search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்டர்"

    • உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
    • அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் காலியானது.

    இதனையடுத்து ஜாஸ்மின் ஆன்லைன் மூலம் பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகலில் தயிர்சாதம், சாம்பார் சாதம், பேபி கார்ன் ஆகியவற்றை ஆர்டர் செய்தார்.

    பின்னர் உணவு வந்து சேர்ந்தது. அவருக்கு வந்த உணவை அவரும் அவரது குழந்தையும் சாப்பிட தொடங்கினர். திடீரென உணவில் டீ தூள் போன்று பொட்டலம் ஒன்று ஸ்பூனில் தட்டுப்பட்டது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாஸ்மின் அதனை எடுத்துப் பார்த்தார். அப்போது அது கூல் லீப் எனப்படும் புகையிலை என்பது தெரியவந்தது.

    இதனை பார்த்து ஜாஸ்மின் அதிர்ச்சியடைந்தார். உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடடினயாக அவர் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருந்தது.

    உணவில் புகையிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு 10 முறைக்கும் மேல் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.

    ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது போன்று அலட்சியமாக உணவு விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த தகவல் வெளியானதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள் புகையிலை கலந்த உணவை கொடுத்த உணவகத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் சுகாதாரமற்ற முறையில் பணியாற்றிய ஊழியர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணியுமாறும், கடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வினியோகிக்கப்பட்ட உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரித்தனர்.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதவிர கடையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கூறும்போது, சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டோம். உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக நோட்டீசும் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் நிர்வாகத்தின் விளக்கத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • வேலை நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் பனியன் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர்.
    • கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பனியன் ஆடை விற்பனை அதிகரித்து வருகிறது.

    திருப்பூர் :

    வேலை நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் பனியன் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டும ல்லாது, நடுத்தர வயதினரும், வயதானவர்களும், டி-சர்ட், பனியன், ஷார்ட்ஸ் என பனியன் ஆடைகள் அணிவதையே விரும்புகின்றனர்.உள்ளாடைகள் மட்டும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு சென்ற நிலை மாறியது. பனியன் ஆடைகளும் அதிகம் விற்கப்படுகிறது. தமிழக மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பனியன் ஆடை விற்பனை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் விற்பனை பாதிக்கப்பட்டதால், புதிய ஆர்டர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பெங்களூரு, கேரளா, புனே, லூதியானா போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளின் கொள்முதலும் குறைந்திருந்தது. கையிருப்பு ஆடைகள் தீர்ந்துவிட்டதால் புதிய ஆர்டர் விசாரணையும், வரத்தும் கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் காதர்பேட்டை வளாகத்தில் உள்ள பனியன் வியாபாரிகளுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து ஆர்டர் கொடுக்கின்றனர். அவ்வப்போது நேரில் வந்து மொத்தமாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர். நூல்விலை உயர்வால் கடந்த ஆண்டு முழுவதும் சோர்ந்து போயிருந்த காதர்பேட்டை வியாபாரம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

    கடந்த சில மாதங்களாக, நூல்விலை குறைவான நிலையில் தொடர்கிறது. புதிய ஆர்டர் விசாரணையும், கொள்முதலும் அதிகரித்து ள்ளது. இதன்காரணமாக உள்நாட்டு பனியன் வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பனியன் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கிற்கு பின் திருப்பூர் பனியன் ஆடை வியாபாரம் குறைந்தது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட நூல் விலை உயர்வால் வியாபாரமில்லாமல் பல கடைகள் மூடப்பட்டன.வியாபாரம் மிகக்குறைவாக நடந்து வந்தது. தற்போது, வடமாநிலங்களிலும் கேரள சந்தையிலும் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளதால் வியாபார விசாரணை அதிகரித்துள்ளது.நூல்விலை சீராக இருப்பதால், விளையாட்டு சீருடைகள், உள்ளாடைகள், குழந்தைகள் ஆடைகள் விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. உள்நாட்டு பனியன் வியாபாரத்தை பொறுத்தவரை நூல்விலை இதேநிலையில் இருந்தால் போதும். மேலும் சில மாதங்களில் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்ததோடு சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.
    • பெண் தொழிலாளர்கள் பொருளாதாரம் உயரும்.

    திருப்பூர் :

    தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பின்னலாடை தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் நல சட்டத்திருத்த மசோதா தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பெருமளவு வலுசேர்க்கும். திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் என்பது பருவகாலம் சார்ந்த தொழில். முந்தைய சட்டத்தின்படி, ஆர்டர்கள் அதிகம் இருந்த காலத்தில், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆர்டர்கள் அனுப்பி வைக்கும் நேரத்திலும் வேலை வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதன்காரணமாக தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்ததோடு சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.

    பின்னலாடை நிறுவனங்கள் குறித்த நேரத்தில் ஆடை உற்பத்தியை முடிக்க முடியாமல் காலதாமதமாக ஆர்டர்களை முடித்து, அதை கப்பலில் அனுப்புவதற்கு பதிலாக, விமானத்தில் 10 மடங்கு கட்டணத்தை செலுத்தி அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக உற்பத்தி நிறுவனத்தின் முதலீடு பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நிறுவனம் முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வேலையிழப்பு, உற்பத்தி இழப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டது.

    அதிகப்படியான நேர வேலை தருவதற்கான சூழல் இல்லாத காரணத்தால், பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் போட்டி நாடுகளுக்கு தொடர்ந்து செல்கிறது. கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை நோக்கி உலகளவில் வர்த்தக வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற அடிப்படை சீரமைப்பு நிச்சயமாக தொழில் வாய்ப்புகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க உதவும்.

    ஆயத்த ஆடை தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நேரத்தில், இதுபோன்ற சட்ட திருத்தங்கள் சவால்களை எளிதாக எதிர்கொள்ள உதவுகிறது. இந்த சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், மக்களின் பொருளாதார மேம்பாட்டிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்தனையை செயலாக்கிடும் பணியில் துணை நிற்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோருக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

    தென்னிந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியுள்ளதாவது:- சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்த்தபடி 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் வர்த்தகம் ரூ.87 லட்சம் கோடியை எட்டும். ஏற்றுமதியாளர்கள் தமிழகத்தை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும்போது தொழிலாளர்களுக்கு சாதகமான நேரத்தை மாற்றியமைக்க முடியும். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் பொருளாதாரம் உயரும். இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. இந்த நடவடிக்கை மூலமாக தொழில் நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகள் பெருகும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆர்டர்களை முடித்து அனுப்பும் சூழ்நிலையில் வேலைநேரம் அதிகரிப்பால் மிகுந்த பலன் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம்.
    • தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலை நெசவு செய்து தர தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஆர்டர் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தாமதமாக தீபாவளி சேலை ஆர்டர் வழங்கப்பட்டதால் அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் சொக்கப்பன் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சேலை நெசவு செய்து தர கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பே ரூ. 4 கோடி வரை ஆர்டர் கொடுக்கும். இதனால் நாங்களும் தீபாவளிக்கு முன்பே சேலை நெசவு செய்து வழங்கிவிடுவோம். ஆனால் இந்த வருடம் தீபாவளி சேலை ஆர்டர் ரூ.1 கோடிக்கு கடந்த மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது. ஆர்டர் குறைவால் இந்த சங்கத்தை சேர்ந்த 450 கைத்தறி நெசவாளர்களுக்கு வருமான இழப்பு ஒரு புறம் இருந்தாலும் காலதாமதமாக கொடுத்த ஆர்டரை தீபாவளிக்குள் முடித்து தரமுடியாமல் கைத்தறி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    ஒரு கைத்தறியில் ஒரு சேலை நெசவு செய்திட 3 முதல் 4 நாட்கள் ஆகும். இனி வரும் காலங்களில் பண்டிகை கால ஆர்டர்களை முன்கூட்டியை வழங்க வேண்டும். மேலும் கணபதிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அதிகபடியான கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருப்பதால் இந்த சங்கத்திற்கு அரசு அதிக சேலை ஆர்டர் வழங்க வேண்டும் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது.
    • ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது.

    திருப்பூர் :

    உள்நாட்டு சந்தைக்காக பின்னலாடை ரகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரில் ஆயிரக்கணக்கில் உள்ளன.இந்நிறுவனங்களுக்கு கோடை, குளிர் பருவ காலங்கள், பொங்கல், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் அதிக அளவில் கிடைக்கிறது.

    பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை மிக முக்கியமானது. இப்பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வர்த்தகரிடமிருந்து திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிக அளவு ஆடை தயாரிப்பு ஆர்டர் கிடைக்கிறது. போனஸ் கிடைப்பதால் தொழிலாளர்களையும், தீபாவளி தித்திக்க செய்கிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது. அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, கொரோனாவால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தக மந்தநிலையால் நடப்பு ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது. கைவசம் போதிய ஆர்டர் இல்லாததால் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சார்ந்துள்ள நிட்டிங், சாய ஆலை, பிரின்டிங், எம்ப்ராய்டரி உட்பட அனைத்துவகை ஜாப்ஒர்க் துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.

    வருகிற அக்டோபர் 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா குறித்த கவலைகள் விலகியுள்ளன. தீபாவளி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் பின்னலாடை துறையினர்.நூற்பாலைகள், ஒசைரி நூல் விலைகளை ஒரே சீராக தொடர செய்து, வர்த்தகத்தை ஈர்ப்பதற்கு கைகொடுக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த ஆடை உற்பத்தியாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    • நூல் விலையை உயர்வால் கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் மந்தமாகியுள்ளது.
    • 3 மாதங்களாக 3 முதல் நான்கு எந்திரங்களை மட்டுமே இயக்க முடிகிறது.

    திருப்பூர் :

    பஞ்சு விலை உயர்வால், தமிழக நூற்பாலைகள் 18 மாதங்களாக தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வந்தன. ஆடை ரகங்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதன் எதிரொலியாக வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து திருப்பூருக்கு பின்னலாடை ஆர்டர் வருகை குறையத்துவங்கியது. நிட்டிங், டையிங், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல், காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் என பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து துறைகளின் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1-ந் தேதி கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் உற்பத்தி சங்கிலியின் முதல் நிலையில் உள்ள நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் இன்னும் வேகம் பெறவில்லை. ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து துணி தயாரிப்புக்கான ஆர்டர் வருகை குறைவால் நிட்டிங் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து நிட்டிங் நிறுவனஉரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    தொடர் நூல் விலை உயர்வால், கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் நிட்டிங் நிறுவனங்களின் இயக்கம் மந்தமாகியுள்ளது. எங்கள் நிறுவனத்தில் 15 நிட்டிங் எந்திரங்கள் உள்ளன. 10 ஆபரேட்டர்கள், பகல் இரவுக்கு தலா 2 வீதம் நான்கு ஹெல்பர்கள் பணியில் இருந்தனர். நாளொன்றுக்கு (2 ஷிப்ட்) 3ஆயிரம் கிலோ பின்னல் துணி தயாரானது.ஆனால் கடந்த 3 மாதங்களாக 3 முதல் நான்கு எந்திரங்களை மட்டுமே இயக்க முடிகிறது. நாளொன்றுக்கு 900 கிலோ அளவிலேயே துணி தயாரிப்பு நடக்கிறது.

    நான்கு ஆபரேட்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.பகலில் மட்டும் ஒரு ஹெல்பரை பணி அமர்த்தியுள்ளோம். துணி வியாபாரமும் மந்தமாகிவிட்டது. அதனால் துணி வர்த்தகர்களிடமிருந்து ஆர்டர் பெறமுடியாத நிலைக்கு நிட்டிங் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

    இம்மாதம் கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலை குறைந்துள்ளது. இதுனால் துணி தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். நூல் விலை மேலும் குறையும் என்கிற எதிர்பார்ப்பில் பெரும்பாலான ஆடை உற்பத்தியாளர்கள் நூல் கொள்முதலை தவிர்த்து வருகின்றனர்.

    ஏற்றுமதியாளர்களை பொறுத்தவரை நூல் விலை எவ்வளவு உயர்ந்தாலும் கைவசம் ஆர்டர் இருந்தால், கட்டாயம் நூல் கொள்முதல் செய்து விடுவர். சீசன் இல்லாததால் வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைந்துவிட்டது. எனவே நிட்டிங் உள்பட பின்னலாடை உற்பத்தி சங்கிலி, இயல்பான இயக்கத்துக்கு வருவதற்கு மேலும் இரண்டு மாதங்களாகும் நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    ×