என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101205"

    • ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது.
    • எந்தவொரு காரியத்தையும் துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை.

    கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது 'ஈகோ'வுக்கு வழிவகுத்துவிடும்.

    ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவர்தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுவது மனைவியை மனம் நோக செய்துவிடும். மற்ற சமயங்களில் அன்பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம்.

    மற்றவர்கள் முன்னிலையில் துணை தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணம்தான் ஈகோவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்படுவதை கணவர் பார்க்கும்போது அவருக்குள் தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும்.

    தானும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும்போது பாராட்ட வேண்டும். அதனைதான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும்.

    பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும். அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசுங்கள். அது அவருக்கு பிடித்து போய் விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்பார். அதனால் அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது.

    சில சமயங்களில் துணையின் செயல்பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்திற்கு ஆளாக நேர்ந்தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வதில் தவறு இல்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரிய வைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்களே தவறுகளை உணரும்போது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது.

    எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து செயல்படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம்தான் ஈகோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    • தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.
    • மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    இல்லற வாழ்க்கையில் இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தம்பதியரிடையே புரிதல் இருக்க வேண்டும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.

    கருத்து மோதல் தலைதூக்கும்போது ஒருசில வார்த்தைகளை உச்சரிப்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தை மற்றொருவருக்கு மன வேதனையை உண்டாக்கக்கூடும். அதனால் தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தை பிரயோகத்தை கவனமாக கையாள வேண்டும்.

    'உன்னால் என்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நீ கேட்டுத்தான் நடந்தாக வேண்டும்' என்ற ரீதியில் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அது துணையின் கோபத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அவருடைய ஆழ்மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துவிடும். அது ஆறாத மன காயமாக மாறிவிடவும் கூடும். அதனால் தன்னை சார்ந்திருந்துதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    எதிர்பாராதவிதமாக நிகழும் தவறுக்கு துணை காரணமாக இருக்கலாம். அது அவருக்கு தெரியாமலேயே நடந்திருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் முன்கூட்டியே அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் செய்த தவறுக்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட 'தன்னால் இப்படியொரு தவறு நடந்துவிட்டதே' என்ற வேதனை அவரை ஆட்கொண்டிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'நீதான் காரணம்' என்று துணை மீது குற்றம் சாட்டக்கூடாது. அது மோதல் போக்கை உண்டாக்கிவிடும். தவறை திருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதற்கு பதிலாக திசை திருப்பும் நடவடிக்கையாக மாறிவிடும்.

    எதேச்சையாக தவறுகள் நடக்கும்போது 'நீ ஒரு முட்டாள், உன்னால் அதற்கேற்பத்தான் செயல்பட முடியும்', 'நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவள்' என்பன போன்ற வார்த்தைகளை உபயோகித்து திட்டுவது துணையின் தன்மானத்தை சீண்டுவதாக அமையும். அவரது சுய கவுரவத்தை சிதைப் பதாகவும் அமைந்துவிடும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் துணையை விட கணவர் அதிக தவறுகளை செய்திருக்கக்கூடும். அவரது தவறான வழி நடத்தல்தான் தவறுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கும். அதனால் தவறுகள் நிகழும் பட்சத்தில் இருவரும் நிதானம் இழக்காமல் அதனை திருத்துவதற்கான முயற்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். துணை வருத்தப்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்திருந்தால் மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    அதேபோல் தவறு நிகழும்போது, 'நீ கடந்த முறையும் அப்படித்தானே செய்தாய்? இதுவே உனக்கு வாடிக்கையாகி விட்டது' என்றும் பேசக்கூடாது. அது உறவுக்குள் விரிசலை அதிகப்படுத்திவிடும். கணவர் தன் மீது எப்போதும் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை துணையிடம் விதைத்து விடும். குடும்ப மகிழ்ச்சியையும் சிதைத்துவிடும்.

    மேலும் தவறு நடந்துவிட்டால், 'எதனால் அந்த தவறு நிகழ்ந்தது?' என்பதை கண்டறி வதற்கே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'ஏன் இப்படி நடந்தது. எனக்கு உடனே பதில் சொல்' என்று கடுமையாக திட்டுவதும் கூடாது.

    நடந்த தவறை நினைத்து துணை வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை உணராமல், 'ஏன் எதுவும் பேசாமல் 'உம்'மென்று இருக்கிறாய்? வாயை திறந்து பதில் சொல்' என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ''நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இருவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போமா?" என்று சொல்லிப் பாருங்கள்.

    துணை முக மலர்ச்சியுடன் செயல்பட தொடங்கிவிடுவார். தவறுகளையெல்லாம் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். தேவையற்ற கருத்து மோதல்கள் எழுவதற்கு இடமிருக்காது. இல்லற வாழ்வில் நிம்மதியும் குடிகொள்ளும்.

    • தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும்.
    • சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம்.

    வாழ்க்கை, சாதாரணமான பயணம் இல்லை. மிக சிறந்த பயணமாகும். இந்த கோடை காலத்தில் பெரும்பாலும் பயணம் மேற்கொள்வோம். அதற்கான திட்டமிடுதலும், அக்கறையும், முன்னேற்பாடும் அப்பப்பா! சாதாரணமாக மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு இவ்வளவு திட்டமிடல் என்றால் வாழ்க்கை பயணத்திற்கு?!

    காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அன்றாடம் நாம் செய்யும் செயல்களைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்! நாம் பேசுவதையும் செய்வதையும் நாமே கண்காணிக்கின்றோமா? அதாவது, சுயமதிப்பீடு செய் கிறோமா? என்றால் கேள்விக்குறியே?

    நம்முடைய செயல்களை நாம் ஒரு போதும் சுயமதிப்பீடு செய்வதில்லை. 'இன்று நாம் என்னென்ன காரியங்கள் செய்தோம்? அவை நல்லவையா? கெட்டவையா? நம் செயல்களால் யாருக்கேனும் இழப்புகள் ஏற்பட்டனவா? யாருக்கேனும் நன்மைகள் செய்தோமா? இழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குச் செய்யவேண்டிய பரிகாரம் என்ன? யாருடைய மனதையாவது புண்படுத்தினோமா? யாருடைய உரிமைகளையாவது பறித்தோமா?' -இப்படி ஒவ்வொரு நாளும் சுய மதிப்பீடு செய்யும் வழக்கம் இருந்தால், நம் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டுவிடும்.

    வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியம் நம் தனிப்பட்ட உடல் நலம் மற்றும் நம் வேலைக்கான இலக்கினை அடைவதற்கான வழி. நம்முடைய பிரார்த்தனைகள் கூட உண்மையான நம்மைக் காண்பிப்பதில்லை. ஆனால் நம்முடைய ஆழ்ந்த விருப்பங்கள் மற்றும் லட்சியங்களே நாம் யார் என்பதைச் சொல்லி விடுகின்றன.

    நமது வாழ்க்கைப் பயணத்தில் புதிதாய் பிறப்பது என்பது மிக அவசியம். புதிதாய் பிறப்பது என்பது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் அது நிகழ வேண்டும். பிறப்பது என்பது வெறும் நிகழ்வு அல்ல. அது ஒரு புதிய பரிணாமம் ஆகும். இறக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பிறக்கவும் முடியும். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை எண்ணங்கள் இறந்தால் தான் நாம் புதிதாய் பிறக்க முடியும்.

    இன்று புதிதாகப் பிறப்போம் என்று சொன்னால், இதுவரை இருந்த பழையவற்றை எல்லாம் கழற்றி எறிந்து விட்டு புதிய சிந்தனையோடு புறப்பட்டு வருவது என்று அர்த்தம். புதிதாகப் பிறக்கின்ற போது "தான்" என்கின்ற தன்மை அழிந்து போகின்றது. புதிய உலகம் , புதிய வானம் , புதிய காற்று , புதிய செயல்கள், புதிய மனிதர்கள் என்று தன்னை விரிவுப்படுத்திக் கொள்பவர்கள் முதுமை அடைவதே இல்லை .

    லட்சியம் மிகுந்த எல்லாமே இளமை ததும்பும் அழகோடு மிளிர்கின்றன. நாம் நம் வாழ்க்கையிலும் தனித்தன்மையிலும் முழுமையை என்றும் நாட வேண்டும், அது நெஞ்சை விட்டு நீங்காத கொள்கையாக இருக்க வேண்டும். தனக்கு எந்த வகையிலும் கடவுள் குறை வைக்கவில்லை என்பதை உணர வேண்டும், கடவுளோடு நாம் ஒன்றித்திருக்கிறோம். அவர் நமக்கு அளித்திராத பரிசுகளே இல்லை என்கின்ற எண்ணப் போக்கே நாளடைவில் நம்முடைய வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லும்.

    வாழ்க்கையில் எல்லோருக்குமான தேவைகளும் ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கின்றன. ஆரோக்கியம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் உறவுகளின் மேம்பாடு இவைகள்தான் எல்லோருக்குமான அடிப்படை தேவைகள்.

    தன்னம்பிக்கை கொண்டவர்கள் முதலில் தன்னை நம்ப வேண்டும். 'நமக்கு நோய் வந்து விட்டதே, நம்மால் இனி எதுவும் செய்ய முடியாதே!' என மனந்தளரக் கூடாது. 'நமக்கு நோயே இல்லை. எந்த நோயாலும் நம்மை வெல்லமுடியாது!' என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். மனதில் நம்பிக்கைகொள்ளும் இந்த எண்ணத்தில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. நம் கண்முன்னே மாற்றம் ஏற்படும் ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

    நமது உடலிலும் மனதிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி நோயில்லாத வாழ்க்கையை நாம் அனுபவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நம்மை நாமே நோய்க்கு அடிமையாக்கிக்கொண்டு, அடிமை வாழ்க்கை வாழக்கூடாது. நோய் என்ற கூண்டிற்குள் நம்மைநாமே சிக்கவைக்கக்கூடாது. உடலை நன்றாக வைத்திருப்பது நமது அடிப்படை உரிமை. உடலை நன்றாக வைத்திருப்பது என்பது அழகாக தோன்றுவதிலோ, மற்றவர்கள் முன்னால் பகட்டாய் தோன்றுவதிலோ இல்லை. ஆரோக்கியத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையில் உடல் ஒரு தடைக் கல்லாய் இல்லாமல் படிக்கல்லாக இருக்கவேண்டும். உடல் தடையாக மாறினால், வாழ்க்கை சுமையாகிவிடும்.

    சுய நம்பிக்கை என்பது நம் வாழ்க்கைக்கு கவசம். இது இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் பற்பல கவலைகளிலிருந்து நாம் எளிதாக விடுபட்டுவிடலாம். சுய நம்பிக்கை இல்லாதவர்கள் கவலைகளிலே உழல்கிறார்கள். சுய நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவு துணை செய்யும். ஆற்றல் துணை நிற்கும். வாழ்க்கை இன்பமயமானது. அதை ரசிக்காமல், நேசித்து வாழாமல் 'எனக்கு மட்டும் ஏன் இப்படி? 'என்று நொந்து துன்பமயமாக்கிக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் தோல்வியை வம்பாக விலைக்கு வாங்குகின்றோம்.

    நாம் சாதனைகள்புரிய சுதந்திரம் மிக அவசியம். பயம், பதற்றம், கவலை அல்லது நிச்சயமற்ற நிலை போன்றவை ஒருவரை இயல்பான திறனோடு பணியாற்றவிடாது. மூளையின் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்த முழுமையான சுதந்திரம் மிகவும் அவசியம்.

    எப்போதுமே நம்மிடம் சுய மனத்தடைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . 'நம்மால் முடிந்தது இவ்வளவுதான், இதற்கு மேல் நம்மால் எதுவும் செய்ய இயலாது', 'நம் தலையெழுத்து இதுதான்', 'வேறு வழியில்லை, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்' என்பன போன்ற சுய மனத்தடைகள் நம்மை வாழ்க்கைப் பயணத்தில் தோற்கடித்துவிடும். அதனால் அந்த தடைகளை தகர்த்திடுவது மிக அவசியம்.

    முந்தைய தவறுகளின் தாக்கம் நமக்கு மட்டுமே சொந்தமானது. நடந்துமுடிந்துவிட்ட அந்த தவறை பெரிதாக்கி, 'தன்னைத் தவிர யாருமே தவறு செய்வதில்லை. தான் எது செய்தாலும் அது தவறாகவே முடிகிறது' என்று நினைத்துக்கொண்டு, அடுத்த அடி எடுத்துவைக்க தயங்கிவிடக்கூடாது.

    உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாகுவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

    நமக்கு இருக்கும் மிகப் பெரிய தடை- பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, ஏளனம் பேசுவார்களோ என்பதுதான். முதலில், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நாம் வருத்தப்பட வேண்டாம். அவர்களது மனதின் தரம் அவர்களைப் பொறுத்தது. நம் மனதின் தரத்தைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வருத்தப்பட்டால் நமது மனநலன் சீர்கெட்டுப்போகும். ஒரு செயல், செய்யத் தகுதியானது என நாம் நினைக்கும் பொழுது, அதனை செய்துவிட வேண்டும். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. பெரும்பாலும் நமக்கான தொல்லைகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். பிறர் விஷயங்களில் தலையிடாமல் நம் சொந்த வேலையில் மட்டுமே கவனத்தை செலுத்தினால் போதும் வாழ்க்கை இன்பமயம் தான்.

    நம் வாழ்க்கை நமது விருப்பத்திற்கேற்ப அமையவேண்டும், அது உறவாகட்டும், தொழிலாகட்டும்..! நம் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் நிகழ வேண்டுமென்றால் எல்லோரையும், எல்லாவற்றையும் நம் புரிதலுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பைத்தியம் போல் இருந்தாலும் அதையும் கடந்து அவர்களை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு நம் புரிதலின் தன்மை உயர வேண்டும்.

    நம்மை சார்ந்த அனைவரையும் நாம் புரிந்துெகாள்ளவேண்டும். அந்த பக்குவத்தை மூலதனமாக்கிக்கொண்டு நமக்காக மகிழ்ச்சியாக வாழவேண்டும். நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே, நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும்.

    வாழ்க்கை ஒரு ஜாலியான பயணம். அதற்கு கவலை போன்ற வேலிகளை போடவேண்டாம்!

    கட்டுரை:

    ஆ.ஆண்டனி ரோஸ்லின்,

    சமூக ஆர்வலர்,

    மதுரை.

    • பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும்.
    • பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
    • மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    மனிதர்களின் அடிப்படை குணாதிசயங்களில் இருந்து இந்த நூற்றாண்டில் காணாமல்போன விஷயங்கள் மூன்று. அவை: பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை. இவைகள் இல்லாமல் போனதால்தான், கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு மாற்றாக வேறு எதையும் அவர்கள் கருத்தில்கொள்வதில்லை. முறித்துக்கொள்வது மட்டுமே முடிவானது என்று கருதுகிறார்கள்.

    ஆணும், பெண்ணும் சரி சமம் என்று தலைநிமிர்ந்து நிற்கும் இன்றைய தலை முறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. பொறுமையின்றி, நிதானமின்றி அதிரடியும் ஆவேசமுமாக களத்தில் இறங்கி சண்டையிட்டுக்கொண்டு விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி பலரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இழந்த எதையும் பணத்தால் வாங்கமுடியாது என்பதை உணரும்போது அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.

    மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். அதை திருத்திக்கொள்ளும் முயற்சிதான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்பு செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.

    திருமணத்துக்கு முன்பு - திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு - பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அநேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.

    விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. 'தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிதாகி தன் கண்முன்னே வந்து நின்று மிரட்டும். அந்த நேரத்தில் தன் மீதே தனக்கு கோபமும், வருத்தங்களும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண் பாடான பாதையில் அவர்கள் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.

    அதனால் அவர்களது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவர்களுடைய வாழ்க்கை யில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதை புரிந்துகொள்வார்கள்.

    பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும். அதற்குதக்கபடி பெண்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்துபோவார்கள். அப்போது தங்களுக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தங்களுக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வார்கள்.

    அப்படி உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, 'நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அதனால் மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    • இளமை பருவத்தில் புதிய விஷயங்களை முயற்சித்து பார்ப்பதற்கு வயது தடையாக இருக்காது.
    • இளமை பருவ நாட்கள் பலவும் நண்பர்களுடன்தான் கழியும்.

    வயது என்பது வெறும் எண் மட்டுமே. முதுமையிலும் இளமை துடிப்போடு செயல்பட்டு பலரும் அதனை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் இளமை பருவத்தில் புதிய விஷயங்களை முயற்சித்து பார்ப்பதற்கு வயது தடையாக இருக்காது. இளமை பருவத்தை பூர்த்தி செய்வதற்குள் திருமணம், குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, தொழில், நிதி நிலைமை போன்ற பல்வேறு விஷயங்களை எதிர்கொண்டு குடும்ப வாழ்வியலுக்குள் முழுமையாக தங்களை அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். அந்த பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்பு இளமை பருவத்திற்கே உரித்தான வாழ்வியலையும், அவை கற்றுத்தரும் பாடங்களையும் பலரும் தவறவிட்டுவிடுகிறார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு 20 வயதில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு...

    தனிமை பயணம் மேற்கொள்ளுங்கள் :

    இளமை பருவ நாட்கள் பலவும் நண்பர்களுடன்தான் கழியும். குழுவாக ஒன்று சேர்ந்து சாகச பயணங்களை மேற்கொண்டு பலரும் பொழுதை போக்குவார்கள். அத்தகைய பயணங்களுக்கு நடுவே தனிமை பயணங்களை மேற்கொள்வதும் அவசியமானது. 20களின் பிற்பகுதியில் தொழில், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், மனதை தெளிவுபடுத்தவும், வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்கவும் தனிமை பயணம் உதவும். நெருக்கடியான காலகட்டத்தில் தன்னிச்சையாகவும், தைரியமாகவும் முடிவெடுக்கும் ஆற்றலையும் வழங்கும்.

    வெவ்வேறு மொழிகளை பேச கற்றுக்கொள்ளுங்கள் :

    எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்வதற்கு வயது தடையில்லை. மொழிக்கும் இது பொருந்தும். 20 வயதில் இளமை துடிப்பும், சுறுசுறுப்பும், உற்சாகமும் குறையாமல் இருக்கும். எதையும் ஆர்வமாக கற்றுக்கொள்ளவும் மனம் தயாராக இருக்கும். உலக விஷயங்களை தெரிந்து கொள்ளவும், ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளவும் தொடர்பு சாதனமாக மொழி விளங்கும். அதனால் எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்வதற்கு தயக்கம் கொள்ளக்கூடாது. படிப்பை முடிக்கும்போதோ, எதிர்காலத்திலோ ஏதாவதொரு வகையில் கற்றுக்கொண்ட மொழி பயன்படலாம்.

    முகாமிடுங்கள் :

    நண்பர்களுடன் குழுவாகவோ, தனியாகவோ வருடத்திற்கு ஒருமுறையாவது மலையேற்ற பயணங்களை மேற்கொள்ளுங்கள். வீடு, அலுவலகம் என இரண்டுவிதமான சூழலில் மட்டுமே வாழ்க்கையை நகர்த்துபவர்கள் அதில் இருந்து சில நாட்கள் விலகி இயற்கையுடன் ஒன்றிணைவதற்கு மலையேற்றம் உதவும். அமைதியான சூழல், சுத்தமான காற்று, என இயற்கை பின்னணியுடன் ஓர் இரவையாவது செலவிட வேண்டும். அங்கு முகாமிட்டு இரவில் தெளிவான வானத்தையும், அதில் மின்னும் நட்சத்திரங் களையும் ரசித்தபடி 'பயர் கேம்பிங்' எனப்படும் நெருப்பின் அரவணைப்பில் நண்பர்களுடன் உற்சாகமாக பொழுதை போக்கலாம். மனதிற்கு பிடித்தமான இசையை கேட்டு மகிழலாம்.

    சாலை மார்க்கமாக செல்லுங்கள்:

    இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர சாலை பயணங்களை மேற்கொள்வதும் புது அனுபவத்தை கொடுக்கும். மனதில் தேங்கி இருக்கும் எல்லாவிதமான கவலைகளை போக்கவும். பதற்றமான மன நிலையில் இருந்து விடுபடவும் சாலை பயணங்கள் கைகொடுக்கும். 20களில் செய்யக்கூடிய முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறையாவது தனியாகவோ, நண்பர்களுடனோ இருசக்கர வாகனத்தில் சாலை பயணம் மேற்கொள்ள மறக்காதீர்கள்.

    ஆரோக்கியத்தை பேணுங்கள் :

    இளமையாக இருக்கும்போது பலரும் உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, பின்பு வருந்துகிறார்கள். 20 வயதுக்கு பிறகு உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும் வரை எந்த பிரச்சினையும் வெளியே தெரியாது. வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய தொடங்கும். சிலருக்கு 30 வயதை நெருங்குவதற்குள்ளாகவே கடுமையான உடல்நல பிரச்சினைகள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். அதனை தவிர்க்க இளம் வயதிலேயே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

    • ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு.
    • இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது.

    சமூகம் என்பது ஒருவரோ, இருவரோ ஒருங்கிணைந்து உருவாக்குவது அல்ல. ஒழுக்கம் நிறைந்த சமூகம் என்பது ஒரு நாட்டில் உள்ள அனைவரின் பங்களிப்பால் உருவாக வேண்டியது. அப்படிப்பட்ட சமூகம் சில நபர்களின் சுயநலனுக்காக சமூகத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி சீர்குலைய செய்கின்றனர். நாம் ஒற்றுமையை வளர்த்து சமூகத்தை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

    சமூகம் என்பது ஒரு மழலையைப் போல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும். அது நல்லவர்களின் கையில் கிடைத்தால் தூய சமூகம். கள்வர்களின் கையில் கிடைத்தால் ஒழுக்கமில்லாத சமூகம். ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு. நன்மைகளுள் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். சமூகத்தில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தால் அவர் சமூகத்தில் உயர்ந்து காணப்படுகிறார் என்று தான் கூறுவோம். இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடு, அவரவர்களின் வீடு, அதுதான் அவர்கள் அடையாளம். நாங்கள் இந்தியர்களாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம்.

    சமூகம் என்பது ஒரு மழலையைப் போல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும். அது நல்லவர்களின் கையில் கிடைத்தால் தூய சமூகம். கள்வர்களின் கையில் கிடைத்தால் ஒழுக்கமில்லாத சமூகம். ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு. நன்மைகளுள் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். சமூகத்தில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தால் அவர் சமூகத்தில் உயர்ந்து காணப்படுகிறார் என்று தான் கூறுவோம். இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடு, அவரவர்களின் வீடு, அதுதான் அவர்கள் அடையாளம். நாங்கள் இந்தியர்களாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம்.

    • பல்வேறு பகுதிகளில் இதேபோல் போலி நகைகளை அடகு வைத்து இருப்பது தெரிய வந்தது
    • நாகர்கோவில் செட்டிகுளம் மற்றும் ஆசாரிபள்ளத்தில் சொகுசு பங்களா வீடு

    நாகர்கோவில்:

    குமாரபுரம் அருகே உள்ள சித்திரங்கோடு பகுதி யில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சுரேஷ்.

    இவரது நிதி நிறுவனத்திற்கு சம்பவத்தன்று பெண் ஒருவரும், வாலிபர் ஒருவரும் சென்றனர்.

    அவர்கள் நகை ஒன்றை அடகு வைத்து பணம் பெற்று சென்றனர். பின்னர் அந்தப் பெண் கொடுத்த நகையை சுரேஷ் பரிசோதனை செய்து பார்த்தபோது போலி நகை என்பது தெரியவந்தது.

    இது குறித்து சுரேஷ் கொற்றிகோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டனர். நிதி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது போலி நகைகளை அடகு வைத்தது நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜா (வயது 48) மற்றும் அவரது மனைவி அனுஷா என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜேசுராஜாவை கைது செய்தனர். கைது செய்ய ப்பட்ட ஜேசு ராஜாவிடம் விசாரணை நடத்திய போது அனுஷா இவரது இரண்டாவது மனைவி என்பது தெரியவந்தது.

    இவர்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோல் போலி நகைகளை அடகு வைத்து இருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஜேசுராஜாவிற்கு நாகர்கோவில் செட்டிகுளம் மற்றும் ஆசாரிபள்ளத்தில் சொகுசு பங்களா வீடு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போலி நகைகளை அடகு வைத்து ஜாலியாக இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டில் என்ற போலி தங்கக் காப்புகள் மற்றும் அடகு வைத்த ரசீதுகள் இருந்ததை போலீசார் கைப்பற்றி னார்கள்.

    தலைமறைவான அனு ஷாவை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அனுஷா தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • தவறு செய்தவர்களை மன்னிப்பது ஒரு கலை.
    • யாராவது உங்களை காயப்படுத்தினால், நீங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் அனுபவிக்கலாம்.

    நம் வாழ்க்கையில் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் என யாராவது ஒருவர், நம்மை உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ காயப்படுத்தி இருக்கலாம். நாம் அதை நினைத்து வெறுப்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு உள்ளாவது, தவறு செய்தவர்களுக்கு கேடு விளைவிப்பதை விட, நமக்குத் தீங்கு விளைவிக்கும். தவறு செய்தவர்களை மன்னிப்பது ஒரு கலை. பிறரை மன்னிப்பதால், நம் உடல் நலமும், மன நலமும் மேம்படும்.

    பிறர் செய்த தவறுகளை எளிதில் மன்னிக்கும் திறன் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வரக்கூடிய அபாயம் குறைகிறது. தூக்கம், வலி, ரத்த அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் பாதிப்பு குறையும். பிறரை மன்னிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள கீழ்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

    ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர், சிறப்பு வாய்ந்தவர் மற்றும் ஈடுசெய்ய முடியாதவர் என்பதை அங்கீகரிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். இதனால் உங்களுக்குத் தீங்கு செய்தவரை வெறுக்கும் மனப்பான்மை குறைந்துவிடும்.

    ஒருவர் நமக்கு தீங்கு செய்திருந்தால், அந்த அனுபவம் மோசமானதாக இருக்கும். ஆனால், இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்களை காயப்படுத்தியதற்காக அந்த நபரிடம் நீங்கள் கோபப்படுவது குறையும். அன்றாட சந்திப்புகளில் மற்றவர்களிடம் சிறிய வழிகளில் அன்பை காட்ட முயலுங்கள். மளிகைக் கடைக்குச் செல்லும் போது, தெரிந்தவர்களை பார்த்து புன்னகைப்பது அல்லது குழந்தையின் பேச்சைக் கேட்க நேரம் ஒதுக்குவது போன்ற, சின்னச் சின்ன அன்பை பகிரும் செயல்களில் ஈடுபடுங்கள்.

    இதனால் மன்னிக்கும் பக்குவம் உண்டாகும். உங்களால் பிறரை எளிதில் மன்னிக்க முடியவில்லை என்றால், நீங்கள் மன்னிப்பதில் தோல்வியுற்றவர் என்று அர்த்தமல்ல. மன்னிப்பு என்பது நேரம், பொறுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் செயல்முறையாகும். உங்கள் மீது நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களிடம் நீங்கள் மென்மையாக இருங்கள் மற்றும் உள்ளுக்குள் அமைதியான உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆழமாக நேசிக்கும் ஒருவருக்கு பதிலளிப்பது போல், உங்களுக்கு நீங்களே பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

    யாராவது உங்களை காயப்படுத்தினால், நீங்கள் வருத்தத்தையும், கோபத்தையும் அனுபவிக்கலாம். இந்த உணர்ச்சிகள் தவறானவை அல்ல. ஒருவர் செய்த செயல் உங்களை எப்படி உணரவைத்தது என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடந்து கொள்வது முக்கியம். ஒருவர் செய்த தவறை அல்லது தீங்கை முதலில் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதுங்கள். பிறகு, அதில் உங்களை காயப்படுத்திய நேரத்தில் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை எழுதுங்கள். இதன் மூலம் உங்களுடைய உணர்வை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதை எழுதும் போது மனம் அமைதியடையும். இதனால் மன்னிக்கும் தன்மை அதிகரிக்கும்.

    • இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.
    • நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி,

    இந்தியாவின்75-வது சுதந்திர திருவிழாவையொட்டி இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் தென்மண்டல இயக்குநர் ஜெனரல் எஸ்.வெங்கடேஸ்வர் தலைமை தாங்கினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் இயக்குனர் ஜெனரல் எம். அண்ணாதுரை வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே, நிலக்கரி, மற்றும் சுரங்க அமைச்சகத்தின் இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பிறகு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குத்துவிளக்குஏற்றி 5 நாள் புகைப்படகண்காட்சியை தொடங்கி வைத்துபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்னும் 25 ஆண்டு களுக்குப் பின்னர் நம்நாடு எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளார். 2014-ம்ஆண்டில் நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த 8 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளை கணக்கில் கொண்டு தயாரித்திருக்கிறார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று அடிப்படையில் மோடியின் தொலை நோக்கு பார்வையில் அந்த திட்டங்களை தொடர்ந்துசெயல்படுத்தி வருகிறார். 130 கோடி மக்களில் 80 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேம்படுத்த வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், மின்சார வசதி, எரிவாயு இணைப்புகள் என்று மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து சிறந்த முறையில் பிரதமர்மோடி செயலாற்றி வருகிறார். கொரோனா காலகட்டத்தி ல் மக்களுக்கு தடுப்பூசி, மாத்திரை, மருந்துகளை உலகத்திலேயே இலவசமாக வழங்கிய ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். இந்தியா முழுதும் 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி போடவைத்தபெருமை பிரதமர் மோடியை சேரும்.

    ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி மக்கள் வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்திஉள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் உலகத் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்த பிரதமராக மோடி திகழ்கிறார். 8 ஆண்டுகளில் பிரதமர்மோடி செய்த சாதனைகளை ஒரு நாளில் சொல்ல முடியாது.

    இவ்வாறு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பேசினார்.

    இந்தநிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வங்கிகள் மூலம் ஏழைகளுக்கு கடன் உதவியாக ரூ.15 கோடியே 60 லட்சத்துக்கான காசோலையை மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே வழங்கினார். மகளிர் சுய உதவி குழுவைச்சேர்ந்த பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முடிவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கள விளம்பர துணை இயக்குனர் சிவகுமார் தொகுத்து வழங்கினார்.

    • 'எங்கும் கடன், எதற்கும் கடன்' என்று தாராளமாக வழங்கும் நிலை உருவாகியுள்ளது.
    • வரவையும், செலவையும் கணக்கிட்டு வாழ்க்கைமுறையை வகுத்துக்கொண்டனர்.
    • வெற்றியில் துள்ளிக்குதிப்பதும், தோல்வியில் துவண்டுபோவதும் வேண்டாம்.
    • பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற கொள்கையும் தவறானது.

    இந்த பூமிப்பந்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வெவ்வேறாக இருக்கிறது. இதுபோன்ற மாறுபாட்டுக்கு அதன் இதய துடிப்பே காரணமாக சொல்லப்படுகிறது. இதயத்துக்கும், ஆயுளுக்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கிறது என்று பார்த்தால், விரைவாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினத்துக்கு ஆயுள் குறைவு என்றும், மெதுவாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினத்துக்கு ஆயுள் அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலில் வாழும் கிளிஞ்சல் என்ற உயிரினம்தான் அதிகபட்சமாக 507 ஆண்டுகள் வாழ்கிறது.

    ஆறறிவு கொண்ட மனிதனின் முழு ஆயுட்காலம் 120 ஆண்டுகள். இந்த உலகத்தில் பிறக்கும் அத்தனை மனிதர்களும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிடுவதில்லை. வயதில் சதம் (100) அடித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்வதாக எடுத்துக்கொண்டாலும், அதை நாட்களில் கணக்கிடும்போது 36,500 நாட்கள்தான் வருகின்றன. 460 கோடி வயதுடைய இந்த பூமியில் மனித வாழ்க்கை என்பது மிகவும் சொற்பம்தான்.

    வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லிவிடுவது என்றால், பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான போராட்டம்தான். படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், குழந்தைகள், பொருள் சேர்த்தல், பணிநிறைவு, வயோதிகம் என்று பல நிலைகளை கடந்து சென்று இறுதியில் கரைந்துபோய் விடுகிறது.

    20-ம் நூற்றாண்டின் இறுதிவரைகூட மனித வாழ்க்கை இயல்பாக, நிம்மதியாக, எதார்த்தமாக பயணித்தது என்றே கூறலாம். வரவையும், செலவையும் கணக்கிட்டு வாழ்க்கைமுறையை வகுத்துக்கொண்டனர். கடன் வாங்கவேண்டிய நிலை வந்தாலும், அது மருத்துவம், புதிய வீடு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காகவே இருந்தது. ஆடம்பர வாழ்க்கைக்காக யாரும் கடன் வாங்கியதில்லை. கடன் அன்பை மட்டுமல்ல, சில நேரங்களில் உறவுகளையும், நண்பர்களையும் முறித்துவிடும்.

    ஆனால் தற்போதைய 21-ம் நூற்றாண்டில், வட்டிக்காரன் முகம் பார்த்து கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வட்டிக்கடைகள் நிதி நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றுவிட்டன. 'எங்கும் கடன், எதற்கும் கடன்' என்று தாராளமாக வழங்கும் நிலை உருவாகியுள்ளது. கடனுக்காக அலைந்த காலம் போய், வலிய வீட்டுக்கே வந்து கடன் வழங்கும் நிலை வந்துவிட்டது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், வீடு, வாகனம், ஏன் வீட்டுக்கு தேவையான டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. எதுவாக இருந்தாலும் ஈ.எம்.ஐ. என்று சொல்லக்கூடிய மாத தவணையில் வாங்கிவிட முடியும். போதாக்குறைக்கு, வங்கிகள் வழங்கும் 'கிரெடிட் கார்டு' (கடன் அட்டை) மூலமும் பொருட்களை வாங்கி குவித்துவிட முடியும்.

    இந்த 'கிரெடிட் கார்டு' முறையில், குறிப்பிட்ட நாட்களில் அதற்கான பணத்தை வட்டித்தொகை இல்லாமல்கூட திருப்பிச் செலுத்தும் வசதியை வங்கிகள் செய்துள்ளன. ஆனால், அதில் இருந்து தவறும்போதுதான், வட்டி, வட்டிக்கு மேல் வட்டி போன்ற தேவையில்லாத சிக்கல் ஏற்படுகிறது. முன்பெல்லாம் சேமிப்பு மீது மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும், அதில் ஒரு சிறுதொகையை ஒதுக்கி சேமித்து வைப்பார்கள். ஏன், வீட்டில் உள்ள குழந்தைகள்கூட உண்டியலில் பணத்தை சிறிது சிறிதாக சேமித்துவைப்பதை பார்த்திருக்கிறோம்.

    ஆனால், இன்றைக்கு கைநிறைய சம்பளம் வாங்கினாலும், மாதத்தில் பாதி நாட்கள் பணம் இல்லாமல் செலவுக்கே கஷ்டப்பட வேண்டியுள்ளது. காரணம், பகட்டாக வாழ விரும்பி, தேவைகள் அனைத்தையும் கடன் பெற்று நிறைவேற்றிக்கொண்டு, பின்பு அதற்கான பணத்தை திருப்பிக்கட்ட அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால், வாழ்வில் மகிழ்ச்சித்துள்ளல் குறைந்துவிடுகிறது.

    இன்றைய மக்களின் பெரும்பாலானோரின் வாழ்க்கைமுறை இப்படியாகத்தான் உப்புச்சப்பில்லாமல் கழிந்து கொண்டிருக்கிறது. நாட்கள் செல்லச்செல்ல மன இறுக்கத்துக்கு ஆளாகி, பின்பு மனஅழுத்தத்துக்கு ஆட்படுகிறோம். இதனால், மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதுடன், உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. ரசித்து வாழவேண்டிய வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படத் தொடங்குகிறது. 'ஏதோ வாழ்கிறோம்' என்றே நாட்களை கடக்க வேண்டியிருக்கிறது.

    மனஅழுத்தத்தால் நேர்மறையான சிந்தனை குறைந்து, எதிர்மறையான சிந்தனை அதிகரிக்கத்தொடங்குகிறது. இந்த ஆபத்தான கட்டத்தில்தான் சிலர் மிருகத்தனமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். கடந்த சில காலங்களாகவே பத்திரிகைகளில், 'கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை' என்று வரும் செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம். இந்த ஒவ்வொரு செய்திக்கு பின்பும் வெவ்வேறு சோகக்கதைகள் இருக்கின்றன.

    இப்போதுகூட, சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில், கடன் தொல்லையால் பிரகாஷ் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர், மனைவி, மகள், மகன் ஆகியோரை எந்திர ரம்பத்தால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    வீடு, கார் என ஆடம்பரமாக வாழ 9 பேரிடம் ரூ.80 லட்சத்துக்கும் அதிகமாக, வார வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். என்ஜினீயரான இவர் ரூ.1½ லட்சம் மாத சம்பளம் வாங்கியும் கடனை கட்டமுடியாத நிலை. கைநிறைய சம்பளம் வாங்கினாலும் குடும்பத்தை கைதூக்கி விடமுடியாத துயரம். ஒரே குடும்பத்தில் 4 உயிர் போனதுதான் மிச்சம்.

    பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற கொள்கையும் தவறானது. பணம்தான் வாழ்க்கைக்கு பிரதானம் என்றால், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில்கேட்சுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரிவு வந்திருக்காது. பணத்தையும் தாண்டி நிம்மதி என்று ஒன்று இருக்கிறது. சென்னையில் இரவு நேரங்களில் எத்தனையோ பேர் ஆங்காங்கே சாலையோரம் நிம்மதியாக படுத்து தூங்குவதை பார்க்கிறோம். அவர்களிடம் எவ்வளவு பணம் இருந்துவிடப்போகிறது? வாழ்க்கையில் இன்றைக்கு பல பேர், பணத்தை தேடி ஓடியே நிம்மதியை தொலைத்துவிடுகிறார்கள். பிறகு, பணத்தை தொடர்ந்து தேடுவதா? அல்லது தொலைந்த நிம்மதியை திரும்பி வந்து தேடுவதா? என்று குழம்பிப்போய் தவறான முடிவை எடுத்துவிடுகிறார்கள்.

    இயற்கைகூட நமக்கு சலிப்பு தட்டிவிடக்கூடாது என்பதற்காக குளிர்காலம், மழைகாலம், கோடைகாலம் என பருவநிலைகளை மாற்றி மாற்றித் தருகிறது. அதுபோல, வாழ்க்கையும் நமக்கு பல விஷயங்களை மாறி மாறி கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. ஆகையால், வெற்றியில் துள்ளிக்குதிப்பதும், தோல்வியில் துவண்டுபோவதும் வேண்டாம். அனைத்தையும் சமமாக எடுத்துக்கொள்வோம். கிடைத்ததைக் கொண்டு ரசித்து வாழ்வதே அழகான வாழ்க்கை.

    • சென்னை மருத்துவ குழு சிறுமியிடம் இன்று விசாரணை நடத்தியது.
    • விசாரணையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது தவறு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது மகளுடன் வசித்து வந்த தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அப்போது அந்த பெண்ணிற்கும் பெயிண்டர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். பெயிண்டரும், அந்தப் பெண்ணும் ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.

    அப்போது கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்யும் புரோக்கர் மாலதி என்பவரிடம் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது புரோக்கர் மாலதி உங்கள் மகளின் கருமுட்டையையும் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    இந்நிலையில் அந்த பெயிண்டர் சிறுமியை பலாத்காரம் செய்து தொந்தரவு கொடுத்துள்ளனர். பின்னர் பெயிண்டரும், சிறுமியின் தாயும் இணைந்து சிறுமியின் கருமுட்டையை 8 முறை விற்பனை செய்துள்ளனர்.

    இதன் மூலம் கிடைத்த பணத்தில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஈரோடு பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் என்பவர் உதவி செய்துள்ளார்.

    இதனையடுத்து சிறுமி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். பின்னர் உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீசில் நடந்த விஷயம் குறித்து புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தாய், பெயிண்டர், புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரை போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இது தொடர்பாக ஈரோடு கூடுதல் டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருமுட்டை விவகாரம், போலி ஆதார் அட்டை தயாரித்தது தொடர்பாக ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதன் அடிப்படையில் நேற்று மாலை 2 மருத்துவமனையின் நிர்வாகிகள் 3.30 மணி அளவில் ஏ.டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்தனர். மருத்துவ நிர்வாகிகளிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

    சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. விசாரணையில் என்னென்ன கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தில் இருந்து மருத்துவ அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணைக்காக ஈரோடுக்கு வந்துள்ளனர்.

    இந்த மருத்துவ குழு இன்று காலை அரசு காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமி இடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அந்த குழு சிறுமியிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் விரிவாக கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு மருத்துவ குழு விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குழு தங்கியிருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரணையை மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

    இதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விசாரணையின் அடி ப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தவறு செய்தது கண்டு பிடிக்கப்பட்டால் அதன் உரிமம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் இந்த விவகாரம் தற்போது மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியுடன் பதவி ஏற்றுக்கொண்ட மத்திய கேபினட் மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்
    பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று பதவி ஏற்றுக்கொண்ட மத்திய கேபினட் மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

    ராஜ்நாத் சிங்

    ராஜ்நாத் சிங்(67), உத்தரபிரதேச மாநிலம் பாபவ்ராவில் பிறந்தவர். 13 வயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இயற்பியல் விரிவுரையாளராக வாழ்க்கையை தொடங்கியவர். பா.ஜனதா சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். 1984-ல் மாநில பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் ஆனார். 1997-ல் மாநில பா.ஜனதா தலைவர் ஆனார். மாநில மந்திரியாக பணியாற்றி உள்ளார். 1999-ல் மத்திய மந்திரியாக பணியாற்றிய இவர், 2000-ல் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2003-ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் விவசாய மந்திரியாக இருந்தார். இரு முறை பா.ஜனதா தேசிய தலைவர் பதவி வகித்தார். 2014 தேர்தலில் லக்னோ தொகுதியில் வென்று மோடி அரசில் உள்துறை மந்திரி பதவி வகித்தார். இம்முறையும் அதே தொகுதியில்தான் வெற்றி பெற்றுள்ளார். சாவித்திரி என்ற மனைவியும், பங்கஜ், நீரஜ், அனாமிகா என 3 குழந்தைகளும் உள்ளனர்.

    அமித் ‌ஷா

    அமித் ‌ஷா (வயது 54), மராட்டிய மாநிலம் மும்பையில், குஜராத் வணிக குடும்பத்தில் பிறந்தவர். பி.எஸ்.சி. உயிர் வேதியியல் பட்டதாரி. குழந்தைப்பருவம் முதல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1986-ல் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். மறுஆண்டு முதல் கட்சியின் இளைஞர் அணியில் தீவிர பங்கேற்றார். 1991 பாராளுமன்ற தேர்தலில் அத்வானிக்காக காந்திநகரில் பிரசாரம் செய்தார். 1995-ல் குஜராத்தில் கேசுபாய் பட்டேல் தலைமையில் பா.ஜனதா அரசு பதவி ஏற்றபோது, மோடியுடன் இணைந்து கிராமப்புறங்களில் கட்சியை கொண்டு செல்ல உழைத்தார். 2001-ல் மோடி, குஜராத் முதல்-மந்திரியானபோது அவரது வலது கரம் ஆனார். 2002 தேர்தலுக்கு பின்னர் மோடி மீண்டும் முதல்-மந்திரியானபோது உள்துறை, சட்டம் என 12 துறைகளுக்கு மந்திரியாக பணியாற்றினார். மோடி பிரதமரானபோது, அமித் ‌ஷாவும் தேசிய அரசியலுக்கு போனார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 2014 ஜூலையில் பா.ஜனதா கட்சிக்கு தலைவர் ஆனார். தொடர்ந்து மோடிக்கு பக்க பலமாக திகழ்ந்தார். மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து கொண்டே 2019 தேர்தலில் அத்வானியின் தொகுதியான குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இவருக்கு சோனல் என்ற மனைவியும் ஜெய்‌ஷா என்ற மகனும் உள்ளனர்.

    நிதின் கட்காரி

    நிதின் கட்காரி (62), மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிறந்தவர். எம்.காம். எல்.எல்.பி., பட்டங்கள் பெற்றவர். மராட்டிய மாநில பொதுப்பணித்துறை மந்திரி பதவி வகித்தவர். மராட்டிய மாநில பா.ஜனதா கட்சிக்கு தலைவராக இருந்தவர். பின்னர் தேசிய தலைவராகவும் உயர்ந்தார். கடந்த தேர்தலில் நாக்பூர் தொகுதியில் வெற்றி பெற்று, மோடி அரசில் சாலை, போக்குவரத்து, கப்பல் துறை மந்திரியாக இருந்தார். இம்முறையும் நாக்பூரில் போட்டியிட்டு வென்று மந்திரியாகி உள்ளார். மனைவி காஞ்சன், 3 குழந்தைகள் உள்ளனர்.

    சதானந்த கவுடா

    சதானந்த கவுடா (66). கர்நாடக மாநிலம் சுல்லியாவில் பிறந்தவர். சட்டம் படித்தவர். ஜனசங்கத்தில் இணைந்து பணியாற்றியவர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றியவர். 2011-ல் முதல்-மந்திரி ஆனார். 2014-ல் பெங்களூரு வடக்கு தொகுதியில் வெற்றி பெற்று ரெயில்வே, சட்டம், புள்ளிவிவரம் துறைகளில் மந்திரியாக இருந்தார். இந்த தேர்தலிலும் பெங்களூரு வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். மனைவி தத்தி, 2 குழந்தைகள் உள்ளனர்.

    ராம்விலாஸ் பஸ்வான்

    ராம்விலாஸ் பஸ்வான் (72). பீகாரில் ககாரியாவில் பிறந்தவர். சட்டம் படித்தவர். சம்யுக்தா சோசலிச கட்சி, லோக்தளம், ஜனதா, ஜனதாதளம் என பல கட்சிகளில் இருந்தவர். கடைசியில் லோக்ஜனசக்தி கட்சியை நிறுவி நடத்தி வருகிறார். முந்தைய மோடி அரசில் உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகித்தார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இவரது மகன் சிராக் பஸ்வான் மந்திரி ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராம்விலாஸ் பஸ்வானுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மனைவி ரீனா சர்மா, 4 குழந்தைகள் உள்ளனர்.

    நரேந்திரசிங் தோமர்


    நரேந்திர சிங் தோமர் (61). மத்திய பிரதேச மாநிலம், மொரினாவில் பிறந்தவர். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர். முந்தைய மோடி அரசில் ஊரக வளர்ச்சித்துறை, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகித்தவர். நடந்து முடிந்த தேர்தலில் மொரினா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மனைவி கிரண், 3 குழந்தைகள் உள்ளனர்.

    ரவி சங்கர் பிரசாத்

    ரவி சங்கர் பிரசாத் (64). பீகார் மாநிலம், பாட்னாவில் பிறந்தவர். இவரது தந்தை தாகூர்சிங், ஜனசங்க நிறுவனர்களில் ஒருவர். ரவிசங்கர் பிரசாத், எம்.ஏ., எல்.எல்.பி. பட்டம் பெற்றவர். அத்வானிக்காக வழக்குகளில் வாதாடிய சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீலாக திகழ்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். முந்தைய மோடி அரசில் சட்டம், நீதித்துறை மந்திரி பதவி வகித்தார். இந்த பாராளுமன்ற தேர்தலில் பாட்னாசாகிப் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளராக நின்ற நடிகர் சத்ருகன் சின்காவை வீழ்த்தியவர். மனைவி மாயா.

    ஹர்சிம்ரத் கவுர் பாதல்

    ஹர்சிம்ரத் கவுர் பாதல் (52). சண்டிகாரில் பிறந்தவர். சிரோமணி அகாலிதள தலைவர் பிரகா‌‌ஷ் சிங் பாதல் மருமகள். இவரது கணவர் சுக்பீர்சிங் பாதல். 2009, 2014, 2019 என 3 முறை பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார். முந்தைய மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி பதவி வகித்தார். கணவர் சுக்பீர்சிங் பாதல், 3 குழந்தைகள் உள்ளனர்.

    தாவர் சந்த் கெலாட்

    தாவர் சந்த் கெலாட் (71), மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் பிறந்தவர். பா.ஜனதா கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வகித்தவர். மாநிலங்களவை உறுப்பினர். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தலைவர். முந்தைய மோடி அரசில் சமூக நீதித்துறை மந்திரி பதவி வகித்தார். மனைவி அனிதா. 4 குழந்தைகள் உள்ளனர்.

    ரமே‌‌ஷ் பொக்ரியால்

    ரமே‌‌ஷ் பொக்ரியால் (59), உத்தரகாண்ட் மாநிலம் பினானியில் பிறந்தவர். பி.எச்.டி மற்றும் டி.லிட் டாக்டர் பட்டங்கள் பெற்றவர். அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் ரமே‌‌ஷ் பொக்ரியால். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மாநில முதல்-மந்திரி பதவி வகித்தவர். 2014, 2019 தேர்தல்களில் ஹரித்துவாரில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வு பெற்றவர். மனைவி குசும் காந்தா, 3 மகள்கள் உள்ளனர். மத்திய மந்திரி பதவிக்கு புதியவர்.

    அர்ஜூன் முண்டா

    அர்ஜூன் முண்டா (51), ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து பின்னர் பா.ஜனதாவில் சேர்ந்து தேசிய பொதுச்செயலாளராக விளங்கியவர். 2010-13 காலகட்டத்தில் ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி பதவி வகித்துள்ளார். ஜாம்ஷெட்பூர் எம்.பி.யான இவர் முதல் முறையாக மத்திய மந்திரி ஆகி உள்ளார். மீரா என்ற மனைவி உள்ளார்.

    ஸ்மிரிதி இரானி



    ஸ்மிரிதி இரானி (43), டெல்லியில் பிறந்தவர். டி.வி. தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். மராட்டிய மாநில பா.ஜனதா இளைஞர் அணி துணைத்தலைவர் பதவி வகித்தவர். பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவர் பதவியும் வகித்திருக்கிறார். 2004 பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினிசவுக்கில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்டார். 2014 தேர்தலில் அமேதியில் ராகுல்காந்தியை எதிர்த்து களம் கண்டு தோற்றார். இந்த தேர்தலில் அவர் அதே தொகுதியில் ராகுலை வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தார். முந்தைய மோடி அரசில் ஜவுளித்துறை மந்திரி பதவி வகித்தார். கணவர் ஜூபின் இரானியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    ஹர்சவர்தன்


    ஹர்சவர்தன் (64), டெல்லியில் பிறந்தவர். எம்.எஸ். பட்டம் பெற்ற மருத்துவ நிபுணர். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.சில் ஈடுபாடு கொண்டவர். டெல்லி மாநில மந்திரி பதவி வகித்தவர். டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். முந்தைய மோடி அரசில் சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி பதவி வகித்தவர். மனைவி நுட்டன், 3 குழந்தைகள் உள்ளனர்.

    பிரகா‌‌ஷ் ஜவடேகர்

    பிரகா‌‌ஷ் ஜவடேகர் (68), மராட்டிய மாநிலம், புனே நகரில் பிறந்தவர். பா.ஜனதாகட்சி இளைஞர் அணியில் சேர்ந்து பணியாற்றியவர். மாணவர் இயக்கங்களில் பணியாற்றியவர். மராட்டியத்தில் எம்.எல்.சி. பதவி வகித்தவர். முதலில் மராட்டியம், பின்னர் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முந்தைய மோடி அரசில் முக்கிய துறையான மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பதவி வகித்தவர். மனைவி பிரசீ, 2 குழந்தைகள் உள்ளனர். 2 மகன்கள். ஒருவர் பல் மருத்துவர். மற்றொருவர் அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.

    பியூஸ் கோயல்

    பியூஸ் கோயல் (54), மராட்டிய மாநிலம், மும்பையில் பிறந்தவர். பா.ஜனதா தேசிய பொருளாளராக விளங்கியவர். மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முந்தைய மோடி அரசில் நிலக்கரி, சுரங்கம், ரெயில்வே, நிதி என பல துறைகளில் மந்திரி பதவி வகித்துள்ளார். இவரது தந்தை வேதபிரகா‌‌ஷ் கோயல், மத்தியில் வாஜ்பாய் அரசில் மந்திரியாக இருந்தவர். பியூஸ் கோயலுக்கு மனைவி சீமாவும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    தர்மேந்திர பிரதான்

    தர்மேந்திர பிரதான் (49). ஒடிசா மாநிலம் டல்சேரில் பிறந்தவர். எம்.ஏ.பட்டதாரி. ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து பணியாற்றியவர். தந்தை தேவேந்திர பிரதான், மத்தியில் வாஜ்பாய் அரசில் மந்திரி பதவி வகித்தவர். முந்தைய மோடி மந்திரிசபையில் பெட்ரோலிய துறை மந்திரி பதவி வகித்தார். கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மனைவி மிருதுளா, 2 குழந்தைகள் உள்ளனர்.

    முக்தர் அப்பாஸ் நக்வி

    முக்தர் அப்பாஸ் நக்வி (61). உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் (அலகாபாத்) பிறந்தவர். 17 வயதிலேயே நெருக்கடி நிலையின்போது சிறைவாசம் அனுபவித்தவர். வாஜ்பாய் அரசில் தகவல், ஒலிபரப்பு ராஜாங்க மந்திரி பதவி வகித்தவர். 2016-ல் உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார். முந்தைய மோடி அரசில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரியாக இருந்தார். சீமா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

    பிரகலாத் ஜோ‌ஷி

    பிரகலாத் ஜோ‌ஷி (56), கர்நாடக மாநிலம், பீஜப்பூரில் பிறந்தவர். கர்நாடக மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர். 4-வது முறையாக எம்.பி. ஆகி உள்ளார். முதல் முறையாக மத்திய மந்திரி ஆகி உள்ளார். மனைவி ஜோதி, 3 மகள்கள் உள்ளனர்.

    மகேந்திர நாத் பாண்டே

    மகேந்திரநாத் பாண்டே (61), உத்தரபிரதேச மாநிலம், பக்காபூரில் பிறந்தவர். எம்.ஏ. இதழியல் பட்டதாரி. முனைவர் பட்டமும் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ்.சில் ஈடுபாடு கொண்டவர். நெருக்கடிநிலை காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர். உத்தரபிரதேசத்தில் கல்யாண்சிங் மந்திரிசபையில் மந்திரி பதவி வகித்தவர். முந்தைய மோடி அரசில் மனிதவளத்துறை ராஜாங்க மந்திரி பதவி வகித்தார். பின்னர் மாற்றப்பட்டார். உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவராக பணியாற்றி வந்தார். மனைவி பிரதிமா, ஒரு மகள் உள்ளனர்.

    அரவிந்த் சாவந்த்

    அரவிந்த் சாவந்த் (67), மும்பையில் பிறந்தவர். சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவர். 2014, 2019 தேர்தல்களில் மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவை வீழ்த்தியவர். மனைவி அனுயா சாவந்த். முதல் முறையாக மத்திய மந்திரி ஆகி உள்ளார்.

    கிரிராஜ் சிங்

    கிரிராஜ் சிங் (66), பீகார், பர்ஹியாவில் பிறந்தவர். பீகாரில் பல்வேறு துறைகளில் மந்திரி பதவி வகித்தவர். கடந்த தேர்தலில் நவாடா பாராளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். முந்தைய மோடி அரசில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை மந்திரி பதவி வகித்தார். இந்த தேர்தலில் பெகுசாராய் தொகுதியில் மாணவர் தலைவர் கன்னையா குமாரை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். உமா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

    கஜேந்திர சிங் செகாவத்

    கஜேந்திரசிங் செகாவத் (51), ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் பிறந்தவர். எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக விளங்கியவர். கடந்த 2014 தேர்தலில் ஜோத்பூரில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர். இப்போதும் அதே தொகுதியில் வென்றுள்ளார். முந்தைய மோடி அரசில் விவசாயத்துறை ராஜாங்க மந்திரி பதவி வகித்தவர். மனைவி நானன்த் கன்வார், 3 குழந்தைகள் உள்ளனர். இந்த 22 பேருடன் தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகிய 2 பேரும் கேபினட் மந்திரிகள் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×