search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுநோய்"

    ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.
    உடலின் எந்தப் பகுதியிலாவது செல்களின் வளர்ச்சி கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிப்பது புற்றுநோய் உருவாகுவதற்கு காரணமாக அமைகிறது. 10 இந்தியர்களில் ஒருவர் வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

    மற்ற நாடுகளை விட நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒருசில பழக்கங்கள் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைதான் நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    புகையிலை: புகையிலை பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிகரெட் பிடிப்பது மட்டுமின்றி வெற்றிலை பாக்கு உட்கொள்வது, சுருட்டு, பீடி பிடிப்பது நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தொண்டை வழி யாக வயிற்று பகுதிக்கு சென்றடைந்து ஓசோபேஜியல் எனும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும். புகையிலை பயன்படுத்துவது குரல்வளை, நுரையீரல், உணவுக்குழாய், சிறுநீர்ப்பை, தொண்டை, சிறுநீரகம், வயிறு, கல்லீரல், பெருங்குடல், கணையம், மலக்குடல், கருப்பைவாய் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

    காரமான, சூடான உணவு: உணவை அதிக சூடாகவோ, காரமாகவோ சாப்பிடக்கூடாது. காரமான, சூடான உணவுகளை அதிகமாக உட்கொள்வது நுரையீரல், வாய், வயிற்றுப்பகுதியில் புற்றுநோய் உருவாக வழிவகுக்கும். உணவில் காரத்தன்மை கொண்ட மசாலாக்களை அதிகம் சேர்ப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்க்கும், காரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆராய கூடுதல் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    தாய்ப்பால்: தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதோ அல்லது மிகவும் குறைவாக கொடுப்பதோ புற்றுநோய்க்கு திறவுகோலாக மாறிவிடும். எனவே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு பெண்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

    அதிக சூரிய வெளிச்சம்: உடலில் சூரிய வெப்பம் அதிகமாக படர்வது செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது சரும புற்றுநோய் ஏற்படுவதற்கும் வித்திடும். 18 வயதுக்குட்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகுவது பாதிப்பை அதிகப்படுத்திவிடும். தீக்காயங்கள், எக்ஸ்ரே கதிர்களின் வெளிப்பாடு, சில வேதிப்பொருட்களின் தாக்கத்தால் சருமத்தில் வடுக்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுக்கும், சரும புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் மதிய வேளையில் சூரிய ஒளி அதிகம் உடலில் படர்வதை தவிர்ப்பது நல்லது.

    செயலற்ற தன்மை: உடல் இயக்கம் இல்லாமல் செயலற்ற தன்மையில் இருப்பது, உடலில் கொழுப்பு அதிகரிப்பது, மது அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 18 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியகம் மதிப்பீடு செய்துள்ளது. உடற்பயிற்சி செய்யாதது, அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற காரணங்களால் நிறைய பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    நார்ச்சத்து: நார்ச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது, அதனை குறைவாக உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் கொண்ட பழங்கள், காய்கறிகள், சாலட்டுகள், முழு தானியங்கள், பருப்பு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.
    தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் எல்லோரும் அறிந்ததுதான். கூடவே சிலவகை புற்றுநோய்களை தடுக்கும் சக்தியும் உடற்பயிற்சிக்கு இருக்கிறது.
    இதயநோய்க்கு அடுத்து உலகில் அதிக அளவிலான மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயாக இருப்பது, புற்றுநோய். இது புதிய நோய் அல்ல, ஆதிகாலத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது. கடுமையான கட்டி என்ற பொருள்படும் ‘கார்சினோமா’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து ‘கேன்சர்’ என்பது உருவானது.

    நவீன மருத்துவம் புற்றுநோயின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கிறது. அதனால் அதனை உயிர்க்கொல்லி நோய் என்று கூறமுடியாது. அதுபோல், பரவும் தன்மைகொண்டது என்ற பழைய நம்பிக்கையும் தவறானது என்று உணர்த்தப்பட்டுவிட்டது. தொடக்கத்திலே கண்டறிந்தால் இந்த நோயில் இருந்து முழுமையாக குணமாகிவிட முடியும்.

    புற்றுநோயை தடுக்கும் முக்கியமான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!

    தினமும் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் எல்லோரும் அறிந்ததுதான். கூடவே சிலவகை புற்றுநோய்களை தடுக்கும் சக்தியும் உடற்பயிற்சிக்கு இருக்கிறது. உடற்பயிற்சியால் உடலில் தேவைக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. அதனால் மார்பகம், கருப்பை வாய், புரோஸ்டேட், பெருங்குடல் போன்றவைகளில் ஏற்படும் புற்றுநோய்கள் பெருமளவு தடுக்கப்படும். தினமும் முக்கால் மணிநேரம் வேகமான நடைப்பயிற்சியே போதுமானது.

    பலவகையான நிறங்களை கொண்ட பழங்களை உண்ணவேண்டும். காய்கறிகள், கீரை வகைகளையும் தவறாமல் உணவில் சேர்க்கவேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான எல்லாவிதமான சத்துக்களும் கிடைக்கும். நார்ச்சத்து கொண்ட உணவுகளில் புற்றுநோய்க்கு எதிரான சக்தி நிறைந்திருக்கிறது. எளிதாக ஜீரணமாகும் உணவுகளையும், கழிவுகளை தாமதமின்றி உடல் வெளியேற்றும் விதத்திலான உணவுகளையும் உண்பது அவசியம். மாம்பழம், பலாப்பழம், நெல்லிக்காய், பப்பாளி, வாழை, சப்போட்டா போன்ற நாட்டு வகை பழங்களை அதிகம் உண்ணுங்கள்.

    உடல் பருமனை குறையுங்கள். கொழுப்பு உடலில் சேருவது புற்றுநோயை வரவேற்கும் விதமாக அமைந்துவிடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவைகளால் உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வாருங்கள்.

    கடுமையான வெயில் உடலைத் தாக்குவதை தவிர்க்கவேண்டும். அல்ட்ரா வயலைட் கதிர்கள் உடலில் அதிகம்படுவது சரும புற்றுநோய் உருவாக காரணமாகிவிடும். நமது நாட்டில் இந்த புற்றுநோய் பாதிப்பு குறைவு என்றாலும், உச்சி வெயில் உடலில் பாய்வதை தடுத்தாலே இந்த வகை புற்றுநோயில் இருந்து தப்பித்துவிடலாம்.

    புற்றுநோய் ஒரு வகை ‘சைக்கோசோமோட்டிக்’ பாதிப்பாகும். அதாவது இந்த நோய் உருவாக உடலும், மனமும் காரணமாக இருக்கிறது. அதனால் உடலையும், மனதையும் ஒரே நிலையில் சீராக்கும் தியானத்தால் புற்றுநோயை தடுக்கமுடியும். தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்தால் போதுமானது.

    சுற்றுப்புற சூழல் மாசற்றதாக இருக்கவேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருந்தால் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு போன்றவைகளும் சுத்தமாக இருக்கும். போக்குவரத்து நிறைந்த இடங்கள், ரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வசிப்பது அவ்வளவு ஏற்புடையதல்ல.

    பான்மசாலாவை பயன்படுத்த வேண்டாம். புகையிலை, பாக்கு மற்றும் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படும் பான்மசாலா பயன்பாட்டை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். இதன் பயன்பாடு நாக்கு, கன்னம், குட்டிநாக்கு போன்றவைகளில் புற்றுநோயை உருவாக்குகிறது. பெரும்பாலும் நடுத்தர வயதினர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

    மது அதிகமாக அருந்தக்கூடாது. அதிகமாக மது அருந்துகிறவர்களுக்கு நுரையீரல் புற்று, தொண்டை புற்று, ஈரல் புற்று போன்றவை ஏற்படுகிறது. மதுவோடு புகையும் பிடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

    மாமிச உணவுகளின் அளவை குறையுங்கள். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்த்திடுங்கள். ஊறுகாய் போன்ற உப்பு அதிகம் சேர்த்த உணவுகளையும் குறைக்கவேண்டும். பாஸ்ட் புட் வகைகளையும் தவிர்த்துவிடலாம். அவ்வப்போது உங்கள் வாயை நீங்கள் பரிசோதித்து பார்க்கவேண்டும். வெளிச்சத்தில் கண்ணாடியை பயன்படுத்தி வாயை ஆராயுங்கள். வாய்க்குள் வெள்ளையான படை, சிவப்பு படை, திட்டுகள், புண்கள், பற்களின் உரசலால் ஏற்பட்ட காயங்கள், பல்லை பிடுங்கிய இடத்தில் ஆறாத காயங்கள், பூஞ்சைத் தொற்று போன்றவை இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நீங்களே உங்கள் வாயை நன்றாக பரிசோதியுங்கள். காரமான, சூடான உணவினை உண்ணமுடியாவிட்டாலும் அதற்கான காரணத்தை டாக்டரிடம் கேளுங்கள்.
    ×