்றத் தடைச் சட்டம், மற்றும் சட்டப் பிரிவு 354 (குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்), 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்)மற்றும் 506 (கொலை மிரட்டல்)ஆகியவற்றின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • கோவையை சேர்ந்த கோபி என்பவர் எனக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம்.
    • திருமணம் செய்வதாக உறுதி அளித்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய கோபி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை நியூசித்தாபுதூர் சின்னசாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நான் ஊழியராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 2017-ம் ஆண்டு கோவையை சேர்ந்த கோபி (32) என்பவர் எனக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம்.

    பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தோம். நாளடைவில் அது எங்களுக்குள் காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார்.

    அவரது பேச்சை உண்மை என நம்பினேன். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு எனது வீட்டிற்கு அவர் வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அவர் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதேபோன்று அடிக்கடி தனிமையில் இருவரும் சந்தித்து வந்தோம். பின்னர் நான் அவரிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றேன்.

    ஆனால் அதன் பின்னர் அவர் என்னிடம் பேசுவதையும், என்னை பார்ப்பதையும் தவிர்த்தார். மேலும் என்னுடனான தொடர்பையும் கைவிட்டார்.

    எனவே திருமணம் செய்வதாக உறுதி அளித்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய கோபி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×