search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் மூலவர், உற்சவருக்கு அணிவிப்பு
    X

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் மூலவர், உற்சவருக்கு அணிவிப்பு

    • கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    திருமலை:

    திருப்பதியில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் கோவிலில் மூலவருக்கும், கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது. திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு கருடசேவை (கருட வாகன வீதிஉலா) நடந்தது. கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும், மூலவர் கல்யாண வெங்கடேஸ்வரருக்கும் அணிவித்து அலங்காரம் செய்வதற்காக நேற்று காலை திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் சன்னதியில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை ஒரு கூடையில் வைத்து பெரிய ஜீயர் சுவாமி தனது தலையில் சுமந்தபடி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து வெளியே ஊர்வலமாக கொண்டு வந்து அம்பாரி வாகனத்தில் வைத்தார். காலை 6.30 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் எஸ்.வி.கோசம் ரக்ஷன சாலை, தாடித்தோப்பு, பெருமாள்பள்ளி வழியாக சீனிவாசமங்காபுரம் கோவிலை அடைந்தது.

    கோவில் யானை மீது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை வைத்து நான்கு மாடவீதிகளில் ஊர்வலம் நடத்தி மூலவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு மாடவீதிகளில் யானைகளுக்கு முன்னால் பக்தர்கள் குழுக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியபடி வந்தனர்.

    கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளில் ஒன்று மூலவருக்கும், மற்றொரு மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் பெரியஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, துணை அதிகாரிகள் வரலட்சுமி, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தங்க தேரோட்டம்

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடக்கிறது. உற்சவர்களான சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    Next Story
    ×