search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strong wind"

    • பல்லடம் சுற்றுவட்டரா பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
    • அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அருகே இருந்த மரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றின் காரணமாக, அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் சேதமடைந்தன. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் வந்து ஆட்டோக்கள் மீது விழுந்த மரத்தை அகற்றினர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த மற்றொரு மரம் நேற்று முன்தினம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர்.ஆபத்தான நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்சுருட்டி பகுதியில் பலத்த காற்று வீசியதில் 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன. இதில் வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய பருவத்தில் இருந்தன.
    மீன்சுருட்டி:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியதில் இருந்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து, வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது.

    பலத்த காற்றின் காரணமாக, மீன்சுருட்டி அருகே மாதாபுரம் கிராமத்தில் 3 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன. இதில் வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய பருவத்தில் இருந்தன.

    இது குறித்து வாழை விவசாயி குழந்தைசாமி கூறுகையில், இந்த பகுதியில் அவ்வவ்போது ஏற்படும் மின் தடையை பொருட்படுத்தாமல் ஜெனரேட்டர் வைத்து வாழைக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தேன். இதுவரை வாழை சாகுபடிக்கு ரூ.9 லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால் பலத்த காற்றில் வாழைகள் எல்லாம் சாய்ந்தன. வாழை சாகுபடி செய்வதற்காக நகையை அடகு வைத்துள்ளேன். தற்போது வாழைகள் சாய்ந்ததால், நிர்க்கதியாக நிற்கிறேன். எனவே வேளாண் அதிகாரிகள் வாழை சாய்ந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
    அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறை காற்று வீசியதால் ரூ.10 கோடி மதிப்புள்ள வாழைகள் சேதமடைந்தன.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சில இடங்களில் காற்றும் வனப்பகுதியில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது.

    காற்று மட்டும் தான் அடித்ததே தவிர மழை பெய்யவில்லை. இந்த சூறாவளி காற்றால் பல இடங்களில் வாழைகள் அடியோடு சாய்ந்தது.

    அந்தியூர் அடுத்த பச்சாம்பாளையம் கொல்லபாளையத்தில் சரஸ்வதி என்பவர் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வாழைகள் முற்றிலும் சேதமாகி விட்டன.

    இதே போல் கே.மேட்டூரில் துரைசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள வாழைகளும், புதுப்பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவரது தோட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நேந்திதரம் வகை வாழைகளும் அடியோடு சாய்ந்து நாசமானது.

    மேலும் எண்ணமங்கலம், சென்னம்பட்டி, கொமராயனூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதமானது.

    மொத்தம் ரூ.10 கோடி மதிப்புள்ள வாழைகள் நாசமாகி இருப்பதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.

    பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்து தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்த மங்குட் புயலினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 லட்சம் பேர் வெளியேற்றபப்டுள்ளனர். #Manghkut
    பெய்ஜிங் :

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் இன்று கரையை கடந்தது.

    புயல் காரணமாக மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதில், இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்த மங்குட் புயல், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குவாங்டாங் மாகணத்தில் உள்ள ஜிங்மன் கடற்பகுதியில் சுமார் 162 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

    இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 25 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 48 ஆயிரம் படகுகள் உடனடியாக கரை திரும்பிவிட்டன. வெளியேற்றப்பட்ட மக்களுக்காக 3 ஆயிரத்து 777 அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புயலினால் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புக்களை தொடர்ந்து ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளுக்காக அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #Manghkut
    பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் கடுமையாக தாக்கியதில் இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 64 பேர் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Mangkhut
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது.

    மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் அந்நாட்டின் பாகுபோ நகரம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.  மீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கிவிட்டுள்ளது.

    அதில் 2 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர். இவர்கள் தவிர பலர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

    புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Mangkhut
    பிலிப்பைன்சில் மங்குட் புயல் தாக்கியதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. #Mangkhut
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ என்ற புயல் இன்று கடுமையாக தாக்கியது. இது இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயல் என கருதப்படுகிறது. புயல் காரணமாக பிலிப்பைன்சின் வடக்கு கடற்கரை பகுதியில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.  மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மின்சாரம் தடைபட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    காற்று கடுமையாக வீசுவதால் சேதம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ‘மங்குட்’ புயல் 4-வது ரகம் என கணிக்கப்பட்டுள்ளது. இது ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்களில் கடும் சேதத்தை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் ‘கையான்’ என்ற சூப்பர் புயல் பிலிப்பைன்சை தாக்கியது. அதில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.


    இதேபோன்று இந்த ‘மங்குட்’ புயலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இப்புயலினால் 40 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இங்கு ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

    ‘மங்குட்’ புயல் பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. அது இன்று மாலை ஹாங்காங் பகுதியில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Mangkhut
    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள‌தை தொடர்ந்து நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. ஆடி மாதம் தொடங்கவுள்ள நிலையில் காற்று வேகமாக வீசியதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த சூறைக்காற்று மாலையிலும் நீடித்தது.

    சாலையோர மணலை காற்று அள்ளி வீசியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மின் மாற்றியில் மரக்கிளைகள் உரசியதால் தீப்பொறிகள் கிளம்பின. அங்குள்ள மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பல இடங்களில் சாலையோர விளம்பர பலகைகள் விழுந்தன.

    மின் வயர்கள் அறுந்ததால் நெல்லை மாநகரில் அடுத்தடுத்து மின்தடை ஏற்பட்டது. சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியிலும் நேற்று பலத்த காற்று வீசியது. இதனால் தென்னை, வாழை, எலுமிச்சை மரங்கள் சேதமடைந்தன. மகசூல் தரும் நிலையில் இருந்த எலுமிச்சை மரங்களில் இருந்து பழங்கள் உதிர்ந்து சேதமானது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்ப‌ட்டது.


    சிவகிரியில் 3 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இரவில் வெகுநேரம் வரை அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்ட‌து. வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்சின் மேற்கூரை பெயர்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து இறங்கினார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.

    வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ அலுவலக காம்பவுண்டு சுவரில் மின்கம்பம் சாய்ந்து சுவர் சேதமானது. சுப்பிரமணியபுரம் கல்லூரி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. இதேபோல கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மந்தியூர், மாதாபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் சூறைக்காற்றில் மரங்கள் சாய்ந்தன. இப்பகுதியிலும் எலுமிச்சை பழங்கள் உதிர்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்த‌னர்.

    கடையம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பழமையான அரச மரம் முறிந்து விழுந்தது. இதனால் அருகில் நின்ற கார் சேதமானது. அப்பகுதி வழியே சென்ற பாண்டியன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. ஜே.சி.பி.எந்திரம் மூலம் அந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. சில இடங்களில் வீடுகளின் மேல் இருந்த குடிநீர் தொட்டிகளும் சேதமாயின.

    ×