search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srinivasamangapuram Kalyana Venkateswara Temple"

    • தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
    • இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

    திருமலை:

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை தேரோட்டம் நடந்தது.

    அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், `கல்கி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.

    சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

    பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை உற்சவர்களான சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன் பிறகு காலை 9.45 மணியளவில் கோவில் முன்னால் உள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    • 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை.
    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    திருமலை:

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை, இரவு கருடவாகன சேவை நடந்தது. அதில் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்லக்கு வாகனத்துக்கு அருகில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உடன் வந்தார்.

     வாகனங்களுக்கு முன்னால் பக்தி பஜனைகளை பாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பெண்களும், ஆண்களும் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து சிறப்பு கருட வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    • கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    திருமலை:

    திருப்பதியில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் கோவிலில் மூலவருக்கும், கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது. திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு கருடசேவை (கருட வாகன வீதிஉலா) நடந்தது. கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும், மூலவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும் அணிவித்து அலங்காரம் செய்வதற்காக நேற்று காலை திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் சன்னதியில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

     ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை ஒரு கூடையில் வைத்து பெரிய ஜீயர் சுவாமி தனது தலையில் சுமந்தபடி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து வெளியே ஊர்வலமாக கொண்டு வந்து அம்பாரி வாகனத்தில் வைத்தார். காலை 6.30 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் எஸ்.வி.கோசம் ரக்ஷன சாலை, தாடித்தோப்பு, பெருமாள்பள்ளி வழியாக சீனிவாசமங்காபுரம் கோவிலை அடைந்தது.

    கோவில் யானை மீது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை வைத்து நான்கு மாடவீதிகளில் ஊர்வலம் நடத்தி மூலவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு மாடவீதிகளில் யானைகளுக்கு முன்னால் பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளில் ஒன்று மூலவருக்கும், மற்றொரு மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் பெரியஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, துணை அதிகாரிகள் வரலட்சுமி, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தங்க தேரோட்டம்

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடக்கிறது. உற்சவர்களான சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • கருட வாகன வீதிஉலா மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், கொலு, பஞ்சாங்க சிரவணம், மாலை அங்குரார்ப்பணம் நடந்தது.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாஹவச்சனம், மிருதங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்ததும், சிறப்புப்பூஜைகள் செய்து புற்று மண் எடுத்து வந்து முளைப்பாரிக்காக விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் செங்கல்ராயுலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8.40 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி பிரம்மோற்சவ விழா `கருட' கொடியேற்றம் நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், மீண்டும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கிறது.

    வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக கருடவாகன வீதிஉலா (கருட சேவை) மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

     விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்காக கோவில் புஷ்கரணி சுத்தம் செய்து தூய புனிதநீர் நிரப்பப்பட்டுள்ளது.

    ×